Monday 27 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (6)

 

நிலவிலே பேசுவோம்

என்.கே.ரகுநாதன்


மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள்.


அப்பொழுது மணி எட்டு இருக்கும். அவருக்கு பசி, அத்துடன் கூட்டத்திற் பேசியகளைப்பு வேறு.


சாப்பிட்டு முடித்ததும், அறுசுவையுண்டியின் ருசியில் நாவைத்திளைக்கவிட்டபடியே, உள்ளே இருந்த 'ஓர் குலம்' பத்திரிகையைக் கையில்எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். விறாந்தையின் மூலையொன்றில் கிடந்தசாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஜகஜ்ஜோதியாகப்பிரகாசித்துக்கொண்டிருந்த மின்விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப்படிக்கத் தொடங்கினார்.

ஒரு பத்திகூட வாசித்திருக்கமாட்டார். வெளியே வாசற்பக்கமாகச் சிலர் பேசுவதுகேட்டது. பத்திரிகையில் படித்திருந்த பார்வையைத் திருப்பி அங்கே நோக்கினார்.

Friday 24 May 2019

விழுதல் என்பது எழுகையே (2)


தவம் அகதி முகாமை விட்டுபோய் மூன்றாம் நாள்---ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்திருந்தார். சீலனை தான் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். போகும் வழியில் மீண்டும் அம்மாவுடன் சீலன் கதைத்தான். அடுத்தமுறை ரெலிபோன் கதைக்க வரும்போது தங்கைச்சியையும் கூட்டி வரும்படி சொன்னான். கலாவின் மீதான காதல் தங்கைச்சிக்குத் தெரிந்தே இருந்தது. அம்மாவிற்குத் தெரிந்திருந்தால் எப்போதே கொன்று போட்டிருப்பார்.

தவம் இருக்கும் வீடு ஐந்து நிமிட பஸ் ஓட்டத்தில் இருந்தது. பஸ்சில் போய் வருவதற்கான வழிமுறைகளை தவம் சீலனுக்குக் கற்றுக் கொடுத்தார். கலாவைப்பற்றி சீலனிடம் எதுவும் பேசவில்லை. ஏதாவது தெரிந்தால் அவனாகவே சொல்லுவான் என்பது தவத்திற்குத் தெரியும்.

”எப்ப பாத்தாலும் ஒரே கேள்வி ஒரே பதில். சொல்லிச் சொல்லியே வாழ்க்கை சலிச்சுப் போச்சு. காம்ப் வாழ்க்கை கழிஞ்சதே பெரிய கண்டம் கழிஞ்சமாதிரி. இப்பதான் சுவிஸ் நீரோட்டத்திலை கலந்திருக்கிறன். றெஸ்ற்ரோறண்ட் ஒண்டிலை வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தூரம்தான். தூரத்தைப் பாத்தா ஒண்டும் செய்யேலாது. பத்து மணித்தியால வேலை” சொல்லிக் கொண்டே விசுக்கு விசுக்கென்று நடந்தார் தவம். பச்சைப் புல்வெளியையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே அவரின் பின்னால் விரைந்தான் சீலன்.

“வேலைக்குப் போன இடத்திலைதான் உன்னைப் போல ஒரு நண்பன் கிடைச்சான். சின்னப் பெடியன்தான். இப்ப அவன்ரை வீட்டிலைதான் இருக்கிறன். அவன்ரை அப்பாவும் தங்கைச்சியும் அங்கை கூட இருக்கினம்.”

Wednesday 22 May 2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2018/19 முடிவுகள்:


பரிசு பெற்றவர்கள்


1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000
(சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை - 600092)

2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் - 30,000
(டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை)

3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு - தலா இலங்கை ரூபாய்கள் - 20,000

(ஒரு முழு நாவல்)
(இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு)

(உறவின் தேடல்)
(விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)

Tuesday 21 May 2019

விழுதல் என்பது எழுகையே (1)

நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட சீலன் நேரம் போனது தெரியாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். இருட்டிவிட்டதால் பூங்காவில் இருந்தவர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

”என்ன தம்பி... பத்மகலாவைப் பார்க்கிலை தேடுகிறீரோ?” என்றபடியே தோளில் கை பதித்தார் தவம். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட தவம், சீலனின் கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டுகொண்டார். சாந்தியின் தற்கொலையை தவம் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சாந்தியைப் பற்றி சீலன் வாய் திறக்கவில்லை. சில சம்பவங்களை எப்பவும் மூடித்தான் வைக்கவேண்டும். உலையிலே மூடி கொதித்துக் கூத்தாடும்போது, மூடியைத் திறந்து ஆவியை வெளியேற்றிவிட்டு மீண்டும் மூடித்தானே வைக்கின்றோம்.

சீலனின் நினைவுகளைத் திசைதிருப்ப நினைத்தார் தவம்.

“அது ஏன் தமிழன்கள் தங்கட பெயரை இரண்டு இரண்டா வைச்சிருக்கிறான்கள்?” சீலனைப் பார்த்துக் கேட்டார் தவம். தவம் சொன்னது தன்னையும் பத்மகலாவையும்தான் என்பதை சீலன் புரிந்து கொண்டான். வலிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டே “உங்கடை முழுப்பேர் என்ன?” என்றான். “சொல்லமாட்டேனே!” என்றார் தவராசா என்ற தவம்.

Sunday 12 May 2019

பிராண நிறக் கனவு – நூல் அறிமுகம்


அண்டனூர் சுரா எழுதிய `பிராண நிறக் கனவு’ சிறுகதைத்தொகுப்பு வாசித்தேன். பன்முகமேடை வெளியீடாக வந்திருக்கும் இச் சிறுகதைத்தொகுப்பிற்கு திரு லெ.முருகபூபதி அணிந்துரை வழங்கியுள்ளார். அனிதாவிற்கு சமர்ப்பணமாயிருக்கும் இத்தொகுதியின், ஒவ்வொரு கதைகளும் வாசகனுக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கின்றன.

மிடற்றுத்தாகம், பிராண நிறக் கனவு, தாழ்ச்சி மகள், ஆணிவேரும் சில சல்லிகளும் – இவை தொகுப்பில் அற்புதமான கதைகள்.

உண்மைச் சம்பவங்களின் -  பத்திரிகைகளில் நாம் வாசித்த உண்மைச் செய்திகளை சுவைபடச் சொல்லியிருக்கின்றார். மாமிசத்துண்டு, பிராண நிறக் கனவு, தீயடி அரவம், இரவும் இருட்டிற்று என்பவை அப்படித்தான் சொல்கின்றன.

Friday 10 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (5)




கற்பு 

வரதர்

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.


''மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?'' என்று கேட்டார் ஐயர்.

''ஓமோம், ஆரப்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன் என்ன விசேஷம்?''

''கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை....''

''யார் எழுதியது?''

''எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.''

Sunday 5 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (4)


 





பாற்கஞ்சி 

சி.வைத்திலிங்கம்
 

'ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி...' 

'சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.' 

'இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே'
 

'கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது' என்றுசொல்லி அழத் தொடங்கினான்.
 

'அப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா. வயல்லே கூழ் கொண்டு போகணும். என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஆம்... என் கண்ணோல்லியோ?'
 

'நிச்சயமாய்ச் சொல்றயாம்மா? நாளைக்கு பாற்கஞ்சி தருவாயா?'
 

Wednesday 1 May 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (3)







தோணி

வ.அ.இராசரத்தினம்

கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு. 

எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்­ர் எடுப்பதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல்லாம் நானும் கூடப் போயிருக்கிறேன்.