Monday 28 December 2020

தேவ கிருபையை முன்னிட்டு வாழும்.... - எனக்குப் பிடித்த சிறுகதை

 


காவலூர் ராசதுரை

கிழவி செத்தது விசேஷமில்லை; சாகு முன்னர் நடந்த சிறு சம்பவம்தான் விசேஷம்.

செத்த வீட்டுக்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றியே பேசுகிறார்கள்.

சவத்துக்குத் தலைமாட்டில், கால் நீட்டியிருந்து, சிற்றுரலில் வெற்றிலை துவைத்து வாய்க்குள் அடக்கிக் கொண்டு, மாணிக்கம் பாட்டி, அப்பொழுதுதான் வந்த செல்லம்மாவுக்கு, அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லுகிறாள்.

கிழவியின் தூரத்துப் பேர்த்தி புஷ்பம். அந்தச் சம்பவத்தை நினைக்க நினைக்க அவளுக்கு மனசு ஆறவில்லை. பந்தலுக்குள் உட்கார்ந்திருக்கும் செல்லம்மாவின் புருஷனும் அந்தக் கதையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

“எப்பவும் இப்படித்தான், ஆரு செத்தாலும் சாகு முந்தி விசேஷமான காரியம் ஏதும் நடக்கும்.”

சட்டம்பியார் தத்துவம் பேசுகிறார்,

°

கரம்பன் செவத்தியார் கோயிலடி வாசிகளுக்கு அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம் - கோயில், சிற்றமார், மடம், கூப்பன் கடை மாதிரி.

ஏரம்பு பரம்பரை, யார் கூட்டம் ? ஞானப்பிரகாசம் வீட்டுக்காரர் எந்தப் பகுதி?

Thursday 24 December 2020

அவர் கண்ட முடிவு! - எனக்குப் பிடித்த சிறுகதை

 


மு.பொன்னம்பலம் 

சிவத்தம்பி தமக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அதுவெறும் சிரிப்பல்ல, வெற்றிப்புன்னகை. வெற்றியென்றால் ஏதோ அபாரமான நற்செயலையோ அல்லது சதித்திட்டத்தையோ அமுல் நடத்தி வெற்றி பெற்று விட்டார் என்பதல்ல அர்த்தம். நினைவில் முளைத்ததை இப்போதான் செயலில் நடத்த அவர் திடங்கொண்டுள்ளார். அதாவது தாம் நினைத்ததைச் செய்வதற்கு உள்ளத்தைத் தயார்படுத்தி வெற்றி கொண்டுவிட்டார். அதனால் தான் அவர் முகத்திலே சிந்தனைக் கிறுக்கல்கள் மறைந்து, மகிழ்ச்சியின் முறுவல் மலர்ந்தது. இத்தனைக்கும் அவர் எண்ணத்திலே எழுந்த திட்டம்தான் என்னவோ?

Friday 18 December 2020

நந்தாவதி – எனக்குப் பிடித்த சிறுகதை

 
நவம் (சீனித்தம்பி ஆறுமுகம்) 

இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்'தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி.

வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான்.

புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு கடந்து சென்றது வண்டி.

கோட்டையிலிருந்து மருதானே வரையும், கழுத்தை வெளியே நீட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வந்த நான் இப்பொழுது தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு என் இருப்பிடத்துக்குத் திரும்பினேன்.

இந்த வண்டியில், இரண்டாம் வகுப்பு `சிலீப்பிங் காரி’ல் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.

எனது `படுக்கை’ எண் பதினான்கு. எனது `படுக்கை’க்குச் சரிநேராக மேலே இருந்தது பதின்மூன்றாம் இலக்கப் `படுக்கை’. அது வெறுமையாகவே இருந்தது. இரண்டே இரண்டு `படுக்கை’களே உள்ள அந்தத் தனிப் பெட்டியில், ஏகாங்கியாக நான் மட்டும் பிரயாணம் செய்வது என்னவோ போலத்தான் இருந்தது.

`தடதட’வென்று யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் திறந்தேன்.

Thursday 10 December 2020

இப்படியும் ஒருவன் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மா.பாலசிங்கம்

`ம்பா... ம்பா... ம்பா..’

செங்காரிப் பசு கத்தும் ஓசை கமலத்தின் காதைத் துளைக்கின்றது.

பசுவின் கதறலுக்குக் காதைக் கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு அடுப்பின் நிலைமை மறை பொருளாகி விட்டது. பரபரப்போடு அடுப்பைப் பார்க்கின்றாள். பனஞ் சொக்கறை புகட்டிற்கு வெளியே விளாசி எரிந்து கொண்டிருக்கின்றது. கைச் சுறுக்கோடு சொக்கறையை அடுப்பிற்குள் தள்ளுகிறாள்.

`ம்பா... ம்பா... ம்பா..’

செங்காரிப் பசுவின் கதறல் தணிந்துவிடவில்லை.

Thursday 3 December 2020

பூ - எனக்குப் பிடித்த சிறுகதை

 

இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான்


பூத்துச் சொரிகையிலே 

பூக்கருகிப் போனதுவோ?
மாதா செய் தீவினையோ
மலரமுன்னே போனாயோ...?

நீ படுத்துக் கிடந்த அறைப் பக்கமிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கின்றது. அது உன் அம்மாவின் குரல். துக்கத்திற் கனத்துக் கதறுகின்றது. எது உன் முடிவாக இருக்கக் கூடாது என்று இவ்வளவு நேரமும் பிராத்தித்துக் கொண்டிருந்தேனோ, அதுதான் உன் முடிவா? என் கல்யாணி!

"ஏய் கெழவி. இதுங் ஹோஸ்பிட்டல்
தெரியுங்தானே! சத்தங் போட வேணாங்."

கிழவியை 'நேர்ஸ்' அறைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். புழுவாகத் துடித்து, சுவருடன் தலையை மோதிக் கொண்டே குரல் எழுப்பி அழுகின்றாள். 'மேளே, கல்யாணி நீ போய் விட்டியாடி?' என்று நெஞ்சு வெடிக்கப் புலம்புகிறாள். ஒவ்வொரு வார்த்தையும் என் என்பின் குழலட்டையையுஞ் சுண்டுகின்றது.

Friday 6 November 2020

அதிர்வு – சிறுகதை

 


“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.

 அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,

 பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.

 தங்கள் நல்வரவை நாடும்,

அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்

 “ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”

Friday 16 October 2020

நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

 


நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.

புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.

“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.

நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.

Friday 2 October 2020

பிச்சைக்காரன் வாந்தி – சிறுகதை

“மொட்டைமாடி - வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி.

சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி வேணும்.

நீங்கள் போன வருஷம் கன்பராவுக்கு ஒரு வீட்டை கூட்டிக்கொண்டு போனனீங்களல்லோ? அவைன்ரை வீட்டுக் கிச்சின் கபினெற்றுகளைப் பாத்தனியள்தானே. எவ்வளவு பெரிய விசாலமான தட்டுகள்.

வீட்டு ரைல்ஸ் பெரிசா இருந்தாத்தான் நல்லது. வாணி வீட்டு ரைல்ஸ் மாதிரி…” மூச்சுவிடாமல், கிசுகிசு கிசுகிசு என்று ரிஸ்யூ கசங்கினமாதி கணவனுக்கு மாத்திரம் கேட்கும் வண்ணம் பொழிந்து தள்ளினாள் மஞ்சு.

Friday 25 September 2020

`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது


 


நேர்காணல் – கே.எஸ்.சுதாகர்/தி.ஞானசேகரன் இணையவளி

பகுதி (2/2)

9) எழுத்து தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயது முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வாசித்து வருகின்றேன். வாசித்த புத்தகங்களில் சிறந்தவற்றை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது, நண்பர்களிடையே புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, கலந்துரையாடுவது மகிழ்ச்சி தரும் செயல்கள். போகும் இடங்களில் இலக்கியநண்பர்களைச் சந்தித்து உரையாடுவது மனதிற்கு இதமானது. கனடா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது சில எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதேபோல பிறநாடுகளில் இருந்து இங்கு வரும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதும் உண்டு. கனடா சென்றிருந்தபோது குரு.அரவிந்தன், வ.ந.கிரிதரன், எல்லாளன்(ராஜசிஙகம்), கடல்புத்திரன்(பாலமுரளி), தேவகாந்தன், அகில், ஸ்ரீரஞ்சனி என்பவர்களைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக இருக்கின்றது. அதேபோல் இந்தியாவிற்குச் சென்றபோது நா.முத்துநிலவன், அண்டனூர் சுரா, ஸ்ரீரசா (இரவிக்குமார்) என்பவர்களைச் சந்தித்திருந்தேன்.

இணையங்களில் இல்லாத மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிப்பிடித்து தமிழில் தட்டச்சு செய்தும், இணையம் / வலைப்பூ இல்லாத எழுத்தாளர்களின் சில நல்ல படைப்புகளைத் தேடிப் பெற்றும் எனது வலைப்பூவில் பதிவிடுகின்றேன். நல்ல படைப்புகளை இனம் கண்டுகொண்டு, அவற்றை வாசகர்கள் படிப்பதற்காக இணையங்களிலும் முகநூல்களிலும் அறிமுகம் செய்கின்றேன்.

Monday 21 September 2020

`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது

 

நேர்காணல் – கே.எஸ்.சுதாகர்/தி.ஞானசேகரன் இணையவளி

பகுதி (1/2)

1) தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி,  இளமைப்பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்

அம்மாவின் பிறப்பிடம் வீமன்காமம், அப்பா குரும்பசிட்டி. குரும்பசிட்டி கலை இலக்கியத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கிராமம். எனக்கு எழு அண்ணன்மார்கள், இரண்டு அக்காமார்கள். நான் கடைசி. என்னுடைய சித்தப்பாவும், அத்தானுமாகச் சேர்ந்து `சக்தி அச்சகம்’ என்றொரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். அங்கிருந்துதான் `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகை வெளிவந்தது. அதன் ஆசிரியராக மு.க.சுப்பிரமணியம்(சித்தப்பா) இருந்தார். சக்தி அச்சகத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களும், என்னுடைய சகோதரர்கள் பாடசாலையில் பெற்ற பரிசுப்புத்தகங்களுமாக ஏராளமான புத்தகங்கள் ஒரு அலுமாரியில் அடங்கிக் கிடந்தன. சக்கரவர்த்தி இராஜபோபாலாச்சாரியார் எழுதிய `வியாசர் விருந்து’, பாரதியார் கவிதைகள், டாக்டர் மு.வரதராசனின் `அகல்விளக்கு’, அகிலனின் `பாவை விளக்கு’, செங்கைஆழியான் க.குணராசாவின் `முற்றத்து ஒற்றைப்பனை’ / `கங்கைக்கரையோரம்’ / `சித்திரா பெளர்ணமி’ / `வாடைக்காற்று’ போன்ற புத்தகங்கள், தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சில கட்டுரைப் புத்தகங்கள், அம்புலிமாமா இன்னும் இவைபோலப் பல இருந்தன. இந்தப் புத்தகங்களை பாடசாலை விடுமுறை நாட்களில் வாசிப்பதற்கு மாத்திரமே வீட்டில் அனுமதித்தார்கள். இல்லாவிடில் படிப்புக் கெட்டுப்போய்விடும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகையாக இருந்தபோதிலும் என்னுடைய எந்தவொரு படைப்பும் அதில் வந்ததில்லை. அது ஏன் என்பது பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்க்கின்றேன்.

Monday 14 September 2020

சிக்கனம் முக்கியம் - சம்பவம் (1)

 


“வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று பார்க்கலாம் எனக் களம் இறங்கிவிட்டார் அகமுகிலன்.

ஏதோ இங்கிலிசில் அடிக்க தமிழில் வருமாமே! ஒற்றை விரலால் கீ போர்டை நொருக்கித் தள்ளி கொம்பியூட்டர் திரையில் அழைப்பிதழை அடித்துவிட்டார். அழைப்பிதழ் பகட்டாக இருக்க – புத்தகம், தொட்டெழுதும் பேனா, இறகு  என்னும் ஓவியப்பின்னணி கொண்ட `பக்கிறவுண்ட்’ ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டார். வந்ததே வினை. அழைப்பிதழை `பக்கிறவுண்டிற்குள்’ கொண்டு செல்லும்போது எழுத்துக்கள் அங்கும் இங்கும் ஓடின. ஒருவிதமாக ஒரு வசனத்தைச் சரிக்கட்டிக் கொண்டு வந்துவிட்டு, மறு வசனத்தைப் பார்த்தால் அது குதித்துக் கூத்தாடி இருக்கும். அவர் அடித்த சொற்களில் சிலவற்றைக் காணவும் இல்லை. போராடிக் களைத்து, அப்படியே போட்டுவிட்டு உறக்கத்திற்குப் போய்விட்டார்.

 

உறக்கம் வரவில்லை. மூன்று தடவைகள் விழித்து எழுந்து கொம்பியூட்டருக்கு முன்னால் போய் இருந்தார். தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு, அழைப்பிதழில் சொற் சிலம்பாட்டம் விளையாடினார். `மாலை என்பதைப் `பிற்பகல்’ என்று மாற்றினார். பின்னர் `பிற்பகல்’ என்பதை `பி.ப’ என மாற்றினார். இப்படிச் சதுரங்கம் விளையாடி, விடிய ஐந்து மணிக்குள் எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட்டு உறக்கத்திற்குப் போனார்.

Saturday 12 September 2020

மாயா இலக்கிய வட்டம் நடத்திய குறு நாவல் போட்டி முடிவுகள் 2020

 

எனது குறுநாவல் இரண்டாம் பரிசு பெறுகின்றது.

மாயா இலக்கிய வட்டம் நடத்திய குறு நாவல் போட்டி 

பரிசு விபரங்கள்

நடுவர் : சாரு நிவேதிதா

முதல் பரிசு
சாபக்குமிழ் - ஶ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
ராஜ வனம் - ராம் தங்கம்

இரண்டாம் பரிசு
வளர்காதல் இன்பம் - கே. எஸ் . சுதாகர் 

மூன்றாம் பரிசு
நானும் என் பூனைக்குட்டிகளும் - தரணி ராசேந்திரன்
சில மாற்றங்கள் - வேல் முருகன்

Tuesday 8 September 2020

யோகம் இருக்கிறது – எனக்குப் பிடித்த சிறுகதை

குந்தவை

 

தன் ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

“சீ என்ன சாதிச் சனங் கள்ளப்பா இதுகள்" என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு ஒழுங்கை முடக்கிலும் நின்று அவன் எப்பொழுது வீட்டைவிட்டு வெளிக்கிடுவான் நாவைச் சுழற்றிச் சாட்டையாய் வீசலா மெனக் காத்திருந்தது மாதிரி.

“என்ன தம்பி! கன நாள் லீவோ?” - “ஊரிலே தான் நிக்கிறாய் எண்டு கேள்வி. ஆனா, வெளியிலை தலைக்கறுப்பையே காணன்"- "இனி ஊரோடை தான் தங்கிறதோ?” இந்த சொடுக்கல்களிடையே, அவன் அடிபட்ட நாயாய் “விர்" ரென்று, தன் ஊரைக் கடந்து வந்திருக்கின்றான்.

சற்று முன் "என்ன தம்பி! பிழைப்பெல்லாம் எப்பிடி?” என் பிழைப்பில் அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் போனானே, அந்த சிவராசா! அவனிடம், சைக்கிள் சீற்றின் இரு புறமும் பிதுங்கி வழியும் அந்த சதையைப் பிடித்து உலுக்கி ”இது மட்டும் நேர்மையாகச் சம்பாதித்ததா?” என கேட்டிருக்க வேண்டுமென்று ஒரு கணம் கிளர்ந்து மடிந்த ஆவேசத்தில் நினைத்துக் கொண்டான்.

Friday 4 September 2020

சதுப்பு நிலம் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

எம். . நுஃமான்

அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக்முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.

Tuesday 1 September 2020

கோவில் பூனை - எனக்குப் பிடித்த சிறுகதை

 சிற்பி (சி.சரவணபவன்)

 

சித்திரை மாதத்துச் சூரியன் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தினான். கண்களைத் திறக்கவே முடியாதபடி அவ்வளவு வெப்பம் அனல் காற்று வீசியது. வீதியிலுள்ள தார் வெப்பத்தைக் கண்டு குமுறுவதைப்போல் உருகிப் பொங்கியது.

 

இந்தப் பதைபதைக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது அந்த இரண்டு உருவங்களும் அங்கே நின்று மோனத் தவம் செய்தன. முதலாவதாக அந்த இடத்தை வந்து சேர்ந்தவன் மயிலன். உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகள்; நெற்றியிலிட்ட சந்தனப் பொட்டிற்குள் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது குங்குமம். இரண்டு காதுகளிலும் செவ்வரத்தைப் பூக்கள். கையிலே ஒரு சிறு சாக்குப் பை, அதற்குள்ளே வைக்கப்பட்ட போத்தலில் நிறையத் தண்ணிர் இருந்தது. ஏற்படக்கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்த்தே தன் ஆயத்தங்களைச் செய்திருந்தான். அந்த அகோர வெய்யிலிலும் அவன் தோற்றம் குளிர்மையை வருவித்தது.

Friday 28 August 2020

சொந்த மண் - எனக்குப் பிடித்த கதை

 

சு.இராஜநாயகன்

 “கந்த  ஆஆஅஅ.....”

முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, அந்தப் பாரிய வேப்பமரத்தின்கீழ், பாத்தியிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும் சற்றுக் கலைந்தது.

முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஒரு திசை நோக்கிக் கைகூப்பி மீண்டும் "கந்தா, கந்தா ஆஅ” என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலு முழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத்துண்டை உதறித் தோளிற் போட்டார். குனிந்து சிறு துணிப்பை ஒன்றை எடுத்தார். புறப்பட்டுவிட்டார்.

தூரத்தில் சேவல் ஒன்றின் கொக்கரக்கோ’ கேட்டது. நேரம் அதிகாலை நாலரை மணியாக இருக்கும். இயல்புநிலை குலையாமல் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோயிலின் ஆயத்தமணி நாதம் முருகேசரின் கோண்டாவில் விவசாயிகளைத் துயிலெழுப்பி அவரவர் தோட்ட நிலங்களுக்கு அனுப்பியிருக்கும். அவர்களுடன் முருகேசரும் நார்க் கடகத்தில் இலைச் சருகுகளைத் தலையில் தாங்கி, மண்வெட்டியுடன் தன் நிலத்தை நோக்கிச் சென்றிருப்பார்.

இன்று..?

Sunday 23 August 2020

அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

தி.ஞானசேகரன்

   

மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து “ஸேர் யாரோ ஒருவர் வந்திருக்கிறார், உங்களைப் பார்க்கவேண்டுமாம். உங்களது நண்பர் என்று கூறுகிறார்” என்றாள் தயக்கத்துடன்.

‘வார்ட் ரவுண்ட்’ செய்யும்போது என்னை யாரும் குழப்புவதை நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். சினத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ? ” வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டியபடி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.

“ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிறைஸ்!” என்றேன். என்னால் நம்பவே முடியவில்லை. லண்டனில் இருப்பவன் இப்படித் திடுதிப்பென என் முன்னால் வந்து நின்றால் ... ஆச்சரியத்தில் ஒரு கணம் தடுமாறினேன்.

“யூ பகர், யூ நெவர் றைற் ரு மீ” - நீ எனக்குக் கடிதம் எழுதுவதில்லை எனச் செல்லமாகக் கோபித்து என் தோள்களில் இடித்தான்.

பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே தோற்றம், அதே கலகலப்பு. அநாயாசமான பேச்சு, நெஞ்சைத்தொடும் இறுக்கம்... அவன் கொஞ்சங்கூட மாறவில்லை.

Wednesday 19 August 2020

நிலவோ நெருப்போ? - எனக்குப் பிடித்த சிறுகதை

 

நா.சோமகாந்தன்

புகையிலைக் கன்றுகள் கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத்தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம். நெல்லியடிச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் றோட் டில் அரைக் கட்டை தூரத்தில் தெருவோரமாக கிளை பரப்பில் சடைத்து வளர்ந்திருக்கிறது, ஒரு சொத்திப் பூவரச மரம். அதனடியில் மாலை தோறும் குழைக்கடை கூடுவது வழக்கம். புகையிலை பயிராகும் போகத்தில் இந்தக் குழைக் கடையில் வடமராட்சித் தமிழ் வழக்கு பிறந்த மேனியாகக் காட்சி தரும்! சனசந்தடியும், சரளமான விரசப் பேச்சும் இரைச்சலும் சேர்ந்து நெல்லியடிக் கறிக்கடையை ஞாபக மூட்டும்! மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு மூன்று கட்டை தூரத்துக்கப்பாலிருந்தே குடியானவப் பெண்கள் பாவட்டங் குழையையும், குயிலங் குழையையும் கட்டுகளாகக் கட்டித் தலையிற் சுமந்து கொண்டு வந்து குழைக்கடையில் பரப்புவார்கள். வளர்ந்து வரும் புகையிலைக் கன்றுகளுக்கு 'அட்டம்" தாழ்க்க பாவட்டங் குழையும் குயிலங் குழை யும் வாங்குவதற்காக ஊர்க் கமக்காரர்கள் அங்கு வந்து கூடுவார்கள்.