Friday 26 May 2023

சின்னான் - குறுநாவல்

 

`சின்னான்’ வாழ்வில் என்றும் `பெரியான்’

`சின்னான்’ குறுநாவலின் ஆசிரியரான சண்முகம் சந்திரன் வாசகர்களுக்குப் புதியவரல்லர். ஏற்கனவே ஞானம் பதிப்பக வெளியீடான `ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர். அனுபவம் மிக்க இவரின் எழுத்துகள் மனிதநேயம் கொண்டவை. நல்ல கவிஞரும் கூட. இவரது இந்த குறுநாவலில் கூட ஆத்மாவைத் தொலைத்த பலரைத் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் கதை நிகழுகின்றது. நெடுந்தீவிற்கு வழங்கப்படும் பெயர்களில் பசுத்தீவும் ஒன்று. அதன் வழியாக நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரன் தனது புனைபெயரை `ஆவூரான்’ என வைத்துக் கொண்டார்.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் இக்குறுநாவல் ஏதோ ஒரு மர்மதேசத்திற்குள்  நுழைவதைப் போன்ற பிரம்மையுடன் எம்மை அழைத்துச் செல்கின்றது. கதையின் பின்புலமாக ---மாவிலி துறைமுகம், சாறாப்பிட்டி, ஒல்லாந்த கோட்டை, வெடியரசன் கோட்டை, குவிந்தாக் கோபுரம், நெழுவினிப்பிள்ளையார், முருகன் கோவில், கடற்கரை--- என நெடுந்தீவின் அழகான காட்சிகளை ஆசிரியர் காட்சிப் படுத்தியிருக்கின்றார்.   

Tuesday 16 May 2023

ஒரு கொத்துப் புல் - நூல் அறிமுகம்

 



`வித்யுத்’ பதிப்பகமாக வெளிவந்திருக்கும், வைதீஸ்வரன் அவர்கள் எழுதிய `ஒரு கொத்துப் புல்’ சிறுகதைத்தொகுப்பை இன்றுதான் படிப்பதற்கு வாய்த்தது.

அவரே கீறிய அட்டைப்படம் அசத்தல். பின் அட்டைப்படம் கம்பீரம்.

முதல் கதை மட்டுமல்ல, தொகுப்பின் பல கதைகள் `வாழ்க்கையின் தீராத பற்றை’த் தான் சொல்கின்றன. அதனால் தான் தொகுப்பிற்கு `ஒரு கொத்துப் புல்’ என்று பெயரை வைத்திருக்கின்றார் போல் தெரிகின்றது. `ஒரு கொத்துப் புல்’ கேதார்நாத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி நிற்கின்றது. ஆசிரியர் கண்ட தரிசனங்களைப் பார்த்துவிட என் மனதும் துடிக்கின்றது. குட்டிக்குதிரை என்று ஆசிரியர் குறிப்பிடுவது கோவேறு கழுதையைத்தான் என நினைக்கின்றேன். நமக்கெல்லாம் அந்தப்பயணம் ஒரு முறையோ இரண்டு முறையோ தான் வாய்க்கும். ஆனால் அந்தக் குட்டிக்குதிரைகளுக்கு தினமுமல்லவா? `ஒரு கொத்துப் புல்’ எங்கே கதையில் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, முடிவாக வந்து மனதைப் பதற வைத்தது.

Wednesday 10 May 2023

ஒரு கடிதத்தின் விலை - சிறுகதை - ஒலிவடிவம்


 ஒலி வடிவில் கேட்க படத்தை `க்ளிக்’ செய்யுங்கள்
குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா

Monday 1 May 2023

வாட்சப் நண்பர்

 
`முதுமை எய்துவது குற்றமா?’ என்ற புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முதியோர் தொடர்பான புத்தகம் என்பதால், தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்திலிருந்து முதியவர்கள் பலர் வர விரும்புவதாக அறிவித்திருந்தார்கள்.

“உங்கள் வாட்சப் நண்பருக்குச் சொல்லிவிட்டீர்களா?” மனைவி ஞாபகப்படுத்தினார்.

“இந்தத் தடவை அவருக்குத்தான் முதல் அழைப்பிதழ் அனுப்பியிருக்கின்றேன். ஆவலோடு விழாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொன்னார்.” என்றேன் நான்.

கதிர்காமநாதன் எனது சமீபத்திய வாட்சப் நண்பர். மாலை வேளைகளில் எனது பாதி நேரத்தை அவர் விழுங்கிவிடுவதாக மனைவி முறைப்பாடும் செய்வார்.

தினமும் மாலை வேளைகளில் குறைந்தது ஒரு தடவையாவது கதைத்து விடுவார். பெரும்பாலும் எமது உரையாடல் இலக்கியம் சம்பந்தமாகவே இருக்கும். இவ்வளவு விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றாரே என வியக்க வைக்கும் கணீரென்ற காந்தக்குரல். தொடர்ந்து எவ்வளவு நேரமும் பேசிக் கொண்டே இருக்கலாம்.