Saturday, 19 April 2014

உச்சம் (பென்குயின்)

விடுமுறையில் ஒருநாள் பிலிப்தீவிற்குச் சென்றோம்.

இருள் கவியத் தொடங்குகின்றது. கோடை காலத்தில் சூரியன் மறைய ஏழு எட்டு மணிவரைக்கும் காத்திருக்க வேண்டும். பத்துப்பன்னிரண்டு நீண்ட படிக்கட்டுகளில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். பள்ளிக்கூட விடுமுறையாதலால் சிறுவர்கள் குழந்தகள் அதிகம். முன்னே பரந்த கடல், அகன்ற வானம். எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது. ஆங்காங்கே குழந்தைகளின் அழும் குரல்கள் தேய்கின்றன. எதற்காக இந்த ஆரவாரம்?

பென்குவின்கள் கடலிற்குள் இருந்து வெளிப்பட்டு, கரையிலுள்ள தமது உறைவிடங்களிற்கு செல்லும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்பதற்காகத்தான் அவ்வளவு பேரும் காத்திருக்கின்றார்கள். இவை நீரிலும் நிலத்திலும் வாழும் பறவையினம். இரவில் கடற்கரையை அண்மித்த மறைவிடங்களில் வாழும். பகலில் இரை தேடிக் கடலிற்குப் புறப்பட்டுவிடும்.

விக்டோரியா மாநிலத்தில் பிலிப் தீவில் (Phillip Island) பென்குவின்கள் செறிந்து வாழ்கின்றன. இங்கே இருப்பவை குள்ளமான இனத்தைச் சேர்ந்தவை. உலகில் 17 வகை இனங்கள் இருப்பதாகத் தகவல். வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் இடமாக பிலிப்தீவு உள்ளது. பென்குவின்களைப் பார்ப்பதற்காக அமைந்திருக்கும் இந்தப் பிரத்தியேகமான இடத்தில் எந்தவிதமான புகைப்படக்கருவிகளும் அனுமதிக்கப்படுவதில்லை.


"அதோ கடலிற்குள் தெரிகின்றன!" என்றான் மகன். தூரத்தில் கடல் நுரைகளுடன் சிறுசிறு கூட்டங்களாக மிதந்தபடி வருவதும் போவதுமாக அவை ஊஞ்சலாடுகின்றன. பென்குவின்கள் பறப்பதில்லை. இறக்கைகளை துடுப்புகள் போல நீந்தப் பாவிக்கின்றன. சற்று நேரத்தில் அவை கரை தட்டின. கூட்டம் கூட்டமாக வெளிப்பட்ட அவை அணிவகுத்து நடக்கத் தொடங்கின.

அழகாகனதொரு அணிவகுப்பு (Penquin Parade) அது.

உச்சம் (கங்காரு)

அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி - கோடைகால விடுமுறை. மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும்.

பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள் அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.

"கங்காரு வருத்தம் வந்து இறந்திருக்க வேண்டும்" என்றேன்.

"இல்லை.. இல்லை... எந்தவொரு விலங்கும் வருத்தம் வந்தால், வீதியில் வந்து  இறந்து விடுவதில்லை. எங்காவது பற்றைகள் மரங்கள் உள்ள மறைவிடங்களைத்தான் அவை தேடிப் போகும். யாரோ இதை வாகனத்தினால் அடித்து விட்டார்கள்" என்றான் மகன்.

 நாங்கள் இருக்கும் இடம் ஒருகாலத்தில் - 10 வருடங்களுக்கு முன்னர் - மரங்கள் அடர்ந்த, இயற்கையான நீர் ஊற்றுக்களைக் கொண்ட இடமாகத்தான் இருந்தது. கங்காரு, அன்னம், தாரா மற்றும் பறவைகள் ஏராளமாக இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரட்டிவிட்டு உருவான நகரம்தான் தற்பொழுது உள்ளது. இப்பொழுதும் வாய்க்கால்களிலும் குளங்களிலும் அன்னப்பட்சிகளும் பறவைகளும் இருப்பதைக் காணலாம். சமீபமாக உள்ள reserve பகுதிகளுக்கு அவ்வப்போது கங்காருகள் வந்து போகின்றன. இன்னும் ஒரு 10 வருடங்களுக்கு அவை தாக்குப் பிடிக்குமா என்று சொல்வதற்கில்லை.

திடீரென்று காரை நிறுத்துங்கள் என்றான் மகன்.

Wednesday, 16 April 2014

பாசம் பொல்லாதது!

சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில் சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள்.

"அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்."

"அது சரி. எப்படி வாழ்ந்த குடும்பம் நாங்கள்! நான் இப்ப உங்கை வாறதா உத்தேசமில்லை. பேரப்பிள்ளையளின்ர சடங்குகளையும் முடிச்சுக் கொண்டுதான் வருவன்."

கதவு தட்டும் சத்தம் கேட்டது.

"அப்பா திவசத்துக்கு வரேல்லையே?" மகன் கேட்டான்.

Tuesday, 15 April 2014

கருணையினால் அல்ல!

உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள் ஒலிக்கின்றன.

கோயிலின் உள்ளே நகரமுடியாதிருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண் கஸ்டப்பட்டு உள்ளே புகுந்து சென்றாள். 'வழி! வழி!!" என்று சத்தமிட்டபடியே ஐயர் ஒருவர் போனார். 

கோயிலின் உள்ளே அர்ச்சனைக்காக ஒரு சிறிய வரிசையும், வெளியே அன்னதானத்திற்காக ஒரு நீண்ட வரிசையும் காத்திருந்தன. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நிழலுக்காக இடம் தேடி, தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலுக்குள் ஒதுங்கினேன்.

திடீரென்று சலசலப்பு. வயது முதிர்ந்த ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். 

காட்சி


நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். 'தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்அப்பா தேவாரம் பாடிக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே நடந்தார். அம்மாவும் அக்காவும் நானும் அவரைப் பின் தொடர்ந்தோம். அத்தான் தன் நண்பர்களுடன் எங்களுக்கும் பின்னாலே வந்து கொண்டிருந்தார். எல்லாரது நெற்றியிலும் திருநீறு சந்தணம்.

"நேற்று சிவராத்திரி என்ன சிறப்பாக நடந்திருக்கும். சே! பாக்க முடியால் போட்டுதே!" என்று அம்மா மனம் வருந்தினார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயம் ஈழத்தின் கிழக்கேயுள்ளது. மனுராசன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. பின் இக்கோயிலை முதலாம் குளக்கோட்டன் என்ற சோழ அரசன் புனருத்தாரணம் செய்தான். இங்குள்ள சிவலிங்கம் சிவபக்தனாகிய இராவணனால் ஸ்தாபிக்கப்பட்டது. போத்துக்கேயரினால் இக்கோயில் அழிக்கப்பட்டபோது விக்கிரகங்களை தமிழர்கள் நிலத்துக்குள் புதைத்து வைத்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு அதே இடத்தில் கோயில் மீளவும் கட்டப்பட்டது. பின்னர் கிணறு வெட்டும்போது விக்கிரகங்களைக் கண்டெடுத்த மக்கள் கோயிலில் அவற்றை வைத்தார்கள். அம்மா கோவிலைப்பற்றிய விளக்கம் தந்தார்.
இடையே மான்கள் கூட்டமொன்று மலையின் சரிவிற்கு இடப்புறமாக புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தே 'ஆமிக் காம்ப்' ஒன்று புதிதாக முளைத்திருந்தது. கோனேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை பாதுகாப்புவலையமாக இருப்பதால் பாதுகாப்புப் படைகள் காவல் செய்கின்றனர்.

Monday, 14 April 2014

இரண்டு சம்பவங்கள்



சம்பவம் ஒன்று---இன விரோதம்

மே மாதம் 1983.

பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம்.