Saturday 24 February 2024

பதுங்கு குழி - எனக்குப் பிடித்த கதை



நந்தி (செ.சிவஞானசுந்தரம்)

ஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான்.

'ஒடி வாருங்கோ, தூரத்திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது.'

சில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள் - உயரத்திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்பறரும் வட்டமிட்டன. இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங்கிக் கொண்டனர். காலை 6-45 போல சூரியன் பௌர்ணமி ஒளியில் பொம்மர்கள் குறிபார்த்துச் சுடுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோருடைய நெஞ்சையும் நெருக்கியது. அதற்கு முன் குண்டு வீச்சு இரு தடவையும் இதே நேரத்தில்தான் நல்லூரில் நடந்தது.

வரதனின் வளவில் வேலி ஓரமாக வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழியில் அவன், அவனின் தாய் செல்லமணி, தங்கை வரதா, அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவிகள்.

'பாட்டா, எங்களுக்கும் ஒரு பதுங்குகுழி வெட்ட வேண்டும்' ;எங்கள் வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் வெட்டியாச்சு', 'பதுங்கு குழி உயிருக்குப் பாதுகாப்பாம்'- இவ்வாறு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வரதன் தன் தாயின் தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வரும்போது சில நாட்களாகக் கூறி வந்தான். செல்லத்துரைக் கிழவன் நேற்று முன்தினம் வரை இதை எல்லாம் கேட்டுச் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு நாட்கள் குண்டுகள் மாடி வீடுகளில் விழுந்தது உண்மைதான். மாடிவீடுகள் போராளிகளின் காம்ப் என்ற எண்ணம் இராணுவத்திற்கு உண்டு. மாடி வீட்டு மச்சில் இருந்து 50 கலிபர் துவக்குப் பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடியுமாம். ஆனால் செல்லத்துரையின் வீடு மாடி அல்ல, அது ஒரு பழைய நாற்சார் வீடுதான். அத்துடன் பதுங்கு குழி வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூபா வேண்டுமே! மூன்று பொம்மர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டின் மேலும் அவர்களால் குண்டுகள் போட முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 'ஷெல்' அடிக்கிறார்கள். அதற்குப் பதுங்கு குழிகளால் பிரயோசனம் இல்லை' இப்படியாக, இலங்கை இராணுவத்தின் பரிமாணத்தை அறிந்த ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.

நேற்று முன்தினம், அதிகாலை 3-30. நல்லூரின் மேலே வானம் நொருங்கி ஒவ்வொரு வீட்டின் கூரைகளிலே இடித்துகழ்களாகச் சொரிந்தது போன்ற ஓசை எல்லோரையும் அடித்து எழுப்பியது. காங்கேசன் துறையிலிருந்து போராளிகளின் மோட்டார் வான் ஒன்றைத் துரத்தி வந்த ஒரு ஹெலி அதைக் கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி பிடித்து துயிலிலிருந்த பூமிமேல் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. அயலிலே ஒரு வீட்டில் தூக்கத்திலிருந்த ஒரு வயோதிபரை துப்பாக்கிக் குண்டு துளைத்தது. மற்றவர்கள் வீடுகளிலே எங்கும் துவாரங்கள்: அவர்கள் வளவுகளிலே, வாழைகளிலே, பனைகளிலே, தென்னைகளிலே சன்னங்கள். அன்று நண்பகல் 'சீ பினேன்' ஒன்று வந்து படமெடுத்துச் சென்றது. சீப்பிளேன் வந்து போனால் பொம்மர் வரும் என்பதும் அனுபவம். வரதன் சொன்னான். 'கோள்மூட்டி வந்து போறான், நாளை ஆள்காட்டியைக் கூட்டிக் கொண்டு பொம்மர் வரும்' சீப்பிளேனைக் கோள்மூட்டி என்றும், பொம்மருக்குத் திசையும் குறியும் காட்டும் ஹெலியை, ஆள்காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம் சூட்டிவிட்டார்கள்.

அந்தியில் வரதனின் பாட்டா செல்லத்துரை இருவர் உதவியுடன் 'டானா' வடிவில் ஒரு பகுங்கு குழி வெட்டினார். பக்கத்துப் பிள்ளையார் கோயில் வளவில் சோடை போயிருந்த ஒரு தென்னைமரம் குழிக்கு மேலே அடுக்குவதற்கு வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப்பட்டது. அவற்றின் மேலே மண் மூட்டைகள் வைத்து மண்ணால் மூடப்பட்டது.

கிழவன் உள்ளே போகவில்லை. வெளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல், குழிக்குக் காவலாளிபோல் இருந்தார். வாய்விட்டுக் கூறாவிட்டாலும் அந்தக் குழி அவர் மனத்தில் சவக்குழியை ஞாபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப் பார்த்து 'பாட்டா உள்ளே வாங்கோ' என்று அவசரப்படுத்தினான். 'தேவையானால் வாறன்' என்றார் செல்லத்துரை: சாவகாசமாக வெற்றிலையை மென்று இரத்தச் சிவப்பாகத் துப்பிக் கொண்டிருந்தார்.

மேற்குத் திசையிலே இரு பொம்மர்கள் மாறி மாறிச் சத்தாருக்குக் கீழே இறங்கியபின் மேலே உன்னிப் போகும் போது பேரோசைகள் கேட்டன. 'ஆஸ்பத்திரியைச் சுற்றித் தான் அருச்சுனை நடக்குது' என்று கிழவன் முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் சூடுகள்: அதை எதிர்த்து பையன்களின் 50 கலிபர் வேட்டுக்கள்: கோட்டையிலிருந்து nஷல்லோசைகள். பூமியின் நான்கு திக்கும் அதிர்ந்தன.

'வாங்கோ பாட்டா' மீண்டும் வரதன்.

Friday 16 February 2024

மன்னிப்பாரா? - எனக்குப் பிடித்த சிறுகதை



பவானி ஆழ்வாப்பிள்ளை


'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா!....' ஒரு வார்த்தைதான்!...... பெற்றவள் கெஞ்சுகிறேன்....' மூர்த்தி அந்தக் காட்சியை தினைவு கூரச் சகியாதவன் போல் கண்களை இறுக மூடிக்கொண்டான், பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வுமிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ்சோதனை. அவன் சுமை ஒன்றும் புதிதல்ல. யுகயுகமாய் இரு உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம்தான் - ஒன்றைக் கடமை என்பர்! மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித்திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டுமிருக்கிறான். அவனுக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் நால்வர் காதலை மறந்து கடமை பெரிதெனக் கவலையற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலித்து வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந்தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள் - எல்லா விதத்திலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்குத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திரமறிந்துதான் இடச்சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இடமறிந்து மதிப்பிட்டுக் கொடுக்கவேண்டுமோ?

Monday 12 February 2024

பிசகு - எனக்குப் பிடித்த சிறுகதை



க. அருள்சுப்பிரமணியம்

இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது.

இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்கு. அந்த மரியாதைப் பூவின் இதழ்கள் இன்னும் என் இல்லம் நாடி மணம் பரப்பியபடியே இருக்கின்றன. இதில் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கிடைத்த கௌரவத்தை கட்டுக்குலையாமல் காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. சிறிது பிசகினாலும் சரிந்து விட வாய்ப்புண்டு.

இன்னமும், என்னைத் தெரிந்தவர்கள் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை சுகம் விசாரிக்காமல் விலகமாட்டார்கள். அவசர காரியமிருப்பின் போகிறபோக்கில் தலையாட்டி சிரித்துவிட்டுத்தான் போவார்கள். சிநேகமான சைகைகள் வழி தம் அன்பை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

சொந்த இடத்தில் மட்டுப்படாமல் வெளியூர்களிலும் என் கௌரவம் பாய்ந்து பரவியிருக்கிறது. நேற்றுக்கூட, நிலாவெளிப் பக்கமிருந்து கூட்டமாக வந்திறங்கினார்கள். எல்லாரும் வசதியாக இருக்க நாற்காலிகள் பத்தாமல் சிலர் முற்றத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் பகுதிப் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மாவட்ட கல்வி அதிகாரி பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். விழாவைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்திக் கேட்டார்கள். வழக்கத்தில் நானாகத் தேடிப் போய் உதவி செய்கிற பழக்கமுள்ளவன், வீடு தேடி வந்து விண்ணப்பவர்களின் முகம் முறிப்பேனா? முன்னரைப் போல் உடம்புக்கு முடியாவிடினும், வருகிறேன் என்றதும் வந்தவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் முழுநிலவு!