Monday 24 July 2023

ஒரு றெயில் பயணம் - எனக்குப் பிடித்த கதை


 குப்பிழான் ஐ.சண்முகன்

கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது.

கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில், மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து ஏதேதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். காற்சட்டை போட்ட உத்தியோகம் பார்க்கும் மனிதர்களும், சாரம் அணிந்த சாதாரண தொழிலாளர்களும், கோவணம் தரித்த மீனவரும், பெண்களும், கிழவர்களும், இளைஞரும், குமரிகளும், கிழவிகளும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக, திட்டுத்திட்டாக அமர்ந்திருந்து ஏதேதோ அளவளாவினார்கள். மனிதர்கள் பிறந்த நாள் தொடக்கமே கதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆதாமும், ஏவாளும் கூடக் கதைத்திருப்பார்கள். இவர்கள்ளுக்கு எப்போதுதான் இக்கதை முடியுமோவென நான் எண்ணினேன்.

Saturday 1 July 2023

உரிமை எங்கே? - எனக்குப் பிடித்த சிறுகதை

 

செந்தூரன்

காலை மூன்று மணி பறங்கி மலைத் தோட்டம் ஏழாம் நம்பர் ‘லயத்தில்’ உள்ள சுப்பையா நாயக்கரின் ‘காம்பிராவி’ல் கொழுந்து கணக்குப்பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கிய ‘அலாரம்’ கணீர் என்று ஒலித்தது. வழக்கத்திற்கு மாறாகத் தூங்காமலே கனவு கண்டு கொண்டிருந்த சுப்பையா நாயக்கர் மணியோசை கேட்டதும் எழுந்து விட்டார். எழுந்தவர் சும்மாயிருக்கவில்லை. நாள் முழுவதும் உழைத்த களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும், பிள்ளைகளையும் திட்டிக் கொண்டே எழுப்பினார் சுப்பையா.

“சனியனுங்கோ! நேரம் போச்சேன்னு கொஞ்சமாவது யோசனை இருக்கா? வெறகு கட்ட மாதிரில்ல ஆயியும் பிள்ளைகளும் கெடக்குதுக. ஏ…… புள்ளே , மீனாட்சி! எந்துருடி! எந்திரிச்சி அடுப்புப் பத்த வைச்சிப் புளிச்சாறு கட்டிடு, விடிஞ்சு வெள்ளக் கோழி கூவிடிச்சே, காது கேக்கலே? காதுல என்ன மத்துக் கட்டையா வச்சு அடைச்சிருக்கு? என்று சத்தமிட்டுக் கொண்டே மீனாட்சியை எழுப்பினார் நாயக்கர்.

“என்னங்க! என்னிக்கும் இல்லாத புதுமையா இன்னிக்கு என்னா வந்திரிச்சு? காலங்காத்தாலே எந்திரிச்சு ஏன் இப்படி சத்தம் போடுறிங்க? என்றாள் அரைத் தூக்கத்திலிருந்த மீனாட்சி.