Monday 24 June 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (9)


 

குருவின் சதி

தாழையடி சபாரத்தினம்

அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன்.

திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல; அழகன் என்பதையும் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவன் வேறு யாருமல்ல; பாண்டவர்களிலே வீமனுக்கு இளையவனான அர்ச்சுனன் தான்.

காட்டினூடே அவன் கண்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்தன. வேட்டையாடுவதில் அவ்வளவு அக்கறை அவனுக்கு. வேங்கையைக் கூட விரட்டியடிக்கும் நாயொன்று எஜமானுக்கு உதவியாக அங்குமிங்கும் ஓடி ஓடி மோப்பம் பிடித்துத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தது.

Sunday 16 June 2019

வெற்றிமணியும், சக்தி அச்சகமும்



 
சிறு பிராயத்தில் நான் `சக்தி ’அச்சகத்திற்கு செல்வதுண்டு. அப்போது ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணத்திலும், பின்னர் சுண்ணாகம் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலும் சக்தி அச்சகம் இருந்தது. அச்சுக்கூடம் செல்லும்போது சிலவேளைகளில் சினிமாவும் பார்த்ததுண்டு. அச்சுக்கூடம் போனதும் முதலில் அங்கே என்னென்ன அப்போது அடிக்கின்றார்கள் என்று பார்த்துவிடுவேன். பின்னர் ஒரு கதிரையில் அமர்ந்து ஏற்கனவே அங்கு பிரசுரமாகிய புத்தகங்கள் துண்டுப்பிரசுரங்களைப் படிப்பேன்.

கோர்க்கப்படும் அச்சுக்களைக் பார்க்கும்போது, சில இடங்களில் சொற்களின் நடுவே ஃபிளாங்கான (ஒரு எழுத்தும் இல்லாத) அச்சுக்களைக் காணக்கூடியதாக இருக்கும். எழுத்துக்கூட்டி வாசித்து அந்த எழுத்துக்கள் எவை எனக் கண்டுபிடிப்பது ஒரு விளையாட்டாக இருக்கும். அந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

“அத்தான்… இது ஏன் எழுத்து இல்லாமல் ஃபிளாங்காக இருக்கு?”

Tuesday 11 June 2019

சுவருக்கும் காதிருக்கும்!

பாபு குடும்பத்தினர் இந்த வருடம் ஈஸ்டர் விடுமுறையின் போது, மெல்பேர்ணில் உள்ள 'லேக் என்றன்ஸ்' (Lake Entrance) போய் வர விரும்பினார்கள். அப்படித் தொலைதூரம் போய் வரும் சந்தர்ப்பங்களில், தங்களது வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி மார்க்கிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.

மார்க், பாபுவின் வீட்டிற்கு இடப்புறமாக இருக்கும் ஒரு வெள்ளை இனத்தவர். வீட்டைச் சுற்றி இருக்கும் மனிதர்களில், அவருடன் மாத்திரமே பழகக் கூடியதாக இருக்கிறது. வலப்புறம் இருப்பவர்கள் இவர்களைக் காணும் தோறும் முகத்தை சிடுமூஞ்சித்தனமாக வைத்திருப்பார்கள். அவர்களை இன்னமும் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பின்வீட்டில் இருப்பவர்களைப் குறுக்கு மதிலை உயர்த்திவிட்டு குடியிருக்கின்றார்கள். வீதிக்கு எதிர்புறமாக ஒரு சீனக்குடும்பம் உள்ளது. அவர்கள் காணும்போது சிரிப்பார்கள். ஏறக்குறைய பாபுவின் குடும்பம் இந்த வீட்டிற்கு வந்து ஐந்து வருடங்களாகின்றன.

பாபுவிற்கு பள்ளிக்கூடம் போகும் வயதில் ஒரு மகளும் மகனும் இருக்கின்றார்கள். வீட்டைவிட்டு வெளியில் போகும் போது 'செக்கியூரிட்டி எலாமை'ப் போட்டுவிட்டுப் போவார்கள். திரும்பி வீட்டிற்கு வரும்போது அந்த 'எலாமை' தான்தான் நிற்பாட்டுவேன் என அவரது மகன் அடம் பிடிப்பான். காரினில் இருந்து இறங்கும்போதே 'சிக்ஸ் சிக்ஸ் நைன் ரூ' (six six nine two) என்று கத்திக் கொண்டே இறங்குவான். அவன் கத்துவதைப் பார்க்க பாபுவின் மனைவிக்குக் கோபம் வரும்.

Friday 7 June 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (8)


ஒருபிடி சோறு

இரசிகமணி கனக.செந்திநாதன்

யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை.

இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்படித் தஞ்சமடைந்த பல பேருக்கும் அன்னமளிக்கும் புண்ணியத்தை பல ‘பணக்காரப் புள்ளிகளுக்கு’ நோய் கொடுப்பதனால் தீர்த்து வைத்தான்!

வெள்ளிக்கிழமை மடம். இந்த மடத்திற்கொரு கெளரவ ஸ்தானம் அந்தக் கோவிலில் உண்டு. எவர் அன்னதானம் பெரிதாக நடாத்தினாலும் அந்தப் பெருமையை அடைவது அந்த மடம்தான்.

Saturday 1 June 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (7)


 



துறவு

சம்பந்தன்
 (திருஞானசம்பந்தன்)

அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.

இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.

எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.