Friday 16 October 2020

நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

 


நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.

புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.

“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.

நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.

Friday 2 October 2020

பிச்சைக்காரன் வாந்தி – சிறுகதை

“மொட்டைமாடி - வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி.

சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி வேணும்.

நீங்கள் போன வருஷம் கன்பராவுக்கு ஒரு வீட்டை கூட்டிக்கொண்டு போனனீங்களல்லோ? அவைன்ரை வீட்டுக் கிச்சின் கபினெற்றுகளைப் பாத்தனியள்தானே. எவ்வளவு பெரிய விசாலமான தட்டுகள்.

வீட்டு ரைல்ஸ் பெரிசா இருந்தாத்தான் நல்லது. வாணி வீட்டு ரைல்ஸ் மாதிரி…” மூச்சுவிடாமல், கிசுகிசு கிசுகிசு என்று ரிஸ்யூ கசங்கினமாதி கணவனுக்கு மாத்திரம் கேட்கும் வண்ணம் பொழிந்து தள்ளினாள் மஞ்சு.