Tuesday, 1 September 2026

`வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் மற்றும் மீண்டும் வசந்தகாலம்’ - கிம் கி-துக்கின் தென்கொரிய திரைப்படம் குறித்த பார்வை.


 Spring, Summer, Fall, Winter... and Spring – Kim Ki-Duk


உலகப் புகழ் பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் கி-துக் இன் புகழ்பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 2003 ஆம் ஆண்டு அவரே எழுதித் தயாரித்து நடித்தும் இருந்தார். படத்தின் தலைப்பு போலவே, திரைப்படத்தின் காட்சிகள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை வெவ்வேறு கால இடைவெளிகளில் நடக்கின்றது.

வசந்தகாலம்

திரை விலகுகின்றது. அமைதியான ஒரு ஏரியின் நடுவே மிதக்கும் ஒரு பெளத்த மடாலயம். வசந்தகாலத்தில் மரங்கள் துளிர்த்து நிற்கின்றன. ஒரு வயது முதிர்ந்த பெளத்த துறவி, மரத்தால் செய்யப்பட்ட மீன்போன்ற வாத்தியக்கருவியை (மொக்தாக்) சிறிய குச்சியினால் தட்டியபடி புத்தபிரானைக் குனிந்து வணங்குகின்றார். பின்னர் உறக்கத்தில் இருக்கும் குழந்தைத் துறவியை எழுப்புகின்றார். சிறுவனும் துயில் கலைந்து, முழந்தாளிட்டு புத்தபிரானை வணங்குகின்றான். பின்னர் இருவருமாக, மருந்துக்கான மூலிகைகள் தேடி, ஒரு படகில் தண்டு வலித்துச் செல்கின்றார்கள். இந்த வசந்த காலத்தின் ஆரம்பக் காட்சியுடன் - வயது முதிர்ந்த துறவியாக வரும் ஓ யங்-சுவும் (O Yeong-su), குழந்தை துறவியாக வரும் ஜோங்-ஹோ கிம்மும் (Jong-ho Kim) நம் மனதில் இடம்பிடித்து விடுகின்றார்கள்.

சிறுவன், காடுகள் நிறைந்த மலையில் இருக்கும் புத்தபிரானின் சிலையின் தோள்மீது ஏறி நின்று அற்புதமான இயற்கையை இரசிக்கும் போது, ஒளிப்பதிவாளர் நம்மையும் அங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றார்.

சிறுவன், பாம்புகளைத் தூக்கி சுழற்றி எறிகின்றான். நாயுடன் விளையாடுகின்றான். தானே துடுப்பு வலித்து படகோட்டவும் கற்றுக் கொள்கின்றான். அவனின் குறும்புகள் எம்மை மட்டுமல்ல, முதிர்ந்த துறவியையும் கவர்ந்து கொள்கின்றன. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதும் புன்னகை கொள்வதுமாக இருக்கின்றார்கள். முதிர்ந்த துறவி சிறுவனை மிகவும் பொறுப்புடனும் அவதானத்துடனும் வளர்க்கின்றார்.

Saturday, 15 August 2026

ஊர் திரும்புதல் - சிறுகதை

    

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன.

"தம்பி குகன்... வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்" மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா… திருவள்ளுவர் தாடி; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன்.

நேரம் : காலை 9.20, திகதி : 25.05.2011

நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும் நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம் இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..." வீடியோக்கமராவை ஆட்டிக் கொண்டே குகன் பாடத் தொடங்கினான்.

Friday, 17 July 2026

“எனக்கு உன்னைத் தெரியாது” – சிறுகதை

 

இரவு  மணி பத்தாகிவிட்டது. இன்னமும் மோகன் வீடு வந்து சேரவில்லை. வேலை அலுவலாகச் சற்றுப் பிந்தும் என்று சொல்லியிருந்தான், என்றாலும் இதற்குள் வந்திருக்க வேண்டும். நளாயினி போன் செய்தபோது மோகனின் மொபைல்போன் சுவிச் ஓஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு துடித்துப் போனாள். எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் மோகன் வேலை முடிந்து பிந்தி வருவதுண்டு. அந்த வேளைகளில் அவன் கொஞ்சம் மதுவும் அருந்தியிருப்பான்.

என்ன செய்வது? குழந்தையின் தேகம் அனலாகக் கொதித்தது.

நளாயினி தன் குழந்தையை மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு, பின்புறமிருந்த வீட்டிற்குச் சென்று கண்ணீர் விட்டாள். மோகன் எங்கே போயிருக்கின்றான் என்று சரியாகத் தெரியாதபடியால் அவர்களால் நளாயினிக்கு உதவ முடியவில்லை.

வீட்டிற்குத் திரும்பிய நளாயினி இரவு முழுவதும் விழித்திருந்து, ஒரு மூலையில் குழந்தையுடன் ஒடுங்கிப் போயிருந்தாள்.

அன்று இரவு முழுவதும் மெல்பேர்ண் சிற்றியில் அலைந்து திரிந்துவிட்டு விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு ரக்‌ஷியில் வந்து இறங்கினான் மோகன்.

“இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீர்கள்?” அழத் தொடங்கிவிட்டாள் நளாயினி.

“குழந்தாய்…. நான் சுவாமி தரிசனம் முடித்து வந்திருக்கின்றேன்” பக்தியின் குரலை முன் வைத்தான் மோகன்.