Tuesday, 15 September 2026

நாய்ப்பிழைப்பு - குறுங்கதை

 

றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான்.

கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் 'ஷொப்பிங் பாக்'கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில வேளைகளில் மூச்சு இரைத்தபடி நாய் அவனை முந்திச் செல்வதையும் காணலாம்.

"என்ன நாயொண்டு வாங்கியிருக்கிறாய் போல?" வேலை செய்யுமிடத்தில் றோமனைக் கேட்டேன்.

அது தன்னுடைய பெண் சினேகிதி றெக்ஷ்சினுடைய நாய் 'ஷீலா' என்றான். விவாகரத்துப் பெற்று இருபது இருபத்தைந்து வருடங்களின் பின்பு ஒரு சினேகிதி கிடைத்திருந்தும், அவளது நாயைத்தான் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று கவலைப்பட்டான். உடற்பயிற்சியும் அளவான சாப்பாடும் உடலுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை றோமனைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

இன்று எனக்கு ஒரு வினோத அனுபவம் கிட்டியது. நாய் பற்றிய அறிவு எனக்கு 'கம்மி'தான் என்றாலும், அவற்றின் நிறங்களை வேறுபடுத்தும் திறனில் குறைவில்லை. முதல் இரண்டு ரவுண்டில் வெள்ளை நிறத்தில் ஓடிய ஷீலா, அடுத்த இரண்டு ரவுண்டிலும் கறுப்பு நிறத்தில் ஓடியது. ஐந்தாவது ரவுண்டில் றோமனை மடக்கிப் பிடித்து விஷயமறிய வாசலுக்கு விரைந்தேன்.

அதிர்ச்சி காத்திருந்தது ஐந்தாவது ரவுண்டில். ஷீலா தன் வெள்ளை நிறத்திற்கு கறுப்புப்பொட்டுகள் போட்டுக் கொண்டு ஓடியது. எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகத்தை றோமனிடம் கேட்டேன். முதலில் அவன் மூச்சிரைக்க சிரித்தான். பின்னர் விலாவாரியாக விளக்கம் தந்தான்.

"முதலில் ஓடியது ஷீலா. அது லப்பிறடொர் (Labrador) இனம்.

அடுத்து போனது மாலா. அது பிற்புல் (Pitbull) இனம்.

இது ஷரன். டல்மேஷன் (Dalmatian) இனம்."

"அப்ப உனக்கு இப்பொழுது மூன்று கேர்ள் ஃபிரண்டா? என்ற எனது நியாயமான கேள்வியை அவன் முன் வைத்தேன்.

சிரித்து விட்டு, "இல்லை... இல்லை. றெக்ஷ் எனக்கு இன்னும் இரண்டு கஸ்டமர்ஷை பிடித்துத் தந்திருக்கின்றாள்" என்றான் றோமன்.

"வாடிக்கையாளர்களா?"

"ஆமாம். ஒவ்வொரு நாயிற்கும் இருபது நிமிடங்கள் ஓட்டிச் செல்வதற்கு பத்து டொலர்கள் வீதம் வாங்குகின்றேன். நாய்ப்பிழைப்பு அப்பிடியொன்றும் இலகுவான காரியமல்ல. சிலவேளைகளில் ஓட வரமாட்டேன் என்று அடம் பிடிக்குங்கள். சிலசமயங்களில் துணை ஒன்றைக் கண்டுவிட்டால் ஓடுவதைக் குழப்பிவிட்டு குறுக்காலை போய் விடுங்கள். பொறுத்த இடத்திலை சூவும் அடிச்சிடுங்கள்" விளக்கம் தந்தான் றோமன்.

"ஒருமுறை எனது பெண் தோழியின் நாய், ஷீலா, எனது படுக்கை அறைக்குள் புகுந்து கொண்டது. போகமாட்டேன் என அடம் பிடித்து அங்கேயே படுத்தும் விட்டது. விட்டேன் ஒரு உதை. எனக்கு நாய்கள் என்றால் பிடிப்பதே இல்லை. விசர்தான் வரும்."

"அப்படியென்றால் உங்களுடைய கேர்ள் ஃபிரண்டிடம் இருந்தும் பணம் வாங்குகின்றீர்களா?" என்ற எனது வியப்பிற்கு

"ஆமாம் நட்பு வேறு. வியாபாரம் வேறு. Friendship is different from business" என்றான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அவனுடைய மனைவி ஏன் றோமனை விட்டுப் பிரிந்தாள் என்பது இப்போது புரிந்தது. இப்போதெல்லாம் அவனைப் பார்க்கும் போதும் நாய்தான் நினைவுக்கு வருகின்றது. என்ன ஒரு வித்தியாசம். நாக்கு தொங்குவதில்லை.

Tuesday, 1 September 2026

`வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் மற்றும் மீண்டும் வசந்தகாலம்’ - கிம் கி-துக்கின் தென்கொரிய திரைப்படம் குறித்த பார்வை.


 Spring, Summer, Fall, Winter... and Spring – Kim Ki-Duk


உலகப் புகழ் பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் கி-துக் இன் புகழ்பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 2003 ஆம் ஆண்டு அவரே எழுதித் தயாரித்து நடித்தும் இருந்தார். படத்தின் தலைப்பு போலவே, திரைப்படத்தின் காட்சிகள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை வெவ்வேறு கால இடைவெளிகளில் நடக்கின்றது.

வசந்தகாலம்

திரை விலகுகின்றது. அமைதியான ஒரு ஏரியின் நடுவே மிதக்கும் ஒரு பெளத்த மடாலயம். வசந்தகாலத்தில் மரங்கள் துளிர்த்து நிற்கின்றன. ஒரு வயது முதிர்ந்த பெளத்த துறவி, மரத்தால் செய்யப்பட்ட மீன்போன்ற வாத்தியக்கருவியை (மொக்தாக்) சிறிய குச்சியினால் தட்டியபடி புத்தபிரானைக் குனிந்து வணங்குகின்றார். பின்னர் உறக்கத்தில் இருக்கும் குழந்தைத் துறவியை எழுப்புகின்றார். சிறுவனும் துயில் கலைந்து, முழந்தாளிட்டு புத்தபிரானை வணங்குகின்றான். பின்னர் இருவருமாக, மருந்துக்கான மூலிகைகள் தேடி, ஒரு படகில் தண்டு வலித்துச் செல்கின்றார்கள். இந்த வசந்த காலத்தின் ஆரம்பக் காட்சியுடன் - வயது முதிர்ந்த துறவியாக வரும் ஓ யங்-சுவும் (O Yeong-su), குழந்தை துறவியாக வரும் ஜோங்-ஹோ கிம்மும் (Jong-ho Kim) நம் மனதில் இடம்பிடித்து விடுகின்றார்கள்.

சிறுவன், காடுகள் நிறைந்த மலையில் இருக்கும் புத்தபிரானின் சிலையின் தோள்மீது ஏறி நின்று அற்புதமான இயற்கையை இரசிக்கும் போது, ஒளிப்பதிவாளர் நம்மையும் அங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றார்.

சிறுவன், பாம்புகளைத் தூக்கி சுழற்றி எறிகின்றான். நாயுடன் விளையாடுகின்றான். தானே துடுப்பு வலித்து படகோட்டவும் கற்றுக் கொள்கின்றான். அவனின் குறும்புகள் எம்மை மட்டுமல்ல, முதிர்ந்த துறவியையும் கவர்ந்து கொள்கின்றன. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதும் புன்னகை கொள்வதுமாக இருக்கின்றார்கள். முதிர்ந்த துறவி சிறுவனை மிகவும் பொறுப்புடனும் அவதானத்துடனும் வளர்க்கின்றார்.

Saturday, 15 August 2026

ஊர் திரும்புதல் - சிறுகதை

    

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன.

"தம்பி குகன்... வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்" மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா… திருவள்ளுவர் தாடி; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன்.

நேரம் : காலை 9.20, திகதி : 25.05.2011

நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும் நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம் இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..." வீடியோக்கமராவை ஆட்டிக் கொண்டே குகன் பாடத் தொடங்கினான்.