Friday, 1 May 2026

"ததிங்கிணதோம்" - சிறுகதை

 


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

Tuesday, 14 April 2026

எதிர்பாராதது! - சிறுகதை


நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.