Sunday, 17 May 2026

பெதும்பை - சிறுகதை

 

த்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சுஜித்தா பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள் நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில் ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.

சில நாட்களாக சுருக்கங்கள் விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும் தழும்பிக் கிடந்தன.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும் தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின் வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.

அப்பா ஒரு போர்வீரர் அல்ல. எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும் இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.

மாலை சரிந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தே குரல் எழுப்பியபடியே மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன். தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின் பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள் இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.

“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

Thursday, 14 May 2026

விசித்திரமான வாழ்க்கை - கங்காருப் பாய்ச்சல்கள் (50)

 


மேலை நாடுகளில் தனித்து வாழ்வதற்கு பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும் இடத்தில், எம் அயலவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பாட்டில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரிவதில்லை, பழகுவதில்லை. ஒரு துன்பம் துயரத்திற்குக்கூட உதவ மாட்டார்கள்.

நாம் நமது நாட்டில் அப்படி வாழப் பழகவில்லை என்பதால் இது விசித்திரமாகத் தெரிகின்றது..



எனக்கொரு விசித்திரமான தமிழ் நண்பன் ஒருவன் இங்கு இருக்கின்றான். நான் ஒருமுறை தொலைபேசியில் எடுத்துக் கதைத்தால், சிலகாலம் கழித்து தானும் ஒருமுறை எடுத்துக் கதைப்பான். பின் எனது முறைதான். நான் எடுக்காவிட்டால் தானும் எடுக்க மாட்டான். அந்த இடைவெளிக்குள் எது நடந்தாலும் அவன் தொலைபேசி எடுக்க மாட்டான். உயிரே போனாலும் எடுக்க மாட்டான். எனக்கும் அவனுக்கும் பொதுவான நண்பர்கள் இருந்து அவர்களுக்கேனும் சுக துக்கங்கள் நடந்தாலும் சொல்ல மாட்டான்.

டைரி வைத்து நான் எப்போது கதைத்தேன், தான் எப்போது கதைத்தேன் என்று எழுதி வைப்பான் போலும்.



கார் பழுதானால் அவன் என்னிடம் அவசர உதவி கேட்கமாட்டான். ஏனென்றால் பிறகு தானும் உதவி செய்யவேண்டி வரும் என்பதால். காசு இருக்கு. ‘ரக்‌ஷி’ இருக்கு. பிறகென்ன? இறக்கும் வரைக்கும் காசைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றான். ஊரில் யார் காணி விற்றாலும் வாங்கி விடுவான். வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி, ஒரு கொண்டாட்டம், ஒரு உல்லாசம்…. சீ. மறுபிறப்பிற்கும் இவற்றைக் கொண்டு செல்லலாம் என்று இற்றை வரையும் நம்புகின்றான்.

இந்த மனிதர்களே பாவம். ஓய்வுபெற்ற பின்னர், அல்லது அறுபதைக் கடந்தவுடன் தான் எல்லாம் என்று, ஏங்கி ஏங்கி தண்னி வென்னி குடிக்காமல் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து விடுகின்றார்கள். இடையில் ஆசையை ஒறுத்து எதுவுமே செய்யாமல் வேலை வேலை என்று காலத்தைக் கடத்துகின்றார்கள். ஒரு சினிமாவுக்குப் போவது என்றாலும் தயக்கம் தான். ஏன் அந்தச் சினிமா இன்னும் பத்து வருஷங்களுக்கு இருக்காதோ? ஒரு புத்தகம் வாங்கக் குடுக்கிற காசை சேமிச்சு வைச்சா சொர்க்கம் போகேக்கை மேலுக்கு அள்ளிக்கொண்டு போகலாம் எண்ட நினைப்பு. நண்பர்களை வீட்டுக்குச் சேர்ப்பதில்லை. ஒரு தேநீர் போடும் வேலை மிச்சம், செலவும் மிச்சம் என்ற கருமிகளும் உண்டு.

Friday, 8 May 2026

மவுஸ் – சிறுகதை

காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும்வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.


செய்தி இதுதான்.

|
காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|



எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம்குவாலிற்றி சேர்க்கிள்என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன். முதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.

Friday, 1 May 2026

"ததிங்கிணதோம்" - சிறுகதை

 


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.