Friday 26 April 2024

காதைத் திறந்து வையுங்கள், வாயைப் பொத்திக் கொள்ளுங்கள் - கங்காருப்பாய்ச்சல்கள் (44)

 
என்னுடைய நண்பர்களில் சிலர், ஒரு சிலரின் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கு முன்னரே உடனுக்குடன் அழித்துவிடுவதாகச் சொல்வார்கள். மேலும் அவர்களின் எந்தவொரு படைப்பையும் புத்தகத்தையும் தாங்கள் வாசிப்பதில்லை எனவும் சொன்னார்கள். அவர்களின் கொள்கைகள், செயற்பாடுகள், நடத்தைகள் இவற்றைவிட வேறென்ன அவர்களின் படைப்புகளில் இருக்கப் போகின்றது என்பது அவர் வாதம். இப்பொழுது நானும்.

ஒரு அமைப்பில் உள்ளவர்கள் முறையற்று நடந்து கொள்கின்றார்கள் என அவர்களை ஒருவர் நிராகரிப்பதும் - பின்னர் அவர்கள் விருதைத் தந்தவுடன் `யார் தந்தால் தான் என்ன, அது எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதுதான்என ஏற்றுக் கொள்வதும் எந்த வகையில் நியாயம்? அவர்கள் அவரின் வாயை மூடுவதற்குத்தான் இதைச் செய்கின்றார்கள் என்பதை விருதைப்பெறுபவரின் பேராசை பிடித்த மனம் நிராகரித்துவிடுகின்றதே!

எஸ்.பொ இலக்கியத்தோட்டத்தில் விருதைப் பெற்றுக்கொண்டு, பாதி வழியில் திரும்பும்போது அந்த அமைப்பைக் காறித் துப்பிவிட்டாரே!

மனித மனங்களைச் செழுமையாக்குவதற்கே இலக்கியம். சண்டை செய்து வியாக்கியானம் பேசுவதற்கு அல்ல.

தமிழ் வளர்க்கக் கடமைப்படாத எழுத்தாளர்களினதும் (30 வார்த்தைகள் தமிழில் எழுதினால் 300 வார்த்தைகள் ஆங்கிலம் கலக்கும்) –மனிதாபிமானமற்ற சுயநலப்போக்குடைய எழுத்தாளர்களினதும் படைப்புகளை – அது எத்தகைய உச்சம் கொண்ட போதிலும் நான் படிப்பதில்லை.

அவை என்னில் எந்தவித மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை என்பதில் நான் திடமாக இருக்கின்றேன்.

எழுத்தாளர்களிடமிருந்து நியாயமான படைப்புகள் வெளிவரல் வேண்டும். அவர்களின் நோக்கம் எது என்று தெரியாமலே, சொல்லி வைத்த சிலரால் பாராட்டப்படுகின்றார்கள். பின்னர் தாமே பணம் கொடுத்து அவற்றை பிற மொழியிலும் மொழிபெயர்க்கின்றார்கள்.

Monday 22 April 2024

நல்ல இலக்கியங்கள் எப்படி உருவாகும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (43)

 
பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம் போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின் இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள். நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால் உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில் விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன.

°

நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே!

இதில் நாம் ஏன் இன்னொரு எழுத்தாளரின் விமர்சனத்தைப் பெரிது பண்ண வேண்டும்? எழுத்தாளர் என்பவர் மக்கள் கூட்டத்தினரின் ஒர் அங்கத்தவரே தவிர வாசகர் கூட்டத்தைப் பிரதிபலிப்பவர் அல்லவே.

வாசகப் பரப்பிலிருந்து வரும் விமர்சனத்தையே நாம் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுவும் ஒன்றிரண்டு விமர்சனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு எடை போடாமால், ஒட்டுமொத்த விமர்சனங்களையும் வாசித்து சமன்செய்து  சீர் தூக்கிப் பாருங்கள்.

°

‘உந்தக் கதை கவிதை நாவல் எல்லாம் சுத்த வேஸ்ற். வாழ்க்கைக்கு உதவாது. அபுனைவு நூல்கள்தான் வாழ்க்கைக்கு உதவும்.’ என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கின்றார்,

அவர் புனைவு நூல்களைப் படிப்பது இல்லை. தூக்கி எறிந்துவிடுவார். வரலாற்று நூல்கள் மற்றும் அபுனைவுப் படைப்புகளையே அவர் விரும்பிப் படிக்கின்றார்.

அவருக்கு நான் எந்தவிதமான விளக்கம் கொடுக்கலாம்?

நவீன தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளைத் தவிர ஏனையன எல்லாம் எப்போதோ எழுதப்பட்டுவிட்டன. அவற்றை காலத்துக்கு ஏற்ற விதத்தில் நவீனமயப்படுத்தி எழுதுவதுதான் இன்றுள்ளவர்களின் வேலை.

 

Thursday 18 April 2024

ஏன் போட்டிகளுக்கு எழுதவேண்டும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (42)

நாம் ஒரு படைப்பை எழுதி, பத்திரிகை/சஞ்சிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பிரசுரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள், அந்தப் படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை எப்படி அறிவது? படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே கடந்து சென்றுவிடுகின்றார்கள். இணையத்தளங்களில் முகத்துக்காக சில முகத்துதிக் குறிப்புக்கள், விருப்பக்குறீடுகளைப் போட்டுவிட்டுக் கடந்து விடுகின்றார்கள்.

போட்டிகளுக்கு அனுப்பும்போது அந்தப் படைப்புகளை நடுவர்கள் படிக்கின்றார்கள். போட்டியில் பரிசு கிடைத்துவிட்டதென்றால், போட்டியில் பங்குபற்றியவர்கள் படிக்கின்றார்கள். தங்கள் படைப்பைக் காட்டிலும், பரிசு பெற்றவர்களின் படைப்பில் அப்படி என்ன விசேசம் இருக்கின்றது என ஆராய்கின்றார்கள். வாசகர்கள் கூட பரிசு பெற்ற படைப்புகளை வாசிக்க விருப்பப்படுகின்றார்கள்.

போட்டியில் வென்ற படைப்புகளை நீங்கள் ஓகோ என்று பார்க்கத் தேவையில்லை. அந்த நேரத்தில் வந்த படைப்புகளில் சிறந்தவை அவை. ஆனால் அவை வாசிக்கத் தகுந்த படைப்புகள். ஒரு படைப்பை எழுதிவிட்டு, பிரசுரமாவதற்கு முன்னர் நண்பர்கள் வாசகர்களிடம் வாசிக்கக் குடுத்தது போல என எடுத்துக் கொள்ளுங்களேன்.

இன்று எழுத்தாளர்களைக் கவனிக்காது, தமது வட்டம் சார்ந்தவர்களை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்களின் மத்தியில், போட்டிகளே எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருபவை.

அதை விடுத்து ஒரு படைப்பைப் பிரசுரித்துவிட்டு, அதை மின்னஞ்சல்கள் மூலம் பலருக்கும் அனுப்பிவிட்டோ அல்லது ரெலிபோனில் கதைத்தோ புகழ்ச்சிகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன இருக்கின்றது? வாசகர்களை வலிந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.

இளம் எழுத்தாளர்களே! உங்கள் படைப்புகளை பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்பி உங்களைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்புவதால், வித்தியாசம் வித்தியாசமான அமைப்புகள், நடுவர்கள் உங்கள் படைப்புகளைப் பார்வையிடுவார்கள்.