அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.
சுஜித்தா பாடசாலை தவிர்ந்த
நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள்
நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள
எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில்
ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.
சில நாட்களாக சுருக்கங்கள்
விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட
சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும்
தழும்பிக் கிடந்தன.
ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில்
அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக்
காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக
வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும்
தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு
எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின்
வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.
ஆனாலும் இந்த மகிழ்வில்
கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள்
வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச்
செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.
அப்பா ஒரு போர்வீரர் அல்ல.
எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும்
இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு
இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.
மாலை சரிந்து கொண்டிருந்தது.
தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத்
திரும்பிக் கொண்டிருக்கின்றன.
தூரத்தே குரல் எழுப்பியபடியே
மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன்.
தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின்
பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள்
இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.
“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

.png)

