Monday, 1 June 2026

தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

 தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

பயிலரங்கு

குரு அரவிந்தன்.

15 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பங்கு பற்றலாம்.

10 வயதிற்கு உட்பட்ட பல தரப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ் பாடலாக இருக்க வேண்டும்.  பாடல்கள் தமிழ் சிறுவர்கள் மனனம் செய்யக் கூடியதாகவோ மனதில் பதியக் கூடியதாகவோ சிறிய பாடலாக அமையவேண்டும். பாடல்கள்:

1)         குழந்தை பற்றிய பாடல்

2)         குழந்தைகளுக்கான பாடல்

3)         தாலாட்டுப் பாடல் - இதில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து, அதற்கு ஏற்ப எழுதி அனுப்பவும்.

பாடல்கள் இலகுவான சிறிய சொற்களைக் கொண்ட பந்திகளில்

மொத்தம் 12 வரிகளில் அல்லது ஆகக்கூடியது 16 வரிகளில் இருக்க வேண்டும்.

இது சிறுவர்களுக்கான பாடல் என்பதால் அதற்கு மேல் வரிகள் உள்ள பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது பெரியவர்களுக்கான பாடல்கள் அல்ல, சிறுவர்கள் புரிந்து இலகுவில் பாடமாக்கக் கூடியதாக, மனதில் பதிக்கக் கூடியதாக அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.

பாடல்கள் மழலைகளுக்கு ஏற்றதாக, அவர்கள் பதிய சிறிய சொற்களை உள்வாங்கக் கூடியதாக ஒலி நயத்தோடு, இயற்கை சார்ந்ததாக அமைவது நல்லது. குறிப்பாக நிலம், நீர், வானம், மரம், செடி, நிறம், மிருகம், பறவை, எண், எழுத்து, கிழமை, மாதம், பருவகாலம், நட்பு, ஒற்றுமை, விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் அன்றாட செயற்பாடு போன்ற குழந்தைகளின் மனதில் பதியக்கூடிய இலகுவான அர்தமுள்ள பாடல்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பாலருக்கான இந்தப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். எனவே இந்தப் பாடல் பயனுள்ளதாக இருந்தால்தான் அது மீண்டும் மீண்டும் அவர்களால் இசைக்கப்படும்.

குழந்தைகள் ஒரே நேரத்தில் குறைவான தகவல்களையே உள்வாங்கிக் கொள்வதால், எளிமையான வாக்கியங்களைச் சிறியதாகவும், சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் பாவியுங்கள். ஒரு பல்லவி, ஒரு சரணத்தை உடல் அசைவுக்கேற்ப இணைக்கலாம். சந்தத்திலும் கவனம் செலுத்துங்கள். சந்தம் என்பது சொற்கள் தாளத்துடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் குறிக்கிறது.

உதாரணம்: ‘நாங்கள் பாடுவோம், நாங்கள் ஆடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்.’

குழந்தைகள் திரும்பச் சொல்லும் மற்றும் பெற்றோர்கள் ரசிக்கும், எளிதில் மனதில் பதியும், அன்பான பாடல்களை உருவாக்குங்கள். எளிய மொழி, அசைவுகளுக்கு ஏற்ற தாளங்கள் மற்றும் கற்றலை ஒரு விளையாட்டைப் போல உணரச் செய்யுங்கள். உதாரணமாக இந்த பாரதி பாடலைப் பாருங்கள்: குழந்தைகளைப் பற்றிய பாரதி பாடலில் நான்கு வரிகள்:

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

 குழந்தைகளுக்கான குரு அரவிந்தனின் பாடலில் நான்கு வரிகள்:

எங்க வீட்டுத் தோட்டத்தில்

சின்னச் சின்னச் செடிகளில்

காலை நேரம் மலர்ந்திடும்

வண்ண வண்ணப் பூக்களாம்.

 குழந்தைகளுக்கான கமலவதனா சுந்தாவின் பாடலில் நான்கு வரிகள்:

பனிமழையே பெய்! பெய்! பெய்!

ஒவ்வொரு நாளும் பெய்! பெய்! பெய்!

பூப்பனிபோலப் பனியே பெய்! பெய்! பெய்!

பூம்பாறை செய்யப் பெய்! பெய்! பெய்!

 இதற்கான விதி முறைகள்:

சிறுவர் பாடல்கள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் தெரிவுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நூலில் இடம் பெறும்.

பாடலாசிரியரின் முழுப் பெயர் மட்டும் புத்தகத்தில் பாடலுடன் இடம் பெறும். அதாவது, அவரது பெயரும் குடும்பப்பெயரும் மட்டும் இடம் பெறும். புனைப் பெயரோ அவரது பட்டங்களோ இடம் பெறமாட்டாது. மாணவர்களாயின் கல்வி நிலையத்தின் பெயரும் அவர்கள் விரும்பினால் இடம் பெறும்.

ஒருவர் ஒரு சிறுவர் பாடல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

அச்சுப்பிரதி தேவையானவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

பாஸ்போட் படம் அளவு உங்கள் படம் ஒன்று இணைக்கப்படவேண்டும்.

நூல் தொகுப்பாசிரியராக எழுத்தாளர், ஆசிரியர் குரு அரவிந்தன் பணியாற்றுவார். நூல் வெளியீட்டு உரிமை கிராமத்து வதனம் பெண்கள் அமைப்புக்கு உரியது.

நீங்கள் அனுப்பும் பாடல் உங்கள் சொந்தப் பாடல் என்பதையும், எங்கிருந்தும் பிரதி எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்து சேராத சிறுவர் பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பாடல்கள் எல்லாம் தெரிவு செய்தபின் நூல் வெளியிடும் திகதி பின்னால் அறிவிக்கப்படும்.

பாடல்களில் திருத்தங்கள் செய்யும் உரிமையும், முதலில் வெளியிடும் உரிமையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பிற்கே உரியது.

உலக சாதனை நூலில் உங்கள் பாடலும் இடம்பெற வாழ்த்துகள்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் பாடல்களையும், உறுதி மொழியையும் 2026 யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டிய

மின்னஞ்சல்: vathani.suntha@gmail.com

திருமதி கமலவதனா சுந்தா, நிறுவுனர்.

கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பு – கனடா.

தொடர்புகளுக்கு: 647-765-9761

Monday, 25 May 2026

எனது சிறுகதைகள் பெதும்பை (சொல்வனம்), மவுஸ் (வாசகசாலை) தேர்வாகியுள்ளன

 

2026 ஏப்ரல்: நாம் தவறவிடக் கூடாத சிறந்த சிறுகதைகள்! | தினேஷ் ஜெயபாலன் & மந்திரமூர்த்தி அழகு

Monday, 18 May 2026

பெதும்பை - சிறுகதை

 

அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சுஜித்தா பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள் நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில் ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.

சில நாட்களாக சுருக்கங்கள் விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும் தழும்பிக் கிடந்தன.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும் தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின் வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.

அப்பா ஒரு போர்வீரர் அல்ல. எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும் இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.

மாலை சரிந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தே குரல் எழுப்பியபடியே மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன். தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின் பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள் இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.

“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

Thursday, 14 May 2026

விசித்திரமான வாழ்க்கை - கங்காருப் பாய்ச்சல்கள் (50)

 


மேலை நாடுகளில் தனித்து வாழ்வதற்கு பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும் இடத்தில், எம் அயலவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பாட்டில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரிவதில்லை, பழகுவதில்லை. ஒரு துன்பம் துயரத்திற்குக்கூட உதவ மாட்டார்கள்.

நாம் நமது நாட்டில் அப்படி வாழப் பழகவில்லை என்பதால் இது விசித்திரமாகத் தெரிகின்றது..



எனக்கொரு விசித்திரமான தமிழ் நண்பன் ஒருவன் இங்கு இருக்கின்றான். நான் ஒருமுறை தொலைபேசியில் எடுத்துக் கதைத்தால், சிலகாலம் கழித்து தானும் ஒருமுறை எடுத்துக் கதைப்பான். பின் எனது முறைதான். நான் எடுக்காவிட்டால் தானும் எடுக்க மாட்டான். அந்த இடைவெளிக்குள் எது நடந்தாலும் அவன் தொலைபேசி எடுக்க மாட்டான். உயிரே போனாலும் எடுக்க மாட்டான். எனக்கும் அவனுக்கும் பொதுவான நண்பர்கள் இருந்து அவர்களுக்கேனும் சுக துக்கங்கள் நடந்தாலும் சொல்ல மாட்டான்.

டைரி வைத்து நான் எப்போது கதைத்தேன், தான் எப்போது கதைத்தேன் என்று எழுதி வைப்பான் போலும்.



கார் பழுதானால் அவன் என்னிடம் அவசர உதவி கேட்கமாட்டான். ஏனென்றால் பிறகு தானும் உதவி செய்யவேண்டி வரும் என்பதால். காசு இருக்கு. ‘ரக்‌ஷி’ இருக்கு. பிறகென்ன? இறக்கும் வரைக்கும் காசைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றான். ஊரில் யார் காணி விற்றாலும் வாங்கி விடுவான். வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி, ஒரு கொண்டாட்டம், ஒரு உல்லாசம்…. சீ. மறுபிறப்பிற்கும் இவற்றைக் கொண்டு செல்லலாம் என்று இற்றை வரையும் நம்புகின்றான்.

இந்த மனிதர்களே பாவம். ஓய்வுபெற்ற பின்னர், அல்லது அறுபதைக் கடந்தவுடன் தான் எல்லாம் என்று, ஏங்கி ஏங்கி தண்னி வென்னி குடிக்காமல் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து விடுகின்றார்கள். இடையில் ஆசையை ஒறுத்து எதுவுமே செய்யாமல் வேலை வேலை என்று காலத்தைக் கடத்துகின்றார்கள். ஒரு சினிமாவுக்குப் போவது என்றாலும் தயக்கம் தான். ஏன் அந்தச் சினிமா இன்னும் பத்து வருஷங்களுக்கு இருக்காதோ? ஒரு புத்தகம் வாங்கக் குடுக்கிற காசை சேமிச்சு வைச்சா சொர்க்கம் போகேக்கை மேலுக்கு அள்ளிக்கொண்டு போகலாம் எண்ட நினைப்பு. நண்பர்களை வீட்டுக்குச் சேர்ப்பதில்லை. ஒரு தேநீர் போடும் வேலை மிச்சம், செலவும் மிச்சம் என்ற கருமிகளும் உண்டு.