Friday 6 November 2020

அதிர்வு – சிறுகதை

 


“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.

 அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,

 பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.

 தங்கள் நல்வரவை நாடும்,

அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்

 “ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”