Thursday, 20 February 2025

நெஞ்சாங்கூட்டு நினைவுகள்! - எனக்குப் பிடித்த கதை



புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

நான் அறிந்த நாளிலிருந்தே நடுவிலம்மான் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும் அவரது சொந்தப் பெயர் மண்டலாய் என ஐந்தாம் வகுப்புப் படித்த போதே எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஒரு நாள் ஆறுமுகப்பாவின் கடைக்கு கூப்பன் எடுக்க அம்மாவுடன் அவவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சென்ற போது, “மண்டலாய் இப்போது மாடு மேய்க்க மாவில் பக்கம் வாறதில்லையோ?” என்று கூப்பனை வெட்டியவாறே அவர் கேட்க “நடுவிலம்மான் இப்ப கிளைப்பனையடிப் பக்கமாப் போறார் போலை” என அம்மா சொன்னபோதுதான் அவரது இயற்பெயரை நான் அறிந்துகொண்டேன்.

எங்களது நாச்சார வீட்டின் கடைசி அறையோடு தெற்குப் புறமாக ஒரு ஒத்தாப்பு இறக்கி அக்கொட்டிலிலேயே நடுவிலம்மான் வசித்து வந்தார். டச்சுக் காலத்து வாங்கில் ஒன்றில் முதுகுப்பாட்டிற்கு மாந்தோலும் கால்மாட்டிற்கு சாக்கும் விரித்து அதில்தான் கிடந்தெழும்புவார்.

ஒத்தாப்பு மூலையில் பிய்ந்து போன பழைய கதிரை ஒன்றின் மேல் பென்னாம்பெரிய சூட்கேஸ் ஒன்று வைத்திருப்பார். அதற்குப் பக்கத்தில் முண்டு கொடுத்துக்கொண்டு ஒரு ஸ்ரூல்’ பழி கிடக்கும். அவருக்குரிய ‘தேத்தண்ணி கோப்பியையோ’ அல்லது சோறு போட்ட வட்டிலையோ அதில்தான் வைக்க வேண்டும் என்பது ஐந்தாறு வருஷங்களுக்கு முந்தியே அவர் போட்ட உத்தரவாம். அம்மாதான் ஒருநாள் அவர் ஆறுமுகப்பாவின் கடையடிப் பக்கம் போன பின்பு பரமரகசியம் போல் எனக்குச் சொன்னா.

நடுவிலம்மானுக்கு இடது கால் ஏலாது. இழுத்திழுத்துத்தான் நடப்பார். சின்ன வயதில் சிங்கக் குட்டி மாதிரித் திரிந்தாராம். இடையில் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு கால் இப்படி சூம்பிப் போயிற்றாம். ஆனாலும், தேகத்தை வளைத்து பம்பரமாகத் தொழில்கள் செய்வார்.

ஒவ்வொரு நாளும் கருக்கலோடு எழுந்து அரிசியைக் கழுவி உரலில் போட்டால் போதும். நொடிப் பொழுதில் மாவாக்கி அம்மாவின் கையில் கொடுத்து விடுவார். அவர் அரிசி இடிக்கும் போது இடுப்பில் கை வைத்து நான் பார்த்துக் கொண்டு நிற்பேன். நெற்றியிலும் நெஞ்சிலும் வியர்வை வழிந்தோட மூசிமூசி இடிப்பார். பார்க்கப் பாவமாக இருக்கும். அம்மா, தான் இடிப்பதாகக் கேட்டாலும் உலக்கையை விட மாட்டார். “புட்டுக்கு உலையை வைச்சு மற்ற அலுவல்களைக் கெதியாப் பார். பொடியளுக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” என்பார். ஒவ்வொரு நாளும் விடியப்புறம் அவரது வேலை அதுவாகத்தான் இருக்கும்.

Tuesday, 18 February 2025

கோசலை - எனக்குப் பிடித்த கதை

 
ரஞ்சகுமார்


“குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே”

குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்….மாடுகள் கத்துதெல்லவே!”

குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தெரிந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ்சும் படிந்து பழுப்புநிறமாகத் தெரிந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.

“குலம்!….கொஞ்சம் வைக்கல்…..”

அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.

“நீயே இழுத்துப்போடேன்…எனக்கு ஒரே அலுப்பு”

அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித்தாள்.

சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேளைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான்.

எவ்வளவு அருமையான மகன்!

அவன் ஏன் அப்படிப் போனான்?

Saturday, 1 February 2025

`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்



இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் தற்போது வரட்சியான நிலையிலேயே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் எஸ்.பொன்னுத்துரை, சோ.பத்மநாதன், சி.சிவசேகரம், ரூபராஜ் தேவதாசன் போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ரிஷான் ஷெரீப், கெகிறாவ ஸுலைஹா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் ரிஷான் ஷெரீப் வேகவேகமாக பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றார். கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புகளில் ஒரு ஒளிக்கீற்றாக `கிழக்கினை எதிர்கொண்டு’ என்ற இந்தப் புத்தகம் விளங்குகின்றது. இதன் தலைப்புக் கூட சூழ்நிலைக்கேற்றவாறு அற்புதமாகவே தோன்றுகின்றது.

ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.

பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் மூலம், நமக்கு அவர்களைப்பற்றிய பின்னணியையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. கூடவே `மொழி மாறி வந்த பிரதிகளும் அவை பேசும் அரசியலின் பொதுமையும்’ என்ற தலைப்பில் மேமன்கவி அவர்களின் பின்னுரையும் இடம்பெற்றுள்ளது.

Tuesday, 28 January 2025

பொன்சாய் இலக்கியங்கள் – கங்காருப் பாய்ச்சல்கள் (47)

 

முகநூலில் என் கணக்கை ஆரம்பித்த நாள் முதல் அவதானித்து வரும் ஒரு விடயம் இது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் இரண்டு மூன்று பாடசாலைகளில் (சிலவேளைகளில் கூடவாகவும் இருக்கலாம்) படித்த மாணவர்களின் பள்ளிக்கூட வெறித்தனம் இது. அந்தப் பள்ளிக்கூடங்களில் படித்த எவராவது முகநூலில் `அ’ என்று எழுதும் முன்னே 500 லைக்குகள் போட்டு விடுவார்கள். சிலவேளைகளில் இது ஆயிரத்தையும் தாண்டிவிடும். எழுதியவரோ `அ’வுடன் நிறுத்திக் கொள்வார். அப்பாலே எழுத வேண்டும் என்ற எண்ணம் மறைந்துவிடும். அவர் அந்தப் புளகாங்கிதத்தில் மயங்கிக் கிடப்பார். மயக்கம் தெளிந்து பார்க்கும்போது மற்றவர்கள் உயிரெழுத்தை முடித்து மெய்யெழுத்துக்குப் போயிருப்பார்கள். அவரை முன்னேறவிடாமல் தடை போடுபவர்களே இந்த வெறித்தன ரசிகர்கள் தான். இது யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே பொருந்தும். இந்த உலகத்தில் வாழும் யாவரும் ஏதோ ஒரு பள்ளியில் படித்திருப்பார்கள்தானே என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை. தமிழைத் தம் பாடசாலைகளுக்குள்ளேயே குறுகத் தறித்து, `பொன்சாய்’ மரங்களாக்கி விடுகின்றார்கள் இவர்கள்.

Friday, 24 January 2025

இளமையில் கல்வி சிலையில் எழுத்து – கங்காருப் பாய்ச்சல்கள் (46)

 
பள்ளியில் படிக்கும்போது கட்டுரை, கவிதை, சிறுகதை எழுதச் சொல்லித் தருவார்கள். எழுதும்போது ஊக்கம் குடுத்து வரவேற்கவும் செய்தார்கள்.

வளர்ந்து பெரியவர்களானதும் தொடர்ந்தும் அவற்றை எழுதும்போது - ஏன் எழுதுகின்றீர்கள்? இன்னமும் எழுதுகின்றீர்களா? இப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன.

சிந்தித்துப் பார்த்தால், இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு பயம் தான் காரணம் என்பது தெரிய வருகின்றது. எங்கே தமது பொட்டுக்கேடுகளை எழுதிவிடுவாரோ என்ற ஒரு பயம்.

கொஞ்சம் கண்டித்து வைப்போம். குட்டுப் போட்டு வைப்போம் என சிந்திக்கின்றார்கள்.

நேர்மையாக வாழ்பவரை எவருக்குத்தான் பிடிக்கின்றது? அவர்களுக்கு முன்னேறிச் செல்பவர்களையும் பிடிப்பதில்லை, ஒருவருக்கு பல திறமைகள் இருப்பதையும் விரும்புவதில்லை.

என்னையும் மீறி – என் கதைகளில் சில உண்மைப் பாத்திரங்களும் வந்துவிடுவதுண்டு. நான் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. நான் இதைப் பின்னர் மறந்து விடுவேன். சில வேளைகளில் சில மனிதர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் முகத்தைத் கோணிக்கொண்டு செல்வது அதனால் தானோ என்னவோ? அவர்களால் எப்படி மறக்க முடியும்? ஆயுள் உள்ளவரை அவர்களால் மறக்க முடியாது அல்லவா? திரும்பவும் ‘தாங்கள்தான் அவர்கள்’ என்று ஞாபகப்படுத்தி விடுவார்கள்.

சில உண்மைச் சம்பவங்களை சிறுகதைகளாக்கி பரிசும் பெற்றிருக்கின்றேன். `தோப்பூர் மகாராஜா’, `அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை’, `கேள்விகளால் ஆனதுகதைகள் அப்பிடிப்பட்டவை தான்.