Tuesday, 4 March 2025

வீமன்காமம் (இது ஒரு புருடாக்கதை) - கங்காருப் பாய்ச்சல்கள் (49)


பஞ்சபாண்டவர்கள் தமது வனவாச காலத்தில், ஒருமுறை எமது ஊரிற்கு வந்திருந்தார்கள். அப்போது அடிக்கடி வீமனைக் காணக் கிடைக்கவில்லையாம்.

வீமன் ஊரிலுள்ள கன்னிப்பெண்களையெல்லாம் கலைத்துக் கலைத்து வேட்டையாடத் தொடங்கிவிட்டானாம். அவ்வளவுக்கு அழகும், படு கவர்ச்சியும் கொண்டவர்கள் எமது ஊர்ப் பெண்கள். வீமன் கலைத்துக் கலைத்துக் காமம் கொண்டதனால் எமது ஊருக்கு `வீமன்காமம்’ என்ற பெயர் வருவதாயிற்று.

வீமனின் இம்சை தாங்காத பேரழகி காஞ்சனா, வீமனுக்கு தினமும் டிமிக்கிரி கொடுத்தவண்ணம் இருந்தாள். ஒருநாள் அவளைக் காணவில்லை. கோபம் கொண்ட வீமன் அவளைக் கவர்ந்து வர நாற்புறமும் படை அனுப்பினான்.

அப்போது ஊரின் கிழக்குப்புறம் பெரும் காடாக இருந்தது. அங்கே பெருவாரியாக மயில்கள் இருந்தன. அவை படையினரைத் தோகை விரித்து எதிர்கொண்டன. படையினர் அங்கிருந்த மயில்களை எல்லாம் தமது உணவுக்காக அப்பினார்கள். அதனால் அந்த இடம் மயிலப்பை என்பதாயிற்று.

வடக்கு தெற்குப் புறமாகச் சென்ற படையினர் எதிர்ப்பட்ட மனிதர்களை எல்லாம் கொத்தியும் வெட்டியும் சங்காரம் செய்தனர். மனிதர்கள் கொத்தி எரிக்கப்பட்ட இடம் `கொத்தியால் சுடலை’ எனவும், வெட்டிச் சரிக்கப்பட்ட இடம் – ஆளை வெட்டி – மருவி வந்து `அளவெட்டி’ எனவும் வழங்கப்படலாயிற்று.

எத்திசையிலும் காஞ்சனாவைத் தேடிக் காணக்கிடைக்காததால், சன்னதமாடிய வீமன் மேற்குப்புறமாக தானே படையுடன் கிழம்பினான். ஒரு இரவு முழுவதும் உறங்காமல் மல்லாக்கப்படுத்து (மல்லாக்கம் - மல்லாகம்) அரண்டு புரண்டான்.

காஞ்சனா ஒரு நடனமாது என்பதால், தினமும் அவள் தூக்கிய காலை எங்கே வைப்பாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

மறுநாள் கோபம் கொண்ட வீமன், கண் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். இடையில் எதிர்ப்பட்ட ஒரு ஊரில் இருந்த சாமியார் ஒருவர், `நீவிர் இதுவரை போகாத இடத்திற்கு போய் தேடிப் பாரும்’ என்று கர்வத்துடன் சொன்னார். `குட் பிளான்’ என்று சொன்ன வீமன் அங்கிருந்து ஒரு புதிய ஊருக்குச் சென்றான். சாமியார் இருந்த இடத்திற்கு `குப்பிளான்’ என்ற பெயர் அன்றுமுதல் வழங்கி வருவதாயிற்று. இடையில் ஒரு மூதாட்டி தான் அந்தப்பெண்ணைக் கண்டதாகவும், அவள் இருக்கும் அந்த `ஊர் அங்கினை’ இருக்கு என்று கைகளால் காட்டினாள். உடனே மூதாட்டி இருந்த இடம் ஊரங்குனை ஆயிற்று. சாமியாரும் மூதாட்டியும் சொன்ன திக்கில் சென்ற வீமன் காஞ்சனாவைக் கண்டுகொண்டான். ஊர் அதிரச் சிரித்த வீமன், `கட்டினால் உன்னைத்தான் கட்டுவனடி’ என்றானாம். `அடைந்தால் காஞ்சனாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று கர்ச்சித்த வீமன், அருகே நின்ற பெண் ஒருத்தியின் கழுத்திலிருந்த தாலையைப் பறித்து காஞ்சனாவின் கழுத்தில் கட்டியே விட்டானாம். கட்டுவன் கட்டுவன் என்று வீமன் கங்கணம் கட்டியதால் ஊரிற்கும் `கட்டுவன்’ என்று பெயர் வந்துவிட்டது.

No comments:

Post a Comment