Monday, 1 June 2026

தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

 தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

பயிலரங்கு

குரு அரவிந்தன்.

15 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பங்கு பற்றலாம்.

10 வயதிற்கு உட்பட்ட பல தரப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ் பாடலாக இருக்க வேண்டும்.  பாடல்கள் தமிழ் சிறுவர்கள் மனனம் செய்யக் கூடியதாகவோ மனதில் பதியக் கூடியதாகவோ சிறிய பாடலாக அமையவேண்டும். பாடல்கள்:

1)         குழந்தை பற்றிய பாடல்

2)         குழந்தைகளுக்கான பாடல்

3)         தாலாட்டுப் பாடல் - இதில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து, அதற்கு ஏற்ப எழுதி அனுப்பவும்.

பாடல்கள் இலகுவான சிறிய சொற்களைக் கொண்ட பந்திகளில்

மொத்தம் 12 வரிகளில் அல்லது ஆகக்கூடியது 16 வரிகளில் இருக்க வேண்டும்.

இது சிறுவர்களுக்கான பாடல் என்பதால் அதற்கு மேல் வரிகள் உள்ள பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது பெரியவர்களுக்கான பாடல்கள் அல்ல, சிறுவர்கள் புரிந்து இலகுவில் பாடமாக்கக் கூடியதாக, மனதில் பதிக்கக் கூடியதாக அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.

பாடல்கள் மழலைகளுக்கு ஏற்றதாக, அவர்கள் பதிய சிறிய சொற்களை உள்வாங்கக் கூடியதாக ஒலி நயத்தோடு, இயற்கை சார்ந்ததாக அமைவது நல்லது. குறிப்பாக நிலம், நீர், வானம், மரம், செடி, நிறம், மிருகம், பறவை, எண், எழுத்து, கிழமை, மாதம், பருவகாலம், நட்பு, ஒற்றுமை, விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் அன்றாட செயற்பாடு போன்ற குழந்தைகளின் மனதில் பதியக்கூடிய இலகுவான அர்தமுள்ள பாடல்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பாலருக்கான இந்தப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். எனவே இந்தப் பாடல் பயனுள்ளதாக இருந்தால்தான் அது மீண்டும் மீண்டும் அவர்களால் இசைக்கப்படும்.

குழந்தைகள் ஒரே நேரத்தில் குறைவான தகவல்களையே உள்வாங்கிக் கொள்வதால், எளிமையான வாக்கியங்களைச் சிறியதாகவும், சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் பாவியுங்கள். ஒரு பல்லவி, ஒரு சரணத்தை உடல் அசைவுக்கேற்ப இணைக்கலாம். சந்தத்திலும் கவனம் செலுத்துங்கள். சந்தம் என்பது சொற்கள் தாளத்துடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் குறிக்கிறது.

உதாரணம்: ‘நாங்கள் பாடுவோம், நாங்கள் ஆடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்.’

குழந்தைகள் திரும்பச் சொல்லும் மற்றும் பெற்றோர்கள் ரசிக்கும், எளிதில் மனதில் பதியும், அன்பான பாடல்களை உருவாக்குங்கள். எளிய மொழி, அசைவுகளுக்கு ஏற்ற தாளங்கள் மற்றும் கற்றலை ஒரு விளையாட்டைப் போல உணரச் செய்யுங்கள். உதாரணமாக இந்த பாரதி பாடலைப் பாருங்கள்: குழந்தைகளைப் பற்றிய பாரதி பாடலில் நான்கு வரிகள்:

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

 குழந்தைகளுக்கான குரு அரவிந்தனின் பாடலில் நான்கு வரிகள்:

எங்க வீட்டுத் தோட்டத்தில்

சின்னச் சின்னச் செடிகளில்

காலை நேரம் மலர்ந்திடும்

வண்ண வண்ணப் பூக்களாம்.

 குழந்தைகளுக்கான கமலவதனா சுந்தாவின் பாடலில் நான்கு வரிகள்:

பனிமழையே பெய்! பெய்! பெய்!

ஒவ்வொரு நாளும் பெய்! பெய்! பெய்!

பூப்பனிபோலப் பனியே பெய்! பெய்! பெய்!

பூம்பாறை செய்யப் பெய்! பெய்! பெய்!

 இதற்கான விதி முறைகள்:

சிறுவர் பாடல்கள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் தெரிவுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நூலில் இடம் பெறும்.

பாடலாசிரியரின் முழுப் பெயர் மட்டும் புத்தகத்தில் பாடலுடன் இடம் பெறும். அதாவது, அவரது பெயரும் குடும்பப்பெயரும் மட்டும் இடம் பெறும். புனைப் பெயரோ அவரது பட்டங்களோ இடம் பெறமாட்டாது. மாணவர்களாயின் கல்வி நிலையத்தின் பெயரும் அவர்கள் விரும்பினால் இடம் பெறும்.

ஒருவர் ஒரு சிறுவர் பாடல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

அச்சுப்பிரதி தேவையானவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

பாஸ்போட் படம் அளவு உங்கள் படம் ஒன்று இணைக்கப்படவேண்டும்.

நூல் தொகுப்பாசிரியராக எழுத்தாளர், ஆசிரியர் குரு அரவிந்தன் பணியாற்றுவார். நூல் வெளியீட்டு உரிமை கிராமத்து வதனம் பெண்கள் அமைப்புக்கு உரியது.

நீங்கள் அனுப்பும் பாடல் உங்கள் சொந்தப் பாடல் என்பதையும், எங்கிருந்தும் பிரதி எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்து சேராத சிறுவர் பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பாடல்கள் எல்லாம் தெரிவு செய்தபின் நூல் வெளியிடும் திகதி பின்னால் அறிவிக்கப்படும்.

பாடல்களில் திருத்தங்கள் செய்யும் உரிமையும், முதலில் வெளியிடும் உரிமையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பிற்கே உரியது.

உலக சாதனை நூலில் உங்கள் பாடலும் இடம்பெற வாழ்த்துகள்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் பாடல்களையும், உறுதி மொழியையும் 2026 யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டிய

மின்னஞ்சல்: vathani.suntha@gmail.com

திருமதி கமலவதனா சுந்தா, நிறுவுனர்.

கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பு – கனடா.

தொடர்புகளுக்கு: 647-765-9761

Monday, 25 May 2026

எனது சிறுகதைகள் பெதும்பை (சொல்வனம்), மவுஸ் (வாசகசாலை) தேர்வாகியுள்ளன

 

2026 ஏப்ரல்: நாம் தவறவிடக் கூடாத சிறந்த சிறுகதைகள்! | தினேஷ் ஜெயபாலன் & மந்திரமூர்த்தி அழகு

Monday, 18 May 2026

பெதும்பை - சிறுகதை

 

அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சுஜித்தா பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள் நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில் ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.

சில நாட்களாக சுருக்கங்கள் விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும் தழும்பிக் கிடந்தன.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும் தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின் வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.

அப்பா ஒரு போர்வீரர் அல்ல. எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும் இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.

மாலை சரிந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தே குரல் எழுப்பியபடியே மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன். தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின் பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள் இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.

“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

Thursday, 14 May 2026

விசித்திரமான வாழ்க்கை - கங்காருப் பாய்ச்சல்கள் (50)

 


மேலை நாடுகளில் தனித்து வாழ்வதற்கு பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும் இடத்தில், எம் அயலவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பாட்டில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரிவதில்லை, பழகுவதில்லை. ஒரு துன்பம் துயரத்திற்குக்கூட உதவ மாட்டார்கள்.

நாம் நமது நாட்டில் அப்படி வாழப் பழகவில்லை என்பதால் இது விசித்திரமாகத் தெரிகின்றது..



எனக்கொரு விசித்திரமான தமிழ் நண்பன் ஒருவன் இங்கு இருக்கின்றான். நான் ஒருமுறை தொலைபேசியில் எடுத்துக் கதைத்தால், சிலகாலம் கழித்து தானும் ஒருமுறை எடுத்துக் கதைப்பான். பின் எனது முறைதான். நான் எடுக்காவிட்டால் தானும் எடுக்க மாட்டான். அந்த இடைவெளிக்குள் எது நடந்தாலும் அவன் தொலைபேசி எடுக்க மாட்டான். உயிரே போனாலும் எடுக்க மாட்டான். எனக்கும் அவனுக்கும் பொதுவான நண்பர்கள் இருந்து அவர்களுக்கேனும் சுக துக்கங்கள் நடந்தாலும் சொல்ல மாட்டான்.

டைரி வைத்து நான் எப்போது கதைத்தேன், தான் எப்போது கதைத்தேன் என்று எழுதி வைப்பான் போலும்.



கார் பழுதானால் அவன் என்னிடம் அவசர உதவி கேட்கமாட்டான். ஏனென்றால் பிறகு தானும் உதவி செய்யவேண்டி வரும் என்பதால். காசு இருக்கு. ‘ரக்‌ஷி’ இருக்கு. பிறகென்ன? இறக்கும் வரைக்கும் காசைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றான். ஊரில் யார் காணி விற்றாலும் வாங்கி விடுவான். வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி, ஒரு கொண்டாட்டம், ஒரு உல்லாசம்…. சீ. மறுபிறப்பிற்கும் இவற்றைக் கொண்டு செல்லலாம் என்று இற்றை வரையும் நம்புகின்றான்.

இந்த மனிதர்களே பாவம். ஓய்வுபெற்ற பின்னர், அல்லது அறுபதைக் கடந்தவுடன் தான் எல்லாம் என்று, ஏங்கி ஏங்கி தண்னி வென்னி குடிக்காமல் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து விடுகின்றார்கள். இடையில் ஆசையை ஒறுத்து எதுவுமே செய்யாமல் வேலை வேலை என்று காலத்தைக் கடத்துகின்றார்கள். ஒரு சினிமாவுக்குப் போவது என்றாலும் தயக்கம் தான். ஏன் அந்தச் சினிமா இன்னும் பத்து வருஷங்களுக்கு இருக்காதோ? ஒரு புத்தகம் வாங்கக் குடுக்கிற காசை சேமிச்சு வைச்சா சொர்க்கம் போகேக்கை மேலுக்கு அள்ளிக்கொண்டு போகலாம் எண்ட நினைப்பு. நண்பர்களை வீட்டுக்குச் சேர்ப்பதில்லை. ஒரு தேநீர் போடும் வேலை மிச்சம், செலவும் மிச்சம் என்ற கருமிகளும் உண்டு.

Friday, 8 May 2026

மவுஸ் – சிறுகதை

காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும்வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.


செய்தி இதுதான்.

|
காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|



எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம்குவாலிற்றி சேர்க்கிள்என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன். முதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.

Friday, 1 May 2026

"ததிங்கிணதோம்" - சிறுகதை

 


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

Tuesday, 14 April 2026

எதிர்பாராதது! - சிறுகதை


நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.

Wednesday, 1 April 2026

`வேடம் தாங்கல்’ ஒரு பார்வை - TamilOsaiOnAir

 


அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப் போட்டியில்(2025) பரிசு பெற்ற `வேடம் தாங்கல்’ என்ற சிறுகதை பற்றி, இவ்வார இலக்கியம் பகுதியில் ஒரு விரிவான பார்வை வந்திருக்கின்றது. மீண்டும் ஒரு பரிசு பெற்றவனாகின்றேன். நன்றி : சிவா துரை, பாஸ்டன் பாலா

Thursday, 26 March 2026

மஞ்சள் கயிறு - எனக்குப் பிடித்த கதை.



புதுமை லோலன் (வீ.கே.கந்தசாமி)

யாழ்ப்பாண எக்ஸ் பிரஸ் வரும் நேரம். யாழ்ப்பாண ஸ்டேஷன் சனத்திரளில் நெளிந்தது. அங்குமிங்கும் சனக்கும்பல் தெரிந்தது. நெருக்கமடைந்தது. “கூ” ஒலி வந்த அண்மை… அப்போது மணியைப்பார்த்தேன். வண்டி புறப்பட இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. டிக்கட் பெறுகையை கவுண்டரில் வைத்தேன். வண்டி புறப்பட இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. டிக்கட் பெறுகையை கவுண்டரில் வைத்தேன். அப்பொழுது என்முன்னே… “எனக்கு ஒரு ரிக்கற் எடுத்துத் தர்ரீங்களா” என்ற குரல் ஒலி, யாழ் ஒலியாக ஒலித்தது.

திரும்பினேன். கோமளமான் முகம்ஒன்று வசீகரமான கரங்களால், கையிலிருந்த பையுள்ளிருந்து ஒரு பத்து ரூபாவை எடுத்து நீட்டியது. பணத்தை வாங்கினேன். எங்கே போகிறீர்கள் என்றேன்.

“கோட்டைக்கு” என்றாள். ரிக்கற்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். நன்றி கூறி வாங்கிளாள். போய்விட்டாள்,

மணி ஒலி, எக்ஸ்பிரஸ் நகர ஆரம்பித்துவிட்டது. யான் ஏறிவிட்டேன். அப்பொழுது…. அங்கே “இதை பிடியுங்கள் தயவு செய்து…..” என்றாள்.

Friday, 20 March 2026

மாதுளை மரம் - எனக்குப் பிடித்த கதை

 

T . தம்பிமுத்து
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T . தம்பிமுத்து எழுதி 'நியூ யோர்க்கர்' சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை :The pomegranate tree.

தமிழில்: எழுத்துக்கினியவன்

சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான்.

விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கருப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!”

ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை.

மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம்.

ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதட்டமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் - எங்கள் மைத்துனன் - ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார்.

ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத 'நிலாவரை' கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார்.

Friday, 13 March 2026

வேடம் தாங்கல் - சிறுகதை


அசோகன் புரண்டு புரண்டு படுத்தான். உறக்கத்திற்கும் விழிப்புக்குமிடையே மனம் பெண்டூலமாக ஆடிக்கொண்டிருந்தது. அலாரம் வைத்துவிட்டுப் படுத்தும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அலாரம் என்பது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மாத்திரம் தான்.

கடந்த சில வருடங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த `அந்த’ வீதி புனரமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வர இருந்தது. `அந்த’ வீதியின் பெயரை உச்சரிப்பதற்கே பலருக்கும் தயக்கமாக இருந்தது. வருடத்திற்கு குறைந்தது ஏழெட்டுப் பேரையாவது காவுகொள்ளும் அந்த வீதியின் கூனலைத் தட்டி நிமிர்த்த, அரசு இன்று அனுமதி வழங்கிவிட்டது.

அந்தத் திட்டத்தின் முக்கியமான முதன்மை எதிரி பறவைகள் என்றால் நீங்கள் வியந்து போவீர்கள்! அலாஸ்க்கா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் இருக்கும் சில பறவைகள், அங்கே நிலவும் குளிர் காலநிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இங்குள்ள வெப்பத்தை நாடி வலசை வருகின்றன. ஏறக்குறைய 35 விதமான 2 மில்லியன் நீர்ப்பறவைகள் இப்படி வருடாவருடம் வந்து போகின்றன. அவை அந்த வீதிக்கு அருகாமையில் இருக்கும் காடுகளில் தமது வசந்தகாலத்தைக் குதூகலமாகக் கொண்டாடி ஞாபகச்சின்னமாக இனவிரித்தியும் செய்துகொண்டு, இங்கே குளிர்காலம் ஆரம்பிக்கும்போது மீண்டும் தமது பழைய இடங்களுக்குத் திரும்புகின்றன.

பறவைகளுக்குச் சார்பாக வாதாட `விலங்குகள் – பறவைகள்’ நலன் பேணும் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. எப்பொழுதெல்லாம் விபத்து நடந்து பிரச்சினை வலுக்கின்றதோ, அவர்கள் அவுஸ்திரேலியாவின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் மோப்பம் பிடித்து வரிசைகட்டி வந்துவிடுவார்கள். விபத்து நடக்கும் வீதியின் இருமருங்கிலும் நின்று, பதாகைகளை ஏந்தியவண்ணம் தமது கண்டனங்களைத் தெரிவிப்பார்கள். விபத்து நடக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மரங்களைத் தறிப்பதால் காட்டின் சில பகுதிகள் பறிபோகும், பறவையினங்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், வலசை வரும் பறவைகளின் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் என்பது அவர்களின் விவாதம்.

வசந்த காலத்தில் மட்டும் பறவைகள் வந்து போவதால், வருஷம் பூராவும் மக்கள் இன்னல் கொள்வதா என்பது அரச தரப்பினரின் ஆதங்கம். மேலும் காட்டின் ஒரு சிறு பகுதியை அழிப்பதால், பறவைகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.

Tuesday, 10 March 2026

காதல் காற்சட்டை - எனக்குப் பிடித்த சிறுகதை



அல்வாயூர் மு.செல்லையா

யாழ்ப்பாணம் ஒட்டியுள்ள ஒரு பகுதி, புறநகர் என்று சொல்லலாம். அதில் இரண்டு பரப்புக்காணி. தென்னம் கமுகுகள் மாமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வளவு. ஒரு வீடு ஒரு மால் ஒரு அடுக்களை இந்த மூன்று வீடுகளும் ஓலைக்குடிசைகளாக இருந்தாலும் புனிதம் உடையவைகளாய் காணப்பட்டன.

விரத காலங்களில் வீடுகளும் திண்ணைகளும் மெழுகப்பட்டிருக்கும் அழகே அலாதியானதுதான். பக்கத்திலுள்ள வீடுகளில் வசிக்கும் சில பெண்கள் கூட மெழுகிய இந்த திண்ணைகளிலே வந்து இருந்துகொண்டு புகழுவார்கள்.

“பத்தினி அக்கையின் வீடுகள், எங்கள் கல்வீடுகளிலும் பார்க்க குளிராகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. இது பக்கத்து வீட்டாருடைய பாராட்டுரை.

அந்த வீடுகளிலே பத்தினி என்ற தாயும் பார்வதி என்ற மகளுமே வாழுகின்றனர். பிறந்த காலத்திலே பத்தினி என்ற பெயரைப் பிதாமாதாக்கள் என்ன காரணத்தினால் வைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் இப்போது அவள் பத்தினியாகவே காலங்கழித்து வருகின்றாள்.