Monday 14 June 2021

சொல்லேர் உழவின் அறுவடை


அண்டனூர் சுரா அவர்களின் `சொல்லேர்’ என்ற சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சமீபத்தில் பாரதி புத்தகாலயம் பிரசுரித்திருக்கின்றது.

தமிழ் இலக்கியங்களின் மீதான ஆராய்ச்சிகள் பலதரப்பட்டவை. காலங்காலமாக நடந்து வருபவை. இங்கே சொற்கள் மீதான ஆராய்ச்சி நடக்கின்றது. அது நம்மை பலவகைப்பட்ட தேடலுக்கு உள்ளாக்குகின்றது.

சிறுகதை நாவல் கட்டுரை எனப் படைப்புகளைத் தந்துகொண்டிருந்த சுரா, இப்போது இன்னொரு தடத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றார். இதற்காக அவர் பலவகைப்பட்ட படைப்புகளினூடு உழவு நடத்தியிருக்கின்றார். ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கின்றன. அவை நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் புழங்கும் விதத்தில் வேறுபட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ஐம்பது சொற்களில் பாதிக்கும் மேற்பட்டவை எனக்குப் புதியனவாக இருந்தன. துவரி, ஆவரஞ்சி, ஒள்ளி, அந்தியோதயா, பொங்கோதம், பொருநன், படிறு, இப்படிப் பல. தெரிந்த சொற்கள் கூட, அவரின் தேடலினால் எனக்கு வியப்புக்காட்டி நிற்கின்றன. அவரின் `சொற்றுணை’ என்ற `என்னுரையில்’ தோழர் அ.குமரேசனுக்கு நன்றி தெரிவிக்கும் இடத்தில், `இளங்கன்று பயம் அறியாது, செம்மாந்துடன் சம்மதித்துவிட்டேன்’ என்கின்றார். அது என்ன செம்மாந்து? என்னுள் புதியதொரு தேடல் தொடங்குகின்றது.

`சொல் காலத்துடன் நேர்விகிதம் கொண்டது. சொல்லாய்வு என்பது சொல்லுடன் காலத்தையும் ஆய்தல்’ என்கின்றார் அண்டனூர் சுரா.

புத்தகம் முழுவதும் நிறையத் தகவல்கள். புதையலைக் கண்டு வியந்து போகின்றேன். அவரின் ஒவ்வொரு சொல்லின் தேடலின் போதும் பல விடயங்கள் எம்மை வந்தடைகின்றன. இதற்கான அவரது கடின உழைப்பை மெச்சுகின்றேன். சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது `சொல்லேர்’. புத்தகம் பற்றிய எனது கருத்தையும் அவரே தேடித் தந்துவிடுகின்றார். நறுந்தொகைப் பாடலான `தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை – தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே – ஆயினும்....

°

No comments:

Post a Comment