Friday 15 April 2022

உன் கடவுளிடம் போ

தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம் வாசிப்புக்குக் கிட்டியது. புத்தகத்தின் தலைப்பில் உள்ளே எந்தக் கதையும் இல்லை. புதிய களம் / தளத்தில் பயணிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. சில கதைகள் இதற்கு முன் அறிந்திராத பல சங்கதிகளைச் சொல்கின்றது.

தொகுப்பின் முதல் கதையான `அவனை எனக்குத் தெரியாது’ -, ஆயுதங்களிடமிருந்து விலகி ஓடுவதை விரும்பியிருந்தும், அதுவாகவே மீண்டும் ஒருவனிடம் சேருவதைச் சொல்கின்றது. ஒரு இடத்தில் ஆரம்பித்து, இன்னோர் இடத்தில் பயணித்து, இரண்டையும் இணைக்கும் கதை.

`இருள்களி’ கதை எமது போராட்ட நிகழ்வுகளை, முதலாம் உலகமகா யுத்தத்தின் போது துருக்கியின் கலிப்பொலியில் போரிட்ட அவுஸ்திரேலிய - நியூசிலாந்து வீரர்களின் நினைவுகளுடன் இணைகின்றது.

இலங்கையில் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று, எங்கெல்லாமோ சுற்றி, இந்தியா சென்று, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைச் சுவைபடச் சொல்லும் கதை `உறக்கமில்லாக் குருதி’.

`தராசு’ என்ற சிறுகதையை நான் ஒரு குறுநாவலாகவே பார்க்கின்றேன். மேலும் இந்தக் கதையைச் சொல்வதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்த நடை தோதாக அமையவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இறுதிக் கதைகளான `மார்ட்டினா’, `ஆழியாள்’ இரண்டும் அவுஸ்திரேலிய அபொறியினல்ஸ் மக்களுக்கு நேர்ந்த துயரங்களைச் சொல்லும் கதைகள். தெற்கு அவுஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் மாரலிங்கப் பகுதியில் பிரிட்டிஸ் படையினர் அணுகுண்டுப் பரிசோதனை நடத்தியபோது, அங்கு வசித்த ஆதிவாசி மக்களை உயிர்ப்பலி எடுத்த துயரக்கதை `மார்ட்டினா’. கூடவே அந்த நேரத்தில் குழந்தையாகவிருந்த மார்ட்டினாவின் தொடர் போராட்டம் பற்றிய கதை.

சற்றே பெரிய பத்துக் கதைகள் கொண்ட இத்தொகுதியில் - `அவனை எனக்குத் தெரியாது’, `புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ எனக்கு மிகவும் பிடித்தவை. `மார்ட்டினா’, `ஆழியாள்’ இரண்டும் என்னைத் திடுக்கிட வைத்த கதைகள். கதைகளினூடாக வரும் ஊடும் பாவும் போன்ற வர்ணனைகள் வியப்பில் ஆழ்த்துபவை. சற்றே சிந்திக்க வைப்பவை. புத்தகத்தின் தலைப்பு - ஒவ்வொரு இன மக்களும் தத்தமக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு அவரவர் கடவுளிடம் போய் நியாயம் கேளுங்கள் என்கின்றதா? பாவம் கடவுள் என்ன செய்வார்!

No comments:

Post a Comment