அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.
காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.
“அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்” என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.
என்னிடம் சினிமாப் பாட்டுக்கள் அடங்கிய சிறுசிறு புத்தகங்கள் இருந்தன. அவற்றை அண்ணா வாங்கிப் படித்துவிட்டு என்னிடம் தருவார். சிலவேளைகளில் அவற்றில் சில காணாமல் போய்விடும். இந்தத் தடவை ரகசியப் பொலிஸ் 115 காணாமல் போய்விட்டது. அவற்றைத் தேடி அண்ணாவின் பொக்கிஷங்கள் அடங்கிய அறைக்குப் போவேன். அப்போது அங்கே அக்கா எதையோ அங்கு தேடிக் கொண்டிருந்தார். அவரது கையில் வினோத எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த கொப்பி ஒன்று இருந்தது. அக்கா சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்தக் கொப்பியை அங்கே வைத்துவிட்டுப் போனார்.