Showing posts with label குறுநாவல். Show all posts
Showing posts with label குறுநாவல். Show all posts

Friday, 7 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (14/14)

 

அதிகாரம் 14 – அவளின் விலை

ஒரு காலத்தில் பெரிய ‘ஹீரோயினாக’ தொழிற்சாலையை வலம் வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும் பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் எல்லாவற்றையும் தவிர்த்தே இருந்திருப்பாள். அவள் யார் மனதையும் புண்படுத்தியதாக இதுவரை காலமும் தொழிற்சாலையில் ஒருவரும் சொல்லவில்லை. இத்தனை காலமும் நந்தனுக்கு அவள் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக வாய் மூடி மெளனமாக இருந்தான் அவன்.

“எனக்கு ஸ்ரோரில் வேலை கிடைத்திருக்கின்றது. பகல் வேலை. நிறைய ஓவர்டைம் இருக்கும். குடும்பத்தையும் பார்க்கலாம்” மகிழ்வுடன் எல்லாருக்கும் சொல்லித் திரிந்தாள்.

உண்மையில் இதுதான் நடந்தது. ஜோசுவாவை வேலை நீக்கம் செய்தபின்னர், புங்கை காரின் உதிரிப்பாகங்கள் வைத்திருக்கும் தொழிற்சாலயின் ஸ்ரோர் பகுதிக்கு இடம் மாற்றிவிட்டார்கள்.

Tuesday, 4 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (13/14)

 
அதிகாரம் 13 – பெண் சிலந்தி (peacock spider)

அந்தச் சம்பவத்தை அறிந்த வான் மான் நூஜ்ஜின், ஒருநாள் நந்தனை இரகசியமாக் கூப்பிட்டான். வான் மான் நூஜ்ஜின் இப்போது போனும் கையுமாகத் திரிகின்றான். வேலை செய்யும்போதும் ஒரு கையில் போன். சாப்பிடும்போதும் போன். சிறுநீர் கழிக்கும்போதும் ஒரு கையில் போன். அவனது போனில் ஆங்கில வார்த்தைகள் கிடையாது. தாய்மொழிக்கே முதலிடம். வியட்நாம் பாஷையில் ஃபேஸ்புக் துள்ளித் திரிந்தது. அவன் தனது போனைத் திறந்து ஒரு வீடியோக்கிளிப்பை நந்தனுக்குக் காண்பித்தான். அதில் புங் – நடப்பது, இருப்பது, ஓடுவது, சிரிப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு கிளிப் ஆக இருந்தது. எப்பவோ களவாக அவளைப் பின் தொடர்ந்து எடுத்திருக்கின்றான் நூஜ்ஜின்.

“ஐ லைக் புங்” என்றான் நூஜ்ஜின்.

“ஏற்கனவே நீ இரண்டு பெண்டாட்டிக்காரன். மூண்டாவதும் கேட்குதோ? உதை மூடி வை. வீட்டை போகப் போறாய்” நந்தன் தனது மூக்கை சப்பையாக நசித்துக் காண்பித்தான்.

ஓட்டமெடுத்தான் நூஜ்ஜின்.

Saturday, 1 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (12/14)

 

அதிகாரம் 12 – கிணறு வெட்டப் பூதம்

தொழிற்சாலைக்கு புதியவர்களை காலத்துக்குக் காலம் வேலைக்கு எடுப்பது வழமை. அப்படி வருபவர்களை ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, பின்னர் நன்றாக பணி புரிபவர்களை நிரந்தரமாக்குவார்கள். சிலரை மேலும் ஆறுமாதங்கள் வைத்திருந்து பார்ப்பார்கள். நன்றாகச் செய்தால் அவர்களையும் நிரந்தரமாக்குவார்கள். ஒன்றுக்கும் உதவாதவர்களை கலைத்து விடுவார்கள்.

அதே நேரத்தில் தொழிற்சாலையில் பல வருடங்கள் வேலை செய்பவர்களை, அவர்கள் விரும்பினால் ஒரு தொகையைக் கொடுத்து (package) தொழிற்சாலையில் இருந்து விலகும்படி கேட்பார்கள். குழறுபடி செய்பவர்கள், சோம்பேறிகள், பிரைச்சனைக்குரியவர்களைத் தேடிப் பிடித்துக் கலைத்தார்கள்.

ஒருநாள் - தெளிந்த நீரோடைக்குள் பாறாங்கல் விழுந்தது போல தொழிற்சாலையில் ஒரு சலசலப்பு. அதை பலரும் கூட்டமாக ஒளித்திருந்து விவாதித்தார்கள். ஒருவருக்கும் சரியான தகவல் தெரியவில்லை. புதிதாக வந்த பெண்கள் பற்றியதாக அந்தப் பேச்சு இருந்தது.

ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமாயின், தன்னுடன் படுத்து எழும்ப வேண்டும் என மக்காறியோ ஒரு பெண்ணிடம் கேட்டதாகத் தகவல்.

Tuesday, 28 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (11/14)

 

அதிகாரம் 11 - தீராவெறி

விடுமுறை முடித்து எல்லாரும் வேலைக்குத் திரும்பினார்கள்.

அதன் பிறகு ஒருநாள் நட்டாஷா வேலையை றிசைன் பண்ணிவிட்டுப் போய்விட்டாள். போகும்போது எல்லாரிடமும் வந்து கதைத்துவிட்டுப் போனாள்.

“நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று நந்தனிடம் சொன்னாள்.

அவள் அப்பாலே போனதும்,

“நட்டாஷாவின் வயிற்றைப் பார்த்தாயா நந்தன்? வீங்கி இருக்கின்றது. உள்ளே குட்டி எட்றியான் இருக்கின்றான்” என்றான் ரான்.

Monday, 20 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (10/14)

 

அதிகாரம் 10 : புதிய தலையிடி

விடுமுறை முடிந்து வேலை தொடங்கியதும் புங், ஜோசுவாவை மெது மெதுவாக வெட்டத் தொடங்கினாள்.


ஜோசுவாவுக்கோ அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றுவது என்பது முடியவே முடியாத காரியம். அவளின் மோகனக் கவர்ச்சியில் சிக்குண்டு தவித்தான். அவள் இன்னமும் வருவாள், இன்பத்தை அள்ளிப் பருகலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும்போது, அவள் தான் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டாள்.

புங் இப்போது நந்தனை தனது உற்ற நண்பனாக பாவனை செய்து கொண்டாள். உண்மையில் ஜோசுவாவைக் கோபப்படுத்துவதற்காகவே அவள் இந்த நெருக்கத்தை நந்தனுடன் ஏற்படுத்திக் கொண்டாள்.

ஜோசுவாவை கொடுமையான தனிமை வாட்டியது.

அவள் இனித் தனக்குக் கிடைக்கமாட்டாள் எனத் தெரிந்துகொண்டதும், அவளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களில் சிலவற்றை ஃபேஸ்புக் மூலம் தனது நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான் ஜோசுவா. இவை அமீபாக் கலங்கள் போல் பிரிந்து பிரிந்து பலரிடம் சென்றன.

Tuesday, 14 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (9/14)

 

அதிகாரம் 9 : கண் மண் தெரியா நட்பு

கணவன், பிள்ளைகள் தொடர்பாக பெரும்பாலானவற்றை நந்தனுடன் பகிர்ந்து கொள்ளும் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம்! குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன்.

“என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிறைவேற் ஸ்கூலில் படிக்க வருஷத்திற்கு நாற்பதாயிரம் செலவாகின்றது.”

“நேற்று டொக்லண்டில் சாப்பிடப் போனோம். ஓல் யு கான் ஈற். ஹெட்டிற்கு எண்பது டொலர்கள். நான்கு பேரும் சாப்பிட முன்னூற்றி இருபது டொலர்கள்.”

அவள் தொடர்ந்தும் நந்தனின் நண்பியாக, தன்னுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பாள்.

இந்த நாட்களில் ஒரு ஆண் துணையை மாத்திரம் நம்பி ஒன்றும் செய்ய முடியாதுஎன்றாள் புங். நந்தனுக்கு அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

Friday, 10 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (8/14)

 
அதிகாரம் 8 : கொண்டாட்டம்

மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.

ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.

வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.

Monday, 6 March 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (7/14)

 

அதிகாரம் 7 : பின் தொடருதல்

தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபது நாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.

இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.

இப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள் தாம் கதைப்பார்கள்.

Tuesday, 21 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (6/14)

 


அதிகாரம் 6 : புங் ஒரு புதிர்

நந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.

’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.

Tuesday, 14 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (5/14)

 











அதிகாரம் 5 : ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.


இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டு மனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப்பகுதிகளிலும் முடிவடைந்துவிட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.

அப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்று முற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.

Wednesday, 1 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (3/14)

 

அதிகாரம் 3 : போரின் குழந்தை

பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.

”உனது பெயர் லோம் தானே?”

அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.

“இல்லை!”

அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்ப உனது அப்பாவின் பெயரா அது?”

“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது?”

Friday, 27 January 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (2/14)


 மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 2 : அழகான பெண்

வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.

நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.

ஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன். சொன்னதுதான் தாமதம் தன் மூக்கை அகல விரித்தான். வியட்நாம் பாஷையில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பாவித்து நந்தனைத் திட்டத் தொடங்கிவிட்டான்.

Sunday, 15 January 2023

மெல்பேர்ண் வெதர் - குறுநாவல்


அடுத்த வாரம் முதல்....

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு பெற்றது - 2018


வெளிநாட்டு வாழ்க்கை விசித்திரமானது. இயந்திரமயமான போக்கில் எதிலும் ஒரு தீவிரம். அடுத்தவரை நேசிக்கவோ, ஏன் குடும்பத்தைக் கவனிக்கவோ முடிவதில்லை.

இந்த நாவல் பல்லினக்கலாசார மக்கள் வேலை செய்யும் கார் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் நடைபெறுகின்றது. உலக சமுதாய கலாசாரம் எவ்வளவுக்கு உடலின்ப வெறியில் சீரழிகின்றது என்பதைக் கதை சொல்லும் அதே சமயம், தமிழ்ச்சமுதாயம் அந்தச் சாக்கடையில் தவிக்கவில்லை என்பதையும் தொட்டுச் செல்கின்றது.

Tuesday, 6 September 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (6/6)

 

அதிகாரம் 6

ஒரு சிறு குச்சுவீடு. அங்கு ஏற்கனவே படுத்த படுக்கையாகிக் கிடக்கும் டேவிட்டின் தாயார். அவளைப் பராமரிப்பதற்காக தினமும் அங்கு வந்து போன பெண், பத்மினி போன மறுநாளில் இருந்து வருவதை நிறுத்திவிட்டாள்.

டேவிட்டின் வயது முதிர்ந்த தாயார் எழும்பி நடக்க முடியாதவராக இருந்தார். அவருக்கு உணவு மருந்து மாத்திரைகள் கொடுத்து, மலம் கழுவி, உடுபுடவைகள் கழுவிப் பராமரித்தாள் பத்மினி. அடிக்கடி சிறுநீர் வாடை வீசும் துணிகளைத் துவைப்பதும், உலரவிட்டு மடித்து வைப்பதிலும் பத்மினியின் காலம் கழிந்தது. டேவிட் தனது கடந்தகாலம் பற்றி எதையுமே கேட்காதது அவளுக்கு அந்தச் சுமையைக் காவும் சக்தியைக் கொடுத்தது.

மாலை வேளைகளில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வருவாள். எப்பொழுதாவது டேவிட்டிற்கு நேரம் இருந்தால், சினிமா பார்ப்பாள். அந்த வேளைகளில் முன்பு வந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவிற்குத் துணையாக வந்து நிற்பார்.

Thursday, 1 September 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (5/6)

 
அதிகாரம் 5

“விவாகரத்து முடிஞ்சு அடுத்த கிழமையே கலியாணம் கட்டிட்டான். எங்கையெண்டு அலைஞ்சு கொண்டிருந்திருக்கிறான்  றாஸ்கல்சாய்வனைக் கட்டிலில் இருந்தபடியே தொணதொணத்தார் நேசம்.

“உவனென்ன வாத்தி. அதுவும் தோட்டக்காட்டுப் பள்ளிக்கூடத்திலை... மலைநாட்டிலை எத்தினை பெம்பிளப்பிளையள் மலையிலை இருந்து விழுந்து குதிச்சு செத்துதுகளோ? பொறு உவனுக்குச் செய்யிறன் வேலைமனதுக்குள் கறுவிக் கொண்டார்.

பத்மினியின் அக்கா விமலா எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்தார். இந்தத்தடவை வரும்போது நான்கு பேராக வந்தார்கள். இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.

அவர்கள் வந்திருந்த காலத்தில் நாட்டுப்பிரச்சினைகள் உக்கிரமடைந்து இருந்தன. இந்திய அமைதிப்படை வருவதற்கு சற்று முந்திய மாதங்கள். அவர்களால் வடபகுதிக்கு செல்ல முடியாமல் இருந்தது. கொழும்பிலே சிறிது காலம் இருந்தார்கள். விமலாவின் சித்தப்பா ஒருவர் கொழும்பில் இருந்தார். அவர்களின் குடும்பத்துடன் பொழுது கழிந்தது.

ஒருமுறை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு மனிதருடன் சித்தப்பா வந்தார். வந்தவர் தன்னை டேவிட் என அறிமுகம் செய்து கொண்டார். கிறிஸ்தவரான அவர் பழகுவதற்கு மிகவும் நல்லவராக இருந்தார். இந்திய வம்சாவளியைச் சார்ந்த அவர், தனக்கு பெற்றார் உற்றார் என்று ஒருவரும் இல்லை என்று சொல்லிக் கொண்டார். நண்பர்களுடன் கொட்டஹேனாவில் வசித்து வருவதாகச் சொன்னார்.

Thursday, 25 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (4/6)

 
1983 ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும் மேலும் எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார். யூலையில் பெரும் கலவரமாக வெடித்த அது பல தமிழர்களைக் காவு கொண்டது.

சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் இடையில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைக்க பல மாதங்கள் எடுத்தன. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை, அவர்களைத் தவிர மற்ற எல்லாரும் விரும்பியிருந்தார்கள். இதனால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க பல மாதங்கள் எடுத்தன.

பொத்தி வைக்கப்பட்டிருந்த இரகசியம் மெல்ல கசியத் தொடங்கியது. மலையகத்தில் இவர்களின் பிரிவைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்மினியை அங்கு கூட்டிச் செல்லாததற்கு நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லி வந்தான் சந்திரமோகன். நாட்டுபிரச்சினைகளையும் அதற்குக் காரணமாக இழுத்தான்.

சந்திரமோகனுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து சாரதா பித்துப் பிடித்தவள் போலானாள். எதையும் எவரையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தினமும் கோவிலுக்குச் சென்று சுவாமியை முழுசிப் பார்த்தாள். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்த அன்று காலைகூட கோவிலில் போய் இருந்துவிட்டாள். பின்னர் அவளை பலாத்காரமாகவே கோவிலில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது.

Friday, 19 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (3/6)



 








அதிகாரம் 3

கணபதிப்பிள்ளையும் நேசமும் தமது இரண்டு பிள்ளைகளான விமலாவையும் பத்மினியையும் நன்றாகவே வளர்த்திருந்தார்கள். ஒழுக்கமாகவும், கல்வியில் குறை விளங்காமலும், சங்கீதம் வீணை போன்ற இதர துறைகளில் விற்பன்னர்களாகவும் ஆக்கியிருந்தார்கள். பாடசாலை சென்று திரும்பும்போதெல்லாம் குனிந்த தலை நிமிர மாட்டார்கள். எதிரே யார் வந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. வளர்ந்த பின்னர் கூட அவர்களின் நட்பு ஒரு வட்டத்திற்குள்தான் இருந்தது. அப்படி வளர்ந்திருந்த பத்மினிக்கு சந்திரமோகனின் கேள்வி ஆச்சரியத்தைத் தந்தது. கோபம் கொள்ள வைத்தது.

பத்மினி படுக்கையில் இருந்து சீறி எழுந்தாள். பாம்பானாள். ஆடிப் படமெடுத்து எல்லாவற்றையும் தட்டி விழுத்தி நொருக்கினாள். மூச்சு, கொத்தப்போகும் நாகம் போல் சீறிப் பாய்ந்தது. தலையணையால் ஆத்திரம் தீரும் வரைக்கும் சந்திரமோகனை விளாசினாள். தீனமான குரலில் கத்திக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

மாப்பிள்ளை இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பத்மினி எழுந்து போனபின், அடிமேல் அடி வைத்து நடந்து, கதவைச் சாத்திவிட்டு அடங்கி ஒடுங்கி நின்றார். உடல் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இதை அவன் மாத்திரமல்ல, வீட்டில் இருந்த எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

Sunday, 14 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (2/6)

 
அதிகாரம் 2

காலை பத்து மணி இருக்கும். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்து, அம்பாள் கோவிலைவிட்டு அவர்கள் புறப்பட்ட சற்று நேரத்தில் சாரதா விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்கு வந்தாள். அம்பாளை நோக்கியபடி கைகளைக் கூப்பியவாறே மண்டபத்திற்குள் இருந்து கொண்டாள். சற்றுத்தூரத்தில் நாக்கைத் தொங்கப்போட்டபடி, மணலிற்குள் குந்தி இருந்து சாரதாவைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர்கள் வீட்டு நாய்.

சாரதாவினால் பிரச்சினை வரலாம் என நினைத்து, தந்தையார் சுந்தரம் அவளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்தார். அம்மா எப்போதோ இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கோவிலில் திருமண வைபவம் எல்லாம் முடிந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்ட சுந்தரம் கதவைத் திறக்க, உள்ளேயிருந்து பாய்ந்து வெளியே வந்த சாரதா, அவரைத் தள்ளி விழுத்திவிட்டு ஓடிக் கோவிலுக்கு வந்திருந்தாள்.

கோவிலில் ஒருவருடனும் கதைக்கவில்லை. எவரது கேள்விக்கும் பதில் பேசவில்லை. மனதை ஒருமுகப்படுத்தி அம்பாள் மீது குவிய வைத்தாள்.

சாரதா சந்திரமோகனுக்குச் சாபம் போடுகின்றாள் என்று பலரும் நினைத்தனர். சாரதா கோவிலில் இருக்கின்றாள் எனக் கேள்விப்பட்டு, மதியம் அவளைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார் சுந்தரம். அவள் அவரின் பேச்சை செவிமடுக்கவில்லை.

இப்படியே போனால் சாரதாவுக்கு விசராக்கிவிடும் என்று பலரும் சுந்தரத்திற்கு அறிவுரை சொன்னார்கள். எப்படியாவது சாரதாவிற்கு ஒரு திருமணத்தைச் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊரில் அலைந்து திரிந்தார் சுந்தரம்.

Monday, 8 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/6)

 

அதிகாரம் 1

1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. வடபகுதிக் கிராமங்களில் அமைதி நிலவிக்கொண்டிருந்த காலம். இல்லாவிடில் வீட்டு வேலியைப் பிரித்து, வீதியை ஆக்கிரமித்து ஒரு விழா நடத்த முடியுமா?

வீட்டு வளவிற்குள் மேடை போடப்பட்டிருந்தது. வளவிற்கும் வீதிக்கும் இடையே இருந்த கிடுகுவேலி நீக்கபட்டிருந்தது. வீதிக்குக் குறுக்காக வாங்குகள் வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஆண்டாண்டு காலங்களாக வாழையடி வாழையாகப் படிந்திருக்கும் அழுக்கு, வாங்குகளுக்கு அழகு கூட்டியது. வீதியில் எப்போதாவது வாகனங்கள் வருவதுண்டு. அதுவும் யாராவது கனவான்கள் கோவிலுக்கென்று வந்தால்தான். வீதி இவர்கள் குடியிருப்புக்கு அப்பாலும் இருபது இருபத்தைந்து குடிமனைகளைத் தாண்டி அம்பாள் கோவிலில் போய் முடியும்.

வாங்குகளில் இருந்தவர்கள் சுருட்டுப் பிடித்தும், பாக்கு வெற்றிலை போட்டபடியும் கன்னாபின்னாவென்று கதையளந்தபடி இருந்தார்கள். குடித்து முடித்த தேநீர்க்கோப்பைகள் வாங்குகளின் கீழே நடனமாடின. அவற்றின் மீது எறும்புக்கூட்டங்கள் வரிசை கட்டி ஏறின. முன்வரிசையில் சில வாண்டுகள் காலாட்டியபடி ஆவலோடு மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் ரி.எம்.எஸ்ஸின் பாடலை நிறுத்தி, மைக்கைத் தட்டி சரி செய்து கொண்டிருந்தார் ஒருவர்.

சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் காலையில்தான் ஊரில் திருமணம் நடந்திருந்தது.

Tuesday, 26 June 2018

மெல்பேர்ன் வெதர் - நாவல்



அறிமுகம்

தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் அவள்.

ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார். அவர் நெடு நேரமாகப் அவளைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தார்.

அவரது முறை வந்தது.

தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து தலைதெறிக்க ஒட்டம் பிடித்தார்.

வீட்டிற்குள்ளிருந்து கணவனும் பிள்ளைகளும் பதகளிப்பட்டு ஓடி வந்தார்கள். அவர்களும் அழகு நிலையத்தில் இருந்தவர்களுமாகப் அவளைத் தூக்கி அருகே இருந்த செற்றிக்குள் படுக்க வைத்தார்கள். முகத்திற்கு தண்ணீர் தெளித்தார்கள்.

மயக்கம் தெளிந்ததும், பரபரப்பாக சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள்.

“அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர் எனது முன்னாள் காதலன்” என்றாள் அவள்.

...தொடரும்...