Monday, 1 December 2025

அம்பலம் - சிறுகதை

வயது முதிர்ந்தோர் இல்லத்தில் பிரபல எழுத்தாளர் நிரஞ்சன் இருந்தார். அவரைச் சந்திப்பதற்காக பத்திரிகை நிருபரான தணிகாசலம் சென்றிருந்தார்.

“எழுத்தாளர் நிரஞ்சனைப் பாக்க வேணும்…”

“செகண்ட்  ஃப்ளோர் மூண்டாவது ரூமுக்குப் போங்க…”

தணிகாசலம் லிப்ற் இருக்கத்தக்கதாக படிகளின் வழியே ஏறி மேலே போனார். அறை திறந்து இருந்தது. உள்ளே உறக்கத்தில் இருந்தார் நிரஞ்சன். அவரை எழுப்புவதா விடுவதா என்ற தயக்கத்தில், அவரின் கட்டிலுக்கு எதிராக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.

நிரஞ்சனின் முகத்தில் சவரம் செய்யப்படாமல் வெள்ளி முடிகள் எங்கும் பரவிக் கிடந்தன. படுக்கையிலும் தனது மொட்டையை மறைப்பதற்காக தொப்பி அணிந்திருந்தார். அவரை முதன்முதலாகச் சந்தித்தது அப்படியே நெஞ்சில் நிழலாட்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. தொப்பியைக் முழுகும்போதும் கழட்ட மாட்டாரோ?

இருவருக்கும் வயதில் பெரிதளவு வித்தியாசம் இல்லை. ஆனால் மூப்பும் பிணியும் வயது பார்த்து வருவதில்லை. அவர்களின் பரம்பரை அலகுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல சங்கதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன. நிரஞ்சன் உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டார். மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்றான நோய் அவரை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர் ஒரு தண்ணிச்சாமி. அதுவே அவரை நோயாளியாகவும் ஆக்கியிருக்கலாம். நீரிழிவும் கொலஸ்ரோலும் ஒவ்வொரு பக்கமாகப் பிடித்திழுக்க, ஒரு தடவை ஸ்ரோக்கும் வந்திருந்தது. மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகள் வேலைக்குப் போவதால் இதுவே பாதுகாப்பான இடம் எனக் கருதி, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இடையிடையே வந்து பார்த்து உணவும் குடுத்துவிட்டுச் செல்வார்கள்.

தமிழ் மக்களுக்கான அந்த முதியோர் காப்பகத்தில் நிரஞ்சனுடன் ஆணும் பெண்ணுமாக மேலும் பதினான்கு பேர்கள் இருக்கின்றார்கள்.

நிரஞ்சன் `வாசல்’ என்ற சிறுகதைத்தொகுப்பையும், `ஊர்வலம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கின்றார். அதன் பின்னர் உதிரிகளாகச் சில கதைகளும், புதுக்கவிதைகளும் எழுதியிருக்கின்றார். ஆனால் தொகுப்பில் போடுமளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்த உதிரிகளிலும் சில இலக்கியத் தரமில்லாமல் இருந்தன. ஆனால் `வாசல்’ தொகுப்பு சிறுகதை இலக்கியத்திற்கே ஒரு வாசல் என்றும், `ஊர்வலம்’ தொகுப்பு புதுக்கவிதையின் ஒரு திறவுகோல் எனவும் இன்றளவில் பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. சில பல்கலைக் கழகங்களில், இவை இரண்டும் இன்னமும் பாட நூல்களாக இருக்கின்றன.

திடீரென விழித்துக் கொண்ட நிரஞ்சன், படுக்கையில் இருந்து எழுந்தார்.

“சொன்னபடி வந்துவிட்டீர்கள். நான் சற்றே அயர்ந்து போனேன்” சிரித்துக் கொண்டார் நிரஞ்சன்.

“பேட்டியைத் தொடங்கலாமா?” என்றார் தணிகாசலம்.

Friday, 21 November 2025

மங்கா… மான்குட்டி போல – சிறுகதை

 

இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.

ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.

"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.

"உங்களுக்கென்ன விசரா…  இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."

"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."

வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.

பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.

திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில் குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து மிதந்தன.

முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.

Tuesday, 4 November 2025

சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டி முடிவுகள் (2025)

 

போட்டி அறிவிப்பின்போது ஆறுதல் பரிசுகளாக 2,000 ரூபாய் அறிவித்திருந்தோம். அந்தத் தொகை இப்போது ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது.

அதேபோல் 3 நாவல்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் என்று அறிவித்திருந்தோம் இப்போது அது 5 நாவல்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்தப் புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும்.

இந்தப் போட்டிக்கு மொத்தம் 34 நாவல்கள் வந்தன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

மிக முக்கியமான நன்றியறிவித்தலை செய்ய வேண்டிய நேரம் இது.‌ கலந்துகொண்ட நாவல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாவல்களைப் படித்துத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற நாவல்களை அறிவித்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே என் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் செய்த பணிக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது. எங்களை அலைக்கழிக்க விடாமல், சொன்ன தேதியில் தன் பணியைச் சிறப்பாக முடித்துக் கொடுத்த அவருக்கு என்றென்றும் எங்கள் நன்றி உண்டு.

சுவாசம் பதிப்பகத்திற்கு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை அளித்த ராமச்சந்திரன் உஷா‌ அவர்களுக்கு நன்றி.

மற்ற விவரங்கள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படும்.

முதல்‌ பரிசு:

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

பால கணேசன்

ரூ 50,000

-

2ம் பரிசு

ஆதினி

துரை.அறிவழகன்

ரூ 25,000

-

3ம் பரிசு

திரைகடலோடியும் புகலிடம் தேடு

வேலையா கார்த்திகேயன்

ரூ ‌10,000

-

ஆறுதல் பரிசுகள் - தலா 5000 ரூ

* சொல்லில் வருவது பாதி

கே.எஸ்.சுதாகர்


* உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்

ஷாந்தி பாலசுப்ரமணியன்

* குருதி ஓவியம்

சேரன் செக்குட்டுவன்

* மெய்யரசி

ஜெயந்தி கார்த்திக்

* பிரதி:வேலன்

முத்துச்செல்வன்