Monday, 5 January 2026

சொல்லி வருவது பாதி - முன்னுரை

     



சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டியில் இந்த நாவல் தேர்வாகியிருக்கின்றது. இதுவே அச்சில் வெளிவரும் எனது முதல் நாவல். ஏற்கனவே மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ஒரு குறுநாவலும் அச்சில் வந்திருக்கின்றன.

`ஒற்றுமையே பலம்’ என்பது ஒரு பழங்கால நீதிக்கதை. அதில் வரும் குச்சிகள் போல இன்று நாம் எல்லாரும் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றோம். எத்தனையோ வருடங்கள் நாம் அடிமைப்பட்டிருந்தும், அதிலிருந்து பாடம் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. சிலர் பட்டுத்தெளிந்து கண் விழித்தாலும் செய்வதற்கு வழி தெரியாது திகைத்துக் கிடக்கின்றார்கள். நல்லது செய்வதைத் தடுப்பவரும் நம்மவரே. குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை உடைக்க முடியாதபடி வலிமையாக்குவது எப்போது?

இந்தக் கதை,1970/1995 காலப் போர்ச்சூழலில், இலங்கையின் வடபுறத்தேயுள்ள எல்லைக்கிராமமொன்றில் நிகழ்கின்றது. அரச அட்டூழியங்கள், இயக்கங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி இங்கே விலாவாரியாகச் சொல்லப்படவில்லை. நாவலின் நோக்கமும் அதுவல்ல. அதன் பின்னணியில் – கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, சில குடும்பங்களுக்கிடையேயான ஊடாட்டம், குறிப்பாக பெண்களின் கோபதாபங்கள் பிடிவாதம் சூழ்ச்சிகள் என்பவற்றை இணைத்து ஒரு திருமணத்தை சஸ்பென்ஸ் ஆக்கியிருக்கின்றேன். குண்டு வெடிப்பைவிட உறவினர்களிடையே நிகழும் குழப்பத்தின் தாக்குதலை நீங்கள் கடுமையாக உணரக்கூடும். மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவல், மணம் முடித்த தம்பதியினர் புலம்பெயர்ந்து செல்வதோடு முடிந்து விடுகின்றது. வருங்காலத்தில், அதன் நீட்சியாக புலம்பெயர்ந்த நாட்டை மையமாகக் கொண்டு இன்னொரு நாவலும் எழுதும் எண்ணமுண்டு.

நடுவராக இருந்து இந்த நாவலைத் தேர்வு செய்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கும், சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா மற்றும் ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,

கே.எஸ்.சுதாகர்

(அவுஸ்திரேலியா)

kssutha@hotmail.com

https://shuruthy.blogspot.com/

Thursday, 1 January 2026

சொல்லில் வருவது பாதி - நாவல் - சென்னை புத்தகக் கண்காட்சியில்

 




சொல்லில் வருவது பாதி – நாவல்

இலங்கைப் போர்ச் சூழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வாழ்வியலைப் பேசுகிறது நாவல்.

இவர்கள் எந்த இயக்கத்தினையும் சாராதவர்கள். எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்காதவர்கள். சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ நினைப்பவர்கள்.

பதற்றமே அன்றாட வாழக்கையாக மாறுபடும் நிலையும், போர்ச்சூழலும் எவ்விதம் மக்களைப் பாதிக்கின்றன என்பதையும், இயல்பு வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக மாறும் தருணத்தையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

நம் கண்முன்னே கண்ட காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றன என்பதைக் கதையின் ஊடே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.சுதாகர்.

இயல்பான மொழியும் நேர்மையான பதிவுமே இந்த நாவலின் பலம்.

வரலக்‌ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற நாவல்.

சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், ரூ 380, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ், சுவாசம் வெளியீடு.

Thursday, 11 December 2025

வளரி - சிறுகதை

வேலைக்குச் சென்றவுடன் கன்ரீனில் இருக்கும் குளிரூட்டியில் எனது மதிய உணவை வைப்பதற்காகச் சென்றேன். அங்கே ஏழெட்டுப் புதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி தன்பாட்டில் வேலை செய்துகொண்டிருந்தது. குளிரூட்டியில் உணவை வைத்துவிட்டுத் திரும்புகையில், கையடக்க ஸ்கேனர் ஞாபகத்திற்கு வந்தது. தினமும் வேலை முடிவடைந்து வீட்டிற்குப் போகும்போது சார்ஜ் செய்வதற்காகப் போட்டுவிடும் கையடக்க ஸ்கானரை எடுத்துக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன்.

அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.

“குட்மோனிங் ஜோன்…”

விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.

கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.

“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”

“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.

நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.