Friday 28 August 2020

சொந்த மண் - எனக்குப் பிடித்த கதை

 

சு.இராஜநாயகன்

 “கந்த  ஆஆஅஅ.....”

முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, அந்தப் பாரிய வேப்பமரத்தின்கீழ், பாத்தியிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும் சற்றுக் கலைந்தது.

முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஒரு திசை நோக்கிக் கைகூப்பி மீண்டும் "கந்தா, கந்தா ஆஅ” என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலு முழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத்துண்டை உதறித் தோளிற் போட்டார். குனிந்து சிறு துணிப்பை ஒன்றை எடுத்தார். புறப்பட்டுவிட்டார்.

தூரத்தில் சேவல் ஒன்றின் கொக்கரக்கோ’ கேட்டது. நேரம் அதிகாலை நாலரை மணியாக இருக்கும். இயல்புநிலை குலையாமல் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோயிலின் ஆயத்தமணி நாதம் முருகேசரின் கோண்டாவில் விவசாயிகளைத் துயிலெழுப்பி அவரவர் தோட்ட நிலங்களுக்கு அனுப்பியிருக்கும். அவர்களுடன் முருகேசரும் நார்க் கடகத்தில் இலைச் சருகுகளைத் தலையில் தாங்கி, மண்வெட்டியுடன் தன் நிலத்தை நோக்கிச் சென்றிருப்பார்.

இன்று..?

‘எங்கு செல்கிறோம் என்ற இலக்கின்றி, ‘என்ன செய்யப்போகின்றோம்’ என்ற விடை கிடைக்காத வினாவைச் சுமந்து கொண்டு அலை அலையாக வந்த பல நூறாயிரம் மக்கள் வெள்ளத்தில் ஒரு துளி முருகேசர். அத்துளியோடு ஒட்டிக்கொண்ட மற்றிரு துளிகள் மனைவி மீனாட்சியும், மகள் பூமணியும்.

மனிதத்திரட்சியை ஊடறுத்தோ அல்லது அதனுடன் அள்ளுண்டோ செல்ல இயலாமல் விதி ஓரத்தில் ஒதுக்கப்பட்ட சில நூறு மனிதருள் இவர்களும் சேர்த்தி.

கைதடி வயோதிபர் இல்லத்துக்குச் சற்று அப்பால் வீதியை முகப்பாய்க் கொண்ட பெரிய வெறுங் காணியினுள்ளே கண்ட பாரிய வேம்பு இவர்களுக்குத் தற்காலிக புகலிடம் தந்தது.

இரவு தங்கிச் செல்லலாம். குழந்தை குஞ்சுகளுடன் தாய்மார் பலர், வயோதிபம் வாட்டும் ஒரு சிலர், வெவ்வேறு நோய் நொடி கண்டவர்கள், ஆணும், பெண்ணுமாய் இளசுகள் என்பவர்களோடு மூட்டை முடிச்சுக் களும் அங்கு பரந்து கிடந்தன. ஆடுகள், குட்டிகள் அங்குமிங்கும். நாய்கள் சில ஒடித்திரிந்தன. பல சைக்கிள்கள்.

முருகேசரின் ‘கந்தா அழைப்பொலி கேட்டு மீனாட்சியும், பூமணியும்

விழித்து எழுந்து அமர்ந்தார்கள். அவர் புறப்பட்டுவிட்டார் என்பதைக் கண்டதுமே அவர்கள் சுறுசுறுப்பானார்கள்.

அவருடைய போக்கு அவர்களுக்குப் பழக்கமானது. அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று குறிப்பாலுணர்ந்து இவர்கள் நடந்து கொள்ள வேண்டும், நடந்து கொள்வார்கள். 'ஏன்?’ என்று கேட்கமாட்டார்கள். அவர் செய்வதெல்லாம் சரி’ என்பது இவர்கள் தீர்மானம்.

தாமதமின்றி தமது சிறிய பைகள் இரண்டைத் தூக்கியோராய் முருகேசரைத் தொடர ஆயத்தமானார்கள்.

புறப்பட்ட முருகேசருக்கும் வீதிக்குமிடையே முப்பது மீற்றர் தூரம் வழியில் கால்மாடு, தலைமாடு பேதமின்றி ஆண், பெண், சிறுவர், சிறுமியர் பரந்து படுத்திருந்தார்கள்.

மிகச் சாவதானமாகக் காற் சுவடுகளை நீட்டியும், குறுக்கியும் மக்களைத் தாண்டி அவர் வீதிக்குச் சென்று மிதக்க முடிந்தது. மீனாட்சியும் மகளும் சிரமங்களினூடாக ஒருவழியாக விதிக்கு வந்து விட்டார்கள்.

வீதியில் மக்கள் நடமாட்டந் தொடங்கிவிட்டது. மங்கிய ஒளியிலும் பூமணி வீதியின் இருபுறமும் கூர்ந்து நோக்கினாள். அசாதாரண உயரங் கொண்ட முருகேசர் எந்தக் கூட்டத்தில் நின்றாலும், இலகுவில் கண்டு கொள்ளலாம்.

கைதடிச் சந்தியை நோக்கிச் செல்வோரிடையே அவரில்லை. எதிர்ப்புறம் நாவற்குழிச் சந்திக்குப் போகும் திசையில் முருகேசரின் வேக நடை தெரிந்தது.

நேற்று வந்த பாதையில் திரும்பிச் செல்கின்றார் ஏன்? வீடு நோக்கியா?

ஓட்டமும் நடையுமாய் இருவரும் முருகேசருக்குப் பின்னால் பத்து மீற்றர் தூரத்துக்கு வந்துவிட்டார்கள்.

நாவற்குழிச் சந்தி எதிரே, ஒரு காலத்தில் புகைவண்டி நிலையமாக இருந்த இடத்தில் மேடை அடங்க மக்கள் படுத்துக்கிடந்தார்கள்.

முருகேசர் நின்றார். துணிப்பையைத் தோளில் கொழுவினார். கைகளை உச்சியில் குவித்து நான்கு திசையும் சுற்றிச்சுற்றி வணங்கினார். “கந்தா' என இரங்கி அழுவாராய் அவனிடம் விடைபெற்றார். பின்னர் கேரதீவுப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.

வைகறை ஐந்து மணியிருக்கும் நாவற்குழி குடிமனைகளினூடாகச் செல்லும் விதியின் இருமருங்கும் சாக்குகள் விரித்துச் சில்லறைக் கடைகள் முளைத்துக் கொண்டிருந்தன. பாதையின் ஓரத்திலிருந்த வெறுங் காணிகளுள் மரங்களின் கீழும் வான முகட்டின் கீழும் இடம் பெயர்ந்தோர் பலர் இன்னும் நித்திரையிலிருந்தார்கள்.

முருகேசரின் இயல்பு நடை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் மனைவியும், மகளும் நாயோட்டத்தில் சென்றார்கள்.

மறவன்புலவு.

இருபுறமும் வயல்கள். நெற்பயிர் சோர்ந்து கிடக்கிறது. ஒரு வயல் ஒரத்தில் ஒரு சிறு கொட்டில் கோயில். வயல் காக்குந் தெய்வக் கோயில், காலைப்பூசைக்கு ஆயத்தங்கள் நடைபெறுகின்றன.

முருகேசர் நின்றார். கோயிலில் வடகிழக்கு மூலையில் வயல் ஒரத்தில் ஒரு கிணறு. கைவாளியால் நீர் மொண்டு கை, கால், முகங் கழுவியும் நீர் குடித்தும் சிலர் மீண்டனர்.

கிணற்றடியில் எவருமில்லாதபோது முருகேசர் அங்கு போனார். நலமுண்டுத் துண்டையும் துணிப்பையையும் ஒரு கல்லின்மேல் வைத்தார். நாலுமுழத்தோடு ஒரு காகக் குளிப்புக் குளித்தார். ஈரவேட்டி, உடலுடன் கோயில் வாயிலுக்கு வந்தார்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீனாட்சியும், மகளும் கிணற்றடிக் குப் போய் கை, கால் முகங் கழுவி, தாகசாந்தி செய்து கோயிலுக்கு வந்தார்கள்.

அரோகரா’ ஒலி மத்தியில் சுவாமிக்குப் பஞ்சாலாத்தி காட்டிக் கொண்டிருந்தார் பூசகர். இவர்களும் தரிசித்து வணங்கினார்கள் விபூதிப் பிரசாதம் பெற்றார்கள்.

பின்னர் அங்கு நின்ற பத்துப் பன்னிரண்டு பேரிடையே முருகேசரைத் தேடினார்கள். அங்கு அவரில்லை. விதியைத் திரும்பிப் பார்த்தார்கள். நேர் விதி பார்வை செல்லும் தூரம் வரை இருபுறமும் பார்த்தார்கள்.

அவரைக் காணவில்லை!

ஈரவேட்டி, நல்ல உயரம், சிறிய துணிப்பை, அடையாளங் கூறி விசாரித்தார்கள்.

சற்று முன்னர் அவர் கேரதீவுப் பக்கஞ் சென்று விட்டாராம்.

இவர்கள் வீதியிலிறங்கி நடக்கத் தொடங்கினார்கள். விதியிலெங்கும் அந் நெடிய உருவத்தைக் காணவில்லை.

இவர்களுக்குப் பின்னால் சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். அவர்களிடம் ஒரு துணிப்பையைக் கொடுத்தான்.

முருகேசரின் பை!

"இது ஆர் தந்தது?"

"அந்த ஐயா உங்களிட்டைக் கொடுக்கட்டாம்.”

"அந்த ஐயா எங்கை?"

"குடுக்கச் சொல்லிப்போட்டுப் போட்டார்.”

சிறுவன் கேரதீவுச் சந்திப் பக்கம் கை நீட்டிக் காட்டினான்.

பூமணி பையினுள்ளே பார்த்தாள். ஒரு கடதாசிப்பை. உள்ளே சில பணத்தாள்கள். எண்ணினாள். சிறிய பெரிய தாள்களில் நாலாயிரத்தறுநூறு ரூபா.

"அம்மா, இதுக்கை காசிருக்கு."

அம்மாவுக்கு இது கேட்கவில்லை. கணவனைக் காணாத, பறி கொடுத்த தமிழச்சியாய் அவள் நினைவிழந்தாள். நிலத்தில் சரிந்து விழவிருந்த தாயை மகள் அணைத்தாள். நிலத்தில் அமர்ந்து தாயின் தலையைத் தன் மடியில் தாங்கினாள்.

மீனாட்சிக்கு வியர்த்துக் கொட்டியது. குளிர்ந்த இக்காலை வேளையில் இப்படி ஒரு வியர்வையா? பசியோ? துணிப்பையால் தாயின் முகத்தைத் துடைத்தாள். துடைத்தல் தொடர்ந்தபோது பூமணிக்கு அழுகை வந்துவிட்டது. பரம்பரை பரம்பரையாக சீவியகாலம் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த உடைமைகளைத் தற்காலிகமாகவேனும் கை விட்டு, ‘எங்கு, ஏன், என்ன செய்ய புரியாமல் ஓரொரு துளியாகச் சென்று

கொண்டிருந்த மனிதப் பேரலையில் எவரும் இவர்களைத் திரும்பியும் நோக்கவில்லை.

பேரலை நகரத் தொடங்கியது. விதி நிறைந்து மக்கள் கிழக்குத் திசையில் நகர்கிறார்கள். வெயிலும் ஏறத் தொடங்கி விட்டது. தங்கி ஆற நிழலில்லை. இப்படியே இருந்தால்..?

மீனாட்சி சற்றுத் தேறிவிட்டாள். கண்கள் திறக்க வெருட்சி தெரிந்தது. அரைமணி நேர மயக்கந் தீர்ந்து மகளின் மடியிலிருந்து எழுந்தாள்.

"அப்பா வந்திட்டாரா?” முதல் கேள்வி. பூமணி பதில் தரவில்லை.

“எழும்பு போவம். போய்த் தேடுவம்” நடக்கத் தொடங்கினார்கள். கணவனைக் காணாத வெப்பியாரம் உள்ளே, வெளியே வெயில்.

ஒரு மணி நேர நகர்வின் பின் கேரதீவுச் சந்திக்கு வந்து சேர்ந்தார்கள். மர நிழல்களின் அரவணைப்பில் பலர் ஆறிக்கொண்டிருந்தார்கள். இவர்களும் அங்கு ஒதுங்கினார்கள். நகர்வதையே நோக்காக, வெயிலையும் களைப்பையும் பொருள் செய்யாது, மக்கள் சாவகச்சேரி நோக்கிச் செல்கிறார்கள். சிறுவர் சிறுமியர் வாடிய கீரைத்தண்டுகளாய் பெற்றோரின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறார்கள்.

பூமணியும் தாயும் பயணத்தைத் தொடர்ந்தார்கள் வழியெல்லாம் திரள் திரளாக மக்கள். இடைக்கிடை சில வாகனங்களுக்கு இடம்விட்டு

விதி ஓரத்தில் நிற்கும் நிலை.

சாவகச்சேரி எட்டாத தூரத்தில் இருப்பதாக இவர்களுக்குப் பட்டது. அள்ளுண்டு சென்றார்கள். சாவகச்சேரிச் சந்தியைக் கண்டபோது முற்பகல் பதினொன்றரை மணி.

சந்தியில் விவரிக்கமுடியாத நெரிசல், கூடு முழுமையும் மொய்த்துப் புரளும் தேனிக்களாய் மக்கள் திரள். கேரதீவுப் பாதைத்திரளும், பிரதான விதித் திரளும் அங்கு சங்கமித்துப் பெருந்திரளாய்ப் பரிணாமங் கொண்டது. இதை ஊடறுத்துச் செல்வது முயற்கொம்பு. போதாததற்குச் சில வாகனங்களும் நெரிசலைப் பிரமாண்டமாக்கிக் களேபரம் ஏற்படுத்தின.

மீனாட்சிக்கும் பூமணிக்கும் வாழ்வே வெறுத்த நிலை. இந்த நிலை இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு ஏற்பட்டதோ?

நகர்வுக்காய் மேற்கொண்ட பல்லாயிரம் பகீரதப் பிரயத்தனம் ஒன்றுடன் ஒன்று மோதின. பரிதாபக் குரல்களும், அவல ஒலிகளும் குழந்தையின் அழுகைக் குரல்களும் அந்தச் சதுக்கத்தையே உருக வைத்தன.

அலையால் எற்றுண்ட துரும்புகளாய் அள்ளுண்டு இந்துக் கல்லூரிக்குள் இருவரும் ஒதுக்கப்பட்டபோது நேரம் ஐந்து மணிக்கு மேலிருக்கும். பசியையும் தாகத்தையும் விஞ்சிய களைப்பு.

பல நூறு மக்கள் நின்றும், நடந்தும், இருந்தும், கிடந்தும் உள்ளிடத்தை நிரப்பி இருந்தார்கள். இந்த இருவரும் குந்தி இருக்க ஓரிடம் கிடைத்துவிட்டது.

“கந்தா, முருகா!”

தாகம் – பசி - களைப்பு என்பவற்றுக்கு மேலாக, குடும்பத் தலைவரைக் காணாத சோர்வின் உக்கிரம் இருவரையும் உலுப்பியது.

நேரம் கரைந்து இரவும் வந்தது. பூமணி வெளியே சென்றாள். திரும்பியபோது சில திண்பண்டங்களும் பிளாஸ்ரிக் போத்தல் ஒன்றில் நீரும் கொண்டு வந்தா

ள். மீனாட்சி தண்ணிர் மட்டும் குடித்தாள். பக்கத்திலிருந்த சிறுமி ஒருத்தியுடன் பூமணி பலகாரங்களைப் பகிர்ந்து உண்டாள்.

நான்கு நாள். இரவும் பகலும் வருவோரும், தங்குவோரும், வெளியேறுவோரும் அடுத்து என்ன என்ற பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாத மக்களின் அவலங்களுக்குச் சான்று ஆயினர்.

முருகேசரோ, அவரின் சுவடோ காணப்படவில்லை. காலை நேரங்களில் கஞ்சி, பிற்பகல் சிறிய சோற்றுப் பொட்டலம், எவரோ புண்ணியாத்மா அரிசியும், பரும்பும் தர, அங்கு ஒதுங்கியிருந்த பெண்கள் சமைத்துப் பகிர்ந்து வழங்கினார்கள்.

ஐந்தாம் நாள் காலை, முருகேசர் அங்கு வந்தார். நாலுமுழம் மட்டும். நலமுண்டைக் காணவில்லை. அவரது திருநீற்றுப் பட்டுப்பை அரையில் தொங்கிக் கொண்டிருந்தது. நாலு புறமும் நோட்டம் விட்டார். பூமணி கண்டுவிட்டாள். "அப்பா” என்ற கதறலுடன் அவரிடம் ஓடினாள். அவளை அணைத்தபடி அவர் மீனாட்சியின் அருகில் வந்து ஒதுங்கி அமர்ந்தார்.

‘போன உயிர் மீண்ட உணர்வில் மீனாட்சி மிதந்தாள். யுவதிகள் சிலர் உணவுப் பண்டங்களை அங்கும் இங்கும் திரிந்து கொடுத்தார்கள். குறிப்பிட்ட சிலருக்கு அவர்கள் அருகில் சென்று மருந்து வில்லைகளும் தந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த காற்சட்டை ஷேட்டும், அவர்களின் சுறுசுறுப்பும் முருகேசர் கவனத்தை ஈர்த்தன. யுவதிகள் காட்டிய ஆதர வும், அரவணைப்பும் தனக்கும் கிடைத்தாற்போல முருகேசர் ஆயாசந் தீர்ந்தார்.

"அப்பா, அம்மாவைக் கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்ற பூமணி, முருகேசரின் மடியில் அவர் துணிப்பையை வைத்தாள். அதனுள், அவள் எடுத்துச் செலவிட்ட தொகை போக மிகுதிப் பணம் இருந்தது.

“ஒருக்காப் போட்டுவாறன்” பெற்றோரை இரண்டு மூன்று தடவைகள் திரும்பிப் பார்த்தவள் சிரித்துக்கொண்டே நடைவேகத்தை அதிகரித்தாள்.

உள்ளம் பூரித்தவளாய் மீனாட்சி எழுந்தாள். ”நான் ஒருக்கா முகங் கழுவிப்போட்டு வாறன். இருந்து கொள்ளுங்கோ.”

பத்து நிமிஷங் கழித்துத் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக்

கொண்டே, “உங்கடை விபூதியிலை கொஞ்சம் தாருங்கோ” என்றாள்.

“என்னட்டை விபூதி இல்லை மீனாட்சி.”

“உங்கை பை வைச்சிருக்கிறியள். கொஞ்சம் எண்டாலும் கிடக்குந் தானே!”

முருகேசர் சிரித்தார். வழமைக்கு மாறாகக் கதைக்கத் தொடங்கினார்.

"இரு, பக்கத்திலை இரு. இதுக்குள்ள என்ன இருக்கெண்டு பார்.”

பையை எடுத்துச் சுருக்கைத் தளர்த்திக் காட்டினார். உள்ளே விபூதி இல்லைத்தான். செந்நிறத்தில் ஏதோ இருந்தது.

“என்னப்பா இது?”

“பொறு. சொல்லிறன். இந்தப் பயணத்திலை நான் தற்சேலாக் கண்ணை மூடீட்டா, எனக்குப் போடிற வாய்க்கரிசி இதுதான். இது எங்க வீட்டுத் தோட்டத்து மண், செம்மண். சொந்த மண்.”

மீனாட்சி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். "அழாதை மீனாச்சி. மனிசன் காரியம் நிச்சயமில்லை. எதுக்கும் தயாராயிருக்க வேணுமல்லே!”

மீனாட்சியின் அழுகை மேலும் வலுத்தது. அழுகையும் விம்மலும் ஒய நீண்ட நேரம் எடுத்தது. பின்னர் மீனாட்சியும் சிரித்தாள்.

"நான் முந்தீட்டா, உதிலை அரைவாசி எனக்கு” என்றாள். முருகேசரின் முகத்தில் புன்னகை ஒன்று தோன்ற முயன்று ‘வேண்டாம் என மறைந்துவிட்டது.

இந்தச் சிறிய சம்பாஷணையின் எதிர்விளைவு அத்தம்பதியினர் மேல் மெளனமாய்க் கவிந்தது. மதியங் கடந்துவிட்டது. யுவதிகள் இருவர் வந்து மீனாட்சியைப் பார்த்து விட்டு, மூன்று உணவுப் பொட்டலங்களைத் தந்து சென்றார்கள்.

ஓ! பூமணியை இன்னும் காணவில்லை. அவள் போய் எவ்வளவு நேரம்? ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் மீனாட்சியைக் கலக்கம் பிடித்துக்கொண்டது. உணவுப்பொட்டலங்கள் பிரிக்கப்படாமலே கிடந்தன.

முருகேசர் நிஷடையில் இருப்பவர் போல் மெளனித்திருந்தார். மீனாட்சி இடைக்கிடை எழுந்து போய் விதியின் இருபுறமும் பார்த்து ஏமாற்றமே உருவாகத் திரும்பி வந்தாள்.

மாலைப்பொழுது மீனாட்சி பொறுமையின் எல்லையில் நின்றாள். “ஒருக்காப் போய்த் தேடிப் பாருங்கோவன்!” முருகேசர் சிரித்தார்.

"அவள் எங்கடை மகள். அவள் பிழை செய்வாளே? எங்கை போனாள், ஏன் திரும்பி வரேல்லை எண்டுகூட யோசிக்காதை."

தன் மடியில் செருகியிருந்த அந்தப் பையை எடுத்து மீனாட்சியிடங் கொடுத்தார்.

"கவனமா வைச்சிரு.”

தினக்குரல்

03.05.1998

 

சு. இராஜநாயகன் 'ஈழகேசரிப் பண்ணையில் சம்பந்தனின் அடிச் கவட்டில் முகிழ்த்தவர். நல்ல சிறுகதைகள் முப்பது வரை படைத்துள்ளார். நனவோடை உத்தியில் தன் சிறுகதைகளைப் படைத்தவர். 'பிரயாணி' இவரது நாவலாகும். அமரராகிவிட்டார்.

 

No comments:

Post a Comment