Friday 5 February 2021

கொரோனா மணி - கங்காருப் பாய்ச்சல்கள் (34)

 

சமீபத்தில் Port Campbell என்ற இடத்திற்குப் போயிருந்தோம். கடற்கரையையொட்டிய நகரம். Twelve Apostles பிரசித்தம். மெல்பேர்ணில் இருந்து 225 கி.மீ தூரத்தில் இருக்கின்றது.

இரவுச் சாப்பாட்டிற்காக அலைய வேண்டியதாயிற்று. நேரம் ஆறுமணியைத் தாண்டிவிட்டது. கூகிளில் சில சாப்பாட்டுக்கடைகளைப் பார்த்து, அங்கே போனால் அவை பூட்டியிருந்தன. கடைசியில் ஒரு `fish and chips’ கடை திறந்திருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். உள்ளே போந்துபொலிந்திருந்த பெண்மணி ஒருவர் கசியரில் நின்றார். அவரிடம் எமக்கான உணவை ஓடர் செய்துவிட்டு உள்ளேயிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தோம். குசினிக்குள் ஒருவர் படு பிஷியாக வேலை செய்துகொண்டிருந்தார். அவர் அந்தக் குண்டுப்பெண்மணியைப இடைக்கிடை பார்ப்பதும், அவர் பார்க்காத வேளைகளில் இவர் அவரைப் பார்ப்பதுமாக இருந்தனர்.

சிறிது நேரத்தில் ஒரு குடும்பம் – சின்னனும் பெரியதுமானதொரு பட்டாளம் உள்ளே நுழைந்தது. ஒரு பெரிய புரட்சியே செய்துவிட்டு ஒன்றும் வாங்காமல் அங்கிருந்து வெளியேறினார்கள் அவர்கள். கசியரில் நின்ற பெண்மணிக்குக் கோபம் வந்துவிட்டது. கடையை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். சற்று நேரத்தில் நெட்டையான குடுமி வைத்த ஒருவர், தான் வாங்கிய உணவுடன் வந்து கதவைத் தட்டினார். பெண்மணி கதவைத் திறந்தார். வந்தவர் உணவைத் திறந்துகாட்டி, பெண்மணியுடன் குசுகுசுத்தார். பெண்மணி குசினிக்குள் சென்று சமையல்காரனிடம் குசுகுசுத்தார். கசியருக்கு வந்த பெண்மணி வந்தவருக்கு காசையும் குடுத்து, உணவையும் திருப்பிக் குடுத்தார். மீண்டும் கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டார். எங்களைப் பார்த்தார். பெருமூச்சு விட்டார். கிட்ட வந்தார்.

”கொரோனா வந்ததுக்குப் பிறகு எல்லாரும் சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டு, வீட்டிலை நிம்மதியா இருக்கினம். இப்ப இஞ்சை கொரோனா ஒருத்தருக்கும் இல்லை. ஆனாலும் கடையைத் திறக்கினம் இல்லை. ஏன் கஸ்டப்படுவான், அரசு தாற கொரோனா மணியே போதும் என்கின்றார்கள்.” கவலையுட சொன்னார் அவர்.

நாங்கள் அவரை நிமிர்ந்து பார்த்தோம். அவர் அதைப் புரிந்துகொண்டார்.

“நானும் உள்ளுக்கை வேலை செய்யிறவரும், உண்மையிலை இஞ்சை வேலை செய்யிற ஆக்கள் இல்லை. நாங்கள் வேறை வேறை இடங்களிலை வேலை செய்யிறம். இஞ்சை வேலை செய்யிற ஆக்கள் எல்லாம் லீவு எண்டபடியாலை, காசுக்காக இஞ்சை வந்து வேலை செய்யிறம்” அந்தப்பெண்மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது, எங்களுக்கான சாப்பாடு தயாராகிவிட்டது. சமையல்காரன் – செவ் – எங்களுக்கான சாப்பாட்டைத் தந்து, “நீங்கள்தான் கடைசி. காலையில் இருந்து வேலை செய்கின்றோம். கடையைப் பூட்டப்போகின்றோம். enjoy your food” என்றார்.

உணவை எடுத்துவந்து, வீதியோரத்தில் இருந்த ஆசனமொன்றில் உட்கார்ந்தோம். அகோரப்பசி. உணவைத் திறந்தால், அரையும் குறையுமாக அவிந்த ஏதோவொரு சாப்பாடு நாறி மணத்தது. பூட்டிய கதவைத் திறப்பித்து உள்ளே புகுந்த நெட்டையான மனிதர் கண் முன்னே தோன்றினார். பிறகென்ன ஒரே enjoy தான்.

 

No comments:

Post a Comment