Monday 26 August 2024

ஒருபக்கம். மறுபக்கம்? - நெடுங்கதை

 

நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்

பகுதி 2

“அப்பா… இஞ்சை பாருங்கோ சீனறியை…” ஆச்சரியத்தால் செளம்யாவின் கண்கள் அகல விரிந்தன. அமலனின் சத்தம் வராது போகவே, “அப்பா சரியான நித்திரை” என்றாள்.

தாரிணி சீற்றுக்குள்ளால் கையை நுழைத்து அமலனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டினாள்.

“இந்தாள் இப்பிடியே தூங்கி வழிஞ்சா ரஞ்சனுக்கு நித்திரைதான் வரும். பிள்ளை நீ போய் முன்னுக்கு இரு…” செளம்யாவைப் பார்த்து தாரிணி சொன்னாள்.

“றைவிங் செய்யேக்கை நான் ஒருநாளும் தூங்க மாட்டன்” என்றான் ரஞ்சன்.

இவர்களின் கலாட்டாவில் சிந்தனை அறுந்த அமலன், கண்ணைக் கசக்கியபடியே சுற்றுமுற்றும் பார்த்தான். சில மலைகள் ஒதுங்கிப் பதுங்கி பின்புறம் ஓட, பனித்தூவல் சூழ்ந்த செழிப்புடன் கூடிய பிரதேசமென எங்குமே பச்சைப்பசேல் என்றிருந்தது மலையகம்.

“கண்டி வந்திட்டுது” என்றான் அமலன்.*

நிறுத்தம் ஒன்று : மலையகம்

கண்டியில் நின்றபடியே, புகழ் பூத்த இடங்களான புத்தரின் புனிதப் பல் உள்ள ஸ்ரீ தலதா மாளிகை, பேராதனைப் பல்கலைக்கழகம் என்பவற்றைப் பார்த்தார்கள். இரவு உணவருந்திவிட்டு, கண்டி இராசதானியின் கடைசி தமிழ் மன்னன் ஸ்ரீவிக்கிரம ராசசிங்கனால் அமைக்கப்பட்ட குளத்தைச் சுற்றி காலாற நடந்தார்கள். கண்டி நகரம், கொழும்பைவிட நெரிசலாக இருந்தது போல அவர்கள் உணர்ந்தார்கள். கண்டிய நடனத்தை அவர்களால் கண்டுகளிக்க முடியவில்லை.

அங்கு நின்ற பொழுதில் நுவரெலியா சென்று தேயிலைத் தொழிற்சாலை, மற்றும் `சீதா எலிய’ என்ற இடத்தில் உள்ள சீதை அம்மன் கோவில் என்பவற்றையும் பார்த்தார்கள். `சீதா எலிய’ என்ற இடம்தான் இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனம் ஆகும்.

*

நிறுத்தம் இரண்டு : மத்திய மாகாணம்

இரண்டு நாட்களில் இயற்கை எழில்கொஞ்சும் மலையகத்தை விட்டுப் புறப்பட்டுக் கொண்டார்கள். தம்புள்ள, சிகிரியா என்ற இடங்களினூடாக அனுராதபுரம் போவற்கு முடிவு செய்தார்கள். நேரம் போதாமையினால், சோழர்கள் உருவாக்கிய பொலன்நறுவை என்ற இடத்தைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழிப்படைகின்றன கிராமங்கள். கடும் பச்சையாகவிருந்த காட்சிகள் மெல்ல மறைந்து, இளம்பச்சை நோக்கி நகரத் தொடங்கின. இடைப்பட்ட நகரங்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை.

ரஞ்சன் கூட இரண்டு மூன்று நாட்களின் பின்னர் கொஞ்சம் தோழமையுடன் பழகத் தொடங்கியிருந்தான். அடிக்கடி அந்த இடங்களுக்கு வந்து போயிருந்ததால், தனக்குத் தெரிந்த சில சாப்பாட்டுக்கடைகளையும் அறிமுகம் செய்தான். அவர்கள் பார்க்கத் தவறிய சில இடங்களையும் சுட்டிக் காட்டினான்.

தம்புள்ள குகைக்கோவிலும், சிகிரியாவும் நில மட்டத்திலிருந்து பன்மடங்கு உயரம் கொண்டவை என்பதால் ஒரே நாளில் பார்ப்பதைத் தவிர்க்கச் சொன்னான் ரஞ்சன். இரண்டுமே ஏறுவதற்கு களைத்துப் போவதால், இரசித்துப் பார்க்க முடியாமல் போகும் என்பது அவனது பயண அனுபவம்.

மாத்தளை மாவட்டத்தில் இருந்த தம்புள்ள குகைக்கோயில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. சுற்றவர காடுகள் சூழ்ந்தது. அவர்கள் அங்கே போனபோது மேளம் போன்றதொரு இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தார்கள். உயரமான மலையின் உச்சியில் குடையப்பட்ட குகைக்குள் ஓவியங்களும், சயனத்தில் – தியானத்தில் என நூற்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும், விஷ்னு – பிள்ளையார் போன்ற இந்துசமய தெய்வங்களின் சிலைகளும், சில மன்னர்களின் சிலைகளும் இருந்தன. எல்லோரும் சொல்வது போல அது ஒரு `பொற்கோவில்’ தான்.

மறுநாள், முதலாம் காசியப்பமன்னன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவெனக் கட்டிய சிகிரியா கோட்டையைப் பார்க்கச் சென்றார்கள். முன்னே பெரியதோரு அகழி நீண்டு விரிந்து கிடந்தது. கோட்டையின் வாயிலில் சிறு குளங்களும், நீண்டு ஒடுங்கிய கேணிகளும் இருந்தன. மலையின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சிங்கமொன்றின் பாதங்கள் பயமூட்டியது. கனவு நகரத்தைப் பார்ப்பதற்கு செங்குத்தாக பல படிகள் ஏறவேண்டியிருந்தது. குறுகிய ஒடுங்கிய வழிகளினூடாக, கை பிடித்து ஏற இடையிடயே ஏணிகளும், இடையிடையே ஓய்வெடுக்க இடங்களும் இருந்தன. மேலே ஏற ஏற சுற்றிச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த காடுகள் தெரிகின்றன. பச்சைப் பசேலென்ற போவைக்குள் பதுங்கியிருக்கும் சொர்க்கம் அது.

கோட்டையின் உச்சியில் நீர் வற்றிப்போகாத குளம் ஒன்றும், ஏற்ற இறக்கங்கள் கொண்ட நிலப்பிரதேசமும் இருந்தன. அறுபேர்கள் வரையில் தாராளமாக நிற்கலாம். திரும்பி இறங்கும்போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இயற்கை வர்ணங்களால் வரையப்பட்ட சுவர் ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஓவியங்களை தேவதைகள் என்றும் காசியப்பனின் மனைவிகள் என்றும் சொல்கின்றார்கள். அஜந்தா ஒவ்வியங்களின் சாயலில் உள்ள இந்தப்பெண்களை இராவணன் காலத்து பணிப்பெண்கள் என்று சொல்வாரும் இருக்கின்றனர்.

சிகிரியாவைப் பார்த்ததில், அமலனுக்கு சமீபத்தில் வாசித்த `சுகந்தி என்கின்ற ஆண்டாள் தேவநாயகி’ நாவல் மனதினில் வந்து போனது. இராஜராஜ சோழன், இராசேந்திரன், தேவநாயகி என்பவர்களைச் சுற்றிப் படரும் அந்த நாவல், இலங்கை இந்தியா நாடுகளைக் களமாகக் கொண்டது.

உங்கள் எல்லோருக்கும் தற்போதும் வாழ்ந்து வருகின்ற ஆறாவது மகிந்த மன்னனைத் தெரியும். ஆனால் அமலன் வாசித்த நாவலில், மன்னன் ஐந்தாம் சேனனின் சகோதரனான, ஐந்தாம் மகிந்தன் வருகின்றான். கேளிக்கைகள் நிறைந்த அவன், நாட்டைச் சரிவர ஆளமுடியாமல் கலவரங்கள் வெடித்ததால் உருகுணைக்குத் தப்பி ஓடினான். அந்த நேரத்தில் சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றி, பொலன்நறுவை வரை தமது ஆட்சியை விஸ்தரித்துக் கொண்டார்கள். சில வருடங்கள் உருகுணை இராட்சியத்தை ஆண்ட மகிந்தன் பின்னர் நடைபெற்ற யுத்தங்களின்போது முதலாம் இராஜராஜசோழனிடம் பிடிபட்டுக்கொண்டான். சோழநாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட அவன், பின்னர் அங்கேயே இறந்தான்.

சிகிரியா இன்று ஒரு புனித நகரம். ஒரு காலத்தில் கேளிக்கைகள் பல நிறைந்த கனவு நகரம். சோழர் படையெடுப்பின் போது பிணங்கள் கொத்தித்தின்னும் கழுகுகள் நிறைந்த மயானபூமி.

*

மறுநாள் புறப்பட்டு அனுராதபுரம் நோக்கிச் சென்றார்கள்.

இங்கே மன்னன் துட்டகைமுனுவினால் அமைக்கப்பட்ட ருவான்வெலிசாய தாதுகோபுரம், புனித வெள்ளரசு மரத்தைக் கொண்ட ஸ்ரீமகாபோதி, இவை இரண்டுக்கும் இடையே உள்ள 1600 தூண்களைக் கொண்ட லோவமகாபாய, அபயகிரி விகாரை போன்ற பல புராதன இடங்கள் இருக்கின்றன.

இசுருமுனிய கோவிலில் பூந்தட்டுகளும் தீபங்களுமாக எங்குமே வெள்ளைத்துணி போர்த்திய மனிதர்கள் காணப்பட்டார்கள்.

பகலில் இந்த இடங்களைப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, “இங்கே இதைப் பாருங்கள்” என்று ரஞ்சன் ஒரு தாதுகோபுரத்தைச் சுட்டிக் காட்டினான். தூரத்தே ஒரு தாதுகோபுரம் புதிதாக ஜொலித்தது.

“இது மகிந்த கட்டியது. சண்டஹிரு செய என்று பெயர்…”

“சண்டை…” என்று பின்னால் இருந்த தாரிணி இழுக்க ரஞ்சன் சிரித்தான்.

“கார் ஓடிக்கொண்டிருக்கேக்கை ஒண்டையும் உருப்படியா பாக்கேலாது. புசுக்கெண்டு போயிடும்.” தொடர்ந்து தாரிணி சொன்னாள்.

மகிந்த கட்டிய சண்டஹிரு செய தாதுகோபுரமும் அப்பிடித்தான் புசுக்கெண்டு போனது. ரஞ்சனும் அதைப் பார்க்கப் போகின்றீர்களா என்று கேட்கவில்லை. இவர்களும் அதில் ஆர்வம் கொள்ளவில்லை.

“மகிந்த எப்படி இருக்கின்றார்?” அமலன் கேட்க ரஞ்சன் புன்முறுவல் செய்தான்.

மனிதப் படுகொலைகளால் மகுடம் சூட்டிய ராஜபக்‌ஷ குழுவினர் சமீபத்தில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார்கள். தலைநகரை மக்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். மக்கள் போராட்டத்திற்கும் தொடர் முற்றுகைக்கும் ஈடு குடுக்க முடியாமல் இறுதியில் ஓடித் தப்பினார்கள்.

“தமிழ் இனத்தை மாத்திரம் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் நரை தட்டிப் போனாலும் ஆட்சியில் இருப்பார்கள். அந்தத் தொழிலுடன் தன் இனத்து மக்களையும் சுரண்டிப் பட்டினி போடுபவர்கள் கண்காணாமல் போய்விடுவார்கள்.” கொஞ்ச தூரம் கார் ஓடியபின்னர், அமலன் கேட்ட கேள்விக்கு ரஞ்சன் பதில் சொன்னான்.

வரலாற்று நதியும் காலங்காலமாக இதையேதான் சொல்லிச் செல்கின்றது.

ரஞ்சன் முதன்முதலாக வாய் திறந்து அரசியல் பேசியது அதுவே முதல் தடவை. தவிர அந்தப் பயணத்தில் யாரும் அரசியல் பேசவில்லை. அவர்கள் உள்ளூர் பிரச்சினைகளும் கதைக்கவில்லை, உலகப் பிரச்சினைகள் பிற்றியும் அலசவில்லை.

இரவு ஹோட்டலில் நின்றபோது, அமலன் `சண்டஹிரு செய’ பற்றி கூகிளில் தட்டிப் பார்த்தான்.

|| 2009 இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டுப்போரில் இலங்கை ஆயுதப் படைகளின் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த ஸ்தூபி கட்டப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் 2010 இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2021 இல் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கி.பி 301 இல் கட்டப்பட்ட ஜேதவனாராமாய விகாரைக்குப் பின்னர், இலங்கையில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஸ்தூபி இதுவாகும். ||

பதினொரு வருடங்களில் ஜனாதிபதி இடம் மாறியிருந்ததைத் தவிர உருப்படியான வேலைகள் எதுவும் நடக்கவில்லை என்பதையே அது சொன்னது.

*

நிறுத்தம் மூன்று : வடமாகாணம்

வட பகுதியை நோக்கிச் செல்ல, ஈரலிப்பாக இருந்த நிலங்கள் எல்லாம் மெதுமெதுவாக வரண்ட பூமியாகின்றன. வீதியில் தார் சூடேறி ஆவி பறக்கின்றது. காற்றினால் அலைக்கழிக்கப்படும் கழிவுகளும் புழுதியும் ஆவியுடன் போட்டி போடுகின்றன. வவனியா, கிளிநொச்சி ஊடாக கார் யாழ்ப்பாணம் நோக்கி விரைகின்றது.

வயது முதிர்ந்த கிழவியுடன் வாலைக்குமரி ஒருத்தி நடை பயில்வது போன்ற தோற்றம் இன்று. சிதைந்த கட்டடங்களும் அதன் மருங்கே புதியனவும், இரண்டு பக்கங்களும் காடுகளும் செம்பாட்டுப்புழுதியும் இடையே நவீன மயமாகி வழுக்கிக் செல்லும் தார் வீதியும் என மாய்மாலம் காட்டுகின்றது.

ரஞ்சன் தான் தொழில் துவங்கியதற்கு இதுவரை நான்கு தடவைகள் தான் யாழ்ப்பாணம் வந்ததாகச் சொன்னான்.

அன்றைய இரவு யாழ்ப்பாண நகரத்தில் தங்கிவிட்டு, மறுநாள் அமலனும் தாரிணியும் தாம் வசித்த ஊர் நோக்கிச் சென்றார்கள். அழகான பச்சை போர்த்திய மரமொன்றின் பட்ட கொப்புகளில் ஒன்றாக அவர்கள் கிராமம் இருந்தது.

தெல்லிப்பழையிலிருந்து சற்று வடக்காக, புழுதி படிந்த செம்பாட்டு மண் ஊடாக காரில் போவதற்கு அமலனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ரஞ்சனின் உட்கிடக்கை என்னவென்றும் தெரியவில்லை. அமலன் கார் பழுதாகிவிடும் எனச் சொன்னபோது ரஞ்சன் அதற்கு உடன்பட்டான். ரஞ்சன் காருக்குள் இருக்க இவர்கள் மூவரும் ஒரு ஓட்டோவில் பயணித்தார்கள்.

பள்ளமும் திட்டியும் குழிகளும், இரண்டுபக்கக் கரைகளில் பீநாறிப்பற்றைகளும் என, ஒரு காலத்தில் பாதங்கள் நடந்து திரிந்த பாதை இன்று மறைந்து கிடக்கின்றது. முப்பது ஆண்டுகளுக்கும் முன்னால் மனிதர்கள் வாழ்ந்த சுவடு ஏதும் இல்லை. செருப்பில்லாமல் பள்ளிக்கு நண்பர்களுடன் நடந்து சென்ற பாதை. இன்று பாதையும் இல்லை, நண்பர்களும் இல்லை. எங்குமே புதர்கள் மண்டி, வீடுகள் இடிந்து, வெற்றுக்காணிகளாக காடு பற்றிக் கிடக்கின்றது ஊர்.

அமலனின் வீட்டிற்குப் போய்ச் சேர்வதற்கிடையில், ஆக மூன்றே முன்று வீடுகள் மாத்திரம் புதிதாக முளைத்திருந்தன. அதுவும் அரைகுறையில் தள்ளாடிக் கொண்டிருந்தன. போர் முடிவடைந்து பதின்னான்கு வருடங்களில் இவ்வளவு தான் நாட்டின் முன்னேற்றம்.

ஒரு காலத்தில் எப்படியிருந்த ஊர்? தார் வீதியொன்று இருந்ததற்கான அடையாளம் ஏதும் இன்றில்லை. சந்ததிகள் பெருகி, வேரூன்றிய நிலம் சாபல்யம் பெற்று மூளியாக இருக்கின்றது. இருந்தவர்களில் இறந்தவர்கள் போக, இருப்பவர்கள் எல்லாம் இன்று ஆளுக்கொரு மூலையில்.

முதுசமொன்றின் எச்சமாக ஓணான் ஒன்று தலையை ஆட்டி வரவேற்கின்றது. அதன் எச்சரிக்கை இனி ஓட்டோவும் உள்ளே போகாது என்பதுதான். `கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்ற ஐயப்பன் பாடலால் மிகுதித் தூரத்தைக் கடந்தார்கள்.

பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டிற்குள், இத்தனை வருடங்கள் கழிந்தும் உள்ளே போக முடியவில்லை. வீடு அரையும் குறையுமாக இடிந்து, வளவு முழுவதும் காடேறி இருக்கின்றது. வீட்டிற்குள் இருந்து இரண்டொரு மரங்கள் கிழம்பி வானத்தை எட்டிப் பார்க்கின்றன. வளவிற்குள் செல்லாதவாறு, யாரோ விஷமிகள் உடைந்த பிசுங்கான் துண்டுகளை முன்புறம் பரவிப் போட்டிருக்கின்றார்கள். உள்ளே என்னத்தை வைத்திருப்பார்களோ? ஒருவேளை வருவது தெரிந்திருக்குமோ?

அமலனின் கைகள் நடுங்குகின்றன. உடல் சிலிர்க்கின்றது. முப்பத்தி இரண்டு வருட ஏக்கம், இன்று கடல் கடந்து வாசல்வரை வந்து நிற்கின்றது. அவனது பெற்றோருக்கு அதுவும் இல்லை.

“இதுதான் செளம்யா நான் பிறந்து வளந்த வீடு…” நா தழுதழுக்க மகளிடம் சொன்னான்.

“வந்தனாங்கள்… உள்ளே போய்ப் பார்ப்பம் அப்பா…”

“வேண்டாம் பிள்ளை… ஏதாவது மிதிவெடிகள் இருந்திட்டுதெண்டால் பிறகு சிக்கல்… திரும்பிப் போவம்.”

செளம்யா தனது மொபைல்போனால் உடைந்த வீட்டை வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்துக் கொண்டாள்.

“அப்பாவும் அம்மாவும் போய் ஒண்டா நில்லுங்கோ.”

பிறகு ஒரு ஷெல்பி எடுத்துக் கொண்டார்கள்.

ஓட்டோக்காரன் அவர்களைப் பார்த்தான்.

“தம்பி போவம்…”

“ஊரைவிட்டு ஓடிப் போகும்போது எல்லா வீடுகளும் நன்றாகத்தானே இருந்தன! ஆளில்லாத ஊருக்கு ஏன் `ஷெல்’ அடித்து எல்லா வீடுகளையும் உடைக்க வேண்டும்?” அமலன் தாரிணியைக் கேட்க ஓட்டோக்காரன் சிரித்தான்.

திரும்பி வந்து காருக்குள் ஏறினார்கள். ரஞ்சன் தனது மொபைல்போனிற்குள் மூழ்கியிருந்தான். செளம்யா தான் எடுத்த படங்களை ஒவ்வொன்றாக ரஞ்சனுக்குக் காட்டினாள். அவன் அதைப் பார்த்துவிட்டு, முகத்தைத் தொங்கப் போட்டவாறு ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

ஹோட்டலில் இறங்கும்போது மாலை ஐந்து மணியாகிவிட்டது. “எல்லாம் பார்த்தாயிற்று. நாளைக் காலை கொழும்புக்குப் புறப்படுவோம்” என்றான் அமலன்.

“இனி ஒன்றும் பார்ப்பதற்கு இல்லை என்றால், இன்று இரவே கொழும்பு போவதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்டான் ரஞ்சன்.

அப்படியொரு கேள்வியை ரஞ்சன் கேட்டது அவர்கள் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர்கள் வீடு போய்ப் பார்த்து வருவதற்குள் ஏதோ ஒன்று ரஞ்சனுக்கு நடந்திருக்கின்றது. அவனுக்கு யாழ்ப்பாணத்தில் அன்று தங்குவதற்கு பெரிதும் விருப்பம் இருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

“இல்லை ரஞ்சன். ஒரேயடியாக கார் ஓடுவது கூடாது. இரவு றெஸ்ற் எடுத்திட்டு அதிகாலை புறப்படுவோம்.” அமலன் சொன்னபோது, “ரஞ்சன் ஏதாவது அவசரமா?” எனக் கேட்டாள் தாரிணி.

அவன் இல்லை என்று தலையாட்டினான்.

“ரஞ்சன் இன்று இரவாவது எங்களுடன் உணவு சாப்பிடலாமே?” எனக் கேட்டபோது, அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.

*

மறுநாள் அதிகாலை புறப்பட்டுக் கொண்டார்கள். கொழும்பு வருவதற்குள் வவனியா, நீர்கொழும்பு என்ற இரு இடங்களில் மாத்திரம் உணவு அருந்துவதற்காக இறங்கிக் கொள்வதென முடிவு செய்தார்கள்.

நீர்கொழும்பில் அவர்கள் விரும்பிய ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்றபோது நேரம் மதியத்தைக் கடந்துவிட்டிருந்தது. அவர்கள் அரை மணி நேரத்திற்குள் சுடச்சுட உணவு சமைத்துத் தருவதாகச் சொன்னார்கள்.

அந்த வேளைக்குள் ரஞ்சன் சாப்பிட்டுவிட்டு திரும்பியிருந்தான். அவன் அந்த ஹோட்டலுக்கு வந்து ரொயிலற் பாவித்துவிட்டுத் திரும்பும்போது அமலன் அவனைக் கூப்பிட்டான்.

“ரஞ்சன் சாப்பிட்டாயிற்றா?”

“ஓம்.”

”அப்படியெண்டா ஒரு ரீ குடித்துவிட்டுப் போங்கள்.”

அதையும் மறுப்பது சரியில்லை என யோசித்த ரஞ்சன் உடன்பட்டான். ரஞ்சனுக்கு ஒரு ரீ ஓடர் செய்தார்கள். அந்த வேளையில் தனது மொபைல்போனைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சன், ஒரு படத்தை அமலனிடம் நீட்டி “எனது குழந்தை” என்றான்.

“நீர் மரி பண்ணிவிட்டீரா? சொல்லவேயில்லையே?”

ரஞ்சன் சிரித்தபடியே, “மூண்று வருடங்கள் ஆகிவிட்டன. இது எனது பெண் குழந்தை. வாற வியாழக்கிழமை குழந்தைக்கு இரண்டு வயதாகின்றது.” சொல்லியபடி படங்களை ஒவ்வொன்றாகத் தட்டிக் காட்டினான்.

“படத்தில் எனக்குப் பக்கத்தில் நிற்பவர் அப்பா. மனைவிக்குப் பக்கத்தில் நிற்பவர் அம்மா. அம்மாவுக்குப் பக்கத்தில் அவரின் தங்கை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்களுடன்தான் இருக்கின்றார். நுகேகொட சர்வதேச பாடசாலையில் அதிபராக இருக்கின்றார்.”

தனது பெற்றாரைப் பற்றிச் சொல்லாமல், அம்மாவின் தங்கையைப்பற்றி ஏன் சொல்லவேண்டும்? வியப்பில் ஆழ்ந்த அமலன் ரஞ்சனிடமிருந்து மொபைல்போனை வாங்கிக் கொண்டான். ரஞ்சனின் அம்மாவின் தங்கையை உற்று நோக்கினான். கை தேர்ந்த ஓவியனின் படைப்பாக வந்திருக்கவேண்டிய ஓவியம் ஒன்று, இன்று புகையில் தெரிந்த முகமாகத் தெரிகின்றது. அமலனின் கண்கள் சுருங்கி விரிகின்றன. அதன் ஆழக்குழிக்குள் ஏதோ மர்மமாய் அசைகின்றன. அந்தப் படத்தை விரித்து விரித்துப் பார்த்த அமலன், அவளின் வலதுபக்க உதடுகளின் முடிவிடத்தை நெருங்கியதும் திடுக்கிட்டு மொபைல்போனை ரஞ்சனிடம் குடுத்துவிட்டான்.

ரஞ்சன் அடுத்த படத்தை நகர்த்தினான். அதில் ரஞ்சனும் மனைவியும், மனைவியின் பெற்றோரும் நின்றார்கள்.

ரஞ்சனிடம் ரெலிபோனை வாங்கி தாரிணியும் செளம்யாவும் மாறி மாறி அந்தப் படங்களைப் பார்த்தார்கள்.

“அழகான சுட்டிப் பெண். என்ன பெயர்?”

“அனிக்கா” ரஞ்சன் சிரித்தான்.

ரஞ்சனின் தேநீரும், அவர்களின் சாப்பாடும் ஒன்றாக வந்தன. ரஞ்சன் தேநீரை அருந்திவிட்டு, “நீங்கள் ஆறுதலாக வாருங்கள். நான் காருக்குள் இருக்கின்றேன்” சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

“இஞ்சாருங்கோ… ரஞ்சனின்ரை பிள்ளைக்குக் கொஞ்சம் காசு குடுங்கோ. வாற கிழமை பேர்த்டே என்று சொன்னமாதிரிக் கிடந்துது” சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தாரிணி சொன்னாள்.

“ரஞ்சன் நல்ல பெடியன். நான் முதல்லேயே அவனுக்குக் கொஞ்சம் காசு குடுப்பம் எண்டுதான் யோசிச்சனான். அவன் வாங்குவானோ எண்டுதான் தயக்கமா இருந்துது. இப்ப குழந்தை ஒரு சாட்டா வந்திட்டுது”

கார் கொழும்பை வந்தடைந்தது. ஹோட்டலுக்கு முன்னால் பொதிகள் இறக்கப்பட்டன. பிரயாணக் களைப்பில் இருந்த தாரிணியும் செளம்யாவும் தமது பொதிகளைத் தூக்கிக்கொண்டார்கள்.

“மறக்காமல் காசைக் குடுத்திட்டு வாங்கோ” அமலனின் காதிற்குள் கிசுகிசுத்த தாரிணியும், செளம்யாவும், ரஞ்சனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். ஹோட்டலிற்குள் சென்று உள் இருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

அமலனுக்குக் களைப்பைவிட மேலானதொன்று ரஞ்சனிடம் கேட்பதற்கு இருந்தது. அந்தப் புகைப்படம் அப்படியே உயிர்பெற்று வந்து அமலனின் மனத்திரையில் நக்கூரமிட்டு நிற்கின்றது.

“ரஞ்சன்… உங்கள் உதவிக்கெல்லாம் மிச்சம் நன்றி.” சொல்லியபடியே ஒரு காகித உறை ஒன்றை அவனது கைக்குள் திணித்தான் அமலன்.

“இதென்ன இது?” மறுத்த ரஞ்சனிடம், “உங்கள் குழந்தையின் பிறந்தநாள் வருகின்றதல்லவா… அதை சிறப்பாகக் கொண்டாடுங்கள்” என்றான் அமலன்.

`ரஞ்சன்… உங்கள் அம்மாவின் தங்கையை நான் முன்னர் சந்தித்திருக்கின்றேன்’ சொல்ல நினைத்தான் அமலன். ஆனால் சொல்லவில்லை.

“ரஞ்சன்… என்ன கவலையா இருக்கின்றீர்கள்? என்னிடம் சொல்ல ஏதாவது இருக்கின்றதா?”

“இல்லையில்லை… ஒரே களைப்பு. அவ்வளவும் தான். இன்று படுத்து நாளை எழும்பினால் எல்லாம் சரிவந்திடும்.”

அவர்களிடையே ஒரு தற்காலிக அமைதி நிலவியது. நன்றியுடன் கை குலுக்கி இருவரும் விடைபெற்றுக் கொண்டார்கள்.

*

No comments:

Post a Comment