Wednesday, 23 July 2025

பௌருஷம் - எனக்குப் பிடித்த சிறுதை



எஸ்.ராஜகோபாலன்

ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் ‘கசகச” வென நின்ற ஜனச் சிதறல்லை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற அளுத்கம ரயிலிலிருந்து அவதியோடு இறங்கிய கும்பலின் பின்னால், ஓரிரு பொறுமைசாலிகளோடு இவனும் ஒருவனாக இறங்கினான்.

வாசலில் சிரத்தையில்லாமல் நின்றுகொண்டிருந்த காக்கிச் சட்டைக்காரனின் கையில், வலியச் சென்று தன் டிக்கட்டைத் திணித்துவிட்டு வெறுங்கைகளை வீசியபடி எதிர்ப்புற ரயில்வே லயினோடு ஒட்டிய பிளாட்போமுக்கு வந்தான்.

அது ஒரு சின்ன ஸ்டேசன். எதிரும் புதிருமாக ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஓடும் ‘டீசல்’களுக்காக நீண்டுகிடந்த தண்டவாளங்களுக்கிடையே அந்த ஸ்டேசன் இறுகப் பொருத்தப்பட்டதுபோல் கிடந்தது. இதன் முன்புற வாசலோடு சங்கமிக்கிற ஸ்டேசன் றோட்டால் வந்து அதன் அந்தலையிலுள்ள ஒரு மரப் பாலத்தில் ஏறி இந்தப்பக்கம் இறங்கிவிட்டால் ஸ்டேசனுக்குள் நுழைந்துவிடலாம். இது டிக்கட் எடுத்து பிரயாணம் செய்பவர்களுக்குரிய வழி. மற்றவகையான பேர்வழிகளின் வசதியை முன்னிட்டு ஸ்டேசனின் எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் இருந்தன.

ஸ்டேசனென்றால், எப்பொழுதும் சளசளவென்று கொட்டிக்கொண்டிருக்கும் அல்லது ஒருபோதுமே கொட்டாத தண்ணீர்க் குழாய், நாற்றமெடுக்கும் கக்கூஸ்கள், குதிரை றேஸ் பத்திரிகைகளிலேயே முழு நேர அக்கறை கொண்ட உத்தியோகத்தர்கள், வாங்குகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு என்னும் பொதுவான லட்சணங்களுக்கு முரணாகாமல் இருந்தது அது. ஸ்டேசனுக்கு மேற்கே அமைதியான கடற்பரப்பு. கரையோரமெங்கும் தாழைப் புதர்கள் - உள்ளே கொலை விழுந்தாலும் வெளியிலிருந்து தெரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அல்லது வெளியே பார்த்துப் பயப்படமுடியாத அளவுக்கு - மண்டிபோய்க் கிடந்தன. தண்டவாளத்தின் ஓரமாக நிலத்தை மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கவென்று இங்கிலீசுக்காரன் காலத்தில் போட்ட கருங்கற் பாறைகள் மண்ணிலே அரைகுறையாட்ப் புதையுண்டு கிடந்தன.

Friday, 18 July 2025

இரட்ஷகன் வருகிறான் - எனக்குப் பிடித்த சிறுகதை



பொ.கருணாகரமூர்த்தி

அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத முதலே அவள் கடிகாரம் துடிப்பதை நிறுத்திவிட்டிருந்தது, புதிய ‘செல் ‘ மாற்றவேண்டும். அவள் நடத்தும் மினி பாலர் பாடசாலைக்கும் அன்றுவிடுமுறை.

இந்நேரம் மீன் அங்காடியில் வியாபாரிகள் வந்து கூடத் தொடங்கியிருப்பார்கள். வர்ஷிணி அவர்களது நாலு வயதுக் குழந்தை அநாமிகாவுக்கு மடத்தலை [பேபி றஸ்க்] தேனீரில் நனைத்து ஊட்டுகையில் ‘வசீகரன் நேரத்துக்குப் போய் மீனைவாங்கி வந்தானாயின் இனிக் காலைப்பலகராமென்று எதையும் தேடி வினைக்கெடாமல் உள்ள விறகில் சமையலையே முடித்துவிடலாம் ‘ என்று எண்ணினாள். அவளின் மனதைப் புரிந்துவிட்டவன்போல தான் சீராக்கிக்கொண்டிருந்த நீரிறைக்கும் இயந்திரத்தை ஒரு பக்கமாகத்தள்ளி உரச்சாக்கொன்றால் மூடிவைத்துவிட்டு “வர்ஷி பையை எடும் நான்போய் மீன் வாங்கியாறன்” என்றுவிட்டு பற்பொடியை வாயிலிட்டுத் துலக்கிக்கொண்டு முகம் கழுவ கிணற்றடிக்கு ஓடிப்போன வசீகரனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சூரியக்கதிர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமால் அவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்து இருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்கள் வாழ்ந்திருந்த வீட்டின் திறப்பு அவர்களிடமே பத்திரமாக இருக்க வீடும் சுற்றுமதிலும் காணாமல் போயிருந்தன.

‘எம்மினமே ‘ வீட்டையும் , கூரையையும், மதிலையும் கல்லுக்கல்லாய் பெயர்த்துக் கொண்டுபோயிருந்தது. வீட்டிலுள்ள பொருட்கள் திருட்டுப்போவதென்பது எந்த நாட்டிலும் வழக்கந்தான்.

இங்கே தீராதபோரும் இழப்புக்களும் ஒரு வீட்டையே திருடிச்சென்று பிழைப்பதற்கு இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

Friday, 11 July 2025

சியாவோ எனும் அதிகாலை நட்சத்திரம்

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் குரல் வடிவம் (2025)



Tuesday, 8 July 2025

கதை சுப்பர் - குறுங்கதை

 சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார்.

“என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ. வாசிக்கக் குடுப்பம்.”

“அம்மாவுக்கு என்ன வயசாகின்றது?”

“எண்பத்தைஞ்சைத் தாண்டிவிட்டா…”

“நல்லது. இந்த வயசிலையும் நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா. குடுங்கோ வாசிக்கட்டும்.”

சில வாரங்கள் கழிந்திருக்கும். கமலாக்கா எனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென மனைவி தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

“கமலாக்காவின்ரை அம்மா… உங்களோடை கதைக்க வேணுமாம்.”

“தம்பீ… உம்முடைய கதைப்புத்தகம் அற்புதம். முதலாவது கதையை ஏழெட்டுத் தரம் வாசிச்சுப் போட்டன்.”

என் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கதையை ஒரு தடவை வாசிக்கவே பலரும் தயங்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்மணியா?

”ஏன் அம்மா… அவ்வளவு நல்லாவா இருக்கு.”

“அப்பிடியில்லைத் தம்பி… சுருட்டி வைச்ச பாயை விரிக்கிற மாதிரி இப்ப என்ரை நிலைமை இருக்கு…” எனக்கு அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அவரே விளக்கம் தந்தார்.

“இல்லை தம்பி… ஒரு பக்கமாக வாசிச்சுக்கொண்டு போக, மற்றப்பக்கமா மறந்து போகுது… இன்னுமொரு நாலைஞ்சு தரத்திலை முடிச்சுப் போடுவன் தம்பி…”

“அதுதான் நல்லது அம்மா... விடாமல் தொடர்ந்து வாசியுங்கோ” என்று நான் அவரை உற்சாகமூட்டினேன்.

சில பேர் தலையணை சைசில் புத்தகம் போட்டு உறங்கக் கொடுக்கின்றார்கள். நான், ஒருவர் ஆயுள் உள்ளவரை படிப்பதற்கு ஒரு புத்தகம் குடுத்திருக்கின்றேன்.

`நீங்கள் நிறையப் புத்தகங்கள் படிப்பதாக உங்கள் மகள் சொன்னாரே… இப்படித்தான் அந்தப் புத்தகங்களையும் படிக்கின்றீர்களா?’ என்ற கேள்வி, தொலைபேசி என் மனைவியின் கைக்கு மாறியபின்னர் தான் என் மூளைக்குள் வந்தது. அவருக்கு எண்பத்தைஞ்சில் கிடைத்த பாய் விரிக்கும் தொழில், எனக்கு அறுபதில் கிடைத்திருக்கின்றது.

Thursday, 3 July 2025

அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப்போட்டி - 2025 முடிவுகள் (புகலிடம்)

 

சிறுகதைப் போட்டி - புகலிடம்

01. வேடம் தாங்கல் - கே.எஸ். சுதாகர் - அவுஸ்ரேலியா

02. அதிர்ஸ்டக்காரரா? - ஸ்ரீரஞ்சனி- கனடா

03. தங்கமலர் - நவமகன் - நோர்வே

04. பட்டுக்கிளி- டானியல் ஜெயந்தன் - பிரான்ஸ்

05. கவிதைகளும் கருங்குழிகளும் - பொ.கருணாகரமூர்த்தி - ஜேர்மனி

06. பனித்துகள் - பவானி - நெதர்லாந்து

07. மரணம் - கௌசி -ஜேர்மனி

08. தரமான சம்பவமொன்று- பிரான்சிஸ் அமலதாஸ் - பிரான்ஸ்