Showing posts with label சிறுகதை.. Show all posts
Showing posts with label சிறுகதை.. Show all posts

Wednesday, 23 July 2014

ஆங்கொரு பொந்திடை வைத்த...


"அரை மணித்தியாலத்துக்குள்அலுவலை முடிச்சிட வேணும்"
முன்னாலே சைக்கிளில் போய்க்கொண்டிருந்த கபாலர் சொன்னார்.
"இப்ப ஐஞ்சேகால். ஐஞ்சரைக்கு முன்னம் வாசிகசாலையடிக்குப் போய் விடுவம். ஆறுமணி மட்டிலை திரும்பி விடவேணும்" ஏற்கனவே கதைத்துப் பேசி வந்திருந்த போதிலும் மீண்டும் ஞாபகமூட்டினார் கோபாலர். ஊரிலை இருக்கேக்கை பத்துப் பதினைந்து வீடுகள் இடைவெளி தூரத்திலை இருந்திருப்பம். இப்ப, இடம்பெயர்ந்த பின்பு இடைவெளி நெருக்கமாகி பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைந் திருக்கிறோம். கோபாலர் இதற்கு முன்பும் ஒருதடவை போய் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்திருக்கின்றார். அந்தத் துணிவு தந்த தைரியத்தில்தான் இன்று என்னையும் கூட்டிக் கொண்டு போகின்றார்.
"பாத்தியேடா தம்பி! மூண்டு கிழமைக்கு முதல் எவ்வளவு சொர்க்கபுரியா இருந்தது எங்கட ஊர். இப்ப நரகமாப் போச்சு."
சைக்கிள்கள் இரண்டும் பிரதான வீதியிலிருந்தும் விலகி, குறுகலான பாதையில் விரைந்து கொண்டிருந்தன. தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கோபாலரை முன்னாலே போகவிட்டு நான் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். மழை பெய்த தெருவில் சைக்கிள் ஓடும்போது ஏற்படும் 'சர சர' ஒலியைத் தவிர வேறு ஒரு சத்தமுமில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.
1. என்னுடையதும் தங்கைச்சியினதும் சேர்ட்டிபிக்கேட்டுகள்
2. அப்பா சொன்ன சுவாமிப் படங்கள்
3. கொத்து விறகு
4. தேங்காய்
5. புத்தகங்கள் (மு.வ இன் அகல்விளக்கு நாவல், ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்து, தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சமயக்கட்டுரைகள்)
இவ்வளவும் நான் எழுதியிருந்தவை. இவற்றிற்குக் கீழே எனது தங்கை புதிதாக ஒன்றைச் சிவப்பு மையினால் சேர்த்திருந்தாள்.
6. ரேணு போய்

Sunday, 20 July 2014

அசலும் நகலும்


1.
"ராகவி! விளக்கோடை விளையாடாமல் அண்ணாவுக்குப் பக்கத்திலை போய் இருந்து படி" வாசுகி குசினிக்குள் இருந்து சத்தம் போட்டாள்.
"அப்பா இருட்டுக்கை நிண்டு உடுப்பு மாத்துறார். அதுதான் விளக்கை எடுத்துக் கொண்டு போனனான்."
ஒரு குட்டி மேசை மீது புத்தகம் கொப்பிகளைப் பரப்பி வைத்துக் கொண்டு விளக்கின் வருகைக்காகக் காத்திருந்தான் ராகுலன். அவன் அடுத்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத இருக்கின்றான். ராகவி வகுப்பு ஆறு படிக்கின்றாள். இந்த ஒரு விளக்குத்தான் எல்லாத் தேவைகளுக்கும் இங்கு நகர்ந்து திரிகின்றது.
"அப்பா ஏனாம் பிந்தி வந்தவர்?" கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் படலை வரையும் சென்று படலைக் கொழுக்கியைப் பூட்டினாள் வாசுகி. மாரி காலம். நேரத்திற்கே இருட்டி விட்டது. ஊர் அவசர அவசரமாக அடங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே 'ஆமிக் காம்' ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
குளிர் நீரில் முகத்தைக் கழுவி விட்டு ஹோலிற்குள் இருந்த வாங்கில் வந்து இருந்தான் தேவன். அவன் நெஞ்சு இன்னமும் படபடத்த படியே இருந்தது. அவனுக்கு நேர் எதிராக 'அந்தப் படம்' சுவரில் தொங்கியது. மனம் கனத்தது.
வாசுகி இன்னமும் அவனுடன் முகம் குடுத்துக் கதைக்கவில்லை. "என்னையும் பிள்ளைகளையும் கனடாவுக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ!" என்று காலையும் சத்தம் போட்டிருந்தாள். "நான் என்ன செய்யிறது? அது அதுக்கும் ஒரு கொடுப்பனவு வேணும்." கடந்த பத்து வருடங்களாக இந்த உரையாடல் தொடர்கிறது.
வாசுகி சாப்பாட்டை தேவனுக்குப் பக்கத்தில் தொப்பென்று வைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். வெள்ளித்தட்டு ஓசையெழுப்பியது. தேவன் பிள்ளைகளைப் பார்த்தான். அவர்கள் இருவரும் படித்துக் கொண்டு இருந்தார்கள்.
"ராகுலனும் ராகவியும் சாப்பிட்டிட்டினமா?"
"ஓம்."

"அப்ப நீரும் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வாரும். சேர்ந்து சாப்பிடுவம்."
"நீங்கள் சாப்பிடுங்கோ. நான் பிறகு சாப்பிடுறன்."
"மாதக் கடைசி எண்டபடியாலை 'பாங்'கிலை வேலை கூடிப் போச்சு. ஊரடங்குக்குள்ளை வந்திட வேணுமெண்ட அவசரத்திலை சைக்கிள் உழக்கினதிலை களைச்சுப் போனன்."
"கனடாவிலை இருந்து ரெலிபோன் வந்தது ...." வாசுகி பேச்சை ஆரம்பிக்க "வாசுகி! வாசுகி!!" என்றபடி நெஞ்சைப் பொத்தினான் தேவன்.

Monday, 14 April 2014

இரண்டு சம்பவங்கள்



சம்பவம் ஒன்று---இன விரோதம்

மே மாதம் 1983.

பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம்.