
வடகோவை வரதராஜன்
இலண்டன் மாநகரத்தின் அமைதியான `தேம்ஸ்’ நதியில் பெளர்ணமி
காலத்தில் படகுச் சவாரி செய்திருக்கின்றேன். வாஷிங்ரனின் `பொடோமோ’ நதிக்கரையில் பூத்துக்குலுங்கும்
செர்ரி மரங்களுக்கிடையில் சில்வர் நைற் கவிதை படித்துக்கொண்டு நிலவில் நடந்திருக்கின்றேன்.
ஆனாலும் அங்கெல்லாம் என்மனம் வெறுமையுற்று ஏங்கிக் கொண்டே
இருக்கும். தேம்ஸ் நதியில் படகுச் சவாரி செய்யும் போதெல்லாம் இங்கே கோப்பாய் கடற்கரையில்
கைதடிப் பாலக் கட்டில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்துகொண்டு
மினிக்கிவிட்ட தங்கத்தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப்
பார்த்து,
”சிந்து நதியின்
மிசை நிலவினிலே
சேரநன் நாட்டிளம்
பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில்
பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி
வருவோம்”
என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்திருந்த நினைவுகள் என் நெஞ்சத்தில் இனிய உணர்வுகளை உதிர்த்துவிடும்.


