Saturday 12 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
                   


12.   சீருடையில் புதிய பொலிவு                  

யூனியன் கல்லூரியின் செழுமைக்கும் முழுமைக்கும் பூரண சீருடை தேவைப்பட்டது. பெண்பிள்ளைகள் முன்னரே வெள்ளைச் சீருடை அணிந்து ரை கட்டி வந்தார்கள். ஆனால் கால்களில் பாட்டா செருப்புக்கள். தோல் செருப்புக்கள். செருப்பில்லாதவர்கள். ஆண்கள் விரும்பிய வண்ண உடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு குருவிகூடக் கால்மேஸ் சப்பாத்து அணியவில்லை. விரும்பிய தலையலங்காரம். பறக்கலாம். சுருட்டிவிடலாம். ஆணும் பெண்ணுந்தான். திருவிழாக் காலக் கோலத்தில் வந்து போனார்கள்.
இத்தகைய மாணவர்கள் முழுமையான சீருடை அணிய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த பொழுது, சில ஆசிரியர்கள் தயக்கம் காட்டினார்கள். “வறிய மாணவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். முடியாத காரியம்” என்றனர். சப்பாத்து, கால்மேஸ் - அவற்றை நினைக்க முடியாதென்றனர். அந்த விடயத்தில் அதிரடியாக எதையும் செய்யவில்லை. எனது நினைவுக்கு எட்டிய வகையில் - நான் ஆறு மாதங்கள் முன்னறிவிப்புக் கொடுத்தேன். மாணவிகள் வெள்ளைச் சட்டை, வெள்ளைச் சப்பாத்து, வெள்ளைக் கால் மேஸ், நீல-பச்சைக் கோடிட்ட கழுத்துப்பட்டி அணிய வேண்டும். கனிஷ்ட மாணவர்கள் நீலக் கட்டைக் காற் சட்டையும் வெள்ளை சேட்டும் அணிய வேண்டும். உயர் வகுப்பு ஆண்கள் நீண்ட வெள்ளைக் காற் சட்டையும், வெள்ளை சேட்டும் அணிய வேண்டும். தொடர்ந்து இடையிடையே ஞாபகப்படுத்தி வந்தேன். இறுதியாக 1980 முதலாந் தவணை ஆரம்பத்தை எல்லையாகக் குறிப்பிட்டேன். பாட்டாக் காலணிக் கம்பனிக்காரரைக் கல்லூரிக்கு அழைத்து, சப்பாத்துக்களை மலிவாகக் கொள்வனவு செய்ய ஒழுங்கு செய்தேன். 

பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் வெள்ளைச் சீருடையில் சாரிசாரியாக யூனியன் கல்லூரி வளாகத்துள் அமைந்த தார் வீதிவழியே வெளியேறும் பொழுது, ஷன்டர்ஸ் மண்டபத்தில் அமைந்த அலுவலக வாசலில் நின்று பார்க்க வேண்டும். இந்த மண்டபம் வளாகத்துள் அமைந்த வீதி முடிவின் மேற்கில் அமைந்திருந்தது. அந்த மண்டப வாயிலில் நின்று கிழக்கே பார்த்தால் பிரதான வாயிலும், நெடுஞ்சாலையின் நடமாட்டமும் தெரியும். வீதியை நிறைத்துச் சீருடையில் மாணவர்கள் விரையும் காட்சியில் இலயித்து மனதின் சோர்வுகள் பறந்துவிடும். அழகு கீதம் இசைத்து அசையும் வெண்கோலக் காட்சி, பகல் முழுக்க உழைத்துக் களைத்த உள்ளத்துக்குச் சாமரை வீசுவது போலவிருக்கும்.

தொடர்ந்து வரும்...
                           








                                   

No comments:

Post a Comment