Friday 7 February 2020

கங்காருப் பாய்ச்சல்கள் (29) - சிண்டு முடிகின்றார்கள்

அவுஸ்திரேலியாவில் அதிகம் சிண்டு முடிகின்றவர்கள் யார் என்று பார்த்தால் – தம் வாழ்நாளில் ஒருபோதுமே உழைத்துச் சாப்பிடாதவர்கள் தான். அவர்களால் காரும் ஓட முடியாது. எப்போதுமே கணவனிடம் (அல்லது மனைவி / பிள்ளைகள்) தங்கி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது என்பதல்ல இதன் அர்த்தம். அவர்கள் குள்ளநரிக் கூட்டங்கள்.
அரசிடம், சென்ரர்லிங் போன்ற அமைப்புக்களிடம் இல்லாதனவெல்லாம் சொல்லி இலவசங்களைக் கறந்து விடுவார்கள். அங்கே பிடிக்குதென்பார். குனிந்தால் ஆகாயம் தெரியுமென்பார். நிமிர்ந்தால் பூமி தெரிகின்றது என்பார். அடுத்தவரை வெறித்துப் பார்த்துக் கொண்டும், ஏதாவது அவர்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டும் இருக்காவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது.
சமீபத்தில் ஒருவரைச் சந்தித்தேன். இலங்கையில் காதலனோடு ஒருவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஓட்டம் பிடித்தவர். என்னிடம் சொன்னார் – “இவள் காஞ்சி கேசவன்ரை மகனோடை ஓடிப் போயிட்டாளாமே!”
நானும் “ஆமே!” என்றேன்.
இன்னொருவர் சொன்னார் – “உவன் குமரேசன் றிரயர்ட் ஆயிட்டானாமே!” குமரேசனுக்கு 47 வயதுதான் ஆகின்றது. அவுஸ்திரேலியாவில் ஓய்வு பெறும் வயது 67 ஆக இருக்கையில், குமரேசனுக்கு ஒன்றில் லொட்டோ விழுந்திருக்க வேணும் அல்லது குமரேசன் வட்டிக்கு காசு குடுத்துக் குட்டியைப் பெருக்க வேணும்.


No comments:

Post a Comment