Tuesday 22 February 2022

`என்னைப் பார்க்க வருவீர்களா?’

ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம் கொள்ள விடாது. பாதி விழிகள் மூடியிருக்க, அருகேயிருந்த தனது கைபேசியைத் தடவி எடுத்தார் செந்தில்வாசன்.

ஏதாவது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றனவா எனப் பார்த்துவிட்டு முகப்புத்தகத்திற்குத் தாவினார்.

“ரீ வைச்சிருக்கிறன். ஆற முதல் குடியுங்கோ!” சொல்லிவிட்டு, பிள்ளைகளை ரியூசனுக்கு அனுப்புவதில் முனைந்தார் மனைவி உமா.

முகநூலைத் தட்டிக்கொண்டு வந்த செந்தில்வாசன் பேயறைந்தது போலானார். முகப்புத்தகத்தில் இருந்த பேய் ஒன்று, ஹோட்சிமின் சிற்றியின் பின்புலத்திலிருந்து அவரை எட்டிக் காலால் உதைத்தது. உதட்டுக்கு ஸ்ரோபரிக் கலரில் அள்ளி அப்பி `இந்தா கொழக் எண்டு விழப்போகின்றேன்’ எனத் துள்ளித்ததும்பி நிற்கும் லிப் ஸ்ரிக். நீண்டு, இடதும் வலதுமென தலை மயிரைத் தொட்டுவிடத் துடிக்கும் கண் புருவங்கள். கரு நாகமெனப் படமெடுத்தாடும் செயற்கையான இமைகள். உதட்டுக்குள் அடங்காமல் உருக்கொண்டு ஆடும் பற்கள்.