Sunday 27 August 2023

அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை – சிறுகதை

 

”அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.

அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.

அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இன்று காலைதான் வரதலிங்கமும் மனைவியும் சுவிஷிலிருந்து வந்திருந்தார்கள். வரதலிங்கம் ஒரு பக்திப்பழம். தனது கற்பித்தல் தவிர்ந்த நேரங்களில் - சுவிஷ் கோவில் ஒன்றில், அங்கீகரிக்கபடாத மந்திரங்கள் தெரியாத, மடைப்பள்ளி ஐயராக இருக்கின்றான். அவன் அம்மாவிற்காக சுவிஷில் இருந்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியிருந்தான். அம்மா வெள்ளை ஆடைகளை அணிவதில்லை. அதே நேரத்தில் மயிர்க்கூச்செறியும் ஆடைகளையும் தெரிவு செய்வதில்லை. மெல்லிய வர்ணங்கள்தான் அவர் விருப்பம். இதை ஏற்கனவே அறிந்திருந்த வரதலிங்கத்தின் மனைவி, அவருக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கி வந்து அசத்தியிருந்தாள். வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் பின்னாலே நின்று தலையை நீட்டி மடக்கி அம்மாவை எட்டிப் பார்த்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது. உயரம் கட்டை என்பதால் துள்ளித்துள்ளி ஓசை எழுப்பியபடி அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தாள். அவளின் தொங்கலைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் போய்விட்டது. அதுவே அம்மாவின் செய்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார் அம்மா.

Monday 21 August 2023

இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி முடிவுகள்


இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது யாதெனில்..********************************************************************

என் தம்பியும் துபாயில் வசிக்கும் எழுத்தாளருமான தேவா சுப்பையா , தமது தகப்பனாரின் நினைவில் இராம செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை என்று தொடங்கி எனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் ஒருங்கிணைப்பில் கடந்த வருடம் ஒரு சிறுகதை போட்டி நடத்தி 60,000 ரூபாய் பரிசு தந்தார். கதைகளை சுவடு பதிப்பகம் மூலம் நூலாக கொண்டுவந்தார்.விழாவும் நடந்தேறியது .அறிவீர்கள்.

இந்த ஆண்டும் இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி அறிவித்தோம். சரியாக..264 சிறுகதைகள் வந்து சேர்ந்தது. மூன்று நடுவர்களாக அனுபவம் மிக்க ..எழுத்தாளர் சுப்ரபாலன் அவர்களும் எழுத்தாளர் ரிஷபன் அவர்களும் எழுத்தாளர் கணேஷ்பாலா அவர்களும் பொறுப்பேற்று முதல் கட்ட தேர்வாக ஒவ்வொருவரும் பத்து கதைகளை தேர்வு செய்து தந்தனர்.

ஆக 30 கதைகளிலிருந்து அறிவித்தபடி பத்து கதைகளை தேர்வு செய்தோம் ஆனால் சில கதைகளை விட முடியாத படி அமைந்ததால் இன்னும் இருவர்க்கு பரிசு கொடுக்க தீர்மானித்தோம்

அதன் படி அமிர்தம் சூர்யாவாகிய நானும் அறக்கட்டளை நிறுவனர் தேவா சுப்பையாவும் சுவடு பதிப்பக நல்லு ஆர் லிங்கமும் 12 சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்தோம்.

12 எழுத்தாளர்களும் அவர்களின் சிறுகதை தலைப்புக்களும்
***********************************************************************
1-சேது – பெண்டுளம்
2-வானவன் - யப்பா
3-நெய்வேலி பாரதிகுமார்- 44
4-சாரா – பய
5-விஜி முருகநாதன் – முத்து பெரிப்பா
6-பிரபாதேவி – முள் முத்தம்
7-டேனியல் ராஜா –மூன்றாம் நாள் உயித்தெழும் விதை
8-கே.எஸ் சுதாகர் – வளரி
9-பாலஜோதி – அரிமாச்சி
10-சுப்ரா – காரண காரியங்கள்
11-லதானந்த் – கிரால்
12-இரா. சாரதி – பொது வழிச் சாலை

நல்லு ஆர் லிங்கம் தமது சுவடு பதிப்பகம் மூலம் சிறந்த முறையில் நூலாக அச்சிட்டு தருவார்.

தேவா சுப்பையா தமது அறக்கட்டளை ,மூலம் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் சிறந்த ஆளுமைகளை கொண்டு விழா நடத்தி வெளியிடுவார்.

அதில் வெற்றிப்பெற்ற எழுத்தாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பத்து நாள்களுக்குள் ஜி பே மூலம் பரிசு தொகை 5000 ரூபாய் அனுப்பி வைக்கப்படும்

இப்படிக்கு….
இராம செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைப்பாளர் ..அமிர்தம் சூர்யா