Thursday 27 January 2022

`மூத்த அகதி’ நாவல் குறித்தான சில கருத்துகள்

ஈழத்தின் நயினா தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருபவருமான வாசு முருகவேல் எழுதிய நாவல் `மூத்த அகதி’. `எழுத்து’ பிரசுரமாக வந்திருக்கும் இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் (2021) இரண்டாவது பரிசு பெற்றது.

இந்தக்கதை சொல்லப்படும் முறைமை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு சற்றே வித்தியாசமானது. தமிழ்ச் சினிமாவில் பல படங்கள் கதாநாயகன் அல்லது நாயகியைச் சுற்றி வருபவை. சில படங்களில் பல நாயகன்கள், நாயகிகள் இருப்பார்கள். பாலைவனச்சோலை, வானமே எல்லை, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள். இந்த நாவலும் பலரைப் பின்னிப் பிணைந்து, சம்பவக் கோர்வைகள் சேர்ந்து ஒரு முழுநாவலாகப் பரிணமித்திருக்கின்றது. நாவலை வாசித்த போது சினிமா ஏன் குறுக்கே வந்து விழுந்தது என்றால், சினிமாவைப் போலவே கடைசியில் சிவசிதம்பரம் என்றொரு பாத்திரம் வருகின்றது. இடையே ஒருதடவை வந்திருந்தாலும், கதையுடன் பெரிதும் ஒட்டாமல் வந்து கொலையுடன் முடிவடைகின்றது. அப்பொழுது நாவலில் ஒருபோதுமே பெய்திராத அடைமழை ஒன்று பொழிந்து தள்ளுகின்றது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஒரு அரசியல் கட்சிக்கூட்டத்தோடு ஆரம்பிக்கும் நாவல் இன்னொரு அரசியல் கூட்டத்தோடு முடிகின்றது. இன்னொரு விதமாகச் சொன்னால் ஒரு கலியாணவீட்டுடன் ஆரம்பித்து ஒரு இயற்கை மரணம், ஒரு கொலையுடன் முடிவடைகின்றது.

Tuesday 25 January 2022

எங்கே போகிறோம் - சிறுகதைத் தொகுப்பு குறித்தான ஆவூரான் சந்திரனின் அறிமுகம்


 தமிழர் திருநாள், அவுஸ்திரேலியா - 2022

அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கண்காட்சி / வாசகர்களின் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

Thursday 20 January 2022

`முள்ளும் மலரும்’

முள்ளும் மலரும் திரைப்படத்தை எண்பதுகளில் பார்த்திருந்தாலும், அதன் நாவல் வடிவத்தை நாற்பது வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வாசிக்கக் கிடைத்தது. நாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெருத்த வேறுபாடு இருந்ததைக் கண்டுகொள்ள முடிந்தது. திரைப்படம் ஒரு முள்ளுக் (காளி) கூட மலரும் என்பதைக் காட்டி, நாவலுக்கு ஒரு புது அர்த்தத்தைக் கற்பித்தது. ஆனால் நாவல்? ஒரு கொடியில்/செடியில் முள்ளும் மலரும் தனித்தே இருப்பதைக் காட்டுகின்றது. திரைப்படத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் நாவலை எத்தனை பேர் வாசித்திருப்பார்கள்? திரைப்படத்தைப் பார்த்து காளி (ரஜனிகாந்) மீது ரசனை வைத்திருந்தவர்கள், நாவலை வாசிக்காமல் இருப்பதே நல்லது.

முள்ளும் மலரும் கல்கி இதழ் நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் உமாசந்திரன் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல். பூர்ணம் ராமச்சந்திரன், தாய் உமா மீது கொண்ட பாசத்தினால், தனது புனைபெயரை உமாசந்திரன் என வைத்துக் கொண்டார். உமாசந்திரன் நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, தொழில் நிமித்தம் அங்கே சென்றார். ஒரு மாதம் வரையில் அங்கே தங்கியிருந்து, விஞ்சில் பல தடவைகள் சென்று பலரையும் சந்தித்து உரையாடியபோது கருக்கொண்டதுதான் `முள்ளும் மலரும்’ நாவல். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற பூர்ணம் விசுவநாதன், இவரது உடன் பிறந்த சகோதரர்.

விஞ்ச் ஒப்பரேட்டரான காளியண்ணன், அவனின் தங்கை வள்ளி, இவர்களின் அத்தை அஞ்சலை, பொறியியலாளரான குமரன், குமரனின் நண்பர்கள் வீரமணி கனகா(வீரமணியின் தங்கை), மங்கா, மங்காவின் தாய் வெள்ளாத்தாள், காளியண்ணனின் நண்பர்கள் முனியாண்டி மாயாண்டி – இவர்கள் நாவலின் முக்கிய பாத்திரங்கள்.

காளியண்ணன் முரடன், திமிர் பிடித்தவன், அதிகம் படிக்காவிடினும் தான் செய்வதே சரியானது என்று நம்புவன். தனது தங்கை வள்ளி மீது கொண்ட பாசம், அவளே வாழ்வு என்ற கோலம் அவனுடையது. குமரன் சுருளியாற்றுத்திட்டப் பொறியியலாளராக அங்கே வருகின்றான். ஏற்கனவே தன் இஷ்டப்படி உடும்புக்கொட்டகையில் இருந்து விஞ்ச் ட்ராலியை இயக்கிக் கொண்டிருந்த காளியண்ணனுக்கு, குமரனின் கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை. இருவரும் முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.

Friday 14 January 2022

வளர் காதல் இன்பம் - 30% தள்ளுபடி விலையில்

 












வளர் காதல் இன்பம்

சிங்கப்பூர் மாயா இலக்கியவட்டம் நடத்திய குறுநாவல் போட்டியில், எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் மூலம் இரண்டாவது பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது.

ஸீரோ டிகிரி – எழுத்து பிரசுரம் மூலம் வெளிவந்திருக்கும் இந் நாவல் தற்போது 30% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.

நாவல் வாங்குவதற்கான லிங்க் - VALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர் – Zero Degree Publishing 1