Thursday 28 May 2020

பாதுகை - எனக்குப் பிடித்த சிறுகதை


 டொமினிக் ஜீவா


உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால் பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான், முத்து முகம்மது.

வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப் போல, அவனைச் சுட்டிக்காட்டின.

சே! சே! காலிலே ஒரு செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதியில் வீசி எறியப்பட்டிருந்த சிகரட் துண்டொன்று தரையோடு தரையாக நசுங்கிக் கிடந்தது. அவன் திரும்பிப் பார்க்கும்பொழுது நிலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் குறள் சிகரெட், தனது கடைசிப் புகையைக் கக்கிக்கொண்டிருந்தது.

உள்ளங்காலைப் பதம்பார்த்துச் சுட்ட உஷ்ணத் தகிப்பு இன்னும் முற்றக நீங்காத நிலை.மனம் எரிந்தது.

ஒருகாலத்தில் செம்மா தெரு ஒழுங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டு இன்று மாநகர சபையாரின் ஜனநாயகக் கண்களுக்குத் தவறாகத் தெரிந்த சாதிப்பெயர் அகற்றப்பட்டு, அந்த ஒழுங்கையின் மடக்கு முனையில் பெரிய பள்ளிவாசலின் பெயரைத் தாங்கி, அறிவிப்புப் பலகையுடன் பிரபலப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் ஜும்ஆ மொஸ்க் லேன் வழியாக நடந்து, கஸ்தூரியார் வீதியின் முகப்பிற்கு வந்து, திரும்பிக் கொண்டிருந்த சமயம்தான் முத்து முகம்மது இப்படி நடனம் ஆடிக் காலைத் தூக்கி நிற்கும் சம்பவம் நிகழ்ந்தது.

Tuesday 26 May 2020

காடன் கண்டது - எனக்குப் பிடித்த சிறுகதை


 

பிரமிள் (தர்மு சிவராம்)

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.
பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம்.

வெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம் களிமண்ணு. கூடவே பாறைக் கல்லுத் தரையுமுண்டு. மரமில்லாம வெளிச்ச மாதிரி இருந்தாலும் கல்லுக் காட்டில் தடம் மாறிடும். மேற்கே மலைக் காட்டுக்குப் போற கோணமிருந்தா வழிகேட்டுக்கோ. சுக்கான் பயலைக் கேளு. என்னைக் கேளு.

பஸ்ஸ்டாப்பில் இட்லி சோடாக்கடேல பஸ்ஸுக்காரன் நிப்பான். அக்குளில் தோல் பட்டைப்பையிலே ரூவா சில்லறை இருக்கும். வெத்தலைச் சாறு வாய்க்குள்ளே குதகுதன்னு உப்பிக் கிட்டுக் கிடக்கும். இட்லி சோடாக்கடேல போலீஸூக்காரரும் நிப்பாரு. துண்ணுட்டுக் கணக்கில போடும்பாரு. ஆளோட்டம் பாத்துக்கிட்டு வெத்தலையிலே சுண்ணாம்பைப் போடுவாரு.

Sunday 24 May 2020

மீன்கள் - எனக்குப் பிடித்த சிறுகதை


 
தெளிவத்தை ஜோசப் 

தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான். 

மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்துகொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.
 

வெலவெலத்துப் போய் குனி
ந்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத் தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை விழுங்கியபடி விருட்டென்று எழுந்தான். 

Friday 22 May 2020

ஒரு கூடைக் கொழுந்து - எனக்குப் பிடித்த சிறுகதை


என்.எஸ்.எம்.இராமையா

“அக்கா எனக்கு எது நெரை?”

கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்துகொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப்பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள்.

Wednesday 20 May 2020

மரையாம் மொக்கு - எனக்குப் பிடித்த சிறுகதை


 

வீ.எம்.இஸ்மாயில் (மருதூர்க்கொத்தன்)

சுமக்க முடியாமல் சுமந்து வந்த கயிற்று வலைப்பந்தை கீழே போட்ட காத்துமுத்துவின் உடலெல்லாம் சொர்க்க சுகம் பரவியது.

வருஷக்கணக்காய் கடல் நீரில் குளித்து ஆனமட்டுக்கும் உப்பை உறுஞ்சிய கொண்டடி வலைக்காலொன்றின் தும்புக்கயிற்று வலையைச் சுற்றிய பெரும்பந்து அதைத் தோளில் சுமந்து தொத்தல் உடம்பு இறால் கருவாடாய் வளைய, கடற்கரைக் கொதிமணலில் கால்கள் புதைய, காய்ச்சிய இரும்புக் கோல்களாய்ச் சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கத் தூக்கி வந்தார்.

Saturday 16 May 2020

தொண்டு


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

வத்சலா கோயிலுக்குப் புறப்படும்போது, வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி வந்தாள்.

“வீட்டை மொப் பண்ணிப்போட்டு, பத்றூம் ரொயிலற்றைக் கிளீன் பண்ணிவிடு. மகளிட்டை 50 டொலர் குடுத்திருக்கிறேன். மறக்காமல்  வாங்கிக் கொண்டு போ.”
வேலைக்காரி ஆமாப் போட்டாள்.

வத்சலாவின் கோவில் தரிசனம் முடிந்தது.

“ஐயா… இண்டைக்கு நான் என்ன செய்யவேணும்?” ஐயரிடம் கேட்டாள் வத்சலா.

”எல்லாத்தையும் மொப் பண்ணிப்போட்டு, கோயில் ரொயிலற்றையும் ஒருக்கா சுத்தம் செய்து விடுங்கோ” ஐயர் சொன்னார்.

Friday 15 May 2020

புரியாத உறவு


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

நானும் ஃபாமும் நூஜ்ஜினும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம்.

ஃபாம் விவாகரத்துப் பெற்றவன். அவனது மனைவி, நூஜ்ஜினின் தங்கை.

அறிந்ததும் அதிசயித்தேன். ஏனென்றால் ஃபாமும் நூஜ்ஜினும் அந்த அளவிற்கு ஒட்டாக இருந்தார்கள். விசாரித்ததில், எந்த உறவும் தங்களுக்குள் இல்லை என்றார்கள்.

ஃபாமிற்கு சத்திரசிகிச்சை நடந்தது. பார்ப்பதற்காக அவனது வீட்டுக்குச் சென்றேன். அங்கே நூஜ்ஜின் உதவிக் கொண்டிருந்தான்.

“தங்கையை வெறுத்தாலும், ஃபாம் எனக்கு உறவுதான்” திரும்புகையில் வாசல்வரை வந்த நூஜ்ஜின் சொன்னான்.

Sunday 10 May 2020

‘பிக்பொக்கற்’


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பொதுவாக பேருந்தில் பயணிகள் பின்னாலே ஏறுவார்கள், முன்னாலே இறங்குவார்கள். 

அன்று திட்டமிட்டு - சிலர் முன்புறமாக ஏறி வரிசையைக் குழப்ப, பின்னாலே நின்ற ஒருவன், என் ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்த காசை அடித்துவிட்டான்.

அடுத்த தடவை, ஒரு பேப்பரை எட்டாக மடித்து பொக்கற்றினுள் வைத்துக் கொண்டேன். தரிப்பிடத்தில் நின்று அடிக்கடி அதைத் தடவிப் பார்த்தேன்.

காரியம் கைகூடியது. அன்றும் அதே விளையாட்டு. அந்தப் பேப்பருக்கும் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான் அவன்.

Thursday 7 May 2020

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

இளைஞர்கள் புடைசூழ, 75 வயது மனோகரன் பார்ட்டியில்  ஆடிக் கொண்டிருந்தார். சிறிது வெறி. தள்ளாட்டம்.

சமீபத்தில் அவுஸ்திரேலியா வந்திருந்த சொர்ணத்திடம், மனோகரனைக் காட்டி ரகசியம் சொன்னார் ஒரு பெண்.

மனோகரனும் சொர்ணமும் முன்னைய காதலர்கள்.

மனோகரனுக்கு ஐந்து பிள்ளைகள். மனைவி இறந்துவிட்டார்.

சொர்ணம் திருமணம் செய்யவில்லை. ஆடியவர்களை விலத்தியபடி உள்ளே போனார். மனோகரனின் கையைக் கோர்த்து ஆடினார். அவர்  கன்னத்தில் இதழ் பதித்தார். பழைய கடனை முடித்துவிட்ட திருப்தியில் வெளியேறினார்.

Tuesday 5 May 2020

லொட்டோ


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

எமது தொழிற்சாலை முகப்பில் ராஜாவின் பிரேதம் சூட்டுக் காயங்களுடன் கிடந்தது.

ராஜா நன்றாக வேலை செய்வான். வேலை இடத்தில் பல பேரைச் சேர்த்து ‘பவர் போல்’ போடுவான். ஆரம்பத்தில் இலக்கங்களைச் சரி பார்த்த நண்பர்கள், காலப் போக்கில் அவனில் நம்பிக்கை வைத்து அவனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்கள்.

மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள்,  ராஜா வேலை மாறி தொலைதூரம் போனான்.

அங்கே மாளிகை கட்டினான்.

இன்று கொலையுண்டு கிடக்கின்றான்.

Sunday 3 May 2020

சடங்கு சம்பிரதாயம்


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

“அக்கா…! மகள் பெரிசாயிட்டாள்!” கனடாவிலிருந்த தங்கை சொன்னாள்.

“அதுக்கேன் கவலை?” அவுஸ்திரேலியாவிலிருந்த அக்கா கேட்டாள்.

“அவளுக்கு ஒன்பது வயதுதானே ஆகுது. ஒருத்தருக்கும் சொல்லேல்லை. நீங்கள்தான் வந்து நடத்தித் தர வேணும்.”

அவுஸ்திரேலியாவிலிருந்து பத்தாயிரம் டொலர்கள் செலவழித்து அக்கா குடும்பத்தினர் கனடா சென்றார்கள்.

சடங்கு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், சகோதரன் ஜேர்மனியில் இறந்து விட்டான்.

கனடாவில் சாமத்தியச் சடங்கும், ஜெர்மனியில் செத்த வீடும் ஒரே நேரத்தில் நடந்தன.

Friday 1 May 2020

பெண்ணியம்!


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

கனகமணி ஆசிரியர், பெண்ணிய கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.

கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக மலையகத்திலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். கனகமணி இல்லாத சமயங்களில் அவர் அவளுடன் சில்மிஷம் புரிந்தார்.

“அம்மாவிடம் சொல்வேன்” என்பாள் அவள். பின்னர் வேலை பறிபோய்விடும் என்பதால் சொல்லுவதில்லை. எல்லை மீறியபோது ஒருநாள் போட்டுடைத்தாள்.

“இஞ்சை வரும் போது என்னிடம் கேட்டுவிட்டா வந்தாய்? நீயும் அவரும் பட்டது பாடு” என்றாள் கனகமணி.