Tuesday 7 December 2021

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்


 கமல் + ஸ்ரீதேவி + ரஜனி - மூன்று முடிச்சு

அப்போது (1978) நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்ணாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம் பார்க்கப் போய் விடுவேன். ஆனால் மூன்று முடிச்சு படத்தை அண்ணாவுடன் பஸ்சில் சென்று யாழ்ப்பாணத்தில் வின்ஸர் திஜேட்டரில் பார்த்தேன்.

Thursday 2 December 2021

Friday 12 November 2021

பித்தளைக் குடம் - குறும்கதை


இரவு ஒன்பது மணி. வெறியுடன் பாட்டும் கச்சேரியுமாக வந்த சிவநாதன் தனது பெற்றோரின் வீட்டுப்படலையின் முன்பாக அச்சொட்டாக சைக்கிளுடன் விழுந்தான்.

“நாதன்... என்ன நடந்தது? மனிசியோடை சண்டையா?” தாயார் கேட்டபடியே தலையில் பிடிக்க, தகப்பன் காலில் பிடித்தார். அவர்களால் சிவநாதனைத் தூக்கமுடியவில்லை.

“அதென்ணண்டு இந்தக் குடிகாரர்கள் எல்லாம் சரியாக தமது வீட்டு வாசலுக்கையே வந்து விழுகினம்?” கேட்டபடியே முன்வீட்டுக்காரர்கள் உதவினார்கள்.

Monday 8 November 2021

தூங்கும் பனிநீர்

 


இலக்கியவெளி உரையாடல் - பேராசிரியர் நா.சுலோசனா




Thursday 4 November 2021

ரகசிய பொலிஸ் : பிளாஷ்பேக்

 


அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

 காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

 அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

Friday 15 October 2021

`முதல் வகுப்பு பொதுத் தேர்வு’

`குட்டி இளவரசன்’ என்றொரு குறுநாவல் வந்தது. சிறுவர் நாவல் என்ற போதும் அது வளர்ந்தவர்களுக்குமானது. அதேபோல `முதல் வகுப்பு பொதுத் தேர்வு’ குறுநாவலையும் நான் வளர்ந்தோருக்கும் ஏற்றதெனப் பார்க்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அரசியல் நாவலாக வந்திருக்கின்றது. சிறுவர்கள் மீது ஆரம்பப் பாடசாலைகளிலேயே வரலாற்றுத் திரிபைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆசிரியர் சுவைபடச் சொல்லிச் செல்கின்றார்.

ஐந்தாம் வகுப்பு மாணவனான சுரேந்திரனைப் `பின்னிப் பெடல் எடுக்கும்’ ஆசிரியர் சிவப்பிரகாசமும், எதற்கும் சளைத்தவன் அல்ல என வரும் சுரேந்திரனும் சுவையான பாத்திரங்கள்.

பொதுத்தேர்வின் போது மாணவர்களின் ஆடைகள் களையப்பட்டு சோதிக்கப்படுகின்றது. உண்மையில் இங்கே ஆடை களையப்பட்டு அம்மணமாக்கப்படுபவர் ஆசிரியர் சிவப்பிரகாசம் தான்.

`தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? 1.சிவாஜி 2.சத்திரபதி சிவாஜி 3.மராட்டிய வீரன் சிவாஜி 4.சிவாஜி ராஜே போன்சலே’ – இந்தக் கேள்வி, 2018 ஆம் ஆண்டு தாஜ்மகாலை நேரில் சென்று பார்த்த என்னை நிலைதடுமாறச் செய்துவிட்டது.

இலங்கையில் நான் சிறுவனாக கல்வி பயின்றபோது, புதிய கல்வித்திட்டம் என்ற போர்வையில் அரசு, பல `தகிடு தத்தங்களை’ சமூகக்கல்வி என்ற பாடத்தில் திணித்திருந்தது. இங்கே முகலாயர்களின் சரித்திரத்தை மறைப்பதற்கு, ஆசிரியர் சிவப்பிரகாசம் சத்ரபதி சிவாஜியைக் கையில் எடுக்கின்றார்.

பதிவு: 35 + 10 + 3 + 2 ; வருகை: 35 + 8 + 1 + 1 என்ற தகவலில் ஆசிரியர் என்னத்தைச் சொல்ல வருகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. அத்துடன் `தாஜ்மகாலைக் கட்டியவர் யார்?’ என்ற கேள்விக்கான பதிலை நான்கு விடைகளிலிருந்து தெரிவு செய்து எழுத வேண்டுமா? அல்லது   தெரிவு செய்து, அவரைப்பற்றி எழுத வேண்டுமா? என்பதும் தெளிவாக இல்லை. அந்த ஒரு கேள்விக்கு மாத்திரம் மதிப்பெண்கள் 60 வழங்கப்படுவதும், விடை எழுதுவதற்கான நேரம் ஒன்றரை மணித்தியாலம் என்பதில் இருந்தும் – தாஜ்மகாலைக் கட்டியவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி எழுத வேண்டும் என்பதே சரியாக இருக்க வேண்டும்.

குறியீட்டுப் பாணியில் வரலாற்றுத் திணிப்பை முன் வைக்கின்ற இந்த நாவலுக்கு வரைந்திருக்கும் ஓவியங்கள் அற்புதமானவை. எளிமையான நடையில் சுவைபடச் சொல்லியிருக்கின்றார் அண்டனூர் சுரா.

 

Tuesday 5 October 2021

புத்தகங்கள் மத்தியில் வாழ்வு - பத்மநாப ஐயர்

 

இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது இணைய நூலகம் (noolaham.org) ஆகும். உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஒரு நொடிப்பொழுதில் இந்த நூலகத்தை அணுகிவிடலாம். இந்த நூலகம் திட்டத்தின் ஒரு முன்னோடியாகத் திகழ்பவர்---சமீபத்தில் அமுதவிழாக் கண்ட நாயகர்---பத்மநாப ஐயர்.

1981 ஆம் ஆண்டு இலங்கைப் பேரினவாத அரசு மேற்கொண்ட யாழ் பொதுநூலக எரிப்பில், ஏறக்குறைய ஒரு இலட்சம் புத்தகங்கள், ஆவணங்கள் எரியுண்டன. இந்தப் பண்பாட்டு அழிப்புத் தான் நூலகம் திட்டத்திற்கு வித்திட்டது.

Friday 1 October 2021

விடியல் சஞ்சிகை – புரட்டாதி இதழ்

 

`விடியல்’ புரட்டாதி (2021) இதழ் வாசிப்புக்குக் கிட்டியது. `சுட்டுத் தள்ளுங்கள்! எல்லாவற்றையும்..’ மொபைல் காமிரா காதலர் சேலம் லக்சுமிகாந்தன், `பேருருவின் புறவாசல்’ மகரந்தன் ஆகியோரை அதிதிகளாகக் கொண்ட அழகான அட்டைப்படத்துடன் வந்திருக்கின்றது.

லக்சுமிகாந்தன், டப்பாக் கமராவிலிருந்து மொபைல் கமரா வரை எதையும் விட்டுவைக்காத கலைஞர், கமராக்களின் நுணுக்கங்களை விவரித்துச் செல்லும் இவர் `இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்ற எழுத்தாளர் என்பது கூடுதல் செய்தி.

மகரந்தன் எழுதிய `பேருருவின் புறவாசல்’ – பேருரு தும்பியா யானையா மக்கள் கூட்டமா? விறுவிறுப்பாக பல தகவல்களைத் தந்துகொண்டே சென்றது.

ஆவணி இதழ் பக்கத்துக்குப் பக்கம் கைக்கூ கவிதைகளால் சுவை சேர்த்தது, எனில் புரட்டாதி இதழ் வாசகர்களின் சுவைமிகு கடிதங்களால் நிரம்பி வழிகின்றது.

`ஆலகால விஷம்’ – ஐந்தாவது முத்தம் – ஒரே `இச்’சில் போட்டுத் தள்ளும் கைங்கரியம். விஷக்கன்னி – உடம்பு பூரா விஷம். நகைச்சுவைப் பாணியில் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. ராஜ்ஜாவுக்கு வாழ்த்துகள்.

மு. முருகேஷ் எழுதிய `பின்னிருக்கையில் மனிதம்’ நல்ல படைப்பு. உண்மைக்கதை. அடுத்தவருக்கு உதவுதல் பற்றிய படைப்பு.

தவிர பல நேர்காணல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என சஞ்சிகையைச் சிறப்புற வைக்கின்றன. பக்க எண்ணிக்கைகளில் சஞ்சிகை சிறிதாயினும் - கடுகு சிறிது, காரம் பெரிது என உணர்த்தி நிற்கும் சஞ்சிகை.

ஒரு வட்டத்திற்குள் செயல்படாது இலக்கியப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில் விரிவதைப் பாராட்டுகின்றேன். `ஈழத்துச் சிறப்பிதழ்’ வருவதைத் தொடர்ந்து பல சிறப்பிதழ்கள் வெளிவர வாழ்த்துகள்.


Monday 27 September 2021

உலா - எனக்குப் பிடித்த கதை

 
.சட்டநாதன்

அம்மாவின் மடியில் தலைவைத்துஉடலைச் சீமெந்து தரையில் கிடத்திகால்மேல் கால் போட்டுப் பெரிய மனிசத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

சாப்பாடு ஆனதும், இப்படி ஒரு சொகுசும், படிப்பும் அவனுக்குத் தேவைப்படுவது அம்மாவுக்குத் தெரியும்.

அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது, வெளியே அழுத்தமான அந்தக் குரல் கேட்டது.

'மாமா...!'

மிக மெதுவாகக் கூறியவன், எழுந்துஉறைந்துபோய் உட்கார்ந்தும் கொண்டான்.

புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்தது. அம்மா வெளியே வந்து மாமாவுடன் கதைத்தாள்.

Wednesday 22 September 2021

நவகண்டம் - எனக்குப் பிடித்த கதை

  
ரஞ்சகுமார்

நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

"முப்பது ஆண்டுகள்' என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்று விடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துடன் தமிழர்களின் விடுதலைப்போரை அக்குவேறு ஆணி வேறாய் அலசுபவர்கள் "முப்பது ஆண்டுகால' சாதனைகளையும் வேதனைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.
அதைவிட முக்கியமானது, இந்த வீரநாயகன் கொல்லப்படும்போது அவனுக்கு முப்பது வயது நிறைந்திருந்தது. ஆகவே மேலும் முப்பது ஆண்டுகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது. அதாவது அறுபது ஆண்டுக்கால வரலாற்றினூடாக நாம் பயணம் செய்யப்போகிறோம். இந்த அழகிய சிறு மரகதக் தீவின் வரலாற்றை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து எழுதுபவர்கள், "அறுபது ஆண்டுக் காலம்' என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஆராய்வார்கள்.

Tuesday 14 September 2021

இலக்கியவெளி சஞ்சிகை - அறிமுக விழா அழைப்பிதழ்


நாள்: ஞாயிற்றுக்கிழமை 26-09-2021


இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 9.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30


வழி: ZOOM செயலி, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09


Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316

Tuesday 7 September 2021

தி.ஞானகிராமனும் சினிமாவும்

 


முருகா முருகா முருகா.....

வருவாய் மயில் மீதினிலே

வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும்

முருகா முருகா முருகா.....

இந்தப் பாடலை நான் சிறுவயதில், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் கேட்டிருக்கின்றேன். லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் மிகவும் அழகாக அதைப் பாடியிருந்தார். இற்றைவரைக்கும் இந்தப் பாடல் அந்த நிகழ்ச்சியில் தான் முதன்முதலாகப் பாடப்பட்டது என்றே நினைத்திருந்தேன். ஆனால் `நாலு வேலி நிலம்’ என்ற திரைப்படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராயன் ஏற்கனவே பாடியிருக்கின்றார். பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

Wednesday 1 September 2021

காணவில்லை - எனக்குப் பிடித்த கதை

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

அந்தி வேளை. ஒளி மரணத்தின் பிடிக்குள் மெல்ல மெல்ல இழுக்கப்பட, இருள் தன் சிறகுகளை விரித்துப் பரப்பிக் கொண்டிருந்தது.

அன்னமுத்தாச்சி, ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டியபடி நிலத்திலிருந்தவாறு சுட்டெடுத்த பனம்பழத்தை தோல் நீக்கி பினைந்து பனங்களி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.

சுமார் எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தளர்வுற்ற சிறிய உருவம், இளமையில் அழகியாக இருந்திருப்பாள் என்று ஊகிக்கவைக்கும் தோற்றம்.

“சஞ்சீவன், மேனை சஞ்சீவன், ஆட்டோவுக்குச் சொல்லிப்போட்டியோ?”

வீட்டின் உட்புறம் நோக்கி உரத்தகுரலிலே ஆச்சி கேட்டாள்.

ஓம் பாட்டி சொல்லிப்போட்டன், காலமை எட்டரை மணிக்கு வரும்உள்ளேயிருந்து சஞ்ஜீவனின் பதில் வருகிறது.

அடுத்த வருசம் இருக்கிறனோ இல்லையோ? இந்த வருசம் திருவிழாவிலை ஒரு நாளைக் கெண்டாலும் போய் முருகனைத் தரிசிச்சிட வேணும்.

அவளது இருப்பைப் பற்றி அவளுக்கிருக்கும், ஐயத்தின் காரணமாக

திருவிழாக் காலத்தில் முருகனைத் தரிசித்துத் தொழுவதற்காகவே இந்த மூவுருளிப் பயண ஏற்பாடு.

Friday 27 August 2021

எனக்கு வயது பதின்மூன்று - எனக்குப் பிடித்த கதை

 

..அப்துல் ஸமது

எனக்கு வயது பதின்மூன்று ஆகிறது. நான் சிக்கந்தர் போடியாரின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இதுவரை நான் அறிந்த உலகம் இந்தப் போடியாரின் வீடுதான்.

'என்னைப் பெத்தவ' என்று சொல்லிக்கொண்டு என் உம்மா மாதம் ஒருக்கா போடியார் ஊட்டுக்கு வருவா, போடியார் எனக்குரிய சம்பளம் பதினைந்து ரூபாவையும் அவவிடம் கொடுப்பார். அதுவும் சும்மா இல்லை. என் உம்மா வரும் நாள் பார்த்து, போடியார் ஊட்டில் ஏதாவது வேலை காத்திருக்கும். 'ஆசியா இந்தக் கொள்ளியைக் கொத்திவிடு, இந்தத் தேங்காய் பதினைந்தையும் உரித்துத் தந்திடு, நெல் மூண்டு மரைக்கால் கெடக்கு. அவிச்சுக் காயவையேன்' இப்படி ஏதாவது வேலை வாங்கிவிடுவா போடியார் பெண்சாதி. இப்படியெல்லாம் செய்தும் மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னம் கையில காசக் கொடுத்து என் தாயை அனுப்பிவிடுவாள் அந்தச் சீமாட்டி.

'நான் வாறன் மகள்!' என்று கூறிக்கொண்டு உம்மா போய்விடுவா. உம்மா இப்படி ஒரு வார்த்தை சொல்வதில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. அவ சொல்லாமல் போய்விட்டாற்கூட எனக்கு எவ்வித கவலையும் இல்லை. சிலவேளை இவதான் என்னைப் பெத்தவவா? ஒரு தாய் ஒரு மகள் மீது செலுத்தும் பாசம் இவ்வளவுதானா? என்ற வினாக்கள்கூட என் மனத்தில் எழும்.

Tuesday 24 August 2021

வாமனம் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மாத்தளை சோமு

ந்த ரெஸ்டாரென்டை விட்டு வெளியே வந்த வனிதா கொஞ்சம் வேகமாக நடை போட்டு பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாட்ப்புக்கு வந்தபோது, அங்கு எதுவுமே இல்லாததால் கடைசி பஸ் போய்விட்டது என்பது உறுதியாகியது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். மணி பதினொன்றரை. கடைசி பஸ் போய்த் தான் விட்டது. வக்கமாக அந்த பஸ்சில் போகும் சீனக் கிழவனையும் காணவில்லை. இனி என்ன செய்வது என்று யோசித்தாள். அப்பாவைக் காரோடு வரச் சொல்லலாமா என்று எண்ணியபோது, அவர் காரில் புறப்பட்டு இங்கே வரவே ஒரு மணியாகிவிடும் என்று தனக்குள் ஒரு கணக்கிட்டுப் பார்த்துவிட்டு வேறு முடிவு எடுக்க முயன்றாள். இனி ஒரே வழி பக்கத்தில் இருக்கின்ற ரயில்வே ஸ்டேசனுக்கு நடப்பத்துதான். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வீதியோரமாக நடந்தாள்.

Monday 2 August 2021

தமிழ் இலக்கியவானில் மிளிரும் நட்சத்திரம்

 வளர் காதல் இன்பம் - குறுநாவலுக்கான அணிந்துரை

குரு அரவிந்தன்

இலங்கையில் 1983 ஆண்டு நடந்த இனக்கலவரத்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த போரினாலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் தங்கள் சொந்த மண்ணிலேயே இடம் பெயர்ந்தார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் கலை, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட எங்களில் சிலர் மேற்கு நோக்கிக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தோம், அதேசமயம் சிலர் கிழக்குநோக்கி அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில், தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட நண்பர் கே.எஸ்.சுதாகரும் ஒருவராவார். புலம்பெயர் தமிழர்களின் இலக்கிய வளர்ச்சியில், தமிழ் இலக்கியவானில் கிழக்கில் இருந்து ஒளிதரும் நட்சத்திரமாக அவர் இன்று மிளிர்வது ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது.

Wednesday 28 July 2021

கிருஷ்ணன் தூது – எனக்குப் பிடித்த சிறுகதை



 


 


சாந்தன்


காலையில் வந்து கையெழுத்து வைக்கிறதற்கு அடுத்த வேலை

துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்டரை எடுத்து,

வரைபலகையையும் `ட்ராஃப்ரிங் மெஷினை'யும் அழுத்தித் துடைக்க வேண்டியிருக்கும். பியோன்மார் சாட்டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக் கூடிய இரண்டு தட்டுதல் போதாது. ஒரு சொட்டு ஊத்தை போதும் - படத்தைப் பாழாக்க.

வெள்ளிக்கிழமை உந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சேனாதிபதி கூப்பிட்டான். துடைத்து முடித்து `வாஷ்பேஸி'னில் கையையுங் கழுவிவிட்டு சேனாதியடிக்குப் போனபோது, அவன் அதைக் காட்டினான்.

“என்ன, உது?”

ஒரு அச்சு புறூஃப், சின்னத்துண்டு. `நலன் செய் சங்கம்' என்று போட்டு, எதிரே கந்தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண் கீழே. தலைவர். செயலாளர், பொருளாளர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப, சேனாதியின் பெயர். உப-செயலாளர் என்பதற்கு எதிரிலிருந்தது. எல்லாம் இரண்டு மொழிகளில் - தமிழிலில்லை.

சினமாய் வந்தது.

“லெற்றர் ஹெட்தானே?"

சேனாதி தலையாட்டினான்.

“இங்கிலீஷிலை போட்டிருக்கிறதைத் தமிழிலை போட்டால்

என்ன?"

Thursday 22 July 2021

ஞானம் ஆடி, 2021 (254வது இதழ்) சிறுகதைகள் குறித்து

17 -07 - 2021 அன்று இடம்பெற்ற ஞானம் -254 இதழ் தொடர்பான கருத்தாடலில் சிறுகதைகள் பற்றி  வழங்கிய கருத்துரை

இதழில் மொத்தம் 5 சிறுகதைகள் இடம்பெறுகின்றன.

வசந்தி தயாபரன் அவர்கள் எழுதிய `ஆழிசூழ் உலகு’,

வி.ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய `மரணப் படுக்கை’

முருகபூபதி அவர்கள் எழுதிய `எங்க ஊர் கோவூர்’

சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் எழுதிய `பொலிஸ் வருது’

மூதூர் முகைதீன் அவர்கள் எழுதிய `எதிர்பார்ப்பு’

இவற்றுள் ஆழிசூழ் உலகு, மரணப்படுக்கை, எதிர்பார்ப்பு என்ற 3 கதைகளும் நனவோடை உத்தியில் எழுதப்பட்டிருக்கின்றன. எங்க ஊர் கோவூர், பொலிஸ் வருது இரண்டும் நேரடியாக எழுதப்பட்டுள்ளன.

Tuesday 29 June 2021

இது எங்கே இருக்கு? - கங்காருப் பாய்ச்சல்கள் (38)

 

சில மாதங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இருக்கும் ஒரு பிளாஸ்ரிக் தொழிற்சாலைக்கு, QA (பொருட்களின் தரத்தை சரி பார்த்தல்) ஆக நானும், இயந்திரத்தை இயக்குவதற்காக ஒரு வெள்ளையினத்தவரும் புதிதாகச் சேர்ந்தோம். அங்கே  போனபின்னர் தான் ஒன்றை அவதானித்தோம். அது சீனர்களுக்குச் சொந்தமானது. ஏறத்தாழ 30 இயந்திரங்கள் இருந்தன. அவற்றில் 20 இற்கும் மேற்பட்டவை சீனாவில் இருந்து வந்தவை. மருந்துக்கும் அதில் ஆங்கில எழுத்துகள் இல்லை. பொறியியலாளர்களும், இயந்திரங்களை இயக்குபவர்களும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் சீனர்களாக இருக்க, தொழிலாளர்கள் வட இந்தியர்களாக இருந்தார்கள். பூமிப்படத்தில் மாத்திரமல்ல, இங்கேயும் அதே நிலைதான். சீனர்கள் மேலே இருந்தார்கள். ஒரு வெள்ளைக்காரனும் நானும் தான் பிறநாட்டைச் சார்ந்தவர்கள். 

Monday 21 June 2021

காட்டிடைவெளிப் பூந்தோட்டம் (Forest Glade Gardens) - தேசம்

விக்டோரியாவில் இருந்து வடமேற்குப் புறமாக 65 கி மீட்டர்கள் தூரத்தில் Mount Macedon இருக்கின்றது. இங்கேயிருக்கும் 14 ஏக்கர் நிலப்பரப்பில், நூறு வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு காட்டிடைவெளிப் பூந்தோட்டம் அமைந்திருக்கின்றது.

1941 இல் நியூட்டன் குடும்பத்தினருக்குச் சொந்தமாக இருந்த இந்நிலப்பரப்பு பின்னர் 1971 இல் சிறில் ஸ்ரோக்ஸ் என்பவருக்குக் கைமாறியது. அவரால் வளப்படுத்தப்பட பூந்தோட்டத்தைத்தான் இப்போது எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. 1983 இல் ஒருதடவை இது தீக்கிரையானதாக அறியக்கிடக்கின்றது. தற்போது Stokes Collection Limited என்னும் charity அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.


மேடு பள்ளங்கள், ஏற்ற இறக்கங்கள் கொண்ட - ஆங்கில, இத்தாலிய பாரம்பரியங்களைக் கொண்ட அற்புதமான பூந்தோட்டம். இடையிடையே நெடிய மரங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. பொன்சாய் மரங்கள் கொண்ட ஜப்பானியத்தோட்டம் ஒன்றையும் காணக்கூடியதாக உள்ளது.


மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும், கிரேக்கத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹிப்போகிரட்டீஸ்(கி.மு 460 – கி.மு 377) சிலை என்னை மிகவும் கவர்ந்தது.

நான்குவகைப் பருவகாலங்களிலும் பார்த்து மகிழக்கூடிய இந்த இடத்தின் பிரதான குறைபாடு, காரை நிறுத்துவதற்கு வசதியான தரிப்பிடம் இல்லாமை. வீதியோரத்தில் சரிவான நிலப்பரப்பையொட்டி நிறுத்தவேண்டியுள்ளது.




Monday 14 June 2021

சொல்லேர் உழவின் அறுவடை


அண்டனூர் சுரா அவர்களின் `சொல்லேர்’ என்ற சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சமீபத்தில் பாரதி புத்தகாலயம் பிரசுரித்திருக்கின்றது.

தமிழ் இலக்கியங்களின் மீதான ஆராய்ச்சிகள் பலதரப்பட்டவை. காலங்காலமாக நடந்து வருபவை. இங்கே சொற்கள் மீதான ஆராய்ச்சி நடக்கின்றது. அது நம்மை பலவகைப்பட்ட தேடலுக்கு உள்ளாக்குகின்றது.

சிறுகதை நாவல் கட்டுரை எனப் படைப்புகளைத் தந்துகொண்டிருந்த சுரா, இப்போது இன்னொரு தடத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றார். இதற்காக அவர் பலவகைப்பட்ட படைப்புகளினூடு உழவு நடத்தியிருக்கின்றார். ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கின்றன. அவை நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் புழங்கும் விதத்தில் வேறுபட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ஐம்பது சொற்களில் பாதிக்கும் மேற்பட்டவை எனக்குப் புதியனவாக இருந்தன. துவரி, ஆவரஞ்சி, ஒள்ளி, அந்தியோதயா, பொங்கோதம், பொருநன், படிறு, இப்படிப் பல. தெரிந்த சொற்கள் கூட, அவரின் தேடலினால் எனக்கு வியப்புக்காட்டி நிற்கின்றன. அவரின் `சொற்றுணை’ என்ற `என்னுரையில்’ தோழர் அ.குமரேசனுக்கு நன்றி தெரிவிக்கும் இடத்தில், `இளங்கன்று பயம் அறியாது, செம்மாந்துடன் சம்மதித்துவிட்டேன்’ என்கின்றார். அது என்ன செம்மாந்து? என்னுள் புதியதொரு தேடல் தொடங்குகின்றது.

`சொல் காலத்துடன் நேர்விகிதம் கொண்டது. சொல்லாய்வு என்பது சொல்லுடன் காலத்தையும் ஆய்தல்’ என்கின்றார் அண்டனூர் சுரா.

புத்தகம் முழுவதும் நிறையத் தகவல்கள். புதையலைக் கண்டு வியந்து போகின்றேன். அவரின் ஒவ்வொரு சொல்லின் தேடலின் போதும் பல விடயங்கள் எம்மை வந்தடைகின்றன. இதற்கான அவரது கடின உழைப்பை மெச்சுகின்றேன். சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது `சொல்லேர்’. புத்தகம் பற்றிய எனது கருத்தையும் அவரே தேடித் தந்துவிடுகின்றார். நறுந்தொகைப் பாடலான `தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை – தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே – ஆயினும்....

°

Friday 28 May 2021

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்

1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள்

நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை.


2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்

சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை.


3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்

முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு.


4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்

ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை.


5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்

சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு.

Thursday 20 May 2021

அர்ப்பணம், சமர்ப்பணம். – சிறுகதை

 

மேகலா, சிந்துவின் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் இன்று எதற்காக வந்திருக்கின்றாள் என்பது சிந்துவிற்குத் தெரியும். சமையலறை சென்று தனக்கும் மேகலாவிற்குமாக தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு, ஹோலிற்குள் நுழைந்தாள் சிந்து.

 “எங்கே முகிலன்?” சுற்றுமுற்றும் பார்த்தபடி மேகலா கேட்டாள்.

 “பின் வீட்டில் விளையாடப் போய்விட்டான்.”

 “மகன் ஐந்தாம் வகுப்புத்தானே படிக்கின்றான்!” மனதிற்குள் எதையோ கணக்கிட்டவாறு மேகலா கேட்டபோது, ‘ஆம்’ என்று தலையாட்டினாள் சிந்து.

சிந்துவும் மேகலாவும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஒன்றாகப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் நண்பர்கள். ஒரே மாதிரி உடுப்புப் போடுவதும், அலங்கரிப்பதும், ஒன்றாகவே பேரூந்தில் பயணிப்பதும், பட்டாம்பூச்சிகள் போல பறந்து திரிவதுமான வாழ்க்கை அப்போது.

“எடியேய் சிந்து, எத்தினை தரமடி நீ அப்ப கேசவனுக்குத் துப்பி இருப்பாய்… எல்லாத்தையும் சகித்துக் கொண்டு, துஷ்யந்த மகாராஜா சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு ஓடினமாதிரி, கடைசியில் கேசவன் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான் தானே!”

Monday 17 May 2021

விடியல் இலக்கிய இதழ் நடத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி 2021.


விடியல் இலக்கிய இதழ் நடத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி 2021.


கதைகள் சமூக நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கலாம். தயவு செய்து கொலை,ஆபாசம் வேண்டாம்.
1000 வார்த்தைகளுக்கு மிகாமல் யுனிகோட் எழுத்துருவில் ஏற்கனவே பிரசுரமாகாத,புதிய கதைகளை அனுப்ப வேண்டும். கதைப்பிரதியை தபாலிலும் சொந்தக் கற்பனையே என்ற உறுதிமொழியோடு கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
புத்தம்புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் வரவேற்கிறோம்.
முத்தான மூன்று பரிசுகள் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளுக்கும் பரிசு உண்டு.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

வாழ்த்துகள்
...!
கடைசி தேதி: 31.05.2021.
vidiyalilakkiyaithaz@gmail.com
ஆசிரியர்,
விடியல் இலக்கிய இதழ்,
32, வழுதாவூர் சாலை,
பேட்டையான்சத்திரம்,
தட்டாஞ்சாவடி அஞ்சல்,
புதுச்சேரி 605 009.