Friday, 27 June 2025

மீன் குஞ்சுகள் - எனக்குப் பிடித்த கதை



ச.முருகானந்தன்

வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்கத் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித்தம்பி. மார்கழி மாதப் பனிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரையில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீரசொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இந்தச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழிலும் தொடங்கிவிடும்.

நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.

“சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட தாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே” என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம். வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சிச் கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள் எல்லாம் கடலில் ஓடத் தொடங்கிவிடும். மீனவப் பெண்கன் குழந்தைகளுக்குக் கூட சிறுசிறு தொழில்கள் கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள்கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்.

Friday, 20 June 2025

ஐம்பது டொலர் பெண்ணே - எனக்குப் பிடித்த கதை

 
நா.பார்த்திபன்


அவளைக் கண்டேன்.

கட்டைக் கரிய கூந்தல்.

வட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள்.

அரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை.

அவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய பைகள் காட்டின. இரண்டு, மூன்று சிகரெட் பற்ற, சிலது ஓடிப்போய் பிடித்து பெரியபிள்ளைகள் விளையாட்டு விளையாட, ஆங்காங்கே ஒன்றை ஒன்று அணைத்து உதடுகளால் காதலித்துக் கொண்டிருந்தார்கள்.

இவள் ஒருவள்தான் மாநிறமும், கறுப்புக் கூந்தலும். ஆனால் எல்லோருடனும் சகஜமாய் இருந்தாள். என்ன கதைக்கிறாள் என்பதைத் தான் என்னால் கேட்க முடியவில்லை. தூரம்.

யார் அவள்?

ஆசியாவாத்தானிருக்கும்!

இலங்கையோ? இந்தியாவோ?

இலங்கையாய்தானிருக்கும் !

தமிழோ? சிங்களமோ?

தமிழாய்த்தானிருக்கும்!!

Friday, 6 June 2025

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025 முடிவுகள்



இது அந்திமழை இதழ் நடத்துகிற மூன்றாவது சிறுகதைப் போட்டி. 428 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தெல்லாம் சிறுகதைகள் வந்திருந்தன. கலந்துகொண்ட அனைவருக்கும் முதலில் நன்றி. இந்த எழுத்தார்வம் மேலும் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.