Monday, 9 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 20 - கோப்பி  கொடுத்த  ஊத்தைவாளிகள்




             நேரம் நள்ளிரவு. 'அந்த நெட்டை வடுவாதான் நதியாவைக் கடத்தியிருப்பான். நீ உடனே இங்கே வாஎன்று கில்லாடி கூறிய சொற்களைக் கேட்ட சால்வை மூத்தானின் குறும் மயிர்கள் ஆத்திரத்தில் நிமிர்ந்து எழுந்து நின்று சதுராடின. அவனுக்கு அந்த உயர்ந்த கூட்டத்தின் மீது இப்போதும் காய்ச்சல். காரணம் அவர்கள் லண்டனிலும் யாழ்ப்பாண மேலாண்மையைக் காட்டுவதாக அவன் சொல்கிறான்.

            மூத்தானுக்கு அருமையான சந்தர்ப்பம். அதை அவன் தவறவிட விரும்பவில்லை. பிஸ்ரலையும் சன்னங்களையும் எடுத்துக் கொண்டு ஆற்றுப் பறக்கப் புறப்பட்டான்.

            கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன் இருவரையும் அழைத்துக் கொண்டு மூத்தான் அரை மணி நேரத்துள் கில்லாடி வீடு போய்ச் சேர்ந்தான்.

Saturday, 7 November 2015

வெங்கட் சாமிநாதனனுடன்…


நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்…

பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம்.

ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது.

நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது..

Monday, 2 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 19 - போதும் ஆசாமி சகவாசம்

           
            இந்தியாவுக்கு நதியா சென்ற விமானம் முப்பத்தையாயிரம் அடி உயரத்தில் இன்னமும் பறந்து கொண்டிருந்தது. லண்டனில் நள்ளிரவுக்கு இன்னும் ஒரு மணிநேரமே இருந்தது.

            அயர்லாந்து வியாபாரப் பயணத்தை முடித்தபின், சூட்டியின் கார், லண்டன் மாநகர எல்லைக்குள் வந்துகொண்டு இருந்தது. அந்தக் காரின் பின் ஆசனத்தில் கில்லாடி தூக்கத்தில், 'அன்பே என் சின்ன வடிவு
ஆருயிரே என் தங்கமே
ஓடிவா என் மனக் குயிலே' என்று வாய்புசத்தி நதியாவோடு சரசமாடிக் கொண்டிருந்தான்.

            வீட்டை அண்மித்ததும் கூட்டாளிகள் கில்லாடியைத் தட்டி எழுப்பிவிட்டனர். அவன் காரிலிருந்து இறங்க முன்னரே தனது சகபாடிகளின் பங்கைக் கணக்கிட்டான்.
            கில்லாடி இலாபத்தில் 8,000 ஸ்ரேலிங் பவுணைத் தனக்கு ஒதுக்கினான். அவனோடு சேர்ந்து சென்ற கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன், சால்வை மூத்தான் ஆகியோருக்குத் தலைக்கு 400 ஸ்ரேலிங் பவுண் கொடுத்தான். அதனைக் கண்டதும் குகனின் சின்னோட்டி மூக்குச் சினந்து விரிந்து சுருங்கியது. மூத்தானின் உச்சந்தலைக் குள்ள மயிர் ஆத்திரத்தில் எழுந்து நின்று காரிலிருந்து இறங்கிய கில்லாடியை வெறித்துப் பார்த்தது. அவர்கள் மத்தியில் அதுவரை இருந்து வந்த பாதாள உலக தர்ம நியதிப்படி, கில்லாடி தங்களுக்குக் குறைந்தது ஆளுக்கு 1300 ஸ்ரேலிங் பவுணாவது தந்திருக்க வேண்டும் என்று மூவரும் கில்லாடிக்குக் கேட்கவேண்டும் என்ற மனக் குமுறலோடு பேசியது காரில் இருந்து இறங்கி போய்க்கொண்டிருந்த கில்லாடியின் காதில் விழுந்தது

Sunday, 1 November 2015

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி


 அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.