Saturday, 2 November 2019

மாலை – குறும்கதை



மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப் புறப்பட்டான்.

ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த திசை நோக்கி ஆனந்தனும் மல்லிகாவும் நடந்தார்கள்

”அம்மா… ஒரு முழம் பூ வாங்கிக்கோம்மா… உங்களுக்கு நல்ல அழகாக இருக்கும்” சொல்லிய திசை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா. பத்து வயது மதிக்கக்கூடிய சிறுபெண்.
அப்படியே உருக்கி வார்த்த அம்மன் விக்கிரகம் போல அழகாக இருந்தாள். மல்லிகாவின் மனம் ஏக்கம் கொண்டது. ஒரு பிள்ளைக்காக எத்தனை வருடங்கள் காத்திருக்கின்றாள். எத்தனை கோவில்கள் ஏறி இறங்கிவிட்டாள். தமக்கான குறையினை அம்மனிடம் முறையிட வந்தவர்களல்லவா அவர்கள்.

Friday, 18 October 2019

குரு அரவிந்தனின் `சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல்



(ஆனந்தவிகடனில் பல சிறுகதைகளை எழுதியவரும், ஆனந்தவிகடன் பவளவிழா சிறப்பிதழில் பரிசுபெற்ற ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ என்ற குறுநாவலைத் தந்தவருமான குரு அரவிந்தனின் சமீபத்திய நாவல் `சொல்லடி உன் மனம் கல்லோடி’. இவரின் ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ நாவலுக்கு தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர், ஓவியங்கள் வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.)

குரு அரவிந்தனின் `சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல் வாசித்தேன். மணிமேகலைப் பிரசுரமாக இந்த ஆண்டு (2019) வெளிவந்த இந்த நாவலை வாசிக்கும் தோறும் பாரதியின் `நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற கவிதை வரிகள் தான் நினைவிற்கு வந்து போயின.

மெல்ல மெல்ல வாசகரை உள் இழுக்கும் உத்தி, ஆரம்ப அத்தியாயங்களிலேயே தெரிகின்றது.

Thursday, 10 October 2019

சினிமாவிற்குப் போன கார்


“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த  ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது.

சாந்தன் சுற்றுலாப் பயணிகளை தனது காரில் சுற்றிக் காண்பிப்பவன். கிலோமீட்டருக்கு 15 ரூபாய்கள் வீதமும், ஒரு நாளைக்கு குறைந்தது நானூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்வீர்களாயின் – சாரதிக்கான உதவித்தொகை 300 ரூபாய்களும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். காருக்கான எரிபொருள், மற்றும் அவனுக்கான சாப்பாடு தங்குமிட வசதிகளை அவனே பார்த்துக் கொள்வான். சராசரியாக நாளொன்றிற்கு 5000 ரூபாய்கள் உழைப்பான்

“சார்… இந்தத் திரைப்படம் மூலம் நீங்கள் பேரும் புகழும் அடைந்துவிடுவீர்கள். கிலோமீட்டருக்கு உங்களுக்கு நாங்கள் 50 ரூபாய்கள் வீதம் தருவோம். சாப்பாடு இலவசம். என்ன சொல்கின்றீர்கள்?”

Tuesday, 1 October 2019

பன்முக எழுத்தாளர் தேவகி கருணாகரன்


ஞானம் சஞ்சிகை - அட்டைப்பட அதிதி

பெண் எழுத்தாளர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் எழுதுபவர்கள் மிகக் குறைவு. அத்தகைய பாண்டித்தியம் பெற்றவர் தேவகி கருணாகரன். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். சுண்டிக்குழி மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வி பயின்றவர். தந்தையாரின் தொழில் நிமித்தம் இலங்கையின் பல்வேறு பாகங்களில் வாழ்ந்திருக்கின்றார். அதனால் சிங்களமொழியிலும் ஓரளவிற்குப் பரிச்சயமானவர். தற்போது அவுஸ்திரேலியா - சிட்னியில் வாழ்ந்து வருகின்றார்.

இவரது கணவர் டாக்டர் கருணாகரனின் பணி நிமிர்த்தம் முதலில் நைஜீரியாவிற்கு 1981 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். அங்கே இவர் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்போது 35 வருடங்கள் ஆகிவிட்டன. இவரது கணவர் அவுஸ்திரேலியாவில் Oral & Maxillo Facial Surgery என்கின்ற பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காலங்களில், இவர் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு இலாகாவில் பணிபுரிந்தார். 15 வருடங்கள் உழைப்பின் பின்னர் தற்போது ஓய்வு நிலையில் இருக்கின்றார்.