Tuesday, 6 September 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (6/6)

 

அதிகாரம் 6

ஒரு சிறு குச்சுவீடு. அங்கு ஏற்கனவே படுத்த படுக்கையாகிக் கிடக்கும் டேவிட்டின் தாயார். அவளைப் பராமரிப்பதற்காக தினமும் அங்கு வந்து போன பெண், பத்மினி போன மறுநாளில் இருந்து வருவதை நிறுத்திவிட்டாள்.

டேவிட்டின் வயது முதிர்ந்த தாயார் எழும்பி நடக்க முடியாதவராக இருந்தார். அவருக்கு உணவு மருந்து மாத்திரைகள் கொடுத்து, மலம் கழுவி, உடுபுடவைகள் கழுவிப் பராமரித்தாள் பத்மினி. அடிக்கடி சிறுநீர் வாடை வீசும் துணிகளைத் துவைப்பதும், உலரவிட்டு மடித்து வைப்பதிலும் பத்மினியின் காலம் கழிந்தது. டேவிட் தனது கடந்தகாலம் பற்றி எதையுமே கேட்காதது அவளுக்கு அந்தச் சுமையைக் காவும் சக்தியைக் கொடுத்தது.

மாலை வேளைகளில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வருவாள். எப்பொழுதாவது டேவிட்டிற்கு நேரம் இருந்தால், சினிமா பார்ப்பாள். அந்த வேளைகளில் முன்பு வந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவிற்குத் துணையாக வந்து நிற்பார்.

Thursday, 1 September 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (5/6)

 
அதிகாரம் 5

“விவாகரத்து முடிஞ்சு அடுத்த கிழமையே கலியாணம் கட்டிட்டான். எங்கையெண்டு அலைஞ்சு கொண்டிருந்திருக்கிறான்  றாஸ்கல்சாய்வனைக் கட்டிலில் இருந்தபடியே தொணதொணத்தார் நேசம்.

“உவனென்ன வாத்தி. அதுவும் தோட்டக்காட்டுப் பள்ளிக்கூடத்திலை... மலைநாட்டிலை எத்தினை பெம்பிளப்பிளையள் மலையிலை இருந்து விழுந்து குதிச்சு செத்துதுகளோ? பொறு உவனுக்குச் செய்யிறன் வேலைமனதுக்குள் கறுவிக் கொண்டார்.

பத்மினியின் அக்கா விமலா எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்தார். இந்தத்தடவை வரும்போது நான்கு பேராக வந்தார்கள். இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.

அவர்கள் வந்திருந்த காலத்தில் நாட்டுப்பிரச்சினைகள் உக்கிரமடைந்து இருந்தன. இந்திய அமைதிப்படை வருவதற்கு சற்று முந்திய மாதங்கள். அவர்களால் வடபகுதிக்கு செல்ல முடியாமல் இருந்தது. கொழும்பிலே சிறிது காலம் இருந்தார்கள். விமலாவின் சித்தப்பா ஒருவர் கொழும்பில் இருந்தார். அவர்களின் குடும்பத்துடன் பொழுது கழிந்தது.

ஒருமுறை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு மனிதருடன் சித்தப்பா வந்தார். வந்தவர் தன்னை டேவிட் என அறிமுகம் செய்து கொண்டார். கிறிஸ்தவரான அவர் பழகுவதற்கு மிகவும் நல்லவராக இருந்தார். இந்திய வம்சாவளியைச் சார்ந்த அவர், தனக்கு பெற்றார் உற்றார் என்று ஒருவரும் இல்லை என்று சொல்லிக் கொண்டார். நண்பர்களுடன் கொட்டஹேனாவில் வசித்து வருவதாகச் சொன்னார்.

Thursday, 25 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (4/6)

 
1983 ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும் மேலும் எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார். யூலையில் பெரும் கலவரமாக வெடித்த அது பல தமிழர்களைக் காவு கொண்டது.

சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் இடையில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைக்க பல மாதங்கள் எடுத்தன. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை, அவர்களைத் தவிர மற்ற எல்லாரும் விரும்பியிருந்தார்கள். இதனால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க பல மாதங்கள் எடுத்தன.

பொத்தி வைக்கப்பட்டிருந்த இரகசியம் மெல்ல கசியத் தொடங்கியது. மலையகத்தில் இவர்களின் பிரிவைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்மினியை அங்கு கூட்டிச் செல்லாததற்கு நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லி வந்தான் சந்திரமோகன். நாட்டுபிரச்சினைகளையும் அதற்குக் காரணமாக இழுத்தான்.

சந்திரமோகனுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து சாரதா பித்துப் பிடித்தவள் போலானாள். எதையும் எவரையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தினமும் கோவிலுக்குச் சென்று சுவாமியை முழுசிப் பார்த்தாள். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்த அன்று காலைகூட கோவிலில் போய் இருந்துவிட்டாள். பின்னர் அவளை பலாத்காரமாகவே கோவிலில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது.

Friday, 19 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (3/6)



 








அதிகாரம் 3

கணபதிப்பிள்ளையும் நேசமும் தமது இரண்டு பிள்ளைகளான விமலாவையும் பத்மினியையும் நன்றாகவே வளர்த்திருந்தார்கள். ஒழுக்கமாகவும், கல்வியில் குறை விளங்காமலும், சங்கீதம் வீணை போன்ற இதர துறைகளில் விற்பன்னர்களாகவும் ஆக்கியிருந்தார்கள். பாடசாலை சென்று திரும்பும்போதெல்லாம் குனிந்த தலை நிமிர மாட்டார்கள். எதிரே யார் வந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. வளர்ந்த பின்னர் கூட அவர்களின் நட்பு ஒரு வட்டத்திற்குள்தான் இருந்தது. அப்படி வளர்ந்திருந்த பத்மினிக்கு சந்திரமோகனின் கேள்வி ஆச்சரியத்தைத் தந்தது. கோபம் கொள்ள வைத்தது.

பத்மினி படுக்கையில் இருந்து சீறி எழுந்தாள். பாம்பானாள். ஆடிப் படமெடுத்து எல்லாவற்றையும் தட்டி விழுத்தி நொருக்கினாள். மூச்சு, கொத்தப்போகும் நாகம் போல் சீறிப் பாய்ந்தது. தலையணையால் ஆத்திரம் தீரும் வரைக்கும் சந்திரமோகனை விளாசினாள். தீனமான குரலில் கத்திக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

மாப்பிள்ளை இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பத்மினி எழுந்து போனபின், அடிமேல் அடி வைத்து நடந்து, கதவைச் சாத்திவிட்டு அடங்கி ஒடுங்கி நின்றார். உடல் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இதை அவன் மாத்திரமல்ல, வீட்டில் இருந்த எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.