Friday, 21 March 2025

விளக்கேற்றுபவன் - ஒலி வடிவம்

 


நன்றி : சொல்வனம், திருமதி சரஸ்வதி தியாகராஜன்

சொல்வனம் (Solvanam) இலக்கிய இதழ், பிப்ரவரி 23, 2025 இல் வெளிவந்த `விளக்கேற்றுபவன்’ என்ற சிறுகதையை திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் தனது அருமையான குரலில் பதிவு செய்திருக்கின்றார்.

Friday, 14 March 2025

விளக்கேற்றுபவன் – சிறுகதை



”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார்.

நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம்.

அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார்.

நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் சீற்றில் இருந்தார். அமரசிங்கம் அண்ணைக்கும் சிவராசன் அண்ணையைத் தெரிந்திருந்ததால், அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டு வந்தார் அப்பா.

”சிவராசன் குடிக்கிறவன் தான். ஆனால் ஒருநாளும் வேலைக்குப் போகும்போது குடிப்பவன் அல்ல. வேலைக்கும் நல்ல ஒழுங்கு. எனக்கென்னவோ சந்தேகமாத் தான் கிடக்கு”

“சந்தேகம் எண்டா?” அமரசிங்கம் அண்ணை கேட்க,