Monday 22 April 2024

நல்ல இலக்கியங்கள் எப்படி உருவாகும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (43)

 
பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம் போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின் இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள். நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால் உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில் விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன.

°

நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே!

இதில் நாம் ஏன் இன்னொரு எழுத்தாளரின் விமர்சனத்தைப் பெரிது பண்ண வேண்டும்? எழுத்தாளர் என்பவர் மக்கள் கூட்டத்தினரின் ஒர் அங்கத்தவரே தவிர வாசகர் கூட்டத்தைப் பிரதிபலிப்பவர் அல்லவே.

வாசகப் பரப்பிலிருந்து வரும் விமர்சனத்தையே நாம் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுவும் ஒன்றிரண்டு விமர்சனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு எடை போடாமால், ஒட்டுமொத்த விமர்சனங்களையும் வாசித்து சமன்செய்து  சீர் தூக்கிப் பாருங்கள்.

°

‘உந்தக் கதை கவிதை நாவல் எல்லாம் சுத்த வேஸ்ற். வாழ்க்கைக்கு உதவாது. அபுனைவு நூல்கள்தான் வாழ்க்கைக்கு உதவும்.’ என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கின்றார்,

அவர் புனைவு நூல்களைப் படிப்பது இல்லை. தூக்கி எறிந்துவிடுவார். வரலாற்று நூல்கள் மற்றும் அபுனைவுப் படைப்புகளையே அவர் விரும்பிப் படிக்கின்றார்.

அவருக்கு நான் எந்தவிதமான விளக்கம் கொடுக்கலாம்?

நவீன தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளைத் தவிர ஏனையன எல்லாம் எப்போதோ எழுதப்பட்டுவிட்டன. அவற்றை காலத்துக்கு ஏற்ற விதத்தில் நவீனமயப்படுத்தி எழுதுவதுதான் இன்றுள்ளவர்களின் வேலை.

 

Thursday 18 April 2024

ஏன் போட்டிகளுக்கு எழுதவேண்டும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (42)

நாம் ஒரு படைப்பை எழுதி, பத்திரிகை/சஞ்சிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பிரசுரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள், அந்தப் படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை எப்படி அறிவது? படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே கடந்து சென்றுவிடுகின்றார்கள். இணையத்தளங்களில் முகத்துக்காக சில முகத்துதிக் குறிப்புக்கள், விருப்பக்குறீடுகளைப் போட்டுவிட்டுக் கடந்து விடுகின்றார்கள்.

போட்டிகளுக்கு அனுப்பும்போது அந்தப் படைப்புகளை நடுவர்கள் படிக்கின்றார்கள். போட்டியில் பரிசு கிடைத்துவிட்டதென்றால், போட்டியில் பங்குபற்றியவர்கள் படிக்கின்றார்கள். தங்கள் படைப்பைக் காட்டிலும், பரிசு பெற்றவர்களின் படைப்பில் அப்படி என்ன விசேசம் இருக்கின்றது என ஆராய்கின்றார்கள். வாசகர்கள் கூட பரிசு பெற்ற படைப்புகளை வாசிக்க விருப்பப்படுகின்றார்கள்.

போட்டியில் வென்ற படைப்புகளை நீங்கள் ஓகோ என்று பார்க்கத் தேவையில்லை. அந்த நேரத்தில் வந்த படைப்புகளில் சிறந்தவை அவை. ஆனால் அவை வாசிக்கத் தகுந்த படைப்புகள். ஒரு படைப்பை எழுதிவிட்டு, பிரசுரமாவதற்கு முன்னர் நண்பர்கள் வாசகர்களிடம் வாசிக்கக் குடுத்தது போல என எடுத்துக் கொள்ளுங்களேன்.

இன்று எழுத்தாளர்களைக் கவனிக்காது, தமது வட்டம் சார்ந்தவர்களை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்களின் மத்தியில், போட்டிகளே எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருபவை.

அதை விடுத்து ஒரு படைப்பைப் பிரசுரித்துவிட்டு, அதை மின்னஞ்சல்கள் மூலம் பலருக்கும் அனுப்பிவிட்டோ அல்லது ரெலிபோனில் கதைத்தோ புகழ்ச்சிகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன இருக்கின்றது? வாசகர்களை வலிந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.

இளம் எழுத்தாளர்களே! உங்கள் படைப்புகளை பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்பி உங்களைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்புவதால், வித்தியாசம் வித்தியாசமான அமைப்புகள், நடுவர்கள் உங்கள் படைப்புகளைப் பார்வையிடுவார்கள். 

Friday 5 April 2024

அவள் விதி அவன் – சிறுகதை

  
எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். 25 மில்லியன்களுக்கும்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்ட, பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன்.

25 மில்லியன் டொலர்கள்…. இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

படிக்கும் காலங்களில் அவன் என்றுமே திறமைசாலியாக இருந்தது கிடையாது. சுமார் ரகம் அவன்.

மனோ அகதியாக வந்து வேலை தேடி அலைந்தான். ஒருநாள் ஆங்கில வகுப்பு முடிந்து, சுவிஸ் சலற்றில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது அவனுக்கொரு யோசனை வந்தது. அங்கே வேலை கேட்டுப் பார்த்தால் என்ன? என்ன ஆச்சரியம். வேலை கிடைத்தது. டிஸ்வாசரில் பாத்திரங்கள் கழுவும் வேலை.

அப்புறம் பிரியாவைத் திருமணம் முடித்த கையோடு, ஒரு உணவகத்தை விலைக்கு வாங்கினான். பின்னர் தொடர்ந்து அவனுக்கு யோகம் அடித்தது. எல்லாம் பிரியா வந்த நல்ல நேரம்தான் எனச் சொல்லுமளவுக்கு மூன்று பிள்ளைகளுக்கும் ஐந்து உணவகங்களுக்கும் சொந்தக்காரனானான். அவனின் ஆளுமை, ஆற்றல் – எல்லோரும் அண்ணார்ந்து பார்க்குமளவிற்கு கிடுகிடுவென்று உயர்ந்தான். எத்தனையோ பேருக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்தான்.

ஆயிரம் கனவுகளுடன் பிரியாவை மகாராணியாக்கி வாழ்ந்தான் மனோ.

அகதியாக வந்து இன்று எத்தனையோ தொழிலகங்களுக்கு அதிபதியாக இருக்கும் மனோவிற்கு, மேஜர் விருது வழங்கிக் கெளரவித்தார்.

அந்தக்காலத்தில்தான் நான் எனது மைத்துனனின் கலியாணத்திற்காக கனடா சென்றிருந்தேன். கலியாணவீட்டிற்கு வரமுடியவில்லை என மிகவும் மனம் வருந்தினான். தனது வீட்டிற்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்தான்.