Friday, 26 September 2025

நாடோடிகள் - எனக்குப் பிடித்த கதை

 

கி.பி.அரவிந்தன் 

நேற்றென்று ஒருநாள் காலமாகிப்போக இன்றென்று ஒருநாள் விடிந்தது. அது ஒரு சனிக்கிழமை.

ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். படுக்கையில் புரள்கின்றேன். எண்ணங்களும் பல வேறாய் உருள்கின்றன.

உடல் வெளிப்படுத்தும் இளஞ்சூட்டில் குளிர் காய்ந்தபடி அணைந்து உறங்கும் நானும் மனைவியும் உறக்கம் கலைந்த புரளலில் விலகினோம் போலும்.

விலகலிடையே குளிர் நிரவுகின்றது.

இருவரும் மீள மெல்ல அணைந்து கொள்கிறோம். இதமாக இருக்கின்றது.

குளிர் இறங்கிச் செல்கின்ற இளவேனிற் காலாந்தானானாலும் காலை நேரக்குளிரின் இறுக்கப்பிடி இன்னமும் தளரவில்லை. “மாசிப்பனி மூசிப் பெய்யும்" என ஊரில் சொல்வதுண்டுதான். பனியா இது? மூச்சையே உறையச் செய்யும் இக் குளிரின் வீச்சத்தை எப்படி அழைப்பது?

Tuesday, 23 September 2025

நிலவு குளிர்ச்சியாக இல்லை - எனக்குப் பிடித்த சிறுகதை


வடகோவை வரதராஜன்

இலண்டன் மாநகரத்தின் அமைதியான `தேம்ஸ்’ நதியில் பெளர்ணமி காலத்தில் படகுச் சவாரி செய்திருக்கின்றேன். வாஷிங்ரனின் `பொடோமோ’ நதிக்கரையில் பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்கிடையில் சில்வர் நைற் கவிதை படித்துக்கொண்டு நிலவில் நடந்திருக்கின்றேன்.

ஆனாலும் அங்கெல்லாம் என்மனம் வெறுமையுற்று ஏங்கிக் கொண்டே இருக்கும். தேம்ஸ் நதியில் படகுச் சவாரி செய்யும் போதெல்லாம் இங்கே கோப்பாய் கடற்கரையில் கைதடிப் பாலக் கட்டில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்துகொண்டு மினிக்கிவிட்ட தங்கத்தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப் பார்த்து,

      ”சிந்து நதியின் மிசை நிலவினிலே

      சேரநன் நாட்டிளம் பெண்களுடனே

      சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்திருந்த நினைவுகள் என் நெஞ்சத்தில் இனிய உணர்வுகளை உதிர்த்துவிடும்.