Thursday, 11 December 2025

வளரி - சிறுகதை

வேலைக்குச் சென்றவுடன் கன்ரீனில் இருக்கும் குளிரூட்டியில் எனது மதிய உணவை வைப்பதற்காகச் சென்றேன். அங்கே ஏழெட்டுப் புதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி தன்பாட்டில் வேலை செய்துகொண்டிருந்தது. குளிரூட்டியில் உணவை வைத்துவிட்டுத் திரும்புகையில், கையடக்க ஸ்கேனர் ஞாபகத்திற்கு வந்தது. தினமும் வேலை முடிவடைந்து வீட்டிற்குப் போகும்போது சார்ஜ் செய்வதற்காகப் போட்டுவிடும் கையடக்க ஸ்கானரை எடுத்துக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன்.

அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.

“குட்மோனிங் ஜோன்…”

விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.

கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.

“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”

“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.

நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.

Monday, 1 December 2025

அம்பலம் - சிறுகதை

வயது முதிர்ந்தோர் இல்லத்தில் பிரபல எழுத்தாளர் நிரஞ்சன் இருந்தார். அவரைச் சந்திப்பதற்காக பத்திரிகை நிருபரான தணிகாசலம் சென்றிருந்தார்.

“எழுத்தாளர் நிரஞ்சனைப் பாக்க வேணும்…”

“செகண்ட்  ஃப்ளோர் மூண்டாவது ரூமுக்குப் போங்க…”

தணிகாசலம் லிப்ற் இருக்கத்தக்கதாக படிகளின் வழியே ஏறி மேலே போனார். அறை திறந்து இருந்தது. உள்ளே உறக்கத்தில் இருந்தார் நிரஞ்சன். அவரை எழுப்புவதா விடுவதா என்ற தயக்கத்தில், அவரின் கட்டிலுக்கு எதிராக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.

நிரஞ்சனின் முகத்தில் சவரம் செய்யப்படாமல் வெள்ளி முடிகள் எங்கும் பரவிக் கிடந்தன. படுக்கையிலும் தனது மொட்டையை மறைப்பதற்காக தொப்பி அணிந்திருந்தார். அவரை முதன்முதலாகச் சந்தித்தது அப்படியே நெஞ்சில் நிழலாட்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. தொப்பியைக் முழுகும்போதும் கழட்ட மாட்டாரோ?

இருவருக்கும் வயதில் பெரிதளவு வித்தியாசம் இல்லை. ஆனால் மூப்பும் பிணியும் வயது பார்த்து வருவதில்லை. அவர்களின் பரம்பரை அலகுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல சங்கதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன. நிரஞ்சன் உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டார். மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்றான நோய் அவரை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர் ஒரு தண்ணிச்சாமி. அதுவே அவரை நோயாளியாகவும் ஆக்கியிருக்கலாம். நீரிழிவும் கொலஸ்ரோலும் ஒவ்வொரு பக்கமாகப் பிடித்திழுக்க, ஒரு தடவை ஸ்ரோக்கும் வந்திருந்தது. மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகள் வேலைக்குப் போவதால் இதுவே பாதுகாப்பான இடம் எனக் கருதி, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இடையிடையே வந்து பார்த்து உணவும் குடுத்துவிட்டுச் செல்வார்கள்.

தமிழ் மக்களுக்கான அந்த முதியோர் காப்பகத்தில் நிரஞ்சனுடன் ஆணும் பெண்ணுமாக மேலும் பதினான்கு பேர்கள் இருக்கின்றார்கள்.

நிரஞ்சன் `வாசல்’ என்ற சிறுகதைத்தொகுப்பையும், `ஊர்வலம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கின்றார். அதன் பின்னர் உதிரிகளாகச் சில கதைகளும், புதுக்கவிதைகளும் எழுதியிருக்கின்றார். ஆனால் தொகுப்பில் போடுமளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்த உதிரிகளிலும் சில இலக்கியத் தரமில்லாமல் இருந்தன. ஆனால் `வாசல்’ தொகுப்பு சிறுகதை இலக்கியத்திற்கே ஒரு வாசல் என்றும், `ஊர்வலம்’ தொகுப்பு புதுக்கவிதையின் ஒரு திறவுகோல் எனவும் இன்றளவில் பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. சில பல்கலைக் கழகங்களில், இவை இரண்டும் இன்னமும் பாட நூல்களாக இருக்கின்றன.

திடீரென விழித்துக் கொண்ட நிரஞ்சன், படுக்கையில் இருந்து எழுந்தார்.

“சொன்னபடி வந்துவிட்டீர்கள். நான் சற்றே அயர்ந்து போனேன்” சிரித்துக் கொண்டார் நிரஞ்சன்.

“பேட்டியைத் தொடங்கலாமா?” என்றார் தணிகாசலம்.

Friday, 21 November 2025

மங்கா… மான்குட்டி போல – சிறுகதை

 

இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.

ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.

"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.

"உங்களுக்கென்ன விசரா…  இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."

"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."

வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.

பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.

திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில் குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து மிதந்தன.

முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.