Tuesday, 14 April 2026

எதிர்பாராதது! - சிறுகதை


நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.

Wednesday, 1 April 2026

`வேடம் தாங்கல்’ ஒரு பார்வை - TamilOsaiOnAir

 


அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப் போட்டியில்(2025) பரிசு பெற்ற `வேடம் தாங்கல்’ என்ற சிறுகதை பற்றி, இவ்வார இலக்கியம் பகுதியில் ஒரு விரிவான பார்வை வந்திருக்கின்றது. மீண்டும் ஒரு பரிசு பெற்றவனாகின்றேன். நன்றி : சிவா துரை, பாஸ்டன் பாலா

Thursday, 26 March 2026

மஞ்சள் கயிறு - எனக்குப் பிடித்த கதை.



புதுமை லோலன் (வீ.கே.கந்தசாமி)

யாழ்ப்பாண எக்ஸ் பிரஸ் வரும் நேரம். யாழ்ப்பாண ஸ்டேஷன் சனத்திரளில் நெளிந்தது. அங்குமிங்கும் சனக்கும்பல் தெரிந்தது. நெருக்கமடைந்தது. “கூ” ஒலி வந்த அண்மை… அப்போது மணியைப்பார்த்தேன். வண்டி புறப்பட இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. டிக்கட் பெறுகையை கவுண்டரில் வைத்தேன். வண்டி புறப்பட இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. டிக்கட் பெறுகையை கவுண்டரில் வைத்தேன். அப்பொழுது என்முன்னே… “எனக்கு ஒரு ரிக்கற் எடுத்துத் தர்ரீங்களா” என்ற குரல் ஒலி, யாழ் ஒலியாக ஒலித்தது.

திரும்பினேன். கோமளமான் முகம்ஒன்று வசீகரமான கரங்களால், கையிலிருந்த பையுள்ளிருந்து ஒரு பத்து ரூபாவை எடுத்து நீட்டியது. பணத்தை வாங்கினேன். எங்கே போகிறீர்கள் என்றேன்.

“கோட்டைக்கு” என்றாள். ரிக்கற்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். நன்றி கூறி வாங்கிளாள். போய்விட்டாள்,

மணி ஒலி, எக்ஸ்பிரஸ் நகர ஆரம்பித்துவிட்டது. யான் ஏறிவிட்டேன். அப்பொழுது…. அங்கே “இதை பிடியுங்கள் தயவு செய்து…..” என்றாள்.