Tuesday, 21 October 2025

தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - விமர்சனம்



பயணங்கள் போவது பலருக்கும் பிடித்தமானது. புதிய இடங்களைத் தரிசிப்பதிலும், அங்கு வாழும் மனிதர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதிலும், அவற்றிற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும் பலருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், மிகவும் சுவையாகப் பதிவு செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தி.ஞானசேகரன் அவர்கள் - இலண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண அனுபவங்கள், கனடா பயண அனுபவங்கள், வட இந்திய பயண அனுபவங்கள், அவுஸ்திரேலியப் பயணக்கதை என ஐந்து பயண அனுபவப் புத்தகங்களை வரவாக்கியிருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் வியந்து வாசித்த `அவுஸ்திரேலிய பயணக்கதை’ என்னும் நூல் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூல் 1999 ஆம் ஆண்டு ஞானம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது. நூலின் அணிந்துரையை பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும், முன்னுரையை திரு லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள்.

நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.

Friday, 10 October 2025

குருவிக்கூட்டை திரும்பிப் பார்த்தல் - நாவல் விமர்சனம்

ஜெர்மனியில் வசிக்கும் கெளசி (சந்திரகெளரி சிவபாலன்) அவர்களின் நாவல் `குருவிக்கூடு’. பொதுவாக நாவல்களைப் படிக்கும்போது முன்னுரை அணிந்துரை என்னுரைகளை இறுதியில்தான் படிப்பேன். இந்த நாவலையும் அப்படித்தான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்கத் தொடங்கிய ஆரம்பப் பக்கங்களிலேயே இது ஒரு கற்பனை நாவல் அல்ல என்பதையும், நாவல் ஆசிரியரும் சிநேகாவும் ஒருவரே என்பதையும் புரிந்து கொண்டேன்.

இலங்கை வாழ்க்கை, ஜெர்மனிய வாழ்க்கை என இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பார்க்கலாம். இலங்கையில் இருக்கும் ஏறாவூர், பேராதனை, நீர்கொழும்பு என்ற இடங்களில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜேர்மனியை நோக்கி நாவல் பயணிக்கின்றது.

முதலில் நாவலின் சுருக்கத்தைப் பார்க்கலாம். கந்தசாமி வைரவள்ளி தம்பதிகளின் மகளான பார்வதியை பரமசிவம் மணந்து கொள்கின்றார். அவர்களின் நான்கு பிள்ளைகளான சிவம், சிநேகா, கீரன், சிந்து என்பவர்களைச் சுற்றி கதை ஆரம்பத்தில் பின்னப்பட்டுள்ளது. தாத்தா பாட்டியுடன் வாழ்வதற்கு பலருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இங்கே சிநேகாவிற்கு பாட்டி வாய்த்துவிடுகின்றது. பாட்டி வைரவள்ளி மட்பாண்டங்கள் செய்தல், கை வைத்தியம், முறிவு வைத்தியம், பிள்ளைப்பெற்று பார்த்தல் போன்றவற்றில் கை தேர்ந்தவளாக இருக்கின்றார்.