Friday, 13 March 2026

வேடம் தாங்கல் - சிறுகதை


அசோகன் புரண்டு புரண்டு படுத்தான். உறக்கத்திற்கும் விழிப்புக்குமிடையே மனம் பெண்டூலமாக ஆடிக்கொண்டிருந்தது. அலாரம் வைத்துவிட்டுப் படுத்தும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அலாரம் என்பது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மாத்திரம் தான்.

கடந்த சில வருடங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த `அந்த’ வீதி புனரமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வர இருந்தது. `அந்த’ வீதியின் பெயரை உச்சரிப்பதற்கே பலருக்கும் தயக்கமாக இருந்தது. வருடத்திற்கு குறைந்தது ஏழெட்டுப் பேரையாவது காவுகொள்ளும் அந்த வீதியின் கூனலைத் தட்டி நிமிர்த்த, அரசு இன்று அனுமதி வழங்கிவிட்டது.

அந்தத் திட்டத்தின் முக்கியமான முதன்மை எதிரி பறவைகள் என்றால் நீங்கள் வியந்து போவீர்கள்! அலாஸ்க்கா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் இருக்கும் சில பறவைகள், அங்கே நிலவும் குளிர் காலநிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இங்குள்ள வெப்பத்தை நாடி வலசை வருகின்றன. ஏறக்குறைய 35 விதமான 2 மில்லியன் நீர்ப்பறவைகள் இப்படி வருடாவருடம் வந்து போகின்றன. அவை அந்த வீதிக்கு அருகாமையில் இருக்கும் காடுகளில் தமது வசந்தகாலத்தைக் குதூகலமாகக் கொண்டாடி ஞாபகச்சின்னமாக இனவிரித்தியும் செய்துகொண்டு, இங்கே குளிர்காலம் ஆரம்பிக்கும்போது மீண்டும் தமது பழைய இடங்களுக்குத் திரும்புகின்றன.

பறவைகளுக்குச் சார்பாக வாதாட `விலங்குகள் – பறவைகள்’ நலன் பேணும் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. எப்பொழுதெல்லாம் விபத்து நடந்து பிரச்சினை வலுக்கின்றதோ, அவர்கள் அவுஸ்திரேலியாவின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் மோப்பம் பிடித்து வரிசைகட்டி வந்துவிடுவார்கள். விபத்து நடக்கும் வீதியின் இருமருங்கிலும் நின்று, பதாகைகளை ஏந்தியவண்ணம் தமது கண்டனங்களைத் தெரிவிப்பார்கள். விபத்து நடக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மரங்களைத் தறிப்பதால் காட்டின் சில பகுதிகள் பறிபோகும், பறவையினங்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், வலசை வரும் பறவைகளின் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் என்பது அவர்களின் விவாதம்.

வசந்த காலத்தில் மட்டும் பறவைகள் வந்து போவதால், வருஷம் பூராவும் மக்கள் இன்னல் கொள்வதா என்பது அரச தரப்பினரின் ஆதங்கம். மேலும் காட்டின் ஒரு சிறு பகுதியை அழிப்பதால், பறவைகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.

Tuesday, 10 March 2026

காதல் காற்சட்டை - எனக்குப் பிடித்த சிறுகதை



அல்வாயூர் மு.செல்லையா

யாழ்ப்பாணம் ஒட்டியுள்ள ஒரு பகுதி, புறநகர் என்று சொல்லலாம். அதில் இரண்டு பரப்புக்காணி. தென்னம் கமுகுகள் மாமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வளவு. ஒரு வீடு ஒரு மால் ஒரு அடுக்களை இந்த மூன்று வீடுகளும் ஓலைக்குடிசைகளாக இருந்தாலும் புனிதம் உடையவைகளாய் காணப்பட்டன.

விரத காலங்களில் வீடுகளும் திண்ணைகளும் மெழுகப்பட்டிருக்கும் அழகே அலாதியானதுதான். பக்கத்திலுள்ள வீடுகளில் வசிக்கும் சில பெண்கள் கூட மெழுகிய இந்த திண்ணைகளிலே வந்து இருந்துகொண்டு புகழுவார்கள்.

“பத்தினி அக்கையின் வீடுகள், எங்கள் கல்வீடுகளிலும் பார்க்க குளிராகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. இது பக்கத்து வீட்டாருடைய பாராட்டுரை.

அந்த வீடுகளிலே பத்தினி என்ற தாயும் பார்வதி என்ற மகளுமே வாழுகின்றனர். பிறந்த காலத்திலே பத்தினி என்ற பெயரைப் பிதாமாதாக்கள் என்ன காரணத்தினால் வைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் இப்போது அவள் பத்தினியாகவே காலங்கழித்து வருகின்றாள்.