Tuesday, 4 November 2025

சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டி முடிவுகள் (2025)

 

போட்டி அறிவிப்பின்போது ஆறுதல் பரிசுகளாக 2,000 ரூபாய் அறிவித்திருந்தோம். அந்தத் தொகை இப்போது ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது.

அதேபோல் 3 நாவல்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் என்று அறிவித்திருந்தோம் இப்போது அது 5 நாவல்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்தப் புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும்.

இந்தப் போட்டிக்கு மொத்தம் 34 நாவல்கள் வந்தன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

மிக முக்கியமான நன்றியறிவித்தலை செய்ய வேண்டிய நேரம் இது.‌ கலந்துகொண்ட நாவல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாவல்களைப் படித்துத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற நாவல்களை அறிவித்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே என் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் செய்த பணிக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது. எங்களை அலைக்கழிக்க விடாமல், சொன்ன தேதியில் தன் பணியைச் சிறப்பாக முடித்துக் கொடுத்த அவருக்கு என்றென்றும் எங்கள் நன்றி உண்டு.

சுவாசம் பதிப்பகத்திற்கு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை அளித்த ராமச்சந்திரன் உஷா‌ அவர்களுக்கு நன்றி.

மற்ற விவரங்கள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படும்.

முதல்‌ பரிசு:

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

பால கணேசன்

ரூ 50,000

-

2ம் பரிசு

ஆதினி

துரை.அறிவழகன்

ரூ 25,000

-

3ம் பரிசு

திரைகடலோடியும் புகலிடம் தேடு

வேலையா கார்த்திகேயன்

ரூ ‌10,000

-

ஆறுதல் பரிசுகள் - தலா 5000 ரூ

* சொல்லில் வருவது பாதி

கே.எஸ்.சுதாகர்


* உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்

ஷாந்தி பாலசுப்ரமணியன்

* குருதி ஓவியம்

சேரன் செக்குட்டுவன்

* மெய்யரசி

ஜெயந்தி கார்த்திக்

* பிரதி:வேலன்

முத்துச்செல்வன்

Tuesday, 21 October 2025

தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - விமர்சனம்



பயணங்கள் போவது பலருக்கும் பிடித்தமானது. புதிய இடங்களைத் தரிசிப்பதிலும், அங்கு வாழும் மனிதர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதிலும், அவற்றிற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும் பலருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், மிகவும் சுவையாகப் பதிவு செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தி.ஞானசேகரன் அவர்கள் - இலண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண அனுபவங்கள், கனடா பயண அனுபவங்கள், வட இந்திய பயண அனுபவங்கள், அவுஸ்திரேலியப் பயணக்கதை என ஐந்து பயண அனுபவப் புத்தகங்களை வரவாக்கியிருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் வியந்து வாசித்த `அவுஸ்திரேலிய பயணக்கதை’ என்னும் நூல் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூல் 1999 ஆம் ஆண்டு ஞானம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது. நூலின் அணிந்துரையை பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும், முன்னுரையை திரு லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள்.

நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.