Wednesday 20 May 2020

மரையாம் மொக்கு - எனக்குப் பிடித்த சிறுகதை


 

வீ.எம்.இஸ்மாயில் (மருதூர்க்கொத்தன்)

சுமக்க முடியாமல் சுமந்து வந்த கயிற்று வலைப்பந்தை கீழே போட்ட காத்துமுத்துவின் உடலெல்லாம் சொர்க்க சுகம் பரவியது.

வருஷக்கணக்காய் கடல் நீரில் குளித்து ஆனமட்டுக்கும் உப்பை உறுஞ்சிய கொண்டடி வலைக்காலொன்றின் தும்புக்கயிற்று வலையைச் சுற்றிய பெரும்பந்து அதைத் தோளில் சுமந்து தொத்தல் உடம்பு இறால் கருவாடாய் வளைய, கடற்கரைக் கொதிமணலில் கால்கள் புதைய, காய்ச்சிய இரும்புக் கோல்களாய்ச் சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கத் தூக்கி வந்தார்.

கீழே போட்ட கயிற்று வலைப்பந்தை ஆசனமாக்கி அமர்ந்ததும் எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் நெஞ்சுக்கூடு விரிய சட்டியிலிருந்து தூக்கியதும் உலைமூடியில் படிந்து கொட்டும் நீராவித் துளிகளாக அந்த நோஞ்சான் உடம்பெங்கும் பீச்சிக் கிடந்தது. வெண்மை பெயர்ந்து சாம்பல் நிறம் பூத்த இனிக்கிழிய இடமில்லை என்றாங்கு கிழிந்து தோளில் சும்மாடாய்ச் சேவகம் செய்த துண்டை எடுத்து முகத்தையும் உடம்பு முழுவதையும் ஓரவஞ்சனை இன்றித் துடைத்தெடுத்தார். அந்தத் தென்னங்காலை தந்த குளிர்நிழலும் உப்புக்கலந்த கடற்காற்றின் தழுவலும் சற்று இதமளிக்க பாரச்சுமையைச் சுமந்த உடல்நோவு சிறிது மறைந்த மாதிரி இருந்தது.

தென்னங்காலையின் மத்தியில் பக்கிசுப்பலகை மேசையில் கிளாஸ் சாதியும், கல்லடுப்பில் சூடேறிய அலுமினியப் பானையும், மட்டைத்தாள் பெட்டிகள் இரண்டொன்றுமாக உசனாரின் நடமாடும் தேநீர்க்கடை சோம்பி வழிந்தது. கொண்டடி வலைத் தொழிலாளர்கள் தோணிவலைச் சொந்தக்காரர்கள், மீன் வியாபாரிகள், கறிமீனெடுக்க வருபவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட கடை. காலையில் விரியும் மதியத்திலோ அல்லது மாலையிலோ சந்தடி ஓய்ந்ததும் கடைகட்டும்.

கிளாஸ்களில் தேனீர் ஊற்றிக் கொண்டிருந்த உசனாரும், மணலில் அமர்ந்தும், நின்றும், தென்னை மரங்களில் சாய்ந்தும், தேனீர் பருகியும், புகையின்பம் நுகர்ந்தும், சும்மாவும் காட்சி கொடுத்த அனைவரும் காத்தமுத்துவைப் பார்த்த பார்வை ஆச்சரியம், அனுதாபம், மலைப்பு போன்ற உணர்வுகளை விநியோகம் பண்ணியது. காத்தமுத்தண்ணே! உனக்கென்னகா விசர் புடிச்சிற்றா? இந்தப் பெரிய சுமையைத் தூக்கி வந்த ஒண்ட ஓர்மதான் ஓர்ம! பொடறி முறிஞ்சி நடக்கக்கூடாதது நடந்திற்றா வருமா? உசனாரின் கரிசனமான வார்த்தைகளுக்குப் பதிலாக காத்தமுத்துவின் சுருங்கிய இதழ்க்கடைகளில் ஒரு குறுஞ்சிரிப்புப் பதிலாக விரிந்தது. பஞ்சம், பசி, அவலங்கள் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் கைகூடாத, வாழ்வதற்கான போராட்டங்கள் என்று எத்தனையோ செய்திகளை அது சொல்ல முனைந்தது.

”உசன் தம்பி… என்னகா சொன்னாய்? நம்மட நாட்டில மலிவான சங்கதி நொளும்புஞ்சாவுந்தான் எண்டது தெரியாதா உனக்கு. சாவு வந்தா வந்திற்றுப் போகுது.”

”காத்தமுத்தண்ணே நீ சொல்லுறது சரிதாங்கா. சாவுமலிஞ்ச நாட்டில இருந்துக்கிட்டு சாவப்பத்தி கவலைப்படலாமா? வாழ வேண்டிய வயசில் இளசுகளெல்லாம் வங்கொலயிலே சாகுதுகள். எங்கேயோ பொதச்ச சவங்களைத் தோண்டியெடுத்து லொறியில் ஏத்திக்கிட்டு முந்தனாத்து கொண்டு போகக்குள்ள நானும் மெயின் றோட்டில நிண்டன். மனிதப் பொண நாத்தத்தயும் அறிஞ்சிக்கிட்டேன்.


மீன் வியாபாரி இஸ்மாலெப்பை மேற்கண்டவாறு சூறி, சிகரெட் குறையை இழுத்து ஊதிவிட்டார்.

போனகிழமை முப்பது வயசும் நிரம்பா முகம்மதுதம்பி மாஷ்டர் திடீரெண்டாப்பபோல மெளத்தாப்போனார். அழகான வாகான இளந்தாரி. என்னமோ மாரடைப்பாம். வகுத்துக்கொடும தாங்காம இந்த எழுபது வயசிலையும் கரக்கடக்கி வந்து வலை இழுத்து மாயிறன். மகுத்து நமக்கிட்ட வர என்ன பயத்தபயப்பிடுது. காத்தமுத்துக்கும் என்ர வயசுதானே இருக்கும்?”

தென்னை அடியில் சாய்ந்தவாறு இருந்து கூலிக்கு வலையிழுக்கும் ஆதம்பாவாவின் கேள்வியை அடுத்து, காத்தமுத்து பேச்சைத் தொடங்கினார்.

”இல்லையா பின்னே! மீசை மொளக்காத காலத்தில இருந்து நாம இந்தக் கடக்கரயில வலயிழுக்கிறம். ஆதங்காக்கா இன்னொரு சங்கதி தெரியுமா? எல்லாரும் கேட்டுக்கங்க. உடம்பில ஒரு வருத்தம் இருந்தாத்தான் கெதியாச் சாவு வரும். எனக்குள்ள ஏழெட்டு வருத்தம். கொல்லுற வேலய ஆரு செய்யிறது எண்டதில அவியளுக்கள்ள இழுபறி. அவய போராடி ஒரு முடிவெடுக்க மட்டும் அலாறுப்பட வேண்டிக்கிடக்கு.”

அங்கு எழுந்த கொல்லென்ற சிரிப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது.

“அப்ப ஒனக்குள்ள நோய்கள் நம்மட பொடியனுகள் மாதிரி என்ன? அவியளுக்குள்ள சண்டை முடியிற எப்ப? நாடு புடிக்கிற எப்ப?”

சற்றுத் தள்ளியிருந்த மிஸ்கின் பாவாவின் பேச்சைக் கேட்டு உசனார் கடுப்பானார்.

“மிஸ்கின் பாவாக்கு மொக்குத்தனம் போகாது. இவபோய் பொடியனுகளுக்குப் பொறந்தா மகுறுவந்தான்.”

”நான் சொன்னதில் என்னகா பொழ இருக்கு? பொடியனுகளுக்கு இது புத்தியா அமயட்டன்.”

“சரி, சரி…. பேச்சு எங்கபோகுது. உசனார் எனக்கொரு றோஸ்பாணும் பிளேண்டியும் பீடியுந்தா. சின்னக் கொடலப் பெரியகொடல் தின்னுது.”

காத்தமுத்து உரயாடலைத் திசை திருப்பினார்.

“பழய பாக்கி அம்பது உருவாக்கு மேலே கிடக்கு. எப்ப இந்தக் கடல்ல மீன் படுற? எப்ப நீ எனக்கு காசு தாற?”

“பயப்படாதகா உசனார். உப்புத்தண்ணி ஆத்துல நாணல் பக்கமாகக் கொடுவா சுளிக்குது. இண்டைக்குச் சில்லி வலைகட்டி மரையாம் மொக்கால இடிச்சிப் பாக்கப்போறன். தெய்வம் முகம் பாத்தா நாளக்கே பாக்கியில்லாம காசொண்ட கைக்கு வரும்.”

உசனார் மறு பேச்சில்லாமல் கிளாஸ் வழியத் தேநீரை நிரப்பி இரண்டு றோஸ் பாண்களையும் கொடுத்தார்.

“என்னப்பா ஒரு றோஸ்பாணத்தானே கேட்டன்.”

“நீ களைச்சிப்போய்க் கிடக்குற களைப்புக்கு ஒரு றோஸ்பாண் என்னத்துக்கு காணும். ரெண்டையுந்தின்னு காணாட்டி கேளு இன்னமும் தாறன்.”

”ஏழைக்கு ஏழை துண. ஓண்ட மனசு கடல் போல.”

கயிற்றுப்பந்தை விட்டிறங்கி மணலில் சம்மாணம் போட்டமர்ந்து றோஸ்பாணை உடைத்துத் தேனீரில் ஊறவைத்துச் சாப்பிடும் கடமை ஆரம்பமானது. மிஞ்சியிருக்கும் பற்கள் றோஸ்பாணை மொறு மொறென நறுக்கி உண்ணும் வக்கற்றவை. காலை உணவு கிடைக்கப் பெறாத வயிறு. வலை இழுத்தும் கயிறு சுமந்தும் அலுத்த உடம்பு. பதினொன்றைத் தாண்டிய பகல். இத்தகைய தகுதி உள்ளவர்களைக் கேட்கவேண்டும். றோஸ்பாண் பிளேண்டியின் சுவை மகாத்மியத்தை விளங்கிக் கொள்ள. கட்டித் தயிரும் தேனும், கோழிக்கூட்டு வாழைப்பழமும் சேர்ந்த கூட்டுத்தரும் சுவையின்பத்தையும் மிஞ்சிய சுகானுபவம் முகத்தில் படரப் பாணருந்தித் தேனீர் பருகி முடித்தார். பீடியையும் வாங்கி நெருப்புக் கொள்ளியில் பற்ற வைத்து இழுத்துப் புகை வளையத்தை ஊதித் தள்ளியபோது, தளர்ந்த தசைகள் முறுக்கையும், அடைந்த முதுமை இளமையையும் மீளப் பெற்றது போன்ற உணர்வில் மனிதர் மிதந்தார்.

ஆள் தேறும் வரை பொறுத்திருந்தவன் “கோ!... சில்லி வல, மரையாம் மொக்கு இதெல்லாம் என்ன சாமான்களண்ணே?” என்று கேட்டான் இளைஞ்ஞனான காதர். அவனது வயதுக்கு இவரை அப்பச்சி, மூத்தப்பா என்றுதான் அழைக்க வேண்டும். சோனகரைக் காக்கா என்று தமிழரும், தமிழரை அண்ணே என்று சோனகரும் இளம் வயதாய் இருந்தால் கூட அழைக்கின்ற மரபை விட்டுக் கொடுக்கமுடியுமோ? முடியாது.

“இப்ப இருக்கிற கட்டுவலை, மாயவலை மாதிரித்தான் அப்ப அதுக்குப் பேர் சில்லிவலை. இப்ப நைலோன் வலயக் கடையில வாங்கி, ரப்பர் மிதப்புகளையும் கடையில வாங்கி வலயாக்கிறாங்க. அப்பெல்லாம் பருத்தி நூல முறுக்கி, இல்லாட்டிக் குறிஞ்சாக் கொடியில வெள்ளப்பட்டுப் போல நாரெடுத்து முறுக்கி, ஒலியம் படையத் தட்டித் துவர் பிடித்துச் சாயமூட்டித்தான் வலைய முடிப்பம். தூண்டக்கவுறு எறிகவுறெல்லாம் அப்படித்தான். துவர்மணத்தில் எங்க இருந்தும் மீன் வந்து மொய்க்கும். முள் முருக்கங்கட்டை இல்லாட்டித் தில்லங்கட்டையைத் துண்டாக்கிச் செப்பம் பண்ணிக்கட்டை கட்டுவர். எனக்கிட்ட இருக்கிறது குறிஞ்சாப்பஞ்சால முறுக்கி தில்லங்கட்ட கட்டின வல. நாப்பது வருஷப் பழைசி மழவெயில்ல படாம வெச்சிருக்கத்தால இப்பவும் பெலன் குறயல்ல. ஒரு எண்ணம் புடிச்சா ஆண்டில காத்தியில கட்டிப் பாக்கிறதான்.”

சொற்களின் ஒலிப்பிலும் முகபாவனையிலும் பெருமிதம் ராஜாங்கம் பண்ணச் சொல்லி முடித்தார் காத்தமுத்து.

“சில்லிவலை சரி… அதென்னமோ மொக்கே கெக்கோ எண்டியேகா?” என வினாவினான் காதருக்குப் பக்கத்திலிருந்த றசாக் ஆளும் விடலை. காத்தமுத்துவின் பேச்சில் பழைய ஞாபகங்கள் கிளறுப்பட உற்சாகமான கிழவர் ஆதம்பாவா அதற்கான விளக்கத்தைச் சொல்ல முன்வந்தார்.

”முன்னங்கைப் பருமனான நேரான பூவரசங்குத்திய சாணளவுக்கு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒருபாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில் விட்டு இறுக்கி அடிச்சி இணைக்கிறது தாண்டா மரையாம் மொக்கு. என்ன காத்தமுத்து சரிதானேகா நான் செல்றது?”

”அதுதானே! சரியில்லாம என்ன! சில்லி வலய வளச்சிக்கட்ட வளச்சலுக்குள்ள நிண்டு மரையாம் மொக்கால தண்ணிக்குள்ள இடிச்சி மேலாலயும் அடிச்சிக்கலைச்சா தண்ணி குமுழி உட்டுப் பொங்கும். மீனுக்கு ஈரக்குல நடுங்கும். சுரிப் பாளிக்குள்ள படுக்கிற மீனெல்லாம் கலங்கி ஓடிப்பாயும். பிறகென்ன வலையில பட்ட ஒரு பாட்டு மீனக் களத்தவே அரமணித்தியாலம் எடுக்கும். இப்பெல்லாம் என்ன? வலய நெடுப்பத்தில் கட்டிப் போட்டுக் காத்திருக்காங்க.  மேச்சல்ல வாற மீன் பட்டாத்தான். காதர் தம்பி இப்ப தெரியுதா?”.

”இந்தப் பழைய கதையெல்லாம் எங்களுக்கென்ன தெரியுமண்ணே. பொடியன்கள், எஸ்.ரி.எப். , எஸ்.எல்.ஆர்., ஏ.கே போட்டிசெவண், கவசவாகனம், ஹெலி, பொம்பர் மலிஞ்ச காலத்தாக்கள் நாங்க” என்றான் காதர்.

மரையாம் மொக்கத் தூக்கிப் பிடித்தா தூரத்தில இருந்து பாக்கிறவனுக்கு றொக்கட் லோஞ்சர் மாதிரித்தானே தெரியும்.

சற்று எட்ட இருந்த உடல் முறுக்கேறிய ரஹீம் சொன்ன விளக்கத்தைக் கேட்ட இஸ்மாலெப்பை அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

”அதென்ன றொக்கட் லோஞ்சர்? கேள்விப்படாத சரக்காரிக்கி. இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும். அப்ப நீயும்…. ஓஹோ.. ஊரிலிருந்து அடிக்கடி நீ மாயமாய் மறையிற ரகசியம் இதுதானோ?” என்று சந்தேகத்தைக் கிளப்பி அதற்கான விடையையும் உறுதி செய்து கொண்டார். றஹீமின் கொடுப்புக்குள் ஒரு குறும்புப் புன்னகை விரிந்தது. சுற்றியிருந்தவர்களும் ஆளாள் முகங்களைப் பார்த்தனர். றஹீம் மீண்டும் சொன்னான்.

“தெரிஞ்சிக்கங்க நம்ம ஊர்ப் பொடியனுகள் ஐம்பது அறுபது பேர் இயக்கங்களில் இருக்கிறானுகள். வடக்குக் கிழக்கில் உள்ள முஸ்லிம் பொடியனுகள் மாத்திரமல்ல, சிங்களப் பொடியனுகளும் இயக்கங்கள்ள இருக்கிறானுகள். நடப்பது தமிழர்களின் போராட்டமல்ல பேரினவாதத்துக்கெதிரான சிறுபான்மை மக்களின் போராட்டம். முதாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான உழைக்கும் மக்களின் போராட்டம். அம்பாறைப் பள்ளிவாசல் காணியை விடுவிக்கக் கோட்டில் வழக்கு நடக்குது அதாவது தெரியுமா உங்களுக்கு?”

ரஹீமின் பேச்சு ஆவேசங்கலந்து ஒலித்தது. கூட்டம் பேமலித்தும் போனது.

”நீங்க எத்தன இயக்கம் எண்டாலுஞ் சரிதான். எவ்வளவு போராடினாலுஞ் சரிதான். அரசாங்கத்தை வெல்லலாமா? அதுவும் அத்துலத்து முதலி எப்பேர்பட்ட ஆள்!” என்றார் நடுத்தர வயதுடைய மீன் முதலாளி அலியார்தம்பி.

ரஹீமின் கொடுப்புக்குள் மீண்டும் குறுஞ்சிரிப்பு.

“யார் வெல்வது யார் தோற்பது அது வெளிச்சமாக காலம் கிடக்கு”

”பேச்சு வேறெங்கையோ போகுது. இதோட இந்தப் பேச்ச நிறுத்துங்க.”

தேனீர்கடை உசனார் கிலேசப்பட்டவராகப் பேசினார். காத்தமுத்து துண்டை மடித்து தோளிலே வைத்து ‘இத ஒள்ளுப்பம் புடிச்சுடுங்கடாக்களே” என்று வேண்டுகோள் விடுத்தார். உசனார் மீண்டும் கடுப்பானார்.

“இந்தப் பெரிய வலப்பந்த உண்ட தலையில கட்டனவன் ஆரு? மனுசனா மாடா?”

”இந்தக் கடற்கரையில நாலு பணக்காச நான் கண்டு ரெண்டு கிழமையாகுது. தோணியைத் தள்ளி வலய வளஞ்சி மங்க மாஞ்சி இழுத்தா வெறும் மடி கரையேறுது. நேத்து மீன வெச்சி வளைஞ்சிழுத்தா கல்லில கொழுவி வலக்கால் பிஞ்சிது. இண்டைக்கி வெள்ளாப்பில தோணியைத்தள்ளி மீன் இறங்கட்டும் எண்டு இத்தவரை காத்திருந்து போட்டு வளையாமலே வலய இழுத்துக் காயப்போட்டம். நேத்துப் பிஞ்ச இந்த வலக்கால கயித்துக்கடக்கிக் கரத்தையில ஏத்தி அனுப்பத்தான் தண்டயல் ஏர்க்கோலம் பண்ணினார். நான் தான் வலியக் கேட்டு ஔமந்திற்று வாறன். கரத்தைக்காரனுக்கு போற கூலி நமக்கு வரட்டுமே எண்டு. எத்தின நாளக்கிடாம்பி மயிறுக் கிழங்கும் வெறும் வயிருமாக் கெடக்கிறது?”

“இந்த வலைப்பந்த நான் சைக்கிள்ள கட்டி கயித்துக்கடக்கிக் கொண்டு குடுக்கிறன். கூலிய நீ வாங்கிக்க. மீன் கட்டற பொட்டிய எடுத்துக்கிட்டு நீ நடந்து வா. ஆனா ஒரு நிபந்தன. வலகட்டப் போறன் எண்டாயல்லவா? அதுல படுறமீன எனக்குத்தான் தரவேணும் சரியா.”

இஸ்மாலெவ்வையின் ஆலோசனையை எல்லாரும் ஆமோதித்தார்கள். சைக்கிள் கரியரில் இருந்த தகரப் பெட்டி இறக்கப்பட்டது. நாலுபேர் தூக்கி கயிற்றுப் பந்தை சைக்கிள் கரியரில் வைக்க இஸ்மாவெவ்வை நலோன் கயிற்றால் அதை சிக்காறாய்க் கட்டினார்.

”மணல் களியுமட்டும் பின்னால புடிச்சித் தள்ளுங்கடாப்பா. சைக்கிள் றோட்டில ஏறிரட்டும்.” என்றவாறு இஸ்மாலெவ்வை ஹென்றிலைப் பிடித்து முன்னேற பின்னால் இருவர் தள்ளிக் கொடுத்தனர். ஆசனத்தில் ஏறிப் பெடிலை மிதித்தார். சைக்கிள் நகருமட்டும் சிறிது ஓடித்தள்ளிக் கொடுத்துப் பிடியை விலக்கிக் கொண்டனர் இருவரும்.

காத்தமுத்து அனைவரையும் நன்றியுடன் பார்த்துவிட்டு வெற்று மீன் பெட்டியைத் தலையில் வைத்துப் பிடித்துக் கொண்டு கிறவல் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார். சிறிது தூரம் சென்றவர் சிறிது தகைந்து அந்தத் தென்னங்காலையை வாஞ்சையுடன் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டும் கடலையும், அணிவகுத்தால் போல கரையில் நிறுத்தியிருக்கும் தோணிகளையும், தூரத்தில் தொட்டந்தொட்டமாகத் தெரிந்த தென்னங்காலைகளையும், இடைக்கிடை நடமாடிய மனிதர்களையும் கண்கொள்ளப் பார்த்தார். கடற்கரை வீதியோரத்தில் பாலறுகும், கொடியறுகும் எழுத்தாணி இலைகளும், அடம்பன் கொடிகளும் படர்ந்திருந்தன. அவற்றைச் சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்தக் காட்சியையும் புதிதாய்ப் பார்ப்பவர் போல பார்த்துக் கொண்டு நடந்தார். தோணாமடு நெருங்கியது. அறுகும் பொடுதலையும் கம்பளம் விரித்தால்போல பச்சைப்பசேலெனக் கரைகட்டி நிற்க நடுவில் தோண்டிய பெரும் பூவல்கள் நீர்தாங்கி நின்றன. வெளுத்துக் காயப்போட்ட உடு துணிகளை வண்ணான்கள் சிலர் மடித்துக் கொண்டிருந்தனர். இரண்டொரு நாட்டுப் பசுக்கள் அறுகம் புல்லை நறும்பி மோர்சங்கம் வாசித்தன. தோணாவின் சதுப்புப் பிராந்தியத்தில் கீச்சான் குருவிகள் இரை பொறுக்கின. பகலைக்கெல்லாம் நின்று அவற்றைக் கண்கொள்ளலாம் போலிருந்தது காத்தமுத்துவுக்கு. என்றாலும் நடந்தார். எதிரே வந்த மேற்கே போகும் குறுக்கு வீதியில் இறங்கி நடந்தார். ஆள் படுரசிகன். அந்தக்கால வசந்தன் கோலாட்டக்காரர். தோட்டக்காலைப் பள்ளப்பகுதி, பசும்புல்லும் காலைகளின் வேலிப்பனைகளின் அடர்த்தியும், பயிபச்சைகளும் அவரது ரசனையைக் கிளறிவிட்டன.

காலை கடந்த பொட்டல் வெளியில் மஞ்சவணா மரத்தடியில் ஒரு பெட்டையைச் சுற்றி சில ஆண்நாய்கள் ஆளையாள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன.

“நல்லகாலம். முன்வாழ்ந்த மக்கள் கலியாண முறையை ஏற்படித்திற்றாங்க. இல்லாம இருந்தா மனிசன் எப்பவோ செத்துத் தொலைந்து போயிருப்பான்.”

மருதமுனையிலிருந்து துறைநீலாவணைக்குச் செல்லச் சுருக்கமான பாதை, குளக்கட்டு. பிரதான வீதியிலிருந்து குளக்கட்டை நோக்கி இறங்கினார். இடப்பக்கம் நவியாண்குளம், கரைச்சைக்குளம், பேட்டுவட்டையும் வலப்பக்கம் வட்டிக்குளத்தையும் அணைத்துச் செல்லும் குளக்கட்டின் ஒற்றையடித்தடத்தில் காத்தமுத்துவின் சூம்பிய கால்கள் எட்டியெட்டிப் போட்டன. ஆத்திமேட்டில் இருந்து வரும் நவியாண் குளக்கட்டு வட்டிக் குளக்கட்டில் சந்திக்கும் சந்தியில் வம்பி மரநிழலில் பசுக்கள் சில படுத்து இரைமீட்டின.

குளங்கள் காய்ந்து கணம்பேந்து கிடந்தன. சற்றுத் தொலைவில் குட்டியும் பெரியவையுமாய் சில குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘குண்டி காய்ந்தாலும் குதிரை வைக்கோல் தின்னாது’. காய்ந்த புல்லைத் தின்னும் போலும். அவை மட்டக் குதிரைகள். காத்தமுத்துவின் மனக்குதிரை பட்டதும் பச்சையுமான நினைவுகளை மேயத்தொடங்கின.

”இஸ்மாலெவ்வை சைக்கிளில் பெட்டிகட்டி ஒழுங்கை ஒழுங்கையாய் கூவி மீன்வித்து வயித்தக் கழுவுகிறவன். தெய்வமாக வந்து உதவினான். கயிற்றுக் கடைக்காரன் தந்த கூலியில் அரைவாசியைக் குடுக்கப் பார்த்தன். இல்ல ஒரு பத்து ரூபாயாவது எடுத்துத் தேத்தண்ணி குடியெண்டன். சேசே உனக்கு உதவிதான் செய்தன். அரிசக் கறிய வாங்கிற்றுப்போய் புள்ளகுட்டியளோட வயிறாறத்தின்னு எண்டான்”. இவனுக்கெல்லாம் எவ்வளவு பெரிய மனசு.

“போனகிழமை துறையடிக்கு மீன்பார்க்க வந்தனான். பக்கட்டிலிருந்து இல்லாம்பில்லிக்காசு ஆயிரத்தி ஐநூறை நாலுபேர் சேர்ந்து பறிச்சிட்டானுகள். இயக்கக்காறனுகள் எண்டும் பயங்காட்டினானுகள். இயக்கங்களைச் சொல்லி றஸ்தியாதிகாறனெல்லாம் கொள்ளையடிக்கத் தொடங்கிற்றானுகள். மீன் பட்டா பெரியநீலாவணைக் கோயிலடிக்கு கொண்டுவா. நானங்க வரமாட்டன்” என்றான். அவன் சொன்னது மெய்தான் ஊருக்க கதைச்சிட்டாங்கள் ம்… எப்படி இருந்த நாடு எப்படி எல்லாம் போயிற்றுது.

தென்னம் வாடியில் இந்தச் சுமைதாங்கிக்கு மருதமுனைச் சோனிகள் எவ்வளவு ஆதரவு காட்டினான்கள்.

சுமைதாங்கி என்றே பொறந்தாச்சி மகுத்துவரை சுமக்க வேண்டியதுதான். அம்மாவையும் மூணுபெட்டைகளையும் என்னையும் குஞ்சுகுறுமன்களாக இருந்த காலத்திலேயே அனாதைகளாக்கிற்று மன்மறைஞ்சார் அப்பா. அம்மா கழுத்தில் கிடந்த வெள்ளிமணிக் கோர்வையும் காதில் கிடந்த ஐம்பொன் கடுக்கன்களையும் காசாக்கி, பனையோலைப் பெட்டியைத் தலையில் ஏந்தினாள். வெத்திலை லெச்சுமியாம். வாங்கக் கழுதாவளை விற்க மருதமுனை. தொங்கோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாய் அலைஞ்சாவு. பத்து வயசில தர்மப்பள்ளிப் படிப்ப உட்டுட்டு மருதமுனை, நீலாவணைக் கடற்கரையில கூலிக்கு வலை இழுக்கத் தொடங்கினது அம்மாவின் சுமையைக் குறைக்கத்தான் செய்தது. பெட்டைகளின் கருமம் முடிஞ்சதிலிருந்து “உனக்கும் வயசாகுது, காலாகாலத்தில ஒரு கலியாணத்தை முடி ஆண் பெத்த பிள்ளையை இடுப்பிலவை, பெண் பெத்த பிள்ளையை நடத்திப்போ எண்டு சும்மாவா சொன்னாங்க. ஒண்ட புள்ளையைக் கொஞ்ச எனக்குச் சோட்டையில்லையா?” எண்டு பாட்டாகப் பாடிய அம்மா சோட்டை தீராமலே கைலாசம் போனா.

தாய்க்குப் பின் தாரந்தானே. போடி வீட்டுப் பொண்ணா நமக்கு கிடைப்பாள். முடிச்சதும் ஏழை. பெத்த பொடியனுகள் அவனவனுக்கு வயதுவந்து வெள்ளாமை வெட்டப்போன இடங்கள்ள ஒண்டொண்டப் பாத்தானுகள். மூணுபேருமா விதி எண்டானுகள். பொண்ணாப் பொறந்தவற்றை காலடியிலதாணெனல் கிடச்சிச்சி. வந்தவன் மகாராசா மனங்கோணல்ல. வீடு மூணு மாதம் காடு ஒம்பது மாதம் எண்ட வாழ்க்கை மருமகனுக்கு. உன்னிச்சைப் பகுதியில கொம்மாதுறைப்போடிக்கு மாடுமேய்ச்சிக் கட்டுற வேல. காடு கரம்பெல்லாம் குண்டு போடுறானுகளாம். பொடையன் கொத்திருவானுகள். போட்ட குண்டு வாடியில உழுந்திச்சி? கோவில் சிலைபோல் இருந்து எண்ட மகள அறுதாலி ஆக்கிச்சி”

ம்… ஏழாம் வகப்புல ஒரு பொண்கிணாட்ட ஊர்ப்பள்ளியில படிக்கிறாள். ஒம்பதில ஒண்டு மருதமுனையில் படிக்கிறாள். பன்னண்டாம் வகுப்பில மூத்தவன் ஊர்ப்பள்ளியில முதலாவதாளாப் பாஸ் பண்ணினான். அவன நல்லாப் படிக்க வக்கவேணும். எண்ட அங்கலாய்ப்பில் பன்னண்ட படிக்க கல்முனையில கொண்டு சேர்த்தார் மருமகன். பொடியாருக்கிட்ட கடன் வாங்கி ரெண்டுக்கும் ரெண்டு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தார்.

தகப்பன் செத்த கவல… புள்ள உருகிப் போச்சி. நேர் சீராகப் படிக்க மனவடிவு இடங்கொடுக்குமா? புள்ள நல்லாப் பாஸ் பண்ணல. இந்தமுறை சோதினக்கிக் காசுகட்டவேணும். என்னால ஏண்ட மட்டும் ஆலாப்பறக்கிறன். மண்டூர்த்தில்லை முருகப்பனுக்கும் புத்தி சொன்ன ஞானப்பழமாமே நீ. எம்புள்ளக்கி கைகொடு அப்பனே!”

“ட்ரி ரிரீ… ட்ரிரீ… ட்ரிரிரீ…”

ஆட்காட்டியின் கத்தல் கவனத்தை ஈர்க்கக் காத்தமுத்துவுக்கு சிந்தனை கலைகிறது. குளக்கட்டை கடந்து துரிசியின் ஒடுக்கமான கொங்கிறிட் பலகையையும் தாண்டி, ஊருக்குச் செல்லும் கறுப்பு றோட்டில் கால் பதிந்தது கூட ஆட்காட்டியின் உபயத்தால்தான் புலனாகியது.

குளம் வத்திப்போச்சு. ஆட்காட்டி முட்டை வைச்சிருக்கும். நாம அத எடுக்கவா போறம். முட்டையைப் போட அதுக்கு எவ்வளவு கடுப்புக்கடுக்கி இருக்கும். வல்லார் கொள்ளப்படாதே எண்ட கரிசனம் அதுக்கு. இரிக்காதா பின்னே?

கொஞ்சம் நீரேந்திய நிறைவுடன் ஆவாங்குளத்துத் துருசியடி மடு. அதில் முங்கி அமிழ்ந்து சேறு புரண்டு, மேலே தலை கிளப்பிச் சுகமனுபவிக்கும் சில எருமைகள். அவற்றின் பிடரியில் கொக்குகள். காதுச்சோணைகளில் ஒட்டியிருக்கும் உண்ணிகளை கணக்குப் பண்ணுகின்ற பரஸ்பர உதவியால் விளைந்த உறவு. சற்றுத் தொலைவில் இரண்டு வண்டிகள் களி வெட்டி ஏற்றுகின்றன.

“என்ன இருந்தாலும் ஆவாங்குளத்துக் களி களிதான். அவ்வளவுக்குப் பசை முத்தியது. பாண்டிருப்பு சட்டிபானைக் காறிகளுக்காக வெட்டி ஏத்துறானுகள்.

இடப்பக்கம் மேட்டுவட்டை ஆடுகளும் மாடுகளும், பாவாங்கைச் சதுப்பில் மல்லிகைப் பூக்களை இறைத்தவாக்கில் கொக்குப் பாட்டமும், இரணம் தேடும் போராளிகளாய்.

”உப்புப் பூக்கும் இந்த வட்டையில் நேர்சீராய் வெள்ளாமை செஞ்சி எத்தனை வருஷம். பெரிசா வெள்ளம் வந்து உப்பைக்களுவிற்றுப் போனாத்தானே பயிர் முளைக்கும். மேட்டு வட்ட போய் மாட்டு வட்டயாப் போச்சு.

வெறும் மேலுடன் வெங்கார வெயிலில் வந்தவருக்கு வயிரவன் புளியடி நிழல் உடல் தடவிட பரந்த வெளியில் தவழ்ந்து வந்த காற்று வரண்ட தோலில் தேனாய் வழிகிறது. சீமெந்து தாழ்ப் பையைப் பிடித்திருந்த வலதுகை வலியெடுக்க இடதுகைக்கு மாற்றிக் கொண்டார். அதற்குள்ளே அரிசி, தேங்காய், உப்பு, கொச்சிக்காய், வெங்காயம், மாசித்துண்டு, பீடிக்கட்டு, கயிற்றுக்கடைக்காறன் கொடுத்த ஐம்பது ரூபாவுக்கு அடக்கமான கொள்முதல்.

”வாசல்ல இலுமிச்சை காச்சிக் கிடக்கு. கடுக்கென்று உறைக்க புளி ஊத்தி பால்வத்தாத தேங்காய்ப்பூப்போட்டுச் சுண்டியெடுக்கிற மாசிச் சுண்டலுக்கு கிட்டயும் நிக்குமா இறைச்சியும் மீனும்? கால எட்டிப் போட்டா மிஞ்சிப் போனா அஞ்சு நிமிசத்தில ஊடு வந்திரும். மரையான் மொக்கு ரெண்டு கெடக்கு படிக்கிற புள்ளதான். அதுக்கென்ன தொழிலும் பழகத்தானே வேணும். பேரனையும் இண்டக்கி ஆத்துக்குக் கூட்டிற்றுப் போறதான்.

நிழலைப் பார்த்தார். நிழல் கிழக்கே திரும்பியிருந்தது.

“அல்லாஹுஅக்பர்…. அல்லாஹூ அக்பர்…”

மருதமுனையில லொகறுக்கு வாங்கு பறியுது. ஸ்பீக்கர்ல வாங்கு சொல்லத் தொடங்கினதுக்குப் பிறகு, நேரம் அறியிறது லேசாப்போச்சி. மருதமுனை நாய்ப்பட்டிமுனைப் பள்ளிவாசல்களில் சொல்லுற வாங்குச் சத்தம் கேட்டுத்தானே என்ன அலுப்போடு கெடந்தாலும் வாரிச்சுருட்டி எழும்பி வேல வெட்டிக்குப் போகத் தோதுப்படுகுது.

“பேரனும் மூத்தப்பாவும் குடிசைத்திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

”மாசிச் சுண்டல் இண்டக்கி நல்ல ருசியா இருந்திச்சிகாமனே! எண்ட மகளார் கைபட்டுச் சமைச்சா ருசிக்காததும் ருசிக்கும்”.

”பசிச்ச வாய்க்கு எல்லாம் ருசியாத்தான் இருக்கும் அப்பு. ரெண்டு மூணு நாளா மயிறுக்கிழங்கத் திண்ட நாக்கு.”

மகள் சரசு கல்லைகளை எடுத்துக் கொண்டு குசினிக்குடிலுக்குள் போனாள்.

“அடிகமலம் நெருப்புக் கொள்ளி எடுத்திற்று வாகா”

கமலம் பேத்தி மூத்தவள் கொடுத்த நெருப்புக்கொள்ளியை வாங்கிக் குவிந்த உதட்டில் இடுக்கியிருந்த பீடியில் பவ்வியமாக வைத்து காற்றை இழுத்தார். புகை கிளம்பியதும் கொள்ளியைப் பேத்தியிடம் திருப்பிக் கொடுத்தார்.

பீடியை உறிஞ்சி அண்ணாந்து புகைவிட்டவருக்கு கூரையின் கோலம் கவலையை ஊட்டியது. மூன்று வருடங்களுக்கு முன்னம் வேய்ந்த கிடுகு. இற்ற கூரையில் இறைந்து கிடந்த துவாரங்கள் அவர் தலைமேல் உள்ள சுமைகளின் தொகையைக் கணக்கிட்டுக் காட்டின.

“ரெண்டு வருஷமா மாரி ஒழுங்காப் பெய்யாததாலை சமாளிக்க முடிஞ்சுது. களிமண் சுவர். இந்த வருஷம் மாரி பெஞ்சா கரையத்தான் போகுது. ஆவாங்குளத்துக் களி என்னதான் பசைப் பிடிபானதெண்டாலும் அடைமழைக்கு நிண்டு பிடிக்குமா? எல்லாத்துக்கும் முந்தி புள்ளக்கி சோதினை காசி கட்ட வேணும்”.

”சரிமனே புறப்படுவோம்”.

பீடிக்குறையை வாசலில் எறிந்து விட்டு எழுந்தவர் துண்டை உதறித் தலைப்பாகையாகக் கட்டினார். சாப்பு அறைக்குச் சென்று வேட்டியை அவிழ்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டார். கீழ்த்தொங்கலை மடித்து அரையில் முடித்தார். இறப்பில் தொங்கிய வலையை தோழில் போட்டார். மீன் கோர்ப்பதற்கான தடிப்பான நைலோன் கயிற்றை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு வாசலில் இறங்கினார். மாங்கன்றைச் சுற்றிக் குத்தியிருந்த கதியால் கம்பொன்றைப் பிடுங்கி எடுத்தார். மனே நீ அந்த மொக்குத்தடி ரெண்டையும் தூக்கிற்று வா.

“கச்சல் தொங்கல் வெளியே தெரியுதப்பூ. வேட்டிய கொஞ்சம் இறக்கிக் கட்டுங்க.”

பேத்தி மூத்தவளின் வார்த்தைகளைக் கேட்டு மெல்லச் சிரித்துக் கொண்டார்.

”என்னோடொத்த கெழடுதட்டின தமிழனுக்கு அடையாழமே கச்சைதாண்டி”.

“அதுக்கில்லைப்பா! வெளியால போகப்பொறயள்”.

“நானென்ன பட்டணத்துக்கா போறன். ஆத்துக்குத்தானே போறன். சரி நீங்க ரெண்டு பேரும் கடப்படிக்கு முந்துங்ககா. முளிவெசளம் நல்லா இருக்கட்டும்”

பேத்திமார் இருவரும் படலைக்கு விரைந்தனர். சுருட்டக் கூடியதாக கயிற்றில் பிணைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த பனைமட்டைத் தட்டியை மேல்நோக்கி பாய்போலச் சுருட்டிப் பிடித்தாள் மூத்தவள். இளையவள் படலையைத் தாண்டி தெருவோரமாய் வளவுக்குள் முகங்காட்டி நின்றாள். முருங்கைக்காகம் வேலிக்குத்தாவி சுருதி கூட்டிக் கத்தியது. பேத்திகளின் வாழைப்பூ நிறத்து முகமலர்களை வாஞ்சையுடன் பார்வையால் உறுஞ்சியவராக வலக்காலை முன்வைத்து, மண்டூர்த் தில்லை முருகனை மனக்கண்ணால் சுலோகித்துத் தெருவில் ஏறினார். பேரனும் அவரைப் பிந்தொடர்ந்து வீதிக்கு வந்தான்

”போய் வாறம் மக்கள்”.

“கண்ணகை அம்மாள் கண்பார்ப்பாள் அப்பு. போய் வாங்க” என்றாள் மகள்.

பேத்திமார் “அப்பு! டாட்டா! டாட்டா! டாட்டா!” ஒத்திசைக்கு சோடிக் குயில்களாய் ஒலித்துக் கையசைத்தனர்.

விடுவிடென்று நடந்து துறையடியை அடைந்தனர். துறையடித் தங்குமடம் முன்னால் தகரப்பெட்டி கட்டிய சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. மண்டபக்கட்டில் இருந்த இஸ்மாலெவ்வை காத்தமுத்துவை கண்டதும் வெளியே வந்தான். காத்தமுத்து ஆச்சரியப்பட்டார்.

”என்னடாம்பி. என்னவெல்லாம் கதச்ச, இப்ப இங்கவந்து நிக்கிற?”

“அதெல்லாந்தாண்ணே! இதுக்கெல்லாம் பயந்தா கனாயத்தக்களிக்கிற எப்படி? நீ அங்க வராம, நானிங்க வராம சீவிக்கிற எப்படி? பஸ் புரண்டு எவ்வளவோ அழிச்சாட்டியமாகுது. அதுக்காக பஸ்ஸில் பிரயாணம் பண்ணாம உடுறமா? இந்தா…. இந்தா பிறிஸ்டல் பத்து. நேரகாலத்தோட ஆத்தில இறங்கு”

சிகரட்டைப் பற்றி இழுத்து புகை விட்டார். மட்டக்களப்பு வாவியின் தென்னந்தமான அந்த நீர்ப்பரப்பைப் கண்களால் மேய்ந்தார். எதிரே படுவாங்கரை. அன்னமலைக்கிராமம் தென்னைகளும் மரங்களுமாய்க் கரும்பச்சையாகக் காட்சி தருகிறது. தென் மேற்கால சவளக்கடை, அழிந்த கோலத்தில் தென்னாசியாவிலேயே பெரிதென பேசப்பட்ட றைஸ்மில், கிட்டங்கித்தாம்போதி, தெற்கே கண்கரிய சேனைக்குடி தீவத்திடலாய் வாவியையும் வயலையும் அணைத்தவாறு உயர்ந்ததாய் தென்னையும், மரங்களும் செறிந்த துறைவந்தியமேடு, கிழக்கே சாம்பல் பச்சையாய், மரங்களும் கட்டடங்களுமாய் மருதமுனை, நீலாவணை, கண்ணண்டையில் உப்புத்தண்ணிகட்டும் நாணல் புதரும் அதில் கூடுகட்டி வாழும் கொக்குகளும், பக்காக்கிளி, நீர்க்காகங்கள், இறகு விரித்து வெயில் காய்கின்றன. கொடியில் நாடங்காய்கள் போல நாணலில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூடுகள் காற்றில் அலைப்புறக் குருவிகள் சுற்றிப்பறந்து கூட்டில் புகுந்தும் வெளியேறியும் வாழ்வியலை உயிர் உள்ளதாக்குகின்றன.

நாணல் புதரை அடுத்து நீர்ப்பரப்பு ஆத்துவாழை எனப்படும் எருமைநக்கிப் பூண்டுகளால் நிறைந்து பச்சைத்தரைபோல காட்சி தருகிறது. அவற்றில் ஏகமாய்ப் பூத்துக் கிடக்கும் கத்தரிப்பூ நிறப்பூக்கள் இதைவிட அழகு உலகில் ஏது? என்னுமாப்போல் அசைந்தாடுகின்றன. எருமைப்பட்டி ஒன்று எருமைநக்கி இலைகளையும் பூக்களையும் கணக்குப் பார்க்கின்றன. சிகறட் குறையை தூக்கி எறிந்துவிட்டு,

“வாடாமனே ஆத்தில இறங்குவம்”

என்றவாறு நடந்து நீரில் இறங்கினார். பேரன் பின் தொடர்ந்தான். எருமை நக்கியை ஊடறுத்து கைகளால் விலக்கி வலையை நீரில் தொங்கவிடத் தொடங்கினார். பெரியதொரு வட்டம் பிடித்து வலையை வளையப் போட்டு கதியால் கம்பைச் சேற்றில் நாட்டி வலையின் இருமுனைகளையும் கதியாலில் முடிந்து விட்டார். தில்லங்கொட்டைகள் மேற்பரப்பில் மிதக்க வலை நீரை ஆழம்பார்த்து சேற்றைத் தொட்டு நின்றது. வளைச்சலுக்குள் காத்தமுத்துவின் பின்னாலேயே சென்ற பேரன் வலை வளையும் நுணுக்கத்தை உன்னிப்பாக அவதானித்தான்.

காத்தமுத்துவும் மரையாம் மொக்கொன்றை வாங்கிக் கொண்டார். மனதுக்குள் மண்டூர் முருகனையும், ஊர்க்கோடியில் கல்லடி முனையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணகி அம்மனையும் தோத்திரம் செய்து கொண்டார். மரையாம் மொக்குப் பிடிக்கம்பின் நுனியை வலக்கையில் ஏந்தி உயர்த்தி நடுப்பகுதியை இடக்கையைக் கவிழ்த்து தாழ்த்திப் பிடித்து மொக்கை நீரடியை நோக்கி ஓங்கிக் குத்தினார்.

”தூம் திடும்” என்ற சப்தம் ஒலிக்க நீர் குமிழ்விட்டுப் பொங்க நீரலை வட்டங்கள் விரிந்தன. ஆத்துவாழை விலகிக் கலைந்தது. அடுத்து நீரின்மேல் மரையாம்மொக்கால ஓங்கி அடித்தார்.

”சளார்” என்ற சப்தம் எருமைநக்கி கலைவு. நீரலை.

மனே உதயா! இப்ப நான் குத்தி அடித்தது போல அந்தப்பக்கமா செஞ்சு போ. நான் இந்தப் பக்கமாப் போறன்.

உதயன் முதலைக் குட்டியானான்.

”தூம்திடும்… தூம்திடும்… சளார்… சளார்… தூம்திடும்… தூம்திடும்”

நீர்க்குமிழி  நீர்ச்சிதறல்…. நீர்ப்பொங்கள்…. நீரலை வட்டங்களின் வியாபகங்கள்… எருமைநக்கி விலகல் கசங்கல்… பூவழிவு… எட்ட நின்ற எருமைகள் சிதறி ஓடின. சில்லித்தாறாக்கள் கிலுகிலுத்துப் பறந்தன. நாணலிடைக் கொக்குகள், நீர்க்காகங்கள், குருவிகள் கதறி எழுந்து வானில் வட்டமிட்டுப் பறந்தன.

இடுப்பளவு நீரில் எருமை நக்கியை ஊடறுத்து ஊடறுத்து சேற்றில் காலை இழுத்துப் புதைத்து இழுத்துப் புதைத்து…. மரையாம் மொக்கால் நீர் கிழிய இடித்தும் அடித்தும் அந்த வளைச்சல் ஒரு கலக்கல் கலக்கியது. வலையின் பல இடங்களில் துடிப்புத் தெரிந்தது. இருவருக்குமே சர்வாங்கமும் சேர்ந்தது.

“இனிப்போதும்… மனே வலையில … மீன் துடிப்பு… சுளிகுது…”

மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க மரையாம் மொக்கை நீரிலே போட்டார். பேரனும் போட்டான்.

“நீ மீனில கை வையாத நழுவிப் போயிரும். பழக்கமில்லாதவன் என்னோடயே வா”

இடுப்பில் சுற்றியிருந்த நைலோன் கயிற்றை உருவித் தொங்கலைப் பல்லால் கடித்துக் கொண்டார். வலையில் துடித்த இடத்தில் முதலில் கைவைத்தபோது மாட்டிக்கிடந்தது சுமாரான செப்பலி. வெறுப்போடு கழற்றி கயிற்றில் கோர்த்து முடிந்துவிட்டார். அடித்த எட்டில் இன்னொரு செப்பலி. பின் சள்ளல், செப்பலி, செங்கணன் முன்னங்கைப் பருமன் உற்சாகமானார். அடுத்து சின்னவயிற்றுச் செங்கணன், வரால், அதுவும் வாட்டசாட்டமான பருமன். நீள பவ்வியமாக செட்டைக்குள் விரல்விட்டு அடுத்த கையால் தலையை மடக்கி ஒரு முறி. மரணமுறி. செட்டையில் நுழைந்த விரல்களின் பிடியை இறுக்கிப் பிடித்து மெல்லக் கழற்றி கோர்வையில் இட்டார். வயிற்றுப்பக்கம் மஞ்சள் கடுத்த வெள்ளைவரி கொண்ட சினைவிரால், சள்ளல், செப்பலி, செங்கணன், விரால், கைமீன் என நிறைவான படு.

அடுத்து பலமாய்த் துடித்த இடம் நோக்கி விரைந்தார். விஷயம் விளங்கவே மிக நிதானமாய்க் கைவைத்தார். அவரால் நம்ப முடியவில்லை. மிகுந்த எச்சரிக்கையோடு செப்பட்டைகளுக்குள் விரல்களை நுழைத்துப் பிடித்து மறுகையால் தலையைப் பிடித்து மார்புக்கும் கைகளுக்கும் இடையே மீனைச் சிறை செய்தார். எப்பிக்குதித்து வால்பக்கத்தால் மார்பில் உதைத்தது. அனுபவஸ்தர். எதிர்பார்த்ததுதான். மேலும் குனிந்து இரு முழங்கை மடிப்புகளாலும் அணைத்து முழங்கால் முட்டியைத் தலைக்குக் கொடுத்து வலக்கையால் அழுத்தி நெம்பிய நெம்பில் கழுத்து முள்ளந்தண்டு உடைந்து கழன்று செதில்கள் நீரில் மிதக்க வலையிலிருந்து கழற்றினார்.
”மனே! மீன அணைச்சு இறுக்கிப்புடி” எண்ணவும் பேரனும் சொன்னமாதிரிச் செய்ய இருமனிதருக்கும், நீரில் பலவானான மீனுக்கும் இடையே நடந்த மல்லில் மனிதர்கள் ஜெயித்தனர். மீனுக்கோ மரணவஸ்தை. செப்பட்டை பிடித்த இடக்கைப்பிடியை இறுக்கி வலக்கையால் பல்லில் கடித்திருந்த கோர்வைக் கொடியை எடுத்து செப்பட்டைக்குள் நுழைத்து சொண்டுக்கு வெளியே நுனிவெளிவரத் திணித்து, திணித்த கையை எடுத்து கயிற்று நுனியைப் பற்றி ஒரு சுண்டு சுண்டினார். கயிறு மேலே கிழம்ப மீன் கீழே போக வெற்றி வீரனாய் சாபல்யம் பலித்த சந்தோசனாய் நிமிர்ந்தார். முழு அகலத்துக்கு, மூன்றடிக்கு குறையாத நீளமுள்ள கொடுவா. துண்டு போட்டு நிறுத்து விற்கும் வியாபாரி ஆயிரத்துக்கு மேல் விற்பான். முருகனையும் கண்ணகியையும் நன்றி உணர்வுடன் நினைத்துக் கொண்டார்.

சாவகாசமாக, வலையின் மற்றத் துடிப்பிடங்களைச் சோதித்துப் பட்டிருந்த மீன்களைக் கழற்றி கோர்வை செய்தார். பெருமளவில் செப்பலி, அடுத்து சள்ளல், மேலும் ஒரு வரால், ஒரு கருவண்டு றாலுந்தான்.

பேரனின் பரீட்சைக்குக் காசு, உசனாரின் கொடுமதி, சில்லறைக்கடைக்கடன் சுமைகள் தீர்ந்த நிம்மதி மனதை நிறைக்க வலையைக் கொசுவிக் கொசுவி வளையவந்தார். அடுத்த வளைச்சல் செய்ய வேண்டும். அந்தப் பாடும் சரியாய் அமைந்தால் குடிலுக்கு கிடுகு மேய்ந்து விடலாம். நினைப்பு விரைவுபடுத்த வலையைக் கொசுவி தோளில் போட்டு, கதியாலைப் பிடுங்கி கையில் பிடித்தவாறு “வாமன, தள்ளிப்போய் இன்னொரு வளைச்சல் வலகட்டுவம்” கூறிக்கொண்டே இடுப்போடு பிணைந்த மீன்கோர்வை இழுபட்டுவர நடந்தார். பேரன் மரயாம்மொக்குகள் இரண்டையும் இணைத்து மொக்குகள் மேலே தெரிய தோளோடு அணைத்துப் பிடித்துப் பின் தொடர்ந்தான்

”ஹெலிச்சத்தம் கேக்குதப்பு”

வடக்கு முகமாய் இருவரும் திரும்பிப் பார்த்தனர். தூரத்தே வாவிமேல் வான் பரப்பால் வக்கா பருமனாய் ஹெலிகொப்டர் மிதந்து வந்து கொண்டிருந்தது.

“இப்பெல்லாம் புள்ளயள் பட்டம் விட்டு விளையாடுறதில்லை. அதான் இப்ப எலியெல்லாம் பட்டமாய் பறக்குது.

“கல்லடி முனையில் வாழும் கண்ணகித்தாயே! உந்தன் பிள்ளைகள் கஷ்டம் நீங்கப் பேரருள் புரிவாயம்மா!”

”எண்டிசை போற்றும் தில்லை
மண்டூர்வாழ் முருகா கந்தா!”

துன்பங்கள் தீர்த்து வாழ்வு
சிறக்கவே அருள்வாய் வேலா!

கண்ணகை அம்மன் குளுத்தித் திருவிழாக்காலங்களில் வசந்தன் கோலாட்டம், ஆடிய அந்தக் காலத்தில் பாடிய பாடல்கள். சுருதி பிழைக்காமல் பாடிக் கொண்டு திரும்பி நடந்தார் காத்தமுத்து.

ஹெலிகொப்டர், வக்காவடிவு நீங்கி கொக்காகிப் பருந்தாகி ‘கழுகாகி… ராட்சகக் கழுகாகி அவர்கள் தலைக்கு மேல் சீறியது. உதயகுமார் இருப்புக் கொள்ளாமல் அண்ணாந்து பார்த்தான்.

“சட்சட சலிர்ப் பளிர்…. சட்சட சலிர் பளிர்…
சட்சட சலிர்ப் பளிர்… சட்சட சலிர் பளிர்…”

வாவி நீர் புள்ளிகளாய் பொங்கிக் கொதிக்க, நாணல் பறவைகளும் சில்லித்தாறாக்களும் அலறி வான்பரப்பில் அலைமோத, எருமைகள் உழக்கிப் பாய, மரையாம்மொக்குகள் கைப்பிடி தரைநீரில் மிதந்தன வலையுந்தான்.

(யாவும் கற்பனை)
-    களம் (1998)

No comments:

Post a Comment