Friday 21 June 2024
Monday 10 June 2024
`கற்பகதரு’
தமிழக அரசின் மொழியியல் விருதாளரான திரு. ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி ஆவார். அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.
இதுவரை இருபத்திரண்டு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள்,
பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள்
எழுதியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) இவரது ‘கற்பகதரு’ கட்டுரை
நூல் வெளியீடு, அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ‘சிவா – விஷ்ணு’ ஆலய
‘மயில் மண்டபத்தில்’ திரு சங்கர சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரங்கம்
நிறைந்த தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் இனிதே நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டின், வாழ்த்துரையை மாவை நித்தியானந்தன் அவர்களும், நூல்
ஆய்வுரையை திரு சண்முகம் சந்திரனும் நிகழ்த்தினார்கள்.
பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் - தரவுகள் சார்ந்ததாகவும்,
ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள்
எழுதிய `கற்பகதரு’ என்ற இந்தப் புத்தகம் பனை பற்றிய முழுமையான தகவல்கள் கொண்ட
ஒரு பெட்டகமாகும்.
இலக்கியத்தில் ஆரம்பித்து இனிக்கும் பனையுடன் நிறைவு பெறும்
இந்நூல் - பனையின் வரலாறு, அதன் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் எனப் பத்து அத்தியாயங்களில்,
நாற்பது சுவைகளைக் கொண்டுள்ளது.
இந்தப் புத்தகம், என்னைப் போலவே, பலருக்கும் தமது இளமைக்கால
நினைவுகளை மீட்டித்தரும். பனை மரம் பற்றிய இத்தனை தகவல்களையும் எம்மால் மனதிறுத்தி
வைத்திருப்பது என்பது மிகச் சிரமமான காரியம் ஆகும். வேண்டும்போது புரட்டிப் பார்த்து
அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணமாக, திரு ஜெயராமசர்மா அவர்களின் கடும் முயற்சியினால்
உழைப்பினால் உருவாகியிருக்கின்றது இந்தக் `கற்பகதரு’ நூல்.
இத்தனை தகவல்களையும் ஒருசேரத் திரட்டித் தருவதற்கு ஆசிரியர் எவ்வளவு தேடல்களைச் செய்திருக்க
வேண்டும்! ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியரின் இந்த முயற்சி பாராட்டுதற்குரியது. நின்று
நிலைக்கக்கூடிய புத்தகமாக திகழும் இந்தப் புத்தகம் பலரிடமும் போய்ச் சேர வேண்டும்,
பலரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். திரு ஜெயராமசர்மா அவர்களுக்கு
எனது வாழ்த்துகள்.
கற்பகதரு
ஆசிரியர்: மகாதேவஐயர் ஜெயராமசர்மா
பக்கங்கள் ; 232 + xviii
வெளியீடு : 2022
பதிப்பு : மெகா பதிப்பகம், யாழ்ப்பாணம்
ISBN : 978-624-97879-4-0
Saturday 8 June 2024
Saturday 1 June 2024
வளரி – சிறுகதை
அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.
“குட்மோனிங் ஜோன்…”
விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.
கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.
பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.
“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”
“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.
நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.