Tuesday 30 July 2024

லாவண்யா VS வைகுந்தன் - எனக்குப் பிடித்த கதை

 
-        மாதுமை சிவசுப்பிரமணியம்

கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் நுழைந்தாள் லாவண்யா.

மெல்லியதாகப் படபடக்கும் விரல்களினால் பாத் ரூம் கதவைச் சாத்தியவள், “சொறி லேட்டாயிட்டா? ” என்றாள்.
லாப் டொப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தன் “பரவாயில்லை வாங்க, வணக்கம்” என்றான் பதிலுக்கு. குரலில் பதட்டமா பரவசமா கண்டுகொள்ள முடியவில்லை அவளுக்கு.
சில நொடி மௌனம். யாராவது கலைக்க வேண்டுமே…

“என்ன கமல்ஜீயோட படமா பாக்கிறீங்க? ” என்ற லாவண்யாவின் கேள்விக்கு “ ஐயோ அம்மா இந்தா இப்பவே மூடி வைக்கிறன். சும்மா நீர் வரும் வரையும் பொழுது போக வேணும் எண்டு தான் பாட்டுக்களை மட்டும் தட்டிப் பாத்துக் கொண்டிருந்தனான். எனக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணேலாது” என்று சொல்லியபடியே லாப் டொப்பை மூடி பண்ணி மேசையில் வைத்தான். விட்டால் அவளும் சேர்ந்து பார்க்கத் தொடங்கி விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும்.

இன்னும் அந்த குறும்புச் சிரிப்பு அப்படியே அவளிடம் ஒட்டியிருந்தது. “ சரி பெண்டாட்டி இப்ப சொல்லுங்க” அருகில் வந்தமர்ந்து அவளது விரல்களைப் பிடித்தவனிடம் பிடுங்கித் தின்ற வெட்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் “ வைகுந்தன் சூடா ஒரு ப்ளாக் கோப்பி குடிக்கலாமா? ” என்றாள்.

Friday 5 July 2024

`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

 

அற்புதமான புத்தகத்தின் தலைப்பு. இலங்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் ஒரு ஒளிக்கீற்றாக கெகிறாவ ஸுலைஹாவின் இந்தப் புத்தகம் விளங்குகின்றது.

ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.