Saturday, 1 February 2025

`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்



இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் தற்போது வரட்சியான நிலையிலேயே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் எஸ்.பொன்னுத்துரை, சோ.பத்மநாதன், சி.சிவசேகரம், ரூபராஜ் தேவதாசன் போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ரிஷான் ஷெரீப், கெகிறாவ ஸுலைஹா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் ரிஷான் ஷெரீப் வேகவேகமாக பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றார். கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புகளில் ஒரு ஒளிக்கீற்றாக `கிழக்கினை எதிர்கொண்டு’ என்ற இந்தப் புத்தகம் விளங்குகின்றது. இதன் தலைப்புக் கூட சூழ்நிலைக்கேற்றவாறு அற்புதமாகவே தோன்றுகின்றது.

ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.

பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் மூலம், நமக்கு அவர்களைப்பற்றிய பின்னணியையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. கூடவே `மொழி மாறி வந்த பிரதிகளும் அவை பேசும் அரசியலின் பொதுமையும்’ என்ற தலைப்பில் மேமன்கவி அவர்களின் பின்னுரையும் இடம்பெற்றுள்ளது.


பல்வேறு நாடுகளின் கலாசாரப் பின்னணிகள் கொண்ட இந்த பதினாறு கதைகளின் மூலப்பிரதிகளைத் தந்தவர்களில் ரவீந்திரநாத் தாகூர், லியோ டோல்ஸ்டோய், கே.ஏ.அப்பாஸ், ஓ ஹென்றி, ஒஸ்கார் வைல்ட், அண்டன் செக்கோவ்ஃ போன்றவர்களை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கின்றேன். பேட் கார், நாசிர் ஜெஹாங்கீர், அப்துல் கனி பெக் அத்தார், நயீமா அகமட், ஸாகி (எச்.எச்.முன்ரே), காத்தரீன் மான்ஸபீல்ட், புன்யாகாந்தி விஜேநாயக்க, சீதா குலதுங்க, கிரிகோரியா ஃபியோன்டெஸ் போன்றவர்கள் எனக்குப் புதியவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் வெவ்வேறு நாட்டினரைச் சேர்ந்த பலரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் வாசிப்பில் வித்தியாசமான அனுபவம் கிட்டுகின்றது. இந்தியா – வங்கம், அமெரிக்கா – டெக்காஸ், இந்தியா – காஷ்மீர், பர்மா, பிரித்தானியா, இலங்கை, நைஜீரியா, வட அமெரிக்கா – மெக்ஸிக்கோ, சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, அயர்லாந்து – டப்ளின் போன்ற நாட்டின் எழுத்தாளர்களையும் அவர் தம் படைப்புகளையும் ஒரே புத்தகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது. தனி ஒரு படைப்பாளியின் ஆக்கத்தை மொழிபெயர்ப்பில் படிக்கும்போது கிடைக்கும் இரசனையைக் காட்டிலும் இது வேறுபடுகின்றது. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய `என் பிரபுவே, அந்தக் குழந்தை’ கதையில் வங்காள தேசத்தின் பத்மா நதிக்கரையை இவ்வாறு வர்ணிக்கின்றார் : |மழைக்காலம் வந்தது. மழை கூடிக்கொண்டே போனது. நாளாக ஆக, பசி கொண்ட பத்மா நதியின் நீரோட்டம் பெரும் பாம்பைப் போல மனைகளை, கிராமங்களை, பயிர் நிலங்களை, உயரமாய் வளர்ந்திருந்த புற்றரைகளை, கரையோர மணற்றரையில் வேரூன்றியிருந்த சவுக்குத் தோப்புகளை விழுங்கித் தீர்த்துப் பேயாட்டம் போட்டது. அவ்வப்போது நதிக்கரையோரமே வெடிக்கிறாற்போல பெரும் இரைச்சல் எழுந்தது. தீரா மழையின் கர்ச்சனை தொலைதூரம் வரை கேட்டது. அலையோ அதிவேகமாய் எதையெதையோ அள்ளி வந்து போட்டுப் போனது.| கதையின் பின்பாக வரவிருக்கும் பயங்கரத்தைச் சொல்வதற்கான முத்தாய்ப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம். போலவே, அடுத்து வரும் நாசிர் ஜெஹொங்கீர் எழுதிய `அந்தச் சிறுவனே குற்றவாளி’, அப்துல் கனி பெக் அத்தார் எழுதிய `எதிரி’, நயீமா அகமட் எழுதிய `நான் இன்னும் உயிருடனிருக்கின்றேன்’ என்ற மூன்று கதைகளும் நம்மை காஷ்மீர் நோக்கி இழுத்துச் செல்கின்றன. `எதிரி’ என்ற கதையில் – நான் மறுகரையில் இந்திய அடையாளத்தை என் முகத்தே தரித்து நிற்க, என் சகோதரனோ பாகிஸ்தான் அடையாளத்தை பதித்த முகத்தோடு மறுகரையில் வாழ்ந்திருந்தான். நான் `ஆத்முகாம்’ பாலத்தை அடைந்திருந்தேன். அவனது குடிசை ஆற்றோரமாக சரியாக அடுத்த பக்கத்தே இருந்தது. இன்னும் அந்து நிமிடங்களில் அங்கடைந்து விடலாம் எனக்கு. ஒரு கள்வனைப் போல வலதும் இடதுமாய் ஓரப்பார்வை பார்த்துப் பார்த்து நான் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தேன். சில அடிகள் மட்டுமே தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் இடியாய் ஒலித்த அந்த குரல் என்னை நிறுத்திற்று… `நில்’ பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் போல உறைந்து நின்றேன் நான். நாமும் இந்த இடத்தில் வாசிப்பை இடைநிறுத்தி உறைந்து நிற்கின்றோம். இப்படியாகத் தொகுப்பில் இடம்பெறும் கதைகள் எல்லாம் சொல்லுக்குள் அடக்கமுடியாதபடி நம் நெஞ்சில் பதைபதைப்பை விதைத்துச் செல்வதைக் காணலாம்

இதில் உள்ள பல கதைகள் வேறு மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்திற்கு மாறி பின்னர் அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கின்றன. சில நேரிடையாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கதைகளுக்குத் தகுந்தபடி இவரது மொழிபெயர்ப்பு வளைந்து குடுப்பதை வாசிக்கும்போது கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. `என் பிரபுவே, அந்தக் குழந்தை’ கதையில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்களைப் பாருங்கள் : `குழந்தை தவழத்தொடங்கி வாசலண்டை போய் நின்று சிரிக்கத் தொடங்கிற்று. ரைச்சரன் ஓடிச்சென்று வீழ்ந்துவிடாமல் பிடிப்பான் குழந்தையை. விளையாட்டாய் கூச்சல் போட்டுக் குதூகலிக்கும் அது.’ ஆசிரியர் `ரைச்சரன் ஓடிச்சென்று குழந்தையை வீழ்ந்துவிடாமல் பிடிப்பான்.’ என்று சொல்லாமல் கவித்துவமாக ஒரு நடையை அங்கே கையாள்கின்றார். கூடவே `ஆரவாரமின்றி அஸ்தமிக்கிற சூரியன் மெளனமாய் ஒளி சிந்திற்று பேரற்புதமாய்’, `சேற்றுத் தரையில் வேரூன்றி வளர்ந்திருந்த கதம்பமரம் மலர்களால் நிரம்பி வழிந்தபடி நின்றிருந்தது குழந்தை சுட்டிய திசை வழியே’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் கதை நெடுகிலும் இருந்தன. போலவே, ஸாகி எழுதிய `அந்தத் திறந்த ஜன்னல்’ கதையின் தொடக்கம் இப்படி ஆரம்பிக்கின்றது : “என் சித்தி இன்னும் சற்றையில் இங்கே வந்துவிடுவார் மாடியிலிருந்து கீழிறங்கி திரு. நாட்டேல் அவர்களே…”

பெரும்பாலும் இந்தக் கதைகளில் சிறுவர்களின் வாழ்வு அடிநாதமாக இருக்கின்றது. ஆசிரியர் சொல்வது போல, அவர்களின் குரல் பெரியவர்களுக்கு எதையோ ஒன்றைச் சொல்லிச் செல்கின்றது. `அந்த திறந்த ஜன்னல்’ கதையின் கருப்பொருளான, பெரியவர்கள் சிறியவர்களிடம் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள் என்ற கருத்தாகட்டும், `சிறுவர்கள் பெரியோரைவிட புத்திசாலிகள்’ என்ற கதையில் சிறுவர்களின் விளையாட்டுச் சண்டையைப் பெரிதாக்கி பெரியவர்கள் போடும் சண்டையும் – பின்னர் சிறுவர்கள் சினேகிதமானதும் பெரியவர்கள் வெட்கித் தலை குனிவதையும் காணலாம். ஆக தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் பெரியவர்கள் பல பாடங்களை சிறுவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையே காணக் கூடியதாக இருக்கின்றது. இந்தக் கதைகள் சிறாரை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும், கதைகள் என்னவோ வயதுவந்தவர்களுக்கு உரியவைதான்.

இனி தொகுப்பில் உள்ள சில கதைகளைப் பார்க்கலாம்.

முதல் கதையான ரவீந்திரநாத் தாகூர் எழுதிய `என் பிரபுவே, அந்தக் குழந்தை`, தொகுப்பிற்கு சிகரம் வைத்தால் போல் இருக்கின்றது. சமீபத்தில் குற்றால அருவியில் ஒரு சிறுவன் அள்ளுப்பட்டுச் செல்லும் காட்சியை இணையத்தில் பார்த்தபோது ஏற்பட்ட பதைபதைப்பு, இந்தக் கதையைப் படிக்கும்போது ஏற்பட்டது. எஜமானின் குழந்தையை குளமொன்றில் தொலைத்துவிட்டு நிற்கும் ரைச்சரன் என்ற சிறுவனின் பதைபதைப்பும், கண்ணீர் ததும்பிய அவனது முகமும் என்றும் நினைவில் நிற்பவை. பின்னாளில் அவனின் தியாகம் அளப்பரியதாகின்றது. ஆசிரியர் சொல்வது போல் அன்பு, நம்பிக்கை, நல்லெண்ணம், நல்லிணக்கம், மனிதாபிமானம் கொண்ட எழுத்து இது.

இந்தத் தொகுப்பில் இருக்கும் காஸ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கதைகளும் அந்தப் பிரதேசத்திற்கான பிரச்சினைகளைத் தொட்டுச் செல்பவை. இந்தக் கதைகள் நீர்ஜா மாத்தூ மொழிபெயர்த்த காஸ்மீர் சிறுகதைத் தொகுப்பான `The Stranger Beside Me’ இல் இருந்து பெறப்பட்டிருக்கின்றன.

புன்யாகாந்தியின் `குரங்குகள்’ கதை, சிறுவர்களை சுதந்திரமாக அவர்களின் வழியில் செல்லவிடாது, இளம் வயதில் மதத்திற்குள் திணிக்கும் செயலைச் சாடுகின்றது. இதில் வரும் சிறுவனின் உளவியல் சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.

கிரிகோரியோ ஃபியோண்டெஸ் எழுதிய `கடவுளுக்கோர் கடிதம்’ கதையின் முடிவு நகைச்சுவையைத் தந்தாலும், அது கொண்டிருக்கும் பொருள் மிகப் பெரியது. இயற்கை எல்லை மீறும்போது கடவுளின் மீதான நம்பிக்கை வலுக்கின்றது. வித்தியாசமான முடிவு கொண்ட கதை.

`Little Girls Wiser Than Men’ என்ற லியோ டோல்ஸ்டோயின் கதையின் தலைப்பை, ஆசிரியர் பொதுப்படையாக `சிறுவர்கள் பெரியோரைவிட புத்திசாலிகள்’ என மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். இந்தக் கதையில் சிறுமிகள் இருவர் விளையாடும்போது தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொள்ள, அதன் நிமிர்த்தம் பெரியவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். அடுத்த கணமே சிறுமிகள் சமாதானம் கொண்டு மீண்டும் விளையாடுவதைப் பார்த்து பெரியவர்கள் திகைப்படைந்து கொள்வதைக் காட்டுகின்றது.

சிறு வயது நட்பு, இருபது வருடங்களில் எப்படி மாறிவிடுகின்றது என்பதைச் சொல்கின்றது ஓ.ஹென்றி எழுதிய `இருபது வருஷங்களின் பிறகு’ சிறுகதை. முடிவில் திருப்பத்தை வைத்து அற்புதங்களை நிகழ்த்தும் எழுத்தாளர் ஓ.ஹென்றி.

தன் மகன் இறந்த துயரத்தை ஏனையவருக்கும் சொல்லி ஆறுதல் கொள்ளத் துடிக்கும் ஒரு குதிரைவண்டிக்காரனின் கதை அண்டன் செக்கோவ்ஃப் எழுதிய `புலம்பல்’ . இறுதியில் அவனது கதையைக் கேட்பது அவனது வயது முதிர்ந்த குதிரைதான். `உனக்கு ஒரு குட்டி இருந்து அது இறந்து போனால் உனக்கு எப்படி இருக்கும்… துயரமாய் இருக்காதா?’ என்பதுடன் கதை முடிகின்றது.

இந்தக் கதைகளை எந்தச் சந்தர்ப்பத்தில், ஏன் தெரிவு செய்து மொழிபெயர்த்தேன் என்பதை கெகிறாவ ஸுலைஹா அவர்கள் முன்னுரையில் சொல்வதாலும் ; மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றியும் கதைகளைப் பற்றியும் மேமன்கவி அவர்கள் பின்னீடாகத் தந்திருப்பதாலும் ; முன்னுரை, பின்னிணைப்பு, பின்னீடு என்பவை இங்கே மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஆகின்றன.

கெகிறாவ ஸுலைஹா அவர்கள் மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப் பெற்றிருக்கின்றார். இவரது கற்பித்தல் தொழிலும், தலைமைத்துவமும், ஆர்வமும் மொழிபெயர்ப்பில் பல பரிமாணங்களைத் தொட்டு நிற்பதற்கு உதவுகின்றன. தொடர்ந்தும் இவரிடமிருந்து இத்தகைய முயற்சிகளை எதிர்பார்க்கின்றேன்.



கிழக்கினை எதிர்கொண்டு – மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

கெகிறாவ ஸுலைகா

ஜீவநதி வெளியீடு – 174 (இலங்கை)

வெளியான ஆண்டு - 2020

பக்கங்கள் – 136

விலை – 450 ரூபா (இலங்கையில்)

ISBN : 978-955-0958-63-4

No comments:

Post a Comment