Thursday, 6 March 2025

`பறவைகள்’ நூல் அறிமுகம்


மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.

`பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன.

பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. `எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. `புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.

சிறுவர் சிறுகதைகளில் `கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

`மர்ம மாலை’ என்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது. கனடாவில் பிறந்து வளர்ந்த 18 சிறுவர்களுடன் நூல் ஆசிரியரும் சேர்ந்து தொடரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். மொத்தம் 20 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரின் முதல் - இறுதி அத்தியாயங்களை நூலின் ஆசிரியர் எழுத, ஒவ்வொரு சிறுவர்களும் அந்தத் தொடரை வாசிக்கத் தூண்டும் வகையில் மிக அழகாக எழுதியிருந்தார்கள். நூல் ஆசிரியர் அவர்களை வழிநடத்தி தானும் எழுதியிருப்பது சிறப்பு. இந்தத் தொடரின் இறுதி அத்தியாயமும், நடந்தவை அனைத்தும் கனவு என்று சொல்லவருவது ஏமாற்றமாக உள்ளது.

தொகுப்பில் இடம்பெறும் பெரும்பாலான கட்டுரைகள் ஏதோ ஒரு வகையில் பெண்கள் தொடர்பானவை. அவை விஞ்ஞானத்தில், சமூகத்தில், இலக்கியத்தில் என பெண்கள் அடைந்த முன்னேற்றம் பற்றிச் சொல்கின்றன. முதல் இரண்டு கட்டுரைகளும் விண்வெளி ஆய்வில் பெண்கள் வகிக்கும் பங்கினைச் சொல்கின்றன. அதிகரித்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவாகும் புதிய சொற்களுக்கு, மாற்றீடாக தமிழ்ச்சொற்களைக் கொண்டு வருவதில் உள்ள இடர்ப்பாடுகளை ஆராய்கின்றது `புதியன புகுதலும், பழையன கழிதலும்’ என்ற கட்டுரை. `சமாதானத்திற்கான நோபல் பரிசுபெற்ற பெண்கள்’ என்ற கட்டுரையில் நோபல்பரிசு சார்ந்த பல அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. `என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள் என்று சொன்னாலும், இதுவரை கிடைத்த 853 நோபல் பரிசுகளில் 43 நோபல் பரிசுகள் மட்டுமே பெண்களுக்குக் கிடைத்திருக்கின்றன’ என்ற தகவல் ஏக்கம் தருவதாகவே இருக்கின்றது. `திருக்குறளைத் திருத்த வேண்டும்’, `பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார்’ என்று சுபமங்களா இதழுக்கு நேர்காணல் வழங்கிய ராஜம் கிருஷ்ணன் பற்றிய கட்டுரை ஒன்றும் இதில் உள்ளது.

சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர், கனடாவில் வெளிவரும் தூறல் இதழின் சிறுவர் பகுதி ஆசிரியராக இருந்திருக்கின்றார். அதில் இவர் எழுதிய தலையங்கங்கள் சில புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. அவை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் படிக்கும் சிறார்களுக்கு உதவியாக பல தகவல்களையும் அறிவுரைகளையும் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. `இந்த உலகத்தை எங்கள் முன்னோர்கள் எங்களுக்குத் தந்துவிட்டுப் போகவில்லை, எங்கள் பிள்ளைகளிடம் இருந்துதான் நாங்கள் கடனாகப் பெற்றிருக்கின்றோம்’ என்று வட அமெரிக்கப் பழங்குடி மக்கள் குறிப்பிடுவதுபோல இந்தப் பூமிப்பந்தைக் கவனமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது எங்கள் கடமையாகும் என்கின்ற நூல் ஆசிரியர், அந்தக் கடமையில் இருந்தும் வழுவாதவராகவும் இருக்கின்றார்.

இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு முன்னேறும் காலம் வந்துவிட்டது. அப்படி தன்னை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டவர் மாலினி அரவிந்தன்.

இனிய நந்தவனம் பதிப்பகம்

ஆகஸ்டு 2021

விலை ரூ 150

Tuesday, 4 March 2025

வீமன்காமம் (இது ஒரு புருடாக்கதை) - கங்காருப் பாய்ச்சல்கள் (49)


பஞ்சபாண்டவர்கள் தமது வனவாச காலத்தில், ஒருமுறை எமது ஊரிற்கு வந்திருந்தார்கள். அப்போது அடிக்கடி வீமனைக் காணக் கிடைக்கவில்லையாம்.

வீமன் ஊரிலுள்ள கன்னிப்பெண்களையெல்லாம் கலைத்துக் கலைத்து வேட்டையாடத் தொடங்கிவிட்டானாம். அவ்வளவுக்கு அழகும், படு கவர்ச்சியும் கொண்டவர்கள் எமது ஊர்ப் பெண்கள். வீமன் கலைத்துக் கலைத்துக் காமம் கொண்டதனால் எமது ஊருக்கு `வீமன்காமம்’ என்ற பெயர் வருவதாயிற்று.

வீமனின் இம்சை தாங்காத பேரழகி காஞ்சனா, வீமனுக்கு தினமும் டிமிக்கிரி கொடுத்தவண்ணம் இருந்தாள். ஒருநாள் அவளைக் காணவில்லை. கோபம் கொண்ட வீமன் அவளைக் கவர்ந்து வர நாற்புறமும் படை அனுப்பினான்.

அப்போது ஊரின் கிழக்குப்புறம் பெரும் காடாக இருந்தது. அங்கே பெருவாரியாக மயில்கள் இருந்தன. அவை படையினரைத் தோகை விரித்து எதிர்கொண்டன. படையினர் அங்கிருந்த மயில்களை எல்லாம் தமது உணவுக்காக அப்பினார்கள். அதனால் அந்த இடம் மயிலப்பை என்பதாயிற்று.

வடக்கு தெற்குப் புறமாகச் சென்ற படையினர் எதிர்ப்பட்ட மனிதர்களை எல்லாம் கொத்தியும் வெட்டியும் சங்காரம் செய்தனர். மனிதர்கள் கொத்தி எரிக்கப்பட்ட இடம் `கொத்தியால் சுடலை’ எனவும், வெட்டிச் சரிக்கப்பட்ட இடம் – ஆளை வெட்டி – மருவி வந்து `அளவெட்டி’ எனவும் வழங்கப்படலாயிற்று.

எத்திசையிலும் காஞ்சனாவைத் தேடிக் காணக்கிடைக்காததால், சன்னதமாடிய வீமன் மேற்குப்புறமாக தானே படையுடன் கிழம்பினான். ஒரு இரவு முழுவதும் உறங்காமல் மல்லாக்கப்படுத்து (மல்லாக்கம் - மல்லாகம்) அரண்டு புரண்டான்.

காஞ்சனா ஒரு நடனமாது என்பதால், தினமும் அவள் தூக்கிய காலை எங்கே வைப்பாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

மறுநாள் கோபம் கொண்ட வீமன், கண் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். இடையில் எதிர்ப்பட்ட ஒரு ஊரில் இருந்த சாமியார் ஒருவர், `நீவிர் இதுவரை போகாத இடத்திற்கு போய் தேடிப் பாரும்’ என்று கர்வத்துடன் சொன்னார். `குட் பிளான்’ என்று சொன்ன வீமன் அங்கிருந்து ஒரு புதிய ஊருக்குச் சென்றான். சாமியார் இருந்த இடத்திற்கு `குப்பிளான்’ என்ற பெயர் அன்றுமுதல் வழங்கி வருவதாயிற்று. இடையில் ஒரு மூதாட்டி தான் அந்தப்பெண்ணைக் கண்டதாகவும், அவள் இருக்கும் அந்த `ஊர் அங்கினை’ இருக்கு என்று கைகளால் காட்டினாள். உடனே மூதாட்டி இருந்த இடம் ஊரங்குனை ஆயிற்று. சாமியாரும் மூதாட்டியும் சொன்ன திக்கில் சென்ற வீமன் காஞ்சனாவைக் கண்டுகொண்டான். ஊர் அதிரச் சிரித்த வீமன், `கட்டினால் உன்னைத்தான் கட்டுவனடி’ என்றானாம். `அடைந்தால் காஞ்சனாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று கர்ச்சித்த வீமன், அருகே நின்ற பெண் ஒருத்தியின் கழுத்திலிருந்த தாலையைப் பறித்து காஞ்சனாவின் கழுத்தில் கட்டியே விட்டானாம். கட்டுவன் கட்டுவன் என்று வீமன் கங்கணம் கட்டியதால் ஊரிற்கும் `கட்டுவன்’ என்று பெயர் வந்துவிட்டது.

Saturday, 1 March 2025

வென்வரிப்படங்கள் – கங்காருப் பாய்ச்சல்கள் (48)


எனது நண்பர்கள் சில வருடங்களாக `கோமா’ நிலையில் இருந்து விடுபட்டு, திடீர் திடீரென `WhatsApp’ குறூப்புகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். பாடசாலை, பல்கலைக்கழகம், இளைஞர் சங்கம் எனப் பலவகைப்பட்ட வகை மாதிரிகள். ஊருக்கென்றும் இருக்கின்றன. இத்தனை வருடங்களாக ஆரம்பிக்கப்படாத அமைப்புகள் இப்பொழுது எதற்காக? தாமதத்திற்கான காரணம் நாட்டுப் பிரச்சினைகளா அல்லது முதுமையின் கூக்குரலா?

ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாமல் இருந்தவர்கள் எல்லாம் இன்று இணைந்துவிட்டார்கள். ஒருவர் போடும் படங்களுக்கு/பதிவுகளுக்கு சிலர் மெளனம் சாதிக்கின்றார்கள். ஒருவரை இன்னொருவர் அழைத்து மற்றவர் பற்றிப் புறம் பேசுகின்றார்கள், அவர்கள்தம் குடும்பத்தைக் குலைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இப்பவும் இருக்கின்றார்கள். அப்போதிருந்த இயல்புகளுடன் தான் இப்போதும் இருக்கின்றார்கள். காலம் எந்தவித மாறுதல்களையும் இவர்களிடம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

உலகம் சுருங்கிவிட்டது என்கின்றார்கள். ஒருவர் `குட் மோணிங்’ என்கின்றார். மற்றவர் அதே நேரத்தில் `குட் நைற்’ சொல்கின்றார். நேர காலம் இல்லாமல் தொலைபேசி அழைப்புகள் விடுக்கின்றார்கள்.

ஒரு 50 பேர்கள் கொண்ட குறூப்பிற்குள்ளும் பிரிவுகள். குறூப்பிற்குள் குறூப்புகள். கணிதத்தில் படித்த வென்வரிப்படங்கள் போல.

இப்பொழுது நானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டேன். அது எத்தகையை ஐக்கியம் என்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும்தான் தெரியும்.



சமீபத்தில் நான் ஒன்றை அவதானித்தேன். அறுபது வயதைக் கடந்தவிட்ட என் நண்பர் ஒருவர், தமிழில் வாசிப்பதையோ எழுதுவதையோ விரும்பாதவர், வெறுப்பவர் – தனது நண்பனின் இழப்பிற்காக எழுதிய ஒரு உருக்கமான தமிழ் கடிதம் அது. புலம்பி அழுதிருந்தார். அவர் தன் குடும்ப உறவினர்களையும் உள் இழுத்து, குடும்ப உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்பின்போது அவர் எப்படி உதவி செய்திருந்தார் என்றெல்லாம் உருக்கமாக எழுதி, கடைசியில் தன்னைப்பற்றிய சுயவிம்பத்தையும் காட்டி எழுதியிருந்தார். எல்லா உதவிகளும் செய்த அந்த நண்பருடன், கடைசி காலங்களில் தான் தொடர்பில் இருக்கவில்லையாம்? எப்படி இருக்கின்றது இது? பழமொழிகள் சும்மாவா வந்தன?

தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும், தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்.