.jpg)
எனது நண்பர்கள் சில வருடங்களாக `கோமா’ நிலையில் இருந்து விடுபட்டு, திடீர் திடீரென `WhatsApp’ குறூப்புகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். பாடசாலை, பல்கலைக்கழகம், இளைஞர் சங்கம் எனப் பலவகைப்பட்ட வகை மாதிரிகள். ஊருக்கென்றும் இருக்கின்றன. இத்தனை வருடங்களாக ஆரம்பிக்கப்படாத அமைப்புகள் இப்பொழுது எதற்காக? தாமதத்திற்கான காரணம் நாட்டுப் பிரச்சினைகளா அல்லது முதுமையின் கூக்குரலா?
ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாமல் இருந்தவர்கள் எல்லாம் இன்று இணைந்துவிட்டார்கள். ஒருவர் போடும் படங்களுக்கு/பதிவுகளுக்கு சிலர் மெளனம் சாதிக்கின்றார்கள். ஒருவரை இன்னொருவர் அழைத்து மற்றவர் பற்றிப் புறம் பேசுகின்றார்கள், அவர்கள்தம் குடும்பத்தைக் குலைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இப்பவும் இருக்கின்றார்கள். அப்போதிருந்த இயல்புகளுடன் தான் இப்போதும் இருக்கின்றார்கள். காலம் எந்தவித மாறுதல்களையும் இவர்களிடம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
உலகம் சுருங்கிவிட்டது என்கின்றார்கள். ஒருவர் `குட் மோணிங்’ என்கின்றார். மற்றவர் அதே நேரத்தில் `குட் நைற்’ சொல்கின்றார். நேர காலம் இல்லாமல் தொலைபேசி அழைப்புகள் விடுக்கின்றார்கள்.
ஒரு 50 பேர்கள் கொண்ட குறூப்பிற்குள்ளும் பிரிவுகள். குறூப்பிற்குள் குறூப்புகள். கணிதத்தில் படித்த வென்வரிப்படங்கள் போல.
இப்பொழுது நானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டேன். அது எத்தகையை ஐக்கியம் என்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும்தான் தெரியும்.
•
சமீபத்தில் நான் ஒன்றை அவதானித்தேன். அறுபது வயதைக் கடந்தவிட்ட என் நண்பர் ஒருவர், தமிழில் வாசிப்பதையோ எழுதுவதையோ விரும்பாதவர், வெறுப்பவர் – தனது நண்பனின் இழப்பிற்காக எழுதிய ஒரு உருக்கமான தமிழ் கடிதம் அது. புலம்பி அழுதிருந்தார். அவர் தன் குடும்ப உறவினர்களையும் உள் இழுத்து, குடும்ப உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்பின்போது அவர் எப்படி உதவி செய்திருந்தார் என்றெல்லாம் உருக்கமாக எழுதி, கடைசியில் தன்னைப்பற்றிய சுயவிம்பத்தையும் காட்டி எழுதியிருந்தார். எல்லா உதவிகளும் செய்த அந்த நண்பருடன், கடைசி காலங்களில் தான் தொடர்பில் இருக்கவில்லையாம்? எப்படி இருக்கின்றது இது? பழமொழிகள் சும்மாவா வந்தன?
தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும், தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்.
No comments:
Post a Comment