Monday 6 April 2020

தக்கன பிழைக்கும் - கங்காருப் பாய்ச்சல்கள் (30)



எப்போதோ நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளில் ஐந்து சிறுகதைகள் எனக்கு இப்போது பிடித்திருக்கின்றது எனச் சொல்வதும், அதையே இன்னொரு எழுத்தாளர் – எனக்கோ அவர் எழுதியவற்றுள் இரண்டு கதைகள் தான் பிடித்திருக்கின்றது என்று சொல்வதும் எத்துனை அபத்தம். குறைந்தது அந்த எழுத்தாளரை இத்தனை வருடங்கள் கழித்தும் கொண்டாடுகின்றோமே என்பதையிட்டு பெருமைப்படுங்கள். ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில் எனக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்வதைப் போல் இருக்கின்றதல்லவா இது! அந்த எழுத்தாளர் எப்போது இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறையை அவதானிக்க வேண்டும். அந்தக் காலத்தில் எத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் சிறப்புற்று இருந்ததானால் தான், அவரும் தொடர்ந்து எழுதியிருப்பார் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை?

இதையும் கடந்து - இப்போது சிலர் தொகுப்புகளை விமர்சிக்கும்போது, இன்னாரது தொகுப்பில் உள்ள ’இந்த ஒரு சிறுகதைக்காகவே’ அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்வது நகைப்புக்கிடமாக உள்ளதல்லவா? ‘ஓ… என்னுடைய கதைகளில் இந்தக் கதையை சிறந்தது எனப் புகழ்ந்துவிட்டாரே’ என எழுதிய எழுத்தாளரும் புளகாங்கிதம் கொள்வதும் வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் அவரது தொகுப்பில் இருக்கும் எஞ்சிய கதைகளை என்னவென்று சொல்வதாம். எழுத்தாளரைக் குளிர்விப்பது ஒருபோதும் அவரது கதைகளை விமர்சனம் செய்வது என்று சொல்லலாகாது. இத்தனை கதைகளில் இது ஒன்றுதான் இப்பொழுது தேறியிருக்கின்றது என்றால், இன்னும் நூற்றாண்டுகள் கழித்து?

வாசகர்களே உங்கள் கருத்து என்ன?


1 comment:

  1. சிறப்பான அலசல்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete