Wednesday 1 April 2020

தொண்ணூற்றி ஒன்பது வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம் நிறைவு பெற்றது.



அஞ்சலிக் குறிப்பு

‘சக்கடத்தார்நாடகம் பார்த்திருக்கின்றீர்களா?

ஒருகாலத்தில் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறிய அந்த நாடகத்தில், அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து கேட்கக்கூடாத பல கேள்விகள் கேட்டபடியே ஒருவர் வருவார். அந்த ஆசிரியர் பாத்திரத்தில் வருபவர்தான் இங்கே கீழுள்ள மூன்று சம்பவங்களிலும் பாத்திரமாகியுள்ளார். அவர் கலைவளன் திரு. சிசு நாகேந்திரன்.

இந்த 'சிசு'வில் ஒரு விஷேசம் இருக்கின்றது. தாய் பெயர் சின்னம்மாள்; தந்தை பெயர் சுந்தரம்பிள்ளை. இருவரினதும் முதலெழுத்துக்கள்தான் சிசு. எம்மத்தியில் வாழ்ந்து வந்த கலை, இலக்கிய 'முதுசொம்' ஆன இவர் 2020 மாசி மாதம் 10 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.

அவர் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்.

சம்பவம் ஒன்று (2010)
ஆடி, ஆவணி மாதங்களில் மெல்பேர்ண்ணில் கடும் குளிராக இருக்கும். மாலை நேரம் 6 மணி. வெளியே கடும்குளிர், காற்று.

போர்வையை இழுத்து மூடிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தேன். உறக்கத்திற்காக அல்ல. ஒன்றும் செய்யமுடியாத நிலை. யாருடனாவது கதைக்க வேண்டும் போல இருந்த்து. சிசு ஐயா ஞாபகத்திற்கு வந்தார். கைத்தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைத்தது. அவரது குரலில் சற்றே களைப்புத் தென்பட்டது.

"என்ன கதைப்பதற்கு கஸ்டப்படுகின்றீர்கள் போல கிடக்கு? ஏதாவது சுகம் இல்லையா" என்று கேட்டேன்.

"இல்லைத் தம்பி... உதிலை நடை ஒண்டு போட்டு வாறன். கிட்டத்திலைதான். தெரிஞ்ச ஆக்கள் வீடு. அதுதான் களைக்குது. ஒரே காத்தும் மழையுமாக் கிடக்கு. அதுதான்  ஒரு மரத்துக்குக் கீழை நிக்கிறன்."

"அப்ப நான் ரெலிபோனைக் 'கட்' பண்ணிப் போட்டு பிறகு கொஞ்சத்தாலை எடுக்கிறன்"

"இல்லை... இல்லை. கதைக்கலாம்"

அதன் பிறகு என்னுடன் கதைத்து முடித்து விட்டுத்தான் அவர் தனது வீட்டிற்குச் சென்றார்.

உடற்பயிற்சி - அதுவே அவரது இளமையின் இரகசியம். இன்னுமொன்று சொல்லுவார் தேவைப்பட்டால் மட்டுமே சாப்பிடுவேன்.


சம்பவம் இரண்டு (2010)
ஒருமுறை எனது வீட்டில் இலக்கியக் கலைச்சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் முடிவுற இரவு ஏழு மணியாகிவிட்டது. குளிர்காலம் ஆதலால் இருட்டிவிட்டது. சிசு ஐயா என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார்.

ஐயா... நீங்கள் கதைச்சு முடிச்சிட்டு வாசலடிக்கு வாருங்கோ. நான் தூரத்திலை காரை விட்டிருக்கிறன். எடுத்து வாறன்சொல்லிவிட்டு சந்திரன் தனது காரை எடுப்பதற்காகப் போய்விட்டார்.

நான் புத்தகம் ஒன்றை எடுப்பதற்காக அறைக்குப் போய்விட்டேன். அந்த நேரம் பார்த்து சந்திரனின் கார் ஹோன்சத்தம் கேட்டது. நான் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தபோது சிசு ஐயாவைக் காணவில்லை.

பின்னாலை போங்கோ. சிசு ஐயா விழுந்துவிடப் போகின்றார்மனைவி என்னைத் துரிதப்படுத்தினார்.

வாசலை நோக்கி அசுரகதியில் காலடிகளை எடுத்து வைத்தேன். வாசலைத் தாண்டியதும் வெளியே இருந்த சீமெந்துக்கட்டின்மீது தடுக்கி விழப் பார்த்தேன். சுதாரித்து எழுந்து சந்திரனின் காரை நோக்கினேன்.
இருட்டிற்குள்ளிருந்து பளிச்சென ஒரு பல்வரிசை நீண்டு விரிந்து தெரிந்தது. கண்ணாடிச்சட்டத்தைப் பதித்து அதனூடாக என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார் சிசு ஐயா.


சம்பவம் மூன்று (2014)
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இது நடந்திருக்கும். இருவரும் கணினிக்கு முன்னால் இருந்து கூகிளில் தேடிக் கொண்டிருந்தோம். நான் எனது வலது சுண்டுவிரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடிப் பிடித்து தட்டிக் கொண்டிருந்தேன்.

“இஞ்சை விடும். என்ன நோண்டிக் கொண்டு நிக்கிறீர்?கீ போர்டைப் பறித்து கடுகதி வேகத்தில் தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டார்.

அன்று மாலை நகரத்துக்குச் செல்லும் புகையிரதத்தில் அவரை ஏற்றி விடுவதற்காக அருகில் இருக்கும் ‘சண்சைன் புகையிரத் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றேன்.

புகையிரத மேடையில் நிற்கின்றோம். இன்னும் ஐந்து நிமிடங்களில் புகையிரதம் வந்துவிடும்.

“ஐயா! போனகிழமை பள்ளிக்கூடத்திலை படிக்கிற பிள்ளையொண்டு காதுக்குள்ளை கொழுவிக்கொண்டு பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தைக் கடக்கேக்கை ரெலியிலை அடிபட்டுச் செத்துப் போச்சுது.

நல்ல காலமடா! ஞாபகப்படுத்தினாய். 3CR றேடியோ ஆறு மணிக்கு இருக்குசொல்லிய்படியே தனது கைப்பையினுள் இருந்த றேடியோவை எடுத்து முறுக்கினார். ‘ஹெட் போனைகாதிற்குள் மாட்டினார்.

புகையிரதம் வந்தது.

“ஐயா... றெயின் வெளிக்கிடப் போகுது.

“தெரியும்.

தொடர்ந்தும் கதைத்தபடி நின்றுவிட்டு, றெயின் நகரத் தொடங்கியதும் அதனுடன் கொஞ்சத் தூரம் ஓடி பாய்ந்து ஏறினார். தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டபின் அங்கிருந்த படியே கை காட்டினார். பல் வரிசை பிரகாசித்தது.

சம்பவம் நான்கு (2019)
2019 மார்கழி மாதம் 2ஆம் திகதி சிட்னியில் இருக்கும் Beecroft Nursing Home இல் அவரைப் பார்ப்பதற்காக நானும் மனைவியும் சென்றோம். மாலை 3 மணி இருக்கும். போனபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

“சிசு ஐயா” என்று கூப்பிட்டபொழுது, திடீரென்று படுக்கையைவிட்டு எழுந்து கொண்டார்.
“என்னைத் தெரிகின்றதா?” எனக் கேட்டேன்.
“சூரியன்ரை பக்கம் நிண்டா எப்பிடித் தெரியும். வந்து எனக்குப் பக்கத்திலை இரும்” என்றார். பக்கத்திலே போய் அமர்ந்தபோது அவர் சிரித்த சிரிப்பிற்கு அளவில்லை. இரண்டொரு பற்களில் வெள்ளி முழைத்திருந்தன.
“நீங்கள் உந்த மூலையில் இருக்கும் கதிரையில் அமருங்கள்” என்று மனைவியைப் பார்த்துக் கூறினார். அங்கே கதிரை இருக்கவில்லை. அங்கே வேலை செய்யும் ஒருவர் வந்து எட்டிப் பார்த்தபோது, “எங்கே என்னுடைய கதிரை. அது எப்பவும் இங்கே இருக்க வேண்டும்.” அவருக்குப் பேச்சு விழுந்தது.

காது கேட்பது கொஞ்சம் குறைவாக இருந்தது. ரெலிவிஷன் பார்க்கின்றார். ஒரு பெரிய தாளில், அப்போது நடக்கும் சர்வதேச கிரிக்கெற் பற்றிய நேர அட்டவணையை பெரிய கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தார்.

லாச்சிக்குள் இருந்து தலைக்குப் போடும் கவசம் போல் ஒன்றை எடுத்துக் காட்டினார். “மெல்பேர்ணில் இருக்கும் டொக்ரர் கணபதிப்பிள்ளை இதை எனக்குத் தந்தார். எழுத்துக்களை உருப்பெருக்கிக் காட்டும். எனக்கு நல்லாப் பிரயோசனப்படுது.”

பலதும் பத்தும் கதைத்துக் கொண்டிருந்தோம். ‘பழகும் தமிழ் சொற்களின் மொழிமாற்று அகராதி – தமிழ்/ஆங்கிலம்’ இரண்டாம் பகுதிக்கான எழுத்து முயற்சிகளில் அப்போது ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவற்றைக் காட்டினார். தன்னுடன் பக்கத்திலே இருந்து அவற்றைச் சரி பிழை பார்த்துச் செய்வதற்கு ஒருவர் தேவை என்றார். என்னிடம் பொறுப்புத் தந்தபொழுதைப்போக்க கதைகளும் கட்டுரைகளும் - சிந்தனைச் சிதறல்கள், கற்பனைக் கோளாறுகள்’ எனக்கு ஞாபகம் வந்தது. அவர் மறந்துவிட்டார். நான் அதுபற்றி மூச்சுக் போடவில்லை. இல்லாவிட்டால் அது வேறு பிரச்சினையாகிவிடும். வாயை மூடிக் கொண்டேன்

“நீ மெல்பேர்ணில் இருந்தா வந்திருக்கின்றீர்?” மூன்று தடவைகள் என்னைக் கேட்டு உறுதிப் படுத்திக்கொண்டார்.

“சாப்பாடு என்ன மாதிரி ஐயா?”

உமக்குத் தெரியும் தானே இஞ்சத்தைச் சாப்பாடுகள் பற்றி.
மகள் ஒண்டவிட்டொரு நாள் வந்து பார்ப்பாள். அப்போது மச்சச் சாப்பாடு வரும். ” வாயைப் பொச்சடித்தபடி சொன்னார்.

“எழுத்தாளர்கள் கலைஞர்கள் எண்டு ஆரேனும் வந்து உங்களைப் பார்ப்பார்களா?”

“குறைவு தம்பி. எனக்கொரு குறைச்சலும் இல்லை. உடல் நலமும் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் சீக்கிரம் போயிட வேண்டும் எண்டு ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். தனிமை என்னை வாட்டுது”

கொப்பி ஒன்றை எடுத்துத் தந்து, அதில் எனது பெயர் முகவரி ரெலிபோன் நம்பரை எழுதும்படி சொன்னார். நான் எழுதிய பின்னர் தலைக்கவசத்தைப் போட்டு அதை மெய்ப்புப் பார்த்தார். எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர், தேநீருடன் ஒரு பிஸ்கெற் அவருக்குக் குடுத்தார். “இவர்களுக்கும் தேநீரும் பிஸ்கெற்றும் குடுங்கள்” அந்தப் பெண்மணியிடம் சொன்னார். அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்துச் சிரித்தார். நாங்கள் வேண்டாம் என மறுத்தோம். அவரோ விடுவதாக இல்லை.
“இல்லை ஐயா… நாங்கள் போட்டு வரப்போறம். மெல்பேர்ணிலை இருந்து வந்தனாங்கள்”
அவர் ஏக்கத்துடன் பார்த்தார். அறைக்கு வெளியே வந்து எங்களை அனுப்பி வைத்தார். உள்ளே தேநீர் ஆறிக்கொண்டிருந்தது.


ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? உடல் நலத்தை ஒரு மூட்டையில் கட்டி வைத்து விட்டு சோர்வின்றி எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு வந்தார்.

இவர் ஆரம்பத்தில் ஒரு நாடகக் கலைஞர். கொழும்பில் 'ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்' நடத்திய பல நாடகங்களில் பங்கேற்றவர். தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் போன்றோருடன் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.

ஆச்சிக்குச் சொல்லாதே, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப - இது இப்ப போன்றவை இவர் நடித்த நகைச்சுவை நாடகங்களில் சில. தவிர திருநாவுக்கரசுவின் 'இனி என்ன கலியாணம்', கவிஞர் அம்பியின் 'வேதாளம் சொன்ன கதை' கவிதை நாடகம், பிரபலமான வானொலி நாடகங்களான 'சிறாப்பர் குடும்பம்', 'லண்டன் கந்தையா' போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

ரகுநாதன் தயாரித்த 'நிர்மலா', பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ.எஸ்.துரைராஜாவினால் தயாரிக்கப்பட்ட 'குத்துவிளக்கு' போன்ற படங்களில் நடித்துள்ளார். குத்துவிளக்கு 1972 இல் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் 'ஈழத் திருநாடே' என்ற பாடல் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டிருந்தது.
இவர் லண்டனில் தங்கியிருந்த காலங்களில், மீண்டும் தாசீசியஸின் 'களரி' நாடக மன்றத்தில் இணைந்து 'புதியதொரு வீடு', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்' என்ற நாடகங்களில் நடித்திருந்தார். பின்பு அங்கிருந்து பிரியாவிடை பெறும்போது 'கலைவளன்' என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர் எழுத்தாளரானார். அவுஸ்திரேலியாவில் வெளிவரும் 'கலப்பை' என்னும் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து பின்னர் நூலுருவானது 'அந்தக்காலத்து யாழ்ப்பாணம்' (2005). யாழ்ப்பாணத்தின் ஒரு காலகட்ட சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் இந்நூல் புலம் பெயர்ந்த நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 

அதன் பின்பு 'பிறந்த மண்ணும் புகலிடமும்" (2008) என்னும் நூலை எழுதினார். இதை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் வெளியிட்டது.

அண்மையில் மெல்பேர்ணில் நடந்த தென்மோடி நாட்டுக்கூத்திலும் இவர் பங்கு பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஒளிப்படக் கலைஞர். ஈழப்பற்றாளன்.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் போன்ற அமைப்புகளில் பங்குபற்றியிருந்தார். இறக்கும்வரை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் காப்பாளராக இருந்துள்ளார். அவுஸ்திரேலியா கம்பன்கழகம் வழங்கும் அதியுயர் விருதான ‘மாருதி  விருதை 2013 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2018 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

2015 ஆம் வருடம் ‘பழகும் தமிழ் சொற்களின் மொழிமாற்று அகராதி – தமிழ்/ஆங்கிலம்’ என்ற நூலை, மெல்பேர்ண்  கேசி தமிழ் மன்றத்தினூடாக வெளியிட்டார்.  பலரும் கூட்டாகச் செய்யப்படவேண்டிய  இந்த ‘அகராதியைதனித்து நின்று செய்து முடித்தார்.
தான் எழுதிய கட்டுரைகள் கதைகள் பத்தி எழுத்துக்கள் என்பவற்றைக் கொண்ட பொழுதைப்போக்க கதைகளும் கட்டுரைகளும் - சிந்தனைச் சிதறல்கள், கற்பனைக் கோளாறுகள்’ என்ற புத்தகத்தையும், ‘பழகும் தமிழ் சொற்களின் மொழிமாற்று அகராதி’ இரண்டாம் பாகத்தையும் வெளியிட எண்ணியிருந்தார்.

நவீன தொழில் நுட்பத்தின் பல கூறுகளைத் தெரிந்து வைத்திருந்தார். எழுதியவற்றை தானே கணனியில் பதிவும் செய்தார். தமிழுக்கும் சமுதாயத்துக்கும் இறுதிவரை சேவையாற்றினார்.

நடு (பங்குனி, 2020)

2 comments:

  1. அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்..

    ReplyDelete
  2. உண்மையில் எனக்கு தெரியாத தகவல் .நாகேந்திரன் ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete