Friday 15 October 2021

`முதல் வகுப்பு பொதுத் தேர்வு’

`குட்டி இளவரசன்’ என்றொரு குறுநாவல் வந்தது. சிறுவர் நாவல் என்ற போதும் அது வளர்ந்தவர்களுக்குமானது. அதேபோல `முதல் வகுப்பு பொதுத் தேர்வு’ குறுநாவலையும் நான் வளர்ந்தோருக்கும் ஏற்றதெனப் பார்க்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அரசியல் நாவலாக வந்திருக்கின்றது. சிறுவர்கள் மீது ஆரம்பப் பாடசாலைகளிலேயே வரலாற்றுத் திரிபைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆசிரியர் சுவைபடச் சொல்லிச் செல்கின்றார்.

ஐந்தாம் வகுப்பு மாணவனான சுரேந்திரனைப் `பின்னிப் பெடல் எடுக்கும்’ ஆசிரியர் சிவப்பிரகாசமும், எதற்கும் சளைத்தவன் அல்ல என வரும் சுரேந்திரனும் சுவையான பாத்திரங்கள்.

பொதுத்தேர்வின் போது மாணவர்களின் ஆடைகள் களையப்பட்டு சோதிக்கப்படுகின்றது. உண்மையில் இங்கே ஆடை களையப்பட்டு அம்மணமாக்கப்படுபவர் ஆசிரியர் சிவப்பிரகாசம் தான்.

`தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? 1.சிவாஜி 2.சத்திரபதி சிவாஜி 3.மராட்டிய வீரன் சிவாஜி 4.சிவாஜி ராஜே போன்சலே’ – இந்தக் கேள்வி, 2018 ஆம் ஆண்டு தாஜ்மகாலை நேரில் சென்று பார்த்த என்னை நிலைதடுமாறச் செய்துவிட்டது.

இலங்கையில் நான் சிறுவனாக கல்வி பயின்றபோது, புதிய கல்வித்திட்டம் என்ற போர்வையில் அரசு, பல `தகிடு தத்தங்களை’ சமூகக்கல்வி என்ற பாடத்தில் திணித்திருந்தது. இங்கே முகலாயர்களின் சரித்திரத்தை மறைப்பதற்கு, ஆசிரியர் சிவப்பிரகாசம் சத்ரபதி சிவாஜியைக் கையில் எடுக்கின்றார்.

பதிவு: 35 + 10 + 3 + 2 ; வருகை: 35 + 8 + 1 + 1 என்ற தகவலில் ஆசிரியர் என்னத்தைச் சொல்ல வருகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. அத்துடன் `தாஜ்மகாலைக் கட்டியவர் யார்?’ என்ற கேள்விக்கான பதிலை நான்கு விடைகளிலிருந்து தெரிவு செய்து எழுத வேண்டுமா? அல்லது   தெரிவு செய்து, அவரைப்பற்றி எழுத வேண்டுமா? என்பதும் தெளிவாக இல்லை. அந்த ஒரு கேள்விக்கு மாத்திரம் மதிப்பெண்கள் 60 வழங்கப்படுவதும், விடை எழுதுவதற்கான நேரம் ஒன்றரை மணித்தியாலம் என்பதில் இருந்தும் – தாஜ்மகாலைக் கட்டியவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி எழுத வேண்டும் என்பதே சரியாக இருக்க வேண்டும்.

குறியீட்டுப் பாணியில் வரலாற்றுத் திணிப்பை முன் வைக்கின்ற இந்த நாவலுக்கு வரைந்திருக்கும் ஓவியங்கள் அற்புதமானவை. எளிமையான நடையில் சுவைபடச் சொல்லியிருக்கின்றார் அண்டனூர் சுரா.

 

No comments:

Post a Comment