Spring, Summer, Fall, Winter... and Spring – Kim Ki-Duk
உலகப் புகழ் பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் கி-துக் இன் புகழ்பெற்ற திரைப்படங்களில்
இதுவும் ஒன்று. 2003 ஆம் ஆண்டு அவரே எழுதித் தயாரித்து நடித்தும் இருந்தார். படத்தின்
தலைப்பு போலவே, திரைப்படத்தின் காட்சிகள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை
வெவ்வேறு கால இடைவெளிகளில் நடக்கின்றது.
வசந்தகாலம்
திரை விலகுகின்றது. அமைதியான ஒரு ஏரியின் நடுவே மிதக்கும் ஒரு பெளத்த மடாலயம். வசந்தகாலத்தில் மரங்கள் துளிர்த்து நிற்கின்றன. ஒரு வயது முதிர்ந்த பெளத்த துறவி, மரத்தால் செய்யப்பட்ட மீன்போன்ற வாத்தியக்கருவியை (மொக்தாக்) சிறிய குச்சியினால் தட்டியபடி புத்தபிரானைக் குனிந்து வணங்குகின்றார். பின்னர் உறக்கத்தில் இருக்கும் குழந்தைத் துறவியை எழுப்புகின்றார். சிறுவனும் துயில் கலைந்து, முழந்தாளிட்டு புத்தபிரானை வணங்குகின்றான். பின்னர் இருவருமாக, மருந்துக்கான மூலிகைகள் தேடி, ஒரு படகில் தண்டு வலித்துச் செல்கின்றார்கள். இந்த வசந்த காலத்தின் ஆரம்பக் காட்சியுடன் - வயது முதிர்ந்த துறவியாக வரும் ஓ யங்-சுவும் (O Yeong-su), குழந்தை துறவியாக வரும் ஜோங்-ஹோ கிம்மும் (Jong-ho Kim) நம் மனதில் இடம்பிடித்து விடுகின்றார்கள்.
சிறுவன், காடுகள் நிறைந்த மலையில் இருக்கும் புத்தபிரானின் சிலையின் தோள்மீது ஏறி நின்று அற்புதமான இயற்கையை இரசிக்கும் போது, ஒளிப்பதிவாளர் நம்மையும் அங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றார்.சிறுவன், பாம்புகளைத் தூக்கி சுழற்றி எறிகின்றான். நாயுடன் விளையாடுகின்றான். தானே துடுப்பு வலித்து படகோட்டவும் கற்றுக் கொள்கின்றான். அவனின் குறும்புகள் எம்மை மட்டுமல்ல, முதிர்ந்த துறவியையும் கவர்ந்து கொள்கின்றன. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதும் புன்னகை கொள்வதுமாக இருக்கின்றார்கள். முதிர்ந்த துறவி சிறுவனை மிகவும் பொறுப்புடனும் அவதானத்துடனும் வளர்க்கின்றார்.

