Monday, 28 April 2025

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி முடிவுகள் - 2025



குரு அரவிந்தன் வாசகர் வட்டம்

குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3

2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்:

இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா, இலங்கை.

இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா, தேனி, தமிழ்நாடு.

மூன்றாம் பரிசு: மரு.வெ. மாலாபாரதி. ஆரணி. தமிழ்நாடு.

நான்காம் பரிசு: வரதராஜன் ஜூனியர்தேஜ் சீர்காழி, தமிழ்நாடு.

ஐந்தாம் பரிசு: (1) திவானி கந்தசாமி, வவுனியா, இலங்கை.

(2) சீ. கவிதாராணி, பாசறை, இலங்கை.

பாராட்டுப்பரிசுகள்: சிவநேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ. இலங்கை. எஸ். ராமேஸ்வரன், கொழும்பு -5. திருமதி பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை. பி.பி. புஸ்பராஜா, கொழும்பு -1. சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி. சிந்துஜா சிவகுமார், அவுஸ்ரேலியா. த.வேல்முருகன், ஈரோடு, தமிழ்நாடு. க.பூமணி, சென்னை, தமிழ்நாடு. இக்பால் அலி, பரகஹதெனியா, இலங்கை. விமலாதேவி புசுப்பநாதன், ரொறன்ரோ, கனடா. தீபரதி குபேந்திரன், வாணியம்பாடி, தமிழ்நாடு. பன்னீர்ச்செல்வம் கருப்பையா, கோலாலம்பூர், மலேசியா.

சுலோச்சனா அருண் (kurufanclub@gmail.com)

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

Friday, 25 April 2025

நாடற்றவனும் நாயும் - எனக்குப் பிடித்த கதை



சி.வி.வேலுப்பிள்ளை

மெய்யனுக்கு அன்று வேலைகள் எல்லாம் சட்டுபுட்டென்று முடிந்துவிட்டன. சல்லடை காம்பராவில் அவன் வேலை செய்யும் கடைசி நாள் அது. இனிமேல் இங்கிருந்து போய்விடவேண்டியதுதான் – திரும்புவதில்லை. அதை நினைக்கவும் முடியவில்லை. சல்லடைக் காம்பராவிலுள்ள சக்கரங்கள் அவனது வாழ்க்கையில் பத்து வருடங்களைச் சுழற்றி விட்டன. காம்பரா வாயில் கதவிலுள்ள சக்கரங்கள் அவனது வாழ்க்கையில் பத்து வருடங்களைச் சுழற்றிவிட்டன. காம்பரா வாயில் கதவிலுள்ள கைபிடி அவன் கை பட்டுப் பட்டுத் தேய்ந்துபோய்விட்டது. பதின் மூன்றாவது வயதில் சல்லடைக் காம்பராவுக்குள் நுழைந்தவன் அன்று முதல் இன்று வரை அதுவே அவனது உலகம், வேலையே அவன் வாழ்க்கை.

மூன்று மாதங்களக்கு முன்பு, அவன் மதுரைக்கு யாத்திரை புறப்படும் சமயம் அந்தச் சூழ்நிலை முழுவதும் அவனது நரம்புகளை உரித்துப் பிய்த்தன. கடகடவென்று உருளும் சக்கரங்களின் இடைவிடாத ஏகநாதம் அவன் மனதை சோர்வடையச் செய்தது. ‘இன்னும் உழை, இன்னும் வியர்வை சிந்து’ என்று அவை சதா நச்சரித்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அவற்றின் அசைவில் ஒரு வித தாளக்கட்டுப்பாடு இருந்தது. அவனுடைய இருதயத் துடிப்படன் ஒன்றி அவையும் கும்மாளம் போட்டன. ஆண்களும் பெண்களும் ஒவ்வொருவராகப் போய்ச் சேரும்வரை மெய்யன் மயிந்தி மயிந்தி நின்றான். – ஒரு கடைசிப் பார்வைக்காக.

வரண்ட ஒளியற்ற அந்த சல்லடைக் காம்பரா திடீரென்று உயிர்ப்புற்றது. புத்தம் புதிய தேயிலைத் தூளின் நறுமணம், மௌனமாகக் கிடக்கும் சக்தி வாய்ந்த அந்த சக்கரங்கள் –

இவையெல்லாம் அவன் மனதில் வர்ணிக்க முடியாத ஓர் உணர்ச்சியை எழுப்பின. சல்லடை தேயிலையை அரிக்கும் போது உண்டாக்கும் ‘டக், டக், டக்’ என்ற ஓசையும், சுழலும் சக்கரங்களின் குமுறலும் பத்து வருடங்களாக அவன் செவிகளில் லயித்திருந்தன.

“நாளை இன்னொருவன் இந்த இடத்துக்கு வரப்போகிறான். என்றாலும் ஒன்றும் நடவாதது போல வழக்கமாக வேலைகள் நடக்கும்எல்லாம் அது அதுக்குரிய இடத்தில் இருக்கும். நான் மட்டிலும் இருக்க மாட்டேன். வாழ்க்கைச் சுழலின் சுதந்திரம்தான் என்ன? ஆமா, பார்க்கப் போனால் யார்தான் இவ்வுலகத்தில் இன்றியமையாதவர்கள்”- இவ்வாறு எண்ணமிட்டான் மெய்யன்.

Monday, 14 April 2025

வாசனைத்திரவியம் - குறுங்கதை

 


நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு குடியிருக்கும் எலிகள், புதிதாக வந்திருந்த எம்மை வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

Friday, 11 April 2025

குவிகம் குறும் புதினங்கள் - அறிமுகம் (2)

 கார்த்திகை, 2024

காத்தப்ப பூலித்தேவன் – துரை அறிவழகன்

பூலித்தேவனின் வீர வரலாற்றுக் காலத்துக்கு எங்களை இழுத்துச் செல்கின்றது. 1700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை, பொருநை ஆறு, வாசுதேவ நல்லூர்க் கோட்டை, யுத்தகளக் காட்சிகள் களிப்பூட்டும் வர்ணனைகள்.

சூப்பர் மார்க்கெட் – கல்பனா சன்யாசி

நகைச்சுவைக் கதை ஒன்றை வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஒருவர் தான் செய்தது பிழை என்று உணர்ந்து, திருந்திய போதும் தண்டனை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. துயரமான முடிவு.


மார்கழி, 2024


கொரியர் – எஸ்.எல்.நாணு

இரண்டு கதைகளை ஒன்றுக்குள் ஒன்றாக முடிச்சாக்கி வைத்திருக்கும் வித்தியாசமான கதை வடிவம். சுந்தரமூர்த்தியும் சாரதாவும், மாறி மாறி ஒவ்வொரு அத்தியாயங்களாக வந்து முடிச்சை அவிழ்த்துச் செல்கின்றார்கள்.

பூமரப்பாவை – இராஜலட்சுமி

இதுவும் இரண்டு தடங்களில் பயணிக்கும் கதைதான். சகாயம் என்ற கெட்டவன் முடிவைத் தீர்மானிக்கும் பாத்திரமாகின்றான். ஆசிரியர், வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாத வகைகையில் கதையை நகர்த்திச் செல்கின்றார்.

தை, 2025

குமாரசாமியின் பகல் பொழுது – பிரபஞ்சன் (வைத்தியலிங்கம்)

தனது நண்பர் அடைக்கலசாமியின் இறப்பில் கிடைத்த லீவில், தனது வாழ்வைத் திருப்பிப் பார்க்கின்றார் குமாரசாமி. பிறந்தவர் சாவது இயற்கை. ஆனால் வாழ்ந்தவர் சாவதுதானே நியாயம். அந்தக் கோபத்தில் அடைக்கலசாமியின் செத்தவீட்டிற்குப் போவதில்லை என முடிவெடுக்கின்றார் அவர். வார்த்தைக்கு வார்த்தை அற்புத வர்ணனையில், குமாரசாமியின் எளிமையான வாழ்க்கை சொல்லப்படுகின்றது.

தாழம் – பாலஜோதி ராமச்சந்திரன்

தாழம் என்ற அரியவகை சுறா ஒன்றினைப் பிடிக்கும் மாலி என்பவனின் மனவோட்டம் அற்புதம். அப்புறம் அவனின் மனநிலை தடம் மாற, கதை வேறு திசையில் பயணித்து இன்னொரு தாழத்துடன் இணைகின்றது. வித்தியாசமான கதை.

மாசி, 2025

வீடு – கலைச்செல்வி

காடு, அதுவே அவனுக்கு வீடு. பெண்டாட்டி, பிள்ளை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். காட்டுக்குள் புதைந்திருக்கும் மாயங்களை அவிழ்க்கின்றது கதை. அதனால் காடு பற்றிய வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை.

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தற்போதைய தொலைக்காட்சித் தொடரின் போக்குகள் குறித்து நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ள கதை. `திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகத்தை எழுதியவருக்கே திரைக்கதை குறித்து பாடம் எடுப்பது வேடிக்கை.

எதிர்பாராதது – கெளரிசங்கர்

ஏற்கனவே மனைவிமீது கணவன் சந்தேகம் கொள்கையில், எதிர்பாராத விதமாக அவளது பழைய நண்பன்/காதலன் அவர்களது வீட்டுக்கு வந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? பெயருக்கேற்றவாறு பல எதிர்பாராததுகள் கொண்ட கதை. இறுதிப் பகுதி மேஜிக்கல் ரியலிசம்.

ஓவியங்கள் - கிறிஸ்டி நல்லெரத்தினம்