Tuesday 16 September 2014

கங்காருப் பாய்ச்சல் (-4)

இடைவெளி

எனது அண்ணன் இலங்கையில் இறந்து போன சமயம் இது நடந்தது. சிலர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துச் சென்றார்கள். சிலர் டெலிபோனில் கதைத்தார்கள். எனக்குத் தெரிந்த குடும்பம். ஊரவர். வரவில்லை. விசாரிக்கவும் இல்லை.

அவர்கள் பெரியதொரு வீடு கட்டி இருந்தார்கள். நாட்டில் நடந்த பிரச்சினைகளால் வீடு குடிபுகும் விழாவை பின்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். எப்பவடா பிரச்சனை தீரும் - விருந்து வைச்சுக் கொண்டாடலாம் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். நாட்டில் அவலங்கள் முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். எமக்கு ரெலிபோன் வந்தது.
இடைவெளி

"இந்தச் சனிக்கிழமை பார்ட்டி வைக்கின்றோம். வாருங்கள்" மறுபுறத்திலிருந்து ஒலித்தது குரல்.
"இன்னமும் சிலர் செத்தவீட்டிற்கு வந்து கொண்டிருப்பதால் வருவதற்கு செளகரியப்படாது" என்று சொன்னோம்.
"உங்கடை ஹஸ்பனிற்கும், அவருடைய இறந்த அண்ணாவிற்கும் இடையே நிறைய வயது வித்தியாசமாமே! அதாலை அவருக்குக் கவலை இருக்காது எண்டு நினைத்தோம். அதுதான் பார்ட்டிக்குக் கூப்பிட்டனாங்கள். குறை நினைக்காதையுங்கோ. பிறகு ஒருநாள் ஆறுதலாக வசதியாக இருக்கேக்கை உங்கடை வீட்டை வாறம் என்ன!" என்று சொல்லிவிட்டு ரெலிபோனை வைத்தாள் அவள்.

சொல்லிப் போக வேண்டும் சுகத்திற்கு; சொல்லாமல் போக வேண்டும் துக்கத்திற்கு என்று சொல்வார்கள். இந்தப் பழக்கம் இப்பொழுது அருகி வருவது போல் தெரிகின்றது. சமீபத்தில் எமது நண்பர் ஒருவரின் தந்தையின் செத்தவீட்டிற்குச் சென்றிருந்தோம். எண்ணி எழுபது எண்பது பேர் மட்டில் வந்திருந்தார்கள். ஆனால் கடந்த வருடம் நடந்த நண்பரின் குழந்தையின் பிறந்ததின விழா கொண்டாட்டத்தின் போது இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள்.



No comments:

Post a Comment