Monday 13 April 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (4)

கனவுகள் ஆயிரம்

நல்ல நூல்களைப் பரிசாகக் கொடுங்கள் என்பார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதோ – அல்லது பாடசாலைகளில் நடைபெறும் பரிசளிப்புவிழாக்களின் போதோ அப்படித்தான் கொடுக்கின்றார்கள். இப்படியாக எங்கள் வீட்டிற்கு வந்த நல்ல புத்தகங்களில் சில – காலத்துக்குக்காலம் கால் முளைத்து ஊருக்குள் உலாவப் போகும். ஆனால் பத்திரமாக அவை திரும்பி வந்து சேர்ந்து விடும்.

1990 யூலை இடப்பெயர்வு. முதலில் உயிர், பிறகு உடமைகள். உடமைகளை விட்டு ஓடினோம். இரண்டுகிழமைகளின் பின்பு விட்டுபோன பொருட்களை எடுக்க வந்தபோது – ‘ஷெல்விழுந்து ஓடுகள் உடைந்து மழைநீர் உட்புகுந்து – உள்ளே ஏற்கனவே கள்வர்கள் சீர்குலைத்துவிட்டுப்போன புத்தகங்களை நாசமாக்கி இருந்தது.

அந்தப்புத்தகங்களில் ஒன்று லெ.முருகபூபதி எழுதிய ‘சுமையின் பங்காளிகள்’.

இப்படி நம்பில் பலர், தாம் பொக்கிஷமாகச் சேகரித்த்து வைத்த நல்ல நூல்கள் பலவற்றை இடப்பெயர்வால், இனப்பிரச்சினையால் இழந்துவிட்டார்கள்.

பத்து வருடங்கள் கழித்து அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் முருகபூபதி அவர்களைச் சந்தித்தேன். அப்பொழுது, “உங்களுடைய சுமையின் பங்காளிகள் புத்தகத்தை ஒருமுறை தாருங்கள்.. படித்துவிட்டுத் தருகின்றேன்என்று கேட்டேன். அதற்கு அவருடைய பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
“என்னிடமே அந்தப்புத்தகம் இல்லை!என்பதே அவர் சொன்ன மறுமொழி.

எப்படியோ அதைத் தேடி எடுத்து இரண்டாவது பதிப்புச் செய்துள்ளார்.


சுமையின் பங்காளிகள்சிறுகதைத் தொகுப்பிற்க்காக அவருக்கு 1972 ஆம் ஆண்டிற்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்த்து. அதன் பின்னர் ஏழு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.



1 comment: