Saturday, 1 February 2025

`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்



இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் தற்போது வரட்சியான நிலையிலேயே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் எஸ்.பொன்னுத்துரை, சோ.பத்மநாதன், சி.சிவசேகரம், ரூபராஜ் தேவதாசன் போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ரிஷான் ஷெரீப், கெகிறாவ ஸுலைஹா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் ரிஷான் ஷெரீப் வேகவேகமாக பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றார். கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புகளில் ஒரு ஒளிக்கீற்றாக `கிழக்கினை எதிர்கொண்டு’ என்ற இந்தப் புத்தகம் விளங்குகின்றது. இதன் தலைப்புக் கூட சூழ்நிலைக்கேற்றவாறு அற்புதமாகவே தோன்றுகின்றது.

ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.

பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் மூலம், நமக்கு அவர்களைப்பற்றிய பின்னணியையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. கூடவே `மொழி மாறி வந்த பிரதிகளும் அவை பேசும் அரசியலின் பொதுமையும்’ என்ற தலைப்பில் மேமன்கவி அவர்களின் பின்னுரையும் இடம்பெற்றுள்ளது.

Tuesday, 28 January 2025

பொன்சாய் இலக்கியங்கள் – கங்காருப் பாய்ச்சல்கள் (47)

 

முகநூலில் என் கணக்கை ஆரம்பித்த நாள் முதல் அவதானித்து வரும் ஒரு விடயம் இது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் இரண்டு மூன்று பாடசாலைகளில் (சிலவேளைகளில் கூடவாகவும் இருக்கலாம்) படித்த மாணவர்களின் பள்ளிக்கூட வெறித்தனம் இது. அந்தப் பள்ளிக்கூடங்களில் படித்த எவராவது முகநூலில் `அ’ என்று எழுதும் முன்னே 500 லைக்குகள் போட்டு விடுவார்கள். சிலவேளைகளில் இது ஆயிரத்தையும் தாண்டிவிடும். எழுதியவரோ `அ’வுடன் நிறுத்திக் கொள்வார். அப்பாலே எழுத வேண்டும் என்ற எண்ணம் மறைந்துவிடும். அவர் அந்தப் புளகாங்கிதத்தில் மயங்கிக் கிடப்பார். மயக்கம் தெளிந்து பார்க்கும்போது மற்றவர்கள் உயிரெழுத்தை முடித்து மெய்யெழுத்துக்குப் போயிருப்பார்கள். அவரை முன்னேறவிடாமல் தடை போடுபவர்களே இந்த வெறித்தன ரசிகர்கள் தான். இது யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே பொருந்தும். இந்த உலகத்தில் வாழும் யாவரும் ஏதோ ஒரு பள்ளியில் படித்திருப்பார்கள்தானே என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை. தமிழைத் தம் பாடசாலைகளுக்குள்ளேயே குறுகத் தறித்து, `பொன்சாய்’ மரங்களாக்கி விடுகின்றார்கள் இவர்கள்.

Friday, 24 January 2025

இளமையில் கல்வி சிலையில் எழுத்து – கங்காருப் பாய்ச்சல்கள் (46)

 
பள்ளியில் படிக்கும்போது கட்டுரை, கவிதை, சிறுகதை எழுதச் சொல்லித் தருவார்கள். எழுதும்போது ஊக்கம் குடுத்து வரவேற்கவும் செய்தார்கள்.

வளர்ந்து பெரியவர்களானதும் தொடர்ந்தும் அவற்றை எழுதும்போது - ஏன் எழுதுகின்றீர்கள்? இன்னமும் எழுதுகின்றீர்களா? இப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன.

சிந்தித்துப் பார்த்தால், இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு பயம் தான் காரணம் என்பது தெரிய வருகின்றது. எங்கே தமது பொட்டுக்கேடுகளை எழுதிவிடுவாரோ என்ற ஒரு பயம்.

கொஞ்சம் கண்டித்து வைப்போம். குட்டுப் போட்டு வைப்போம் என சிந்திக்கின்றார்கள்.

நேர்மையாக வாழ்பவரை எவருக்குத்தான் பிடிக்கின்றது? அவர்களுக்கு முன்னேறிச் செல்பவர்களையும் பிடிப்பதில்லை, ஒருவருக்கு பல திறமைகள் இருப்பதையும் விரும்புவதில்லை.

என்னையும் மீறி – என் கதைகளில் சில உண்மைப் பாத்திரங்களும் வந்துவிடுவதுண்டு. நான் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. நான் இதைப் பின்னர் மறந்து விடுவேன். சில வேளைகளில் சில மனிதர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் முகத்தைத் கோணிக்கொண்டு செல்வது அதனால் தானோ என்னவோ? அவர்களால் எப்படி மறக்க முடியும்? ஆயுள் உள்ளவரை அவர்களால் மறக்க முடியாது அல்லவா? திரும்பவும் ‘தாங்கள்தான் அவர்கள்’ என்று ஞாபகப்படுத்தி விடுவார்கள்.

சில உண்மைச் சம்பவங்களை சிறுகதைகளாக்கி பரிசும் பெற்றிருக்கின்றேன். `தோப்பூர் மகாராஜா’, `அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை’, `கேள்விகளால் ஆனதுகதைகள் அப்பிடிப்பட்டவை தான்.