Thursday, 11 December 2025
வளரி - சிறுகதை
அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.
“குட்மோனிங் ஜோன்…”
விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.
கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.
பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.
“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”
“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.
நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.
Monday, 1 December 2025
அம்பலம் - சிறுகதை
வயது முதிர்ந்தோர் இல்லத்தில் பிரபல எழுத்தாளர் நிரஞ்சன் இருந்தார். அவரைச் சந்திப்பதற்காக பத்திரிகை நிருபரான தணிகாசலம் சென்றிருந்தார்.
“எழுத்தாளர் நிரஞ்சனைப்
பாக்க வேணும்…”
“செகண்ட் ஃப்ளோர் மூண்டாவது ரூமுக்குப் போங்க…”
தணிகாசலம் லிப்ற் இருக்கத்தக்கதாக
படிகளின் வழியே ஏறி மேலே போனார். அறை திறந்து இருந்தது. உள்ளே உறக்கத்தில் இருந்தார்
நிரஞ்சன். அவரை எழுப்புவதா விடுவதா என்ற தயக்கத்தில், அவரின் கட்டிலுக்கு எதிராக இருந்த
கதிரையில் அமர்ந்து கொண்டார்.
நிரஞ்சனின் முகத்தில் சவரம்
செய்யப்படாமல் வெள்ளி முடிகள் எங்கும் பரவிக் கிடந்தன. படுக்கையிலும் தனது மொட்டையை
மறைப்பதற்காக தொப்பி அணிந்திருந்தார். அவரை முதன்முதலாகச் சந்தித்தது அப்படியே நெஞ்சில்
நிழலாட்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. தொப்பியைக் முழுகும்போதும் கழட்ட மாட்டாரோ?
இருவருக்கும் வயதில் பெரிதளவு
வித்தியாசம் இல்லை. ஆனால் மூப்பும் பிணியும் வயது பார்த்து வருவதில்லை. அவர்களின் பரம்பரை
அலகுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல சங்கதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன.
நிரஞ்சன் உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டார். மனித வாழ்வின் நிலையான
துன்பங்களில் ஒன்றான நோய் அவரை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர் ஒரு தண்ணிச்சாமி.
அதுவே அவரை நோயாளியாகவும் ஆக்கியிருக்கலாம். நீரிழிவும் கொலஸ்ரோலும் ஒவ்வொரு பக்கமாகப்
பிடித்திழுக்க, ஒரு தடவை ஸ்ரோக்கும் வந்திருந்தது. மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
பிள்ளைகள் வேலைக்குப் போவதால் இதுவே பாதுகாப்பான இடம் எனக் கருதி, இங்கே கொண்டு வந்து
விட்டுவிட்டார்கள். இடையிடையே வந்து பார்த்து உணவும் குடுத்துவிட்டுச் செல்வார்கள்.
தமிழ் மக்களுக்கான அந்த
முதியோர் காப்பகத்தில் நிரஞ்சனுடன் ஆணும் பெண்ணுமாக மேலும் பதினான்கு பேர்கள் இருக்கின்றார்கள்.
நிரஞ்சன் `வாசல்’ என்ற
சிறுகதைத்தொகுப்பையும், `ஊர்வலம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு
முன்னர் வெளியிட்டிருக்கின்றார். அதன் பின்னர் உதிரிகளாகச் சில கதைகளும், புதுக்கவிதைகளும்
எழுதியிருக்கின்றார். ஆனால் தொகுப்பில் போடுமளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்த
உதிரிகளிலும் சில இலக்கியத் தரமில்லாமல் இருந்தன. ஆனால் `வாசல்’ தொகுப்பு சிறுகதை இலக்கியத்திற்கே
ஒரு வாசல் என்றும், `ஊர்வலம்’ தொகுப்பு புதுக்கவிதையின் ஒரு திறவுகோல் எனவும் இன்றளவில்
பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. சில பல்கலைக் கழகங்களில், இவை இரண்டும் இன்னமும்
பாட நூல்களாக இருக்கின்றன.
திடீரென விழித்துக் கொண்ட
நிரஞ்சன், படுக்கையில் இருந்து எழுந்தார்.
“சொன்னபடி வந்துவிட்டீர்கள்.
நான் சற்றே அயர்ந்து போனேன்” சிரித்துக் கொண்டார் நிரஞ்சன்.
“பேட்டியைத் தொடங்கலாமா?” என்றார் தணிகாசலம்.
Friday, 21 November 2025
மங்கா… மான்குட்டி போல – சிறுகதை
இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.
ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.
"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.
"உங்களுக்கென்ன விசரா… இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."
"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."
வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.
பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.
திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா
வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே
உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில்
குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து
மிதந்தன.
முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.
Monday, 10 November 2025
Tuesday, 4 November 2025
சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டி முடிவுகள் (2025)
அதேபோல் 3 நாவல்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் என்று அறிவித்திருந்தோம் இப்போது அது 5 நாவல்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்தப் புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும்.
இந்தப் போட்டிக்கு மொத்தம் 34 நாவல்கள் வந்தன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
மிக முக்கியமான நன்றியறிவித்தலை செய்ய வேண்டிய நேரம் இது. கலந்துகொண்ட நாவல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாவல்களைப் படித்துத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற நாவல்களை அறிவித்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே என் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் செய்த பணிக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது. எங்களை அலைக்கழிக்க விடாமல், சொன்ன தேதியில் தன் பணியைச் சிறப்பாக முடித்துக் கொடுத்த அவருக்கு என்றென்றும் எங்கள் நன்றி உண்டு.
சுவாசம் பதிப்பகத்திற்கு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை அளித்த ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கு நன்றி.
மற்ற விவரங்கள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படும்.
முதல் பரிசு:
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
பால கணேசன்
ரூ 50,000
-
2ம் பரிசு
ஆதினி
துரை.அறிவழகன்
ரூ 25,000
-
3ம் பரிசு
திரைகடலோடியும் புகலிடம் தேடு
வேலையா கார்த்திகேயன்
ரூ 10,000
-
ஆறுதல் பரிசுகள் - தலா 5000 ரூ
* சொல்லில் வருவது பாதி
கே.எஸ்.சுதாகர்
* உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்
ஷாந்தி பாலசுப்ரமணியன்
* குருதி ஓவியம்
சேரன் செக்குட்டுவன்
* மெய்யரசி
ஜெயந்தி கார்த்திக்
* பிரதி:வேலன்
முத்துச்செல்வன்
Saturday, 1 November 2025
Tuesday, 21 October 2025
தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - விமர்சனம்
நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.
Friday, 10 October 2025
குருவிக்கூட்டை திரும்பிப் பார்த்தல் - நாவல் விமர்சனம்
இலங்கை வாழ்க்கை, ஜெர்மனிய வாழ்க்கை என இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பார்க்கலாம். இலங்கையில் இருக்கும் ஏறாவூர், பேராதனை, நீர்கொழும்பு என்ற இடங்களில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜேர்மனியை நோக்கி நாவல் பயணிக்கின்றது.
முதலில் நாவலின் சுருக்கத்தைப் பார்க்கலாம். கந்தசாமி வைரவள்ளி தம்பதிகளின் மகளான பார்வதியை பரமசிவம் மணந்து கொள்கின்றார். அவர்களின் நான்கு பிள்ளைகளான சிவம், சிநேகா, கீரன், சிந்து என்பவர்களைச் சுற்றி கதை ஆரம்பத்தில் பின்னப்பட்டுள்ளது. தாத்தா பாட்டியுடன் வாழ்வதற்கு பலருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இங்கே சிநேகாவிற்கு பாட்டி வாய்த்துவிடுகின்றது. பாட்டி வைரவள்ளி மட்பாண்டங்கள் செய்தல், கை வைத்தியம், முறிவு வைத்தியம், பிள்ளைப்பெற்று பார்த்தல் போன்றவற்றில் கை தேர்ந்தவளாக இருக்கின்றார்.
Sunday, 5 October 2025
Wednesday, 1 October 2025
Friday, 26 September 2025
நாடோடிகள் - எனக்குப் பிடித்த கதை
கி.பி.அரவிந்தன்
நேற்றென்று ஒருநாள் காலமாகிப்போக இன்றென்று ஒருநாள் விடிந்தது. அது ஒரு சனிக்கிழமை.
ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். படுக்கையில் புரள்கின்றேன். எண்ணங்களும் பல வேறாய் உருள்கின்றன.
உடல் வெளிப்படுத்தும் இளஞ்சூட்டில் குளிர் காய்ந்தபடி அணைந்து உறங்கும் நானும் மனைவியும் உறக்கம் கலைந்த புரளலில் விலகினோம் போலும்.
விலகலிடையே குளிர் நிரவுகின்றது.
இருவரும் மீள மெல்ல அணைந்து கொள்கிறோம். இதமாக இருக்கின்றது.
குளிர் இறங்கிச் செல்கின்ற இளவேனிற் காலாந்தானானாலும் காலை நேரக்குளிரின் இறுக்கப்பிடி இன்னமும் தளரவில்லை. “மாசிப்பனி மூசிப் பெய்யும்" என ஊரில் சொல்வதுண்டுதான். பனியா இது? மூச்சையே உறையச் செய்யும் இக் குளிரின் வீச்சத்தை எப்படி அழைப்பது?
Tuesday, 23 September 2025
நிலவு குளிர்ச்சியாக இல்லை - எனக்குப் பிடித்த கதை

வடகோவை வரதராஜன்
இலண்டன் மாநகரத்தின் அமைதியான `தேம்ஸ்’ நதியில் பெளர்ணமி
காலத்தில் படகுச் சவாரி செய்திருக்கின்றேன். வாஷிங்ரனின் `பொடோமோ’ நதிக்கரையில் பூத்துக்குலுங்கும்
செர்ரி மரங்களுக்கிடையில் சில்வர் நைற் கவிதை படித்துக்கொண்டு நிலவில் நடந்திருக்கின்றேன்.
ஆனாலும் அங்கெல்லாம் என்மனம் வெறுமையுற்று ஏங்கிக் கொண்டே
இருக்கும். தேம்ஸ் நதியில் படகுச் சவாரி செய்யும் போதெல்லாம் இங்கே கோப்பாய் கடற்கரையில்
கைதடிப் பாலக் கட்டில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்துகொண்டு
மினிக்கிவிட்ட தங்கத்தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப்
பார்த்து,
”சிந்து நதியின்
மிசை நிலவினிலே
சேரநன் நாட்டிளம்
பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில்
பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி
வருவோம்”
என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்திருந்த நினைவுகள் என் நெஞ்சத்தில் இனிய உணர்வுகளை உதிர்த்துவிடும்.
Wednesday, 17 September 2025
மிஸ்டர் பீன், தேங்காய், கத்தி
அத்துடன் தணிகாசலம் படத்தை இடையில் நிறுத்திக் கொண்டார்.
Tuesday, 9 September 2025
சியாவோ எனும் அதிகாலை நட்சத்திரம் – சிறுகதை
“சேர்… இன்று மாலை நான் உங்களைச் சந்திக்கலாமா?”
“ஹாய் சியாவோ… எப்பொழுது சீனாவிலிருந்து வந்தாய்?”“நேற்றுத்தான்…”
“படிப்பு, ஆராய்ச்சி எல்லாம் எப்படி இருந்தது?”
“நல்லபடியாய் முடிந்துவிட்டது சேர்… உங்களுடன் கதைப்பதற்கு நிறைய இருக்கின்றன. தனியாகக் கதைக்க வேண்டும். குறிப்பாக இரண்டு முக்கிய விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.”
“சரி… இன்று மாலை ஐந்து மணிக்கு பிறிம்பாங் லைபிறறிக்கு வர முடியுமா?”
“ஓகே… சேர்.”
`தனியாகக் கதைக்க வேண்டும்’ என்கின்றாள். என்னவாக இருக்கும்? மனம் அலை பாய்ந்தது.
•
சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள், உள்ளூர்ப் பேப்பரில் வந்த கட்டிங் ஒன்றை நீட்டிய அம்மா, அதைப் பார்க்கும்படி சொன்னார்.
Monday, 1 September 2025
Friday, 8 August 2025
நினைவில் நின்றவை
Friday, 1 August 2025
காலம் என்ற நீட்சியுடன் - சிறுகதை
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந்தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத்தலை. வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக்கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.
அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம்
சொன்னது.
வர்ணஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாக சுற்றிச் சூழ
இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக்
காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?
"அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?" என்றபடி குணசேகரன் என்னை நோக்கி
வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப்
படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே கனடா வந்திருக்கின்றேன்.
"எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!"
Wednesday, 23 July 2025
பௌருஷம் - எனக்குப் பிடித்த சிறுதை

எஸ்.ராஜகோபாலன்
ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் ‘கசகச” வென நின்ற ஜனச் சிதறல்லை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற அளுத்கம ரயிலிலிருந்து அவதியோடு இறங்கிய கும்பலின் பின்னால், ஓரிரு பொறுமைசாலிகளோடு இவனும் ஒருவனாக இறங்கினான்.
வாசலில் சிரத்தையில்லாமல் நின்றுகொண்டிருந்த காக்கிச் சட்டைக்காரனின் கையில், வலியச் சென்று தன் டிக்கட்டைத் திணித்துவிட்டு வெறுங்கைகளை வீசியபடி எதிர்ப்புற ரயில்வே லயினோடு ஒட்டிய பிளாட்போமுக்கு வந்தான்.
அது ஒரு சின்ன ஸ்டேசன். எதிரும் புதிருமாக ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஓடும் ‘டீசல்’களுக்காக நீண்டுகிடந்த தண்டவாளங்களுக்கிடையே அந்த ஸ்டேசன் இறுகப் பொருத்தப்பட்டதுபோல் கிடந்தது. இதன் முன்புற வாசலோடு சங்கமிக்கிற ஸ்டேசன் றோட்டால் வந்து அதன் அந்தலையிலுள்ள ஒரு மரப் பாலத்தில் ஏறி இந்தப்பக்கம் இறங்கிவிட்டால் ஸ்டேசனுக்குள் நுழைந்துவிடலாம். இது டிக்கட் எடுத்து பிரயாணம் செய்பவர்களுக்குரிய வழி. மற்றவகையான பேர்வழிகளின் வசதியை முன்னிட்டு ஸ்டேசனின் எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் இருந்தன.
ஸ்டேசனென்றால், எப்பொழுதும் சளசளவென்று கொட்டிக்கொண்டிருக்கும் அல்லது ஒருபோதுமே கொட்டாத தண்ணீர்க் குழாய், நாற்றமெடுக்கும் கக்கூஸ்கள், குதிரை றேஸ் பத்திரிகைகளிலேயே முழு நேர அக்கறை கொண்ட உத்தியோகத்தர்கள், வாங்குகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு என்னும் பொதுவான லட்சணங்களுக்கு முரணாகாமல் இருந்தது அது. ஸ்டேசனுக்கு மேற்கே அமைதியான கடற்பரப்பு. கரையோரமெங்கும் தாழைப் புதர்கள் - உள்ளே கொலை விழுந்தாலும் வெளியிலிருந்து தெரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அல்லது வெளியே பார்த்துப் பயப்படமுடியாத அளவுக்கு - மண்டிபோய்க் கிடந்தன. தண்டவாளத்தின் ஓரமாக நிலத்தை மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கவென்று இங்கிலீசுக்காரன் காலத்தில் போட்ட கருங்கற் பாறைகள் மண்ணிலே அரைகுறையாட்ப் புதையுண்டு கிடந்தன.
Friday, 18 July 2025
இரட்ஷகன் வருகிறான் - எனக்குப் பிடித்த சிறுகதை

பொ.கருணாகரமூர்த்தி
அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத முதலே அவள் கடிகாரம் துடிப்பதை நிறுத்திவிட்டிருந்தது, புதிய ‘செல் ‘ மாற்றவேண்டும். அவள் நடத்தும் மினி பாலர் பாடசாலைக்கும் அன்றுவிடுமுறை.
இந்நேரம் மீன் அங்காடியில் வியாபாரிகள் வந்து கூடத் தொடங்கியிருப்பார்கள். வர்ஷிணி அவர்களது நாலு வயதுக் குழந்தை அநாமிகாவுக்கு மடத்தலை [பேபி றஸ்க்] தேனீரில் நனைத்து ஊட்டுகையில் ‘வசீகரன் நேரத்துக்குப் போய் மீனைவாங்கி வந்தானாயின் இனிக் காலைப்பலகராமென்று எதையும் தேடி வினைக்கெடாமல் உள்ள விறகில் சமையலையே முடித்துவிடலாம் ‘ என்று எண்ணினாள். அவளின் மனதைப் புரிந்துவிட்டவன்போல தான் சீராக்கிக்கொண்டிருந்த நீரிறைக்கும் இயந்திரத்தை ஒரு பக்கமாகத்தள்ளி உரச்சாக்கொன்றால் மூடிவைத்துவிட்டு “வர்ஷி பையை எடும் நான்போய் மீன் வாங்கியாறன்” என்றுவிட்டு பற்பொடியை வாயிலிட்டுத் துலக்கிக்கொண்டு முகம் கழுவ கிணற்றடிக்கு ஓடிப்போன வசீகரனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சூரியக்கதிர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமால் அவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்து இருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்கள் வாழ்ந்திருந்த வீட்டின் திறப்பு அவர்களிடமே பத்திரமாக இருக்க வீடும் சுற்றுமதிலும் காணாமல் போயிருந்தன.
‘எம்மினமே ‘ வீட்டையும் , கூரையையும், மதிலையும் கல்லுக்கல்லாய் பெயர்த்துக் கொண்டுபோயிருந்தது. வீட்டிலுள்ள பொருட்கள் திருட்டுப்போவதென்பது எந்த நாட்டிலும் வழக்கந்தான்.
இங்கே தீராதபோரும் இழப்புக்களும் ஒரு வீட்டையே திருடிச்சென்று பிழைப்பதற்கு இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.
Friday, 11 July 2025
சியாவோ எனும் அதிகாலை நட்சத்திரம்
அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் குரல் வடிவம் (2025)
Tuesday, 8 July 2025
கதை சுப்பர் - குறுங்கதை
சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார்.
“அம்மாவுக்கு என்ன வயசாகின்றது?”
“எண்பத்தைஞ்சைத் தாண்டிவிட்டா…”
“நல்லது. இந்த வயசிலையும் நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா. குடுங்கோ வாசிக்கட்டும்.”
சில வாரங்கள் கழிந்திருக்கும். கமலாக்கா எனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென மனைவி தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.
“கமலாக்காவின்ரை அம்மா… உங்களோடை கதைக்க வேணுமாம்.”
“தம்பீ… உம்முடைய கதைப்புத்தகம் அற்புதம். முதலாவது கதையை ஏழெட்டுத் தரம் வாசிச்சுப் போட்டன்.”
என் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கதையை ஒரு தடவை வாசிக்கவே பலரும் தயங்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்மணியா?
”ஏன் அம்மா… அவ்வளவு நல்லாவா இருக்கு.”
“அப்பிடியில்லைத் தம்பி… சுருட்டி வைச்ச பாயை விரிக்கிற மாதிரி இப்ப என்ரை நிலைமை இருக்கு…” எனக்கு அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அவரே விளக்கம் தந்தார்.
“இல்லை தம்பி… ஒரு பக்கமாக வாசிச்சுக்கொண்டு போக, மற்றப்பக்கமா மறந்து போகுது… இன்னுமொரு நாலைஞ்சு தரத்திலை முடிச்சுப் போடுவன் தம்பி…”
“அதுதான் நல்லது அம்மா... விடாமல் தொடர்ந்து வாசியுங்கோ” என்று நான் அவரை உற்சாகமூட்டினேன்.
சில பேர் தலையணை சைசில் புத்தகம் போட்டு உறங்கக் கொடுக்கின்றார்கள். நான், ஒருவர் ஆயுள் உள்ளவரை படிப்பதற்கு ஒரு புத்தகம் குடுத்திருக்கின்றேன்.
`நீங்கள் நிறையப் புத்தகங்கள் படிப்பதாக உங்கள் மகள் சொன்னாரே… இப்படித்தான் அந்தப் புத்தகங்களையும் படிக்கின்றீர்களா?’ என்ற கேள்வி, தொலைபேசி என் மனைவியின் கைக்கு மாறியபின்னர் தான் என் மூளைக்குள் வந்தது. அவருக்கு எண்பத்தைஞ்சில் கிடைத்த பாய் விரிக்கும் தொழில், எனக்கு அறுபதில் கிடைத்திருக்கின்றது.
Thursday, 3 July 2025
அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப்போட்டி - 2025 முடிவுகள் (புகலிடம்)
01. வேடம் தாங்கல் - கே.எஸ். சுதாகர் - அவுஸ்ரேலியா
02. அதிர்ஸ்டக்காரரா? - ஸ்ரீரஞ்சனி- கனடா
03. தங்கமலர் - நவமகன் - நோர்வே
04. பட்டுக்கிளி- டானியல் ஜெயந்தன் - பிரான்ஸ்
05. கவிதைகளும் கருங்குழிகளும் - பொ.கருணாகரமூர்த்தி - ஜேர்மனி
06. பனித்துகள் - பவானி - நெதர்லாந்து
07. மரணம் - கௌசி -ஜேர்மனி
08. தரமான சம்பவமொன்று- பிரான்சிஸ் அமலதாஸ் - பிரான்ஸ்
Friday, 27 June 2025
மீன் குஞ்சுகள் - எனக்குப் பிடித்த கதை

ச.முருகானந்தன்
வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்கத் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித்தம்பி. மார்கழி மாதப் பனிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரையில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீரசொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இந்தச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழிலும் தொடங்கிவிடும்.
நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.
“சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட தாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே” என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம். வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சிச் கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள் எல்லாம் கடலில் ஓடத் தொடங்கிவிடும். மீனவப் பெண்கன் குழந்தைகளுக்குக் கூட சிறுசிறு தொழில்கள் கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள்கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்.
Friday, 20 June 2025
ஐம்பது டொலர் பெண்ணே - எனக்குப் பிடித்த கதை
அவளைக் கண்டேன்.
கட்டைக் கரிய கூந்தல்.
வட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள்.
அரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை.
அவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய பைகள் காட்டின. இரண்டு, மூன்று சிகரெட் பற்ற, சிலது ஓடிப்போய் பிடித்து பெரியபிள்ளைகள் விளையாட்டு விளையாட, ஆங்காங்கே ஒன்றை ஒன்று அணைத்து உதடுகளால் காதலித்துக் கொண்டிருந்தார்கள்.
இவள் ஒருவள்தான் மாநிறமும், கறுப்புக் கூந்தலும். ஆனால் எல்லோருடனும் சகஜமாய் இருந்தாள். என்ன கதைக்கிறாள் என்பதைத் தான் என்னால் கேட்க முடியவில்லை. தூரம்.
யார் அவள்?
ஆசியாவாத்தானிருக்கும்!
இலங்கையோ? இந்தியாவோ?
இலங்கையாய்தானிருக்கும் !
தமிழோ? சிங்களமோ?
தமிழாய்த்தானிருக்கும்!!
Saturday, 14 June 2025
Wednesday, 11 June 2025
Friday, 6 June 2025
அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025 முடிவுகள்
Sunday, 1 June 2025
Friday, 23 May 2025
‘பரீட்சை’ - சிறுகதை
ஓவியம் : கிறிஸ்ரி நல்லெரத்தினம்
விடிந்தால் பரீட்சை.
ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின்போது என்ன கலர் மூக்குத்தி அணிந்திருந்தார்? – என்பவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதில் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.
இந்த நேரம் பார்த்து கோவிந்தர் ஹொஸ்பிட்டலில் போய் படுத்துக் கொண்டுவிட்டார். கோவிந்தர், சரவணனின் அம்மாவின் தம்பி. ‘கோவிந்தராசு’ என்பது அவரது இயற்பெயர். கோவிந்தருக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வைரவிழாக் கொண்டாடுகிற வயசுகூட இல்லை. அதுக்குள்ளை அப்படி என்ன தலை தெறிக்கிற அவசரமோ?
‘இயற்பெயர் என்னவாயிருந்தென்ன! விடிஞ்சா கோவிந்தர் கோவிந்தாதான்’ என்று எதிர்வீட்டு விதானையார் ஊரெல்லாம் புலம்பித் திரிகின்றார். விதானையார் தனிக்கட்டை. அவருக்கும் சுந்தரம் என்றொரு இயற்பெயர் உண்டு. சுந்தரம் பெயரில்தான் இருந்தது.
Friday, 16 May 2025
Friday, 9 May 2025
`முள்ளும் மலரும்’ - நாவல்


முள்ளும் மலரும் திரைப்படத்தை எண்பதுகளில் பார்த்திருந்தாலும், அதன் நாவல் வடிவத்தை நாற்பது வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வாசிக்கக் கிடைத்தது. நாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெருத்த வேறுபாடு இருந்ததைக் கண்டுகொள்ள முடிந்தது. திரைப்படம் ஒரு முள்ளுக் (காளி) கூட மலரும் என்பதைக் காட்டி, நாவலுக்கு ஒரு புது அர்த்தத்தைக் கற்பித்தது. ஆனால் நாவல்? ஒரு கொடியில்/செடியில் முள்ளும் மலரும் தனித்தே இருப்பதைக் காட்டுகின்றது. திரைப்படத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் நாவலை எத்தனை பேர் வாசித்திருப்பார்கள்? திரைப்படத்தைப் பார்த்து காளி (ரஜனிகாந்) மீது ரசனை வைத்திருந்தவர்கள், நாவலை வாசிக்காமல் இருப்பதே நல்லது.
Thursday, 1 May 2025
கட்டில் சொன்ன கதை – சிறுகதை
கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து துள்ளி நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான்.
ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் - கட்டில்.
"என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?" விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான்.
"ஏதோ 'றோ மில்லு'க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!" இன்னமும் பயந்தபடியே முணுமுணுத்தான் சுந்தர்.
றோ மில்லைச் (Raw Mill) சுற்றி புகை கிழம்பிக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் புகைமூட்டத்தினுள் சிக்கினார்கள். ஒவ்வொன்றாகத் தூரத்தே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் மெல்ல அணைந்து தொழிற்சாலை இருளில் மூழ்கியது. 'சைரன்' மூன்று முறை கூவியது.
"நான் ஒருக்காப் போய் இஞ்சினியருக்கும் போமனுக்கும் சொல்லிப் போட்டு வாறன்" சுந்தர் படிகளினின்றும் கீழே இறங்கினான்.
விழுந்து கிடந்த ராமநாதன் - எழுந்து என் மீது படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு மீண்டும் குந்தினான்.
சற்று நேரத்தில் இஞ்சினியரும் போமனும் வேறும் சிலரும் துடுக்குத் துடுக்கு என்று படிகளில் ஏறி வந்தார்கள். உள்ளே றோ மில் வெடித்திருக்க, வெளிப்புறத்தைச் சுற்றி ரோச் லைற்றை அடித்துத் துருவித் துருவித் தடவினார்கள். ராமநாதனும் சுந்தரும் கை கட்டியபடி அவர்களின் பின்னால் சுற்றினார்கள். இஞ்சினியர் ஏதோ இங்கிலிஷில் வெளுத்துக் கட்ட போர்மன் 'ஆ... ஆ...' என்றார்.
Monday, 28 April 2025
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி முடிவுகள் - 2025

குரு அரவிந்தன் வாசகர் வட்டம்
குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3
2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்:
இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா, இலங்கை.
இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா, தேனி, தமிழ்நாடு.
மூன்றாம் பரிசு: மரு.வெ. மாலாபாரதி. ஆரணி. தமிழ்நாடு.
நான்காம் பரிசு: வரதராஜன் ஜூனியர்தேஜ் சீர்காழி, தமிழ்நாடு.
ஐந்தாம் பரிசு: (1) திவானி கந்தசாமி, வவுனியா, இலங்கை.
(2) சீ. கவிதாராணி, பாசறை, இலங்கை.
பாராட்டுப்பரிசுகள்: சிவநேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ. இலங்கை. எஸ். ராமேஸ்வரன், கொழும்பு -5. திருமதி பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை. பி.பி. புஸ்பராஜா, கொழும்பு -1. சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி. சிந்துஜா சிவகுமார், அவுஸ்ரேலியா. த.வேல்முருகன், ஈரோடு, தமிழ்நாடு. க.பூமணி, சென்னை, தமிழ்நாடு. இக்பால் அலி, பரகஹதெனியா, இலங்கை. விமலாதேவி புசுப்பநாதன், ரொறன்ரோ, கனடா. தீபரதி குபேந்திரன், வாணியம்பாடி, தமிழ்நாடு. பன்னீர்ச்செல்வம் கருப்பையா, கோலாலம்பூர், மலேசியா.
சுலோச்சனா அருண் (kurufanclub@gmail.com)
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
Friday, 25 April 2025
நாடற்றவனும் நாயும் - எனக்குப் பிடித்த கதை

சி.வி.வேலுப்பிள்ளை
மெய்யனுக்கு அன்று வேலைகள் எல்லாம் சட்டுபுட்டென்று முடிந்துவிட்டன. சல்லடை காம்பராவில் அவன் வேலை செய்யும் கடைசி நாள் அது. இனிமேல் இங்கிருந்து போய்விடவேண்டியதுதான் – திரும்புவதில்லை. அதை நினைக்கவும் முடியவில்லை. சல்லடைக் காம்பராவிலுள்ள சக்கரங்கள் அவனது வாழ்க்கையில் பத்து வருடங்களைச் சுழற்றி விட்டன. காம்பரா வாயில் கதவிலுள்ள சக்கரங்கள் அவனது வாழ்க்கையில் பத்து வருடங்களைச் சுழற்றிவிட்டன. காம்பரா வாயில் கதவிலுள்ள கைபிடி அவன் கை பட்டுப் பட்டுத் தேய்ந்துபோய்விட்டது. பதின் மூன்றாவது வயதில் சல்லடைக் காம்பராவுக்குள் நுழைந்தவன் அன்று முதல் இன்று வரை அதுவே அவனது உலகம், வேலையே அவன் வாழ்க்கை.
மூன்று மாதங்களக்கு முன்பு, அவன் மதுரைக்கு யாத்திரை புறப்படும் சமயம் அந்தச் சூழ்நிலை முழுவதும் அவனது நரம்புகளை உரித்துப் பிய்த்தன. கடகடவென்று உருளும் சக்கரங்களின் இடைவிடாத ஏகநாதம் அவன் மனதை சோர்வடையச் செய்தது. ‘இன்னும் உழை, இன்னும் வியர்வை சிந்து’ என்று அவை சதா நச்சரித்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அவற்றின் அசைவில் ஒரு வித தாளக்கட்டுப்பாடு இருந்தது. அவனுடைய இருதயத் துடிப்படன் ஒன்றி அவையும் கும்மாளம் போட்டன. ஆண்களும் பெண்களும் ஒவ்வொருவராகப் போய்ச் சேரும்வரை மெய்யன் மயிந்தி மயிந்தி நின்றான். – ஒரு கடைசிப் பார்வைக்காக.
வரண்ட ஒளியற்ற அந்த சல்லடைக் காம்பரா திடீரென்று உயிர்ப்புற்றது. புத்தம் புதிய தேயிலைத் தூளின் நறுமணம், மௌனமாகக் கிடக்கும் சக்தி வாய்ந்த அந்த சக்கரங்கள் –
இவையெல்லாம் அவன் மனதில் வர்ணிக்க முடியாத ஓர் உணர்ச்சியை எழுப்பின. சல்லடை தேயிலையை அரிக்கும் போது உண்டாக்கும் ‘டக், டக், டக்’ என்ற ஓசையும், சுழலும் சக்கரங்களின் குமுறலும் பத்து வருடங்களாக அவன் செவிகளில் லயித்திருந்தன.
“நாளை இன்னொருவன் இந்த இடத்துக்கு வரப்போகிறான். என்றாலும் ஒன்றும் நடவாதது போல வழக்கமாக வேலைகள் நடக்கும்எல்லாம் அது அதுக்குரிய இடத்தில் இருக்கும். நான் மட்டிலும் இருக்க மாட்டேன். வாழ்க்கைச் சுழலின் சுதந்திரம்தான் என்ன? ஆமா, பார்க்கப் போனால் யார்தான் இவ்வுலகத்தில் இன்றியமையாதவர்கள்”- இவ்வாறு எண்ணமிட்டான் மெய்யன்.
Monday, 14 April 2025
வாசனைத்திரவியம் - குறுங்கதை
நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு குடியிருக்கும் எலிகள், புதிதாக வந்திருந்த எம்மை வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.
Friday, 11 April 2025
குவிகம் குறும் புதினங்கள் - அறிமுகம் (2)
கார்த்திகை, 2024
காத்தப்ப பூலித்தேவன் – துரை அறிவழகன்
பூலித்தேவனின் வீர வரலாற்றுக் காலத்துக்கு எங்களை இழுத்துச்
செல்கின்றது. 1700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை, பொருநை ஆறு, வாசுதேவ நல்லூர்க்
கோட்டை, யுத்தகளக் காட்சிகள் களிப்பூட்டும் வர்ணனைகள்.
சூப்பர் மார்க்கெட் – கல்பனா சன்யாசி
நகைச்சுவைக் கதை ஒன்றை வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஒருவர் தான் செய்தது பிழை என்று உணர்ந்து, திருந்திய போதும் தண்டனை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. துயரமான முடிவு.
மார்கழி, 2024
கொரியர் – எஸ்.எல்.நாணு
இரண்டு கதைகளை ஒன்றுக்குள்
ஒன்றாக முடிச்சாக்கி வைத்திருக்கும் வித்தியாசமான கதை வடிவம். சுந்தரமூர்த்தியும் சாரதாவும்,
மாறி மாறி ஒவ்வொரு அத்தியாயங்களாக வந்து முடிச்சை அவிழ்த்துச் செல்கின்றார்கள்.
பூமரப்பாவை – இராஜலட்சுமி
இதுவும் இரண்டு தடங்களில்
பயணிக்கும் கதைதான். சகாயம் என்ற கெட்டவன் முடிவைத் தீர்மானிக்கும் பாத்திரமாகின்றான்.
ஆசிரியர், வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாத வகைகையில் கதையை நகர்த்திச் செல்கின்றார்.
தை, 2025
குமாரசாமியின் பகல் பொழுது – பிரபஞ்சன் (வைத்தியலிங்கம்)
தனது நண்பர் அடைக்கலசாமியின் இறப்பில் கிடைத்த லீவில், தனது
வாழ்வைத் திருப்பிப் பார்க்கின்றார் குமாரசாமி. பிறந்தவர் சாவது இயற்கை. ஆனால் வாழ்ந்தவர்
சாவதுதானே நியாயம். அந்தக் கோபத்தில் அடைக்கலசாமியின் செத்தவீட்டிற்குப் போவதில்லை
என முடிவெடுக்கின்றார் அவர். வார்த்தைக்கு வார்த்தை அற்புத வர்ணனையில், குமாரசாமியின்
எளிமையான வாழ்க்கை சொல்லப்படுகின்றது.
தாழம் – பாலஜோதி ராமச்சந்திரன்
தாழம் என்ற அரியவகை சுறா ஒன்றினைப் பிடிக்கும் மாலி என்பவனின்
மனவோட்டம் அற்புதம். அப்புறம் அவனின் மனநிலை தடம் மாற, கதை வேறு திசையில் பயணித்து
இன்னொரு தாழத்துடன் இணைகின்றது. வித்தியாசமான கதை.
மாசி, 2025
வீடு – கலைச்செல்வி
காடு, அதுவே அவனுக்கு வீடு.
பெண்டாட்டி, பிள்ளை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். காட்டுக்குள் புதைந்திருக்கும் மாயங்களை
அவிழ்க்கின்றது கதை. அதனால் காடு பற்றிய வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை.
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் – இலக்குவனார் திருவள்ளுவன்
தற்போதைய தொலைக்காட்சித்
தொடரின் போக்குகள் குறித்து நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ள கதை. `திரைக்கதை எழுதுவது
எப்படி?’ என்ற புத்தகத்தை எழுதியவருக்கே திரைக்கதை குறித்து பாடம் எடுப்பது வேடிக்கை.
எதிர்பாராதது – கெளரிசங்கர்
ஏற்கனவே மனைவிமீது கணவன்
சந்தேகம் கொள்கையில், எதிர்பாராத விதமாக அவளது பழைய நண்பன்/காதலன் அவர்களது வீட்டுக்கு
வந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? பெயருக்கேற்றவாறு பல எதிர்பாராததுகள் கொண்ட கதை.
இறுதிப் பகுதி மேஜிக்கல் ரியலிசம்.
ஓவியங்கள் - கிறிஸ்டி நல்லெரத்தினம்
Tuesday, 1 April 2025
Friday, 28 March 2025
Friday, 21 March 2025
விளக்கேற்றுபவன் - ஒலி வடிவம்
நன்றி : சொல்வனம், திருமதி சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம் (Solvanam) இலக்கிய இதழ், பிப்ரவரி 23, 2025 இல் வெளிவந்த `விளக்கேற்றுபவன்’ என்ற சிறுகதையை திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் தனது அருமையான குரலில் பதிவு செய்திருக்கின்றார்.




































